Thursday, August 27, 2020

கடகம்  - ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

 

கடகம்  - ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

யாருக்கும் அஞ்சாத குணமும் மற்றவர்களை கவரக்கூடிய உடலமைப்பும் கொண்ட கடக ராசி நேயர்களே, இது நாள் வரை 6, 12-ல் சஞ்சரித்த கேது, ராகு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் 23-9-2020 முதல் 12-04-2022 வரை (வாக்கியப் பஞ்சாங்கபடி 01-09-2020 முதல் 21-03-2022 வரை). உங்கள் ராசிக்கு 11--ல் ராகுவும், 5-ல் கேதுவும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மன மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். பூர்வீக சொத்து ரீதியாக பங்காளிகளிடம் தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது சிந்தித்து பேசுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க அளவிற்கு லாபகரமான பலனை அடைவீர்கள். எதிர்பாராத அனுகூலங்களும் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும் யோகம் கடந்த கால பிரச்சினைகள் குறையும்.

ஒரு ராசியில் நீண்ட நாள் சஞ்சரிக்கும் கிரகமான சனி திருக்கணிதப்படி உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கூட ஒற்றுமை குறைவு ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் எதையும் சமாளிக்கும் பலம் உண்டாகும்.

குரு (மகர ராசியில்) வரும் 20-11-2020 முதல் 06-04-2021 வரையும் மற்றும் வரும் 14-09-2021 முதல் 20-11-2021 வரையும் உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தடைபட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி நிலவும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது மூலம் அலைச்சல்கள் குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலத்தில் எதிர்பார்த்த லாபம் சிறப்பாக அமையும். கூட்டாளிகளிடமும் தொழிலாளர்களிடமும் சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அபிவிருத்தி பெருகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

குரு வரும் 20-11-2020 வரை ருண ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதும் அடுத்து அஷ்டம ஸ்தானமான 8-ல் அதிசாரமாக (கும்ப ராசியில்) வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை மற்றும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை சஞ்சரிக்க உள்ள காலத்தில் பண விஷயத்தில் சற்று சிக்கனத்துடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள், வம்பு வழக்குகள், அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றி கிட்டும். எந்தவொரு காரியத்திலும் எதிர் நீச்சல் போட வேண்டி இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்து வந்த வீண் மருத்துவ செலவுகள் குறையும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருப்பதால் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சலை குறைத்து கொள்ள முடியும். சிலருக்கு வயிறு பிரச்சினை ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. 

குடும்பப் பொருளாதார நிலை

பண வரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் சுபிட்சமான நிலை உண்டாகும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகம் அமையும். புத்திர வழியில் சிறிது மன கவலை ஏற்படலாம் என்பதால் அவர்களை பக்குவமாக கையாளுவது நல்லது. பூர்வீக சொத்துக்கள் ரீதியாக உறவினர்களிடம் கருத்து வேறுப்பாடுகளுக்கு வாய்ப்பு இருப்பதால் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.

உத்தியோகம்

பணியில் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்க பெறுவதால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். எதிர்பார்த்து காத்திருந்த ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விரும்பம் நிறைவேறும். அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பது மன நிம்மதியை தந்தாலும் சக நண்பர்களிடம் சற்று கவனத்துடன் பேசுவது நல்லது. புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலையிருக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். உங்கள் செயல்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். கூட்டாளிகளை மட்டும் அனுசரித்து செல்வது, எந்த செயல் செய்வது என்றாலும் அவர்களை கலந்தலோசித்து செயல்படுவது மிகவும் நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிட்டும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள் குறையும். வம்பு வழக்கு போன்றவற்றில் தீர்ப்பு சாதகமாக வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

அரசியல்

பெயர் புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். தலைவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்ய கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பேச்சிற்கு அனைத்து இடங்களிலும் ஆதரவுகள் பெருகும். வருவாய்கள் அதிகரிக்கும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். பத்திரிக்கையாளர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறையும். கால் நடைகளால் அனுகூலம் உண்டாகும்.

கலைஞர்கள்

எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. புதிய கார், பங்களா போன்றவற்றை வாங்கிச் சேர்ப்பீர்கள். ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை உண்டாக்கும். படப்பிடிப்பிற்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பொருளாதார நிலை மிகச்சிறப்பாக அமையும். சேமிப்புகள் பெருகும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் நன்றாக இருப்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். சிலருக்கு கர்பபை சம்மந்தபட்ட பாதிப்பு ஏற்படலாம் என்பதால் உடல் நலத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதம் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடம் சற்று அனுசரனையாக நடந்து கொள்வது நல்லது. சொந்த வீடு வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டினைப் பெறுவீர்கள். கல்விக்காக சுற்றுலா தலங்களுக்கு செல்வீர்கள். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்களை வேறு பாதைக்கு அழைத்து செல்லும் என்பதால் நண்பர்கள் விஷயத்தில் கவனம் தேவை. பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நடந்து கொள்வீர்கள்.

 

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 23-09-2020 முதல் 26-01-2021 வரை

உங்கள் ராசிக்கு ராகு 11-ல் செவ்வாய் நட்சத்திரமான மிருகசீரிஷத்திலும், கேது 5-ல் கேட்டை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த இடைஞ்சல்கள் எல்லாம் விலகி வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வரும் 20-11-2020 முதல் தனகாரகன் குரு 7-ல் சஞ்சாரம் செய்ய இருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி பெற முடியும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 27-01-2021 முதல் 01-06-2021 வரை

ஜென்ம ராசிக்கு ராகு 11-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், தன காரகன் குரு 7-ல் சஞ்சரிப்பதாலும் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகி கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் நிலை சிறப்பாக இருக்கும் கடந்த கால வீண் செலவுகள் குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 5-ல் கேது சஞ்சரிப்பதால் புத்திர வழியில் சிறிது மன கவலை ஏற்படும். சனி 7-ல் இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது சற்று கவனத்துடன் இருப்பது சிறப்பு. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சினைகளும் ஏற்படாது. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் நல்ல லாபத்தினை அடைய முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 02-06-2021 முதல் 05-10-2021 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 11-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 5-ல் அனுஷ நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. சனி 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக வாய்ப்பு ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு வீண் செலவுகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றமானப் பலன்களைப் பெறுவீர்கள். கிடைக்க வேண்டிய லாபமும் கிடைக்கும். மாணவர்கள் கல்விக்காக பயணங்கள் மேற்கொள்ள கூடிய சூழ்நிலைகள் உண்டாவதால் சற்றே அலைச்சல்கள் அதிகரிக்கும்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 06-10-2021 முதல் 08-02-2022 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 11-ல் கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், குரு 20-11-2021 முடிய 7-ல் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்க்கும் வெற்றிகளைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது மூலம் மருத்துவ செலவுகளை குறைத்து கொள்ள முடியும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது அனைவரிடமும் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது என்றாலும் நிறைய போட்டிகளை சமாளித்தே லாபத்தை பெற வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பணவரவுகளில் சுமாரான நிலையிருந்தாலும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்கள் ஏற்படாமல் சமாளிக்கலாம். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறலாம். உடன் பணிபுரியும் சக ஊழியர்களை அனுசரித்து சென்றால் வேலைபளுவை குறைத்து கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 09-02-2022 முதல் 12-04-2022 வரை

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் கேது விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், 8-ல் குரு சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெற முடியும். பண வரவுகள் எதிர்பார்த்தப்படி கிடைத்தாலும் வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. சனி 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகி குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படும். திருமண சுபகாரியங்கள் கைகூட சற்று தாமத நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலன்களைப் பெற முடியும். ராகு 11-ல் சஞ்சரிப்பதால்  உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற சற்று தாமத நிலை உண்டாகும் என்றாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்தே லாபத்தினைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்க பெறும் என்றாலும் தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வது நல்லது. மாணவர்களுக்கு உடல் நிலையில் உண்டாக கூடிய பாதிப்புகளால் கல்வியில் சற்று மந்த நிலை உண்டாகும்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9

நிறம் - வெள்ளை, சிவப்பு

கிழமை - திங்கள்,வியாழன்

கல் - முத்து

திசை - வடகிழக்கு

தெய்வம் - வெங்கடாசலபதி

 

பரிகாரம்

கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது 5-ல் சஞ்சரிப்பதால் விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறிவருவது. செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது. சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்  கூறுவது. சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது. சர்ப சாந்தி செய்வது நல்லது.

சனி 7-ல் சஞ்சரித்து கண்ட சனி நடைபெறுவதால் அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றவும், சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வதும் நல்லது.

No comments: