Monday, December 21, 2015

விருச்சிகம் ஆண்டு பலன் - 2016,

முனைவர் பட்டமளிப்பு விழா

கோவை கற்பகம் பல்கலைகழக 19.12.2015 காலை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் எனக்கு ஜோதிடத்தில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. டிசிஎஸ் துணை தலைவர் முனைவர் ஹேமா கோபால், பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் இரா.வசந்தகுமார், முதன்மைச் செயல் அலுவலர் திரு.கே.முருகையா, துணைவேந்தர் முனைவர் ஆர்.எம்.வாசகம், பதிவாளர் முனைவர் ஜி. சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர் விழாவை சிறப்பித்தனர். முனைவர் பட்டம் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இனிய நாளில் எனது தந்தை தெய்வதிரு முருகஇராசேந்திரன் அவர்கள் இல்லாதது மிக பெரிய குறையாக உள்ளது. இந்த ஆய்வேடு சிறப்பாக அமைய நெறிபடுத்திய எனது நெறியாளர் முனைவர் தி.மகாலட்சுமி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனக்கு பலவகையில் வாழ்த்து தெரிவித்த அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அன்புடன்
முனைவர் முருகுபாலமுருகன்



விருச்சிகம் ஆண்டு பலன்  -  2016, 
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)



பார்ப்பதற்கு வெகுளிபோல் இருந்தாலும் எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்துமுடிக்கும் ஆற்றல்கொண்ட விருச்சிக ராசி நேயர்களே! இந்த 2016-ஆம் ஆண்டு முழுவதும் ஏழரைச் சனியில் ஜென்மச் சனி தொடருவதால் உங்களுக்கு ஆரோக்கியரீதியாக பிரச்சினைகள், எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகக் கூடும் என்பதால் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. 08-1-2016 முதல் ஜென்ம ராசிக்கு 4-ல் கேது 10-ல் ராகு சஞ்சாரம் செய்யவிருப்பதால் குடும்பத்திலுள்ளவர்களையும் உற்றார்- உறவினர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். அசையும்- அசையா சொத்துக்களால் வீண்செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்நீச்சல் போட்டால்தான் ஏற்றம் பெறமுடியும். உத்தியோகஸ்தர்களும் படிப்படியான முன்னேற்றத்தை அடைவார்கள். ஆண்டின் முற்பாதியில் 10-ஆம் வீட்டில் சஞ்சரித்து பொருளாதாரரீதியாக நெருக்கடிகளை ஏற்படுத்தும் குரு பகவான் 02-08-2016 முதல் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பது அனுகூலமான அமைப்பாகும். இதனால் ஆகஸ்ட் மாதத்திற்கு பணவரவுகள் சிறப்பாக அமையும். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும்.

உடல் ஆரோக்கியம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆரோக்கியரீதியாக பாதிப்புகள், மருத்துவச் செலவுகள் அதிகரிக்கக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும் என்றாலும் ஆகஸ்ட் மாதம் ஏற்படவிருக்கும் குருப்பெயர்ச்சியால் ஓரளவுக்கு சாதகமான பலன்களை அடையமுடியும். குடும்பத்தில் இருக்கக்கூடிய மருத்துவச் செலவுகள் படிப்படியாகக் குறையும். முடிந்த வரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

குடும்பம், பொருளாதார நிலை

குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள், பிரச்சினைகள் தோன்றி னாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் ஆண்டின் தொடக்கத்தில் சுமாராக இருந்தாலும் ஆகஸ்ட் மாதம்முதல் சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைக்கூடி மகிழ்ச்சியளிக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது, தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது.

உத்தியோகம்

பணியில் சுமாரான நிலை இருக்கும். சிறுசிறு தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெற முடியும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் பிற்பாதியில் அனுகூலப் பலனை பெறமுடியும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் வேலைப் பளு குறையும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வரவுக்குமீறிய செலவுகளும் வேலையாட்களால் பிரச்சினைகளும் ஏற்படும். போட்டிகளை சமாளிக்கவேண்டியிருக்கும். ஆகஸ்ட் மாதம்முதல் எதிலும் ஓரளவுக்கு மேன்மைகள் உண்டாகும். நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேரிட்டாலும் எதிர்பார்த்த லாபங்களைப் பெறமுடியும். பயணங்களால் சாதகப்பலன்கள் அமையும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றவற்றில் ஆண்டின் தொடக்கத்தில் வீண் விரயங்களை எதிர்கொண்டாலும் ஆகஸ்ட் மாதம் முதல் நெருக்கடிகள் படிப்படியாகக் குறையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும் என்றாலும் உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும்.

அரசியல்

உங்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் சோதனைகளும் வேதனைகளும் ஏற்படும். எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் அதன் முழுப்பலனை அடையமுடியாதென்றாலும் ஆகஸ்ட் மாதம் முதல் ஓரளவுக்கு சாதகப்பலனை பெறமுடியும். சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகளும் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து நடப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் மிகவும் நற்பலனை உண்டாக்கும்.

கலைஞர்கள்

தேவையற்ற அலைச்சல்கள், பிரச்சினைகள், பெயர், புகழ் மங்கக்கூடிய சூழ்நிலைகள் யாவும் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தாலும் பிற்பாதியில் ஓரளவுக்கு வாய்ப்புகளைப் பெறமுடியும். எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். பெரிய அளவில் முன்னேற்றங்கள் ஏற்படாவிட்டாலும் பெயரை காப்பாற்றிக்கொள்ள முடியும். பயணங்களால் அலைச்சல்கள், உடல் நலக்குறைவுகள் உண்டாகி மருத்துவச் செலவு ஏற்படும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபடவேண்டியிருக்கும். வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் நீர்வரத்து குறையும். என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது லாபத்தினைப் பெறுவீர்கள். புதிய பூமி, மனை, வண்டி, வாகனம் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்களும் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும்.

பெண்கள்

குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. பண வரவுகளில் ஆண்டின் தொடக்கத்தில் தடைகள் நிலவினாலும் பிற்பாதியில் ஓரளவுக்கு அனுகூலங்கள் உண்டாகி கடன்கள் குறையும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை.

மாணவ- மாணவியர்

கல்வியில் சற்று மந்த நிலை நிலவும். கடும் முயற்சியுடன் பாடுபட்டால் தான் நற்பலனை அடையமுடியும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். அரசு வழிகளில் எதிர்பார்க்கும் உதவிகள் ஆண்டின் பிற்பாதியில் கிடைக்கும். உடல் நிலை சற்று பாதிப்படையும்.


மாதப்பலன்



ஜனவரி 

குரு அதிசாரமாக 11-ல் இருப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் ஓரளவுக்கு அனுகூலத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அனுகூலமும் உண்டாகும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி அமையும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்ட முதலீட்டை எடுத்துவிடமுடியும். கூட்டாளிகளிடம் ஒற்றுமையாக செயல்பட்டால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிலிருந்த நெருக்கடிகள் விலகி மேன்மைகள் உண்டாகும். பயணங்களால் சாதகமான பலன் அமையும். முருகனை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 21-01-2016 காலை 08.33 மணி முதல் 23-01-2016 மதியம் 02.03 மணி வரை. 

பிப்ரவரி 

உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெறுவது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 3-ல் சூரியன், 10-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றிகிட்டும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். குடும்ப ஒற்றுமை சுமாராக இருக்கும். எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படக்கூடிய காலமென்பதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் எதிர்நீச்சல் போடவேண்டியிருக்கும். எதிர்பாராத பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்க்கவும். சனிக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 17-02-2016 மதியம் 02.19 மணி முதல் 19-02-2016 இரவு 08.47 மணி வரை. 

மார்ச் 

உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெறுவதும், 4-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் வீண் அலைச்சல்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகள் சுமாராக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்திசெய்ய கடன்வாங்க நேரிடும். சுகவாழ்வு பாதிப்படையும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் உண்டாகும். பண விஷயத்தில் வாக்குறுதிகள் கொடுப்பதைத் தவிர்க்கவும். நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது, சனிக்கு பரிகாரம் செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 15-03-2016 இரவு 07.58 மணி முதல் 18-03-2016 அதிகாலை 02.20 மணி வரை.

ஏப்ரல் 

ஏழரைச் சனி நடைபெற்றாலும் மாத பிற்பாதியில் சுக்கிரன் சாதகமாக உள்ளதாலும், 6-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதாலும் உங்கள் பலமும் வலிமையும் கூடும். எடுக்கும் முயற்சிகளில் ஓரளவுக்கு முன்னேற்ற பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் சுமாராகத்தான் இருக்கும். தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கப் பெறும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 12-04-2016 காலை 03.28 மணி முதல் 14-04-2016 காலை 08.28 மணி வரை.

மே 

ஏழரைச் சனி நடைபெற்றாலும் மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எந்த பிரச்சினைகளையும் சமாளித்து ஏற்றம்பெறக்கூடிய ஆற்றலை உண்டாக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றும். தொழில், வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் குறைந்து லாபத்தினை அடையமுடியும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். விஷ்ணு பகவானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 09-05-2016 மதியம் 01.04 மணி முதல் 11-05-2016 மதியம் 04.25 மணி வரை.

ஜூன் 

ஏழரைச் சனி நடைபெறுவதும், சமசப்தம ஸ்தானமான 7-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். பணவரவுகள் திருப்தியளிப்பதாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடிகள் ஏற்படுவதால் நிம்மதியற்ற நிலை உண்டாகும். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 05-06-2016 இரவு 11.28 மணி முதல் 08-06-2016 அதிகாலை 01.57 மணி வரை.

ஜூலை 

ஏழரைச் சனி நடைபெறுவதும் அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். நெருங்கியவர்களிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு அதனால் மன நிம்மதிக் குறைவு ஏற்படும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு வீண் பிரச்சினைகளை உண்டாக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தாமதப்படும். வீண்செலவுகள் ஏற்படக்கூடிய காலமென்பதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் இருப்பது உத்தமம். சனிக்கு பரிகாரம் செய்யவும்.

சந்திராஷ்டமம்: 03-07-2016 காலை 08.59 மணி முதல் 05-07-2016 பகல் 11.42 மணி வரை மற்றும் 30-07-2016 மாலை 16.33 மணி முதல் 01-08-2016 இரவு 08.17 மணி வரை.

ஆகஸ்ட் 

ஜென்ம ராசியில் சனி, செவ்வாய் சஞ்சரிப்பது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் அமைப்பென்றாலும் 9-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். 2-ஆம் தேதி முதல் குரு 11-ல் சஞ்சரிக்கவுள்ளதால் பணவரவுகள் சரளமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் அனுகூலம் ஏற்படும். முன்கோபத்தைக் குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. முருகனை வழிபடவும். 

சந்திராஷ்டமம்: 26-08-2016 இரவு 10.21 மணி முதல் 29-08-2016 காலை 03.04 மணி வரை.

செப்டம்பர் 

மாதக்கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், லாப ஸ்தானமான 11-ல் குரு, சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் பொருளாதாரரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். திருமணம் தடைப்பட்டவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். கடன்கள் குறையும். குடும்பத்தில் அசையும்- அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். நெருங்கியவர்களிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் இருக்கும். சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 23-09-2016 அதிகாலை 03.53 மணி முதல் 25-09-2016 காலை 08.36 மணி வரை.

அக்டோபர் 

லாப ஸ்தானமான 11-ல் குரு, புதன், சூரியன் சஞ்சாரிப்பதால் நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகர மான சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றிமறையும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். உடல் ஆரோக்கியத்திலிருந்த பிரச்சினைகள் குறையும். எடுக்கும் முயற்சி களில் வெற்றிகிட்டும். பொன், பொருள் சேரும். கடன்கள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். முருகப்பெருமானை வழிபாடு செய்யவும்.

சந்திராஷ்டமம்: 20-10-2016 காலை 11.07 மணி முதல் 22-10-2016 மதியம் 14.31 மணி வரை.

நவம்பர் 

ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் குரு சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். தொழில்ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகளும் மேன்மைகளும் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளால் ஏற்றமிகு பலன்கள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகளும், எதிர்பாராத வீண் விரயங்களும் ஏற்படக்கூடும் என்பதால் எதிலும் சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 16-11-2016 இரவு 08.56 மணி முதல் 18-11-2016 இரவு 10.33 மணி வரை.

டிசம்பர் 

ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் அமைப்பென்றாலும் 11-ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதாரம் மேம்படும். கடன்கள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். உற்றார்- உறவினர்கள் சாதகமாக அமைவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் உயர்வுகளை அடைவார்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சல்கள் குறையும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 14-12-2016 காலை 08.14 மணி முதல் 16-12-2016 காலை 08.51 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்:  1, 2, 3, 9.

நிறம்: ஆழ்சிவப்பு, மஞ்சள்.

கிழமை: செவ்வாய், வியாழன்.

திசை: தெற்கு.    

கல்: பவளம்.

தெய்வம்: முருகன்.

No comments: