Thursday, August 27, 2020

கும்பம்   - ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

 

கும்பம்   - ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

உயர்ந்த பண்பும், நிறைந்த பொறுமையும், எல்லோரிடத்திலும் அன்பாகப் பழகக்கூடிய தன்மையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, தற்போது ஏற்பட உள்ள ராகு கேது பெயர்ச்சி மூலம் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் 23-9-2020 முதல் 12-04-2022 வரை (வாக்கியப் பஞ்சாங்கபடி 01-09-2020 முதல் 21-03-2022 வரை). ராகு ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டிலும், கேது ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதும், ராசியாதிபதி சனி 12-ல் சஞ்சரித்து உங்களுக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி நடைபெறுவதும் அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. பொருளாதார நிலை சாதகமாக இருந்தாலும் இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்வர்களால் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது-. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்கு பின்பு அனுகூலப் பலன் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனம் தேவை. ஆன்மீக தெய்வீக தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

            தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கையில் இருக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. கூட்டாளிகளையும், வேலையாட்களையும் அனுசரித்து செல்வது நல்லது. அதிக முதலீடு கொண்ட செயல்களில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது முடிந்த வரை கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். வேலைபளு அதிகமாக இருப்பதால் உடல்நிலை சோர்வடையும். எடுக்கும் பணிகளை திறம்பட செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும். எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாக கூடிய காலம் என்பதால் பயணங்களை தவிர்க்கவும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது மூலம் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடைய முடியும்.

            தற்போது லாப ஸ்தானமான 11-ல் குரு சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் 20-11-2020 முதல் குரு 12-லும் அதன் பின்பு ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்க இருப்பதால் பண கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனத்துடன் இருப்பது நல்லது. திருமண முயற்சியில் இடையூறு இருக்கும் என்றாலும் குரு ஜென்ம ராசியில் அதிசாரமாக (கும்ப ராசியில்) வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை மற்றும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை சஞ்சரிப்பது மூலம் தனது 7-ஆம் பார்வையாக 7-ஆம் வீட்டை பார்க்கும் காலத்தில் சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்பு உண்£டாகும்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றியபடியே இருக்கும் என்பதால் உடற்பயிற்சி செய்வது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது உத்தமம். தேவையற்ற மனக்குழப்பங்களால் நிம்மதி குறைவு உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது சற்று ஆறுதலை தரும். அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும் என்பதால் எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும் விட்டுக் கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது உத்தமம். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் நற்பலன் கிடைக்கும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைபளுவை குறைத்துக் கொள்ள முடியும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் சுமாராக நடைபெறும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் நீங்கள் அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் மிகவும் கவனம் தேவை. கூட்டாளிகள் ஆதரவு சற்று சிறப்பாக இருக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் எதிர்பார்க்கும் லாபம் ஓரளவுக்கு கிட்டும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

பண வரவுகளில் நெருக்கடிகள் உண்டாக கூடிய காலம் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிக்க முடியாமல் போகும். பண விஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதால் வீண் பிரச்சினைகளில் சிக்கி கொள்ள நேரிடும். தேவையற்ற வம்பு வழக்குகள் ஏற்படும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபத்தினை அடைய முடியும்.

அரசியல்

மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் இடையூறுகள் உண்டாவதால் அவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். மேடை பேச்சுக்களில் கவனமுடன் இருப்பது, பத்திரிக்கை நண்பர்களை பகைத்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேரிடும்-. என்றாலும் பணவரவுகள் தக்க நேரத்தில் கிடைக்கும். உடன் பழகுபவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் சந்தையில் விலை பொருளுக்கு ஏற்ற விலை கிடைக்க சிரமம் ஏற்படும்.  காய், கனி, பூ போன்றவற்றாலும் கால் நடைகளாலும் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். சில இடங்களில் நீர் வரத்து குறைவதால் தொடர்ந்து பயிரிட முடியாத நிலை ஏற்படும். புதிய பூமி மனை, வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. அரசு வழியில் மானிய உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும்.

கலைஞர்கள்

நல்ல வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வரவேண்டிய பணத் தொகைகளில் இழுபறியான நிலை இருக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். சுகபோக வாழ்வை அனுபவிக்க இடையூறு ஏற்படும். இசைத் துறைகளில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றங்கள் உண்டாகும்.

பெண்கள்

உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் மற்ற பிரச்சினைகளை மன தைரியத்துடன் எதிர் கொள்ள முடியும்.  புத்திர வழியில் சில மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு ஆதாயப்பலனை அடைய முடியும்.

மாணவ மாணவியர்

கல்வியில் சற்றே மந்த நிலை உண்டாகும். முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடையலாம். தேவையற்ற நட்புக்களால் வீண் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும் என்பதால் நல்ல நண்பர்களை தோந்தெடுத்து பழகுவது உத்தமம். கல்வி ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் இடையூறுகள் ஏற்படும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை.

 

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 23-09-2020 முதல் 26-01-2021 வரை

உங்கள் ராசிக்கு ராகு 4-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், ஜென்ம ராசிக்கு 10-ல் கேது கேட்டை நட்சத்திரத்திலும் ராசியாதிபதி சனி 12-லும் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற அலைச்சல், எதிர்பார்த்த பணவரவுகள் கிடைக்க தடைகள் ஏற்படும். இருப்பதை அனுபவிக்க இடையூறு மன நிம்மதி குறைவு ஏற்படும். நெருங்கியவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உறவினர்களை அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். உங்கள் ராசிக்கு 11-ல் சஞ்சரிக்கும் குரு வரும் 20-11-2020 முதல் 12-ல் சஞ்சரிக்க இருப்பதால் பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகளால் எதையும் சமாளிக்க முடியும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு நற்பலன்களை பெற முடியும். பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் உண்டாககூடும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உயரதிகாரிகளின் ஆதரவுகளைப் பெற சற்று பாடுபட வேண்டியிருக்கும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கடன் சற்றே குறையும். மாணவர்கள் கல்வியில் முழு முயற்சியுடன் ஈடுபடுவது உத்தமம்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 27-01-2021 முதல் 01-06-2021 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 4-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 10-ல் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், ராசியாதிபதி சனி 12-ல் குரு சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதாலும் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், அலைச்சல், டென்ஷன் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகளால் சிறுசிறு மருத்துவ செலவுகளை எதிர் கொள்வீர்கள்.  பண வரவுகள் சுமாராக இருந்தாலும் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் சமாளிப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தடை தாமதங்களுக்கு பிறகு அனுகூலப் பலன் கிட்டும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளிக்க கூடிய பலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பெற முடியும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் நல்ல நிலையில் நடைபெற்றாலும் எந்த செயலிலும் அதிக அக்கறை எடுத்தால் மட்டுமே எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 02-06-2021 முதல் 05-10-2021 வரை

ஜென்ம ராசிக்கு ராகு 4-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 10-ல் அனுஷ நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால்  எதையும் சமாளித்து ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். சனி குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றங்கள் ஏற்படும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும் என்றாலும் அகல கால் வைக்காமல் பொறுமையுடன் செயல்பட்டால் அனுகூலங்களை அடையலாம். திருமண சுபகாரிய முறய்சிகள் சில தடைகளுக்குப்பின் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வுகள் இருக்கும். சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை பெற முடியும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 06-10-2021 முதல் 08-02-2022 வரை

ஜென்ம ராசிக்கு ராகு 4-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும், கேது 10-ல் அனுஷ நட்சத்திரத்திலும் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. அதிக அலைச்சல், சுகவாழ்வு பாதிப்பு, இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். சனி 12-ல் சஞ்சரித்து ஏழரைச்சனி நடப்பதால் நீங்கள் எதிலும் கோபப்படாமல் மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையீடு செய்வதை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வரும் 20-11-2021 முதல் குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பது மூலம் 7-ஆம் வீட்டை பார்க்கும் என்பதால் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது, கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் இருப்பது நல்லது.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 09-02-2022 முதல் 12-04-2022 வரை

ராகு உங்கள் ராசிக்கு 4-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும், கேது 10-ல் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும் ஏழரைச்சனியில் விரயச்சனி நடப்பதாலும் எந்த செயல் செய்வதென்றாலும் கவனத்துடன் செய்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தாலும் அலைச்சல் அதிகப்படியாக இருக்கும். குரு ஜென்ம ராசியில் சஞ்சரித்து 5,7,9-ஆம் ஸ்தானங்களை பார்ப்பதால் பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும், எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு, பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் எதையும் தைரியத்துடன் எதிர் கொள்வீர்கள். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது விட்டு கொடுத்து நடந்து கொள்வது மூலம் சில முன்னேற்றங்களை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலால் மதிப்பும் மரியாதையும் உயர்வடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதன் மூலம் முன்னேற்றம் அடையலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தள்ளி வைப்பது சிறப்பு. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொண்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,7,8

கிழமை - வெள்ளி, சனி

திசை - மேற்கு

நிறம் - வெள்ளை, நீலம்

கல் - நீலக்கல்,

தெய்வம் - ஐயப்பன்

 

பரிகாரம்

கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராகு 4-லும் கேது 10-லும் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது. ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் சஹ ராஹவே நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறி வருவது நல்லது. முடிந்த வரை விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறிவருவது. செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது. கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை  தானம் தருவது நல்லது.

ஏழரை சனி நடைபெறுவதால் சனி ப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது, சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் தீப மேற்றுவது நல்லது. சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது கருப்பு நிற ஆடை அணிவது நல்லது.

குரு வரும் 20-11-2021 முதல் சாதகமின்றி சஞ்சரிப்பதால் குருவுக்கு பரிகாரமாக வியாழக்கிழமைகளில் விரதமிருந்து குரு, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது நல்லது.

 

 

No comments: