Wednesday, August 26, 2020

மேஷம் - ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

 

மேஷம்   - ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்

எதிலும் தைரியத்துடன் செயல்படும் திறன் கொண்டவராகவும், தன்னை நம்பியவர்களை எத்தகைய துன்பத்தில் இருந்தும் காப்பாற்றக்கூடிய பரந்த மனப்பான்மை கொண்டவராகவும் விளங்கும் மேஷ ராசி நேயர்களே, இதுநாள் வரை உங்கள் ராசிக்கு 3, 9-ல் சஞ்சரித்த சர்ப கிரகங்களான ராகு கேது திருக்கணிதப்படி வரும் 23-9-2020 முதல் 12-04-2022 வரை (வாக்கியப் பஞ்சாங்கபடி 01-09-2020 முதல் 21-03-2022 வரை). ராகு 2-ஆம் வீட்டிலும், கேது 8-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை குறைவு, ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கூட வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே ஏற்படும் சிறுசிறு சிக்கல்களை சமாளிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது.

            ஒரு ராசியில் நீண்ட நாள் சஞ்சரிக்கும் கிரகமான சனி திருக்கணிதப்படி உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது அதிக முதலீடு கொண்ட செயல்களில் கவனமாக கையாள்வது சிறப்பு. வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு சற்று அதிகப்படியாக இருக்கும். 

எது எப்படி இருந்தாலும் தனகாரகன் குரு வரும் 20-11-2020 வரை பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும் அடுத்து லாப ஸ்தானமான 11-ல் அதிசாரமாக (கும்ப ராசியில்) வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை மற்றும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை சஞ்சரிக்க உள்ள காலத்தில் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. உங்கள் பலமும் வலிமையும் கூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி அளிக்கும் நிகழச்சிகள் நடைபெறும். நவீன பொருட்கள், வீடு வாகனம் போன்றவற்றை வாங்க கூடிய யோகம் சிலருக்கு உண்டாகும். எடுக்கும் பணிகளை சிறப்புடன் செய்து முடித்து அனைவரின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். பொன் பொருள் சேரும்.

குரு (மகர ராசியில்) வரும் 20-11-2020 முதல் 06-04-2021 வரையும் மற்றும் வரும் 14-09-2021 முதல் 20-11-2021 வரையும் உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் இக்காலங்களில் பண விஷயங்களில் கவனமுடன் இருப்பது, எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் சற்று சுமாராக இருக்கும். கூட்டாளிகளின் ஆதரவால் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சலை குறைத்து கொள்ள முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் இருப்பது, பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள், அலர்ஜி ஏற்படலாம் என்றாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது சிறப்பு. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சில நேரங்களில் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது, மருத்துவ காப்பீடு எடுத்து கொள்வது நல்லது. முன் கோபத்தை குறைப்பது, பேச்சில் பொறுமையை கடைபிடிப்பது உத்தமம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே தேவையற்ற பிரச்சினைகள், கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு 2021 ஏப்ரலுக்கு பின்பு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று திருமண சுபகாரியம் கைகூடும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கும் புத்திர பாக்கியம் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும்.

உத்தியோகம்

செய்யும் பணியில் சில நிம்மதி குறைவுகளை சந்திக்க நேர்ந்தாலும் கௌரவமான பதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு வெளியிடங்களில் தங்கி பணிபுரிய நேரிடும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்றாலும் வேலைபளு சற்று அதிகப்படியாக இருக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் சற்று மந்தநிலை நிலவினாலும் பொருட் தேக்கம் ஏற்படாமல் சமாளிக்க முடியும். நவீன கருவிகளை வாங்க அரசு வழியில் கடனுதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளையும் வேலையாட்களையும் அனுசரித்து  செல்வது நல்லது.  வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. கடன்கள் ஒரளவுக்கு குறையும். தூர பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படவும். பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். நம்பியவர்களே பண விஷயத்தில் நெருக்கடிகளை உண்டாக்குவார்கள் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். கொடுத்த பணத்தை பல்வேறு தடைகளுக்குப் பின்பே வசூலிக்க முடியும்.

அரசியல்

மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். பெயர் புகழ் கௌரவ பதவிகள் தேடி வரும் என்றாலும் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். எது பேசுவது என்றாலும் சிந்தித்து பேச்சினால் நற்பலனை அடைய முடியும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கு ஏற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் லாபங்கள் பெருகும். உடன் இருப்பவர்களிடமும் பங்காளிடமும் பேச்சில் கவனத்துடன் இருப்பதும், வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. புதிய நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. காய்கனிகளாலும், கால்நடைகளாலும் லாபத்தை அடைய முடியும்.

கலைஞர்கள்

உங்கள் உழைப்பிற்பான பலனை பெற முடியும். சிறு சிறு தடைகள் இருக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை தற்போது பயன்படுத்தினால் 2021 ஏப்ரலுக்கு பின்பு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் செயல்பாடுகளால்  ரசிகர்களின் ஆதரவும் பெருகும். வரவேண்டிய பணத்தொகைகள் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைத்து உங்கள் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். இழந்தவற்றை மீட்க கூடிய ஆற்றல் உண்டாகும். பயணங்கள் மூலம் அலைச்சல்கள் இருந்தாலும் அதனால் ஆதாயம் இருக்கும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொள்வது மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்க முடியும்.  மங்களகரமான சுப காரியங்கள் 2020 ஏப்ரலுக்கு பின் கைகூடும். புத்திர வழியில் நல்ல செய்தி கிடைக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது, கணவர் வழி உறவினர்களிடம் பேச்சில் கவனத்துடன் இருப்பது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்து ரீதியாக நற்பலன் கிடைக்கும்.

மாணவ மாணவியர்

கல்வியில் சற்று மந்தநிலை ஏற்படும் என்பதால் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு நன்றாக இருக்கும். விளையாட்டு போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டி செல்வீர்கள். தேவையற்ற நட்புக்கள் உங்களை வேறுபாதைக்கு அழைத்துச் செல்லும். வண்டி வாகனங்களில் செல்லும் போதும் நிதானம் தேவை.

 

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 23-09-2020 முதல் 26-01-2021 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 2-ல் ராசியாதிபதி செவ்வாய் நட்சத்திரமான மிருகசீரிஷத்திலும், கேது 8-ல் கேட்டை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் பொருளாதரா ரீதியாக ஏற்ற இறக்கமானப் பலன்களையே பெற முடியும் என்பதால் நீங்கள் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு மற்றவர்களிடம் நிதானமாக செயல்படுவது நல்லது. பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. தன காரகன் குரு வரும் 20-11-2020 வரை பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சாரம் செய்வதால் எந்த பிரச்சினையும் எதிர்கொண்டு நற்பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களால் உடல் சோர்வு சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியிருக்காது. சனி 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும் வாய்ப்பு ஏற்படும் என்றாலும் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சிறிது நாள் இருக்க நேரிடும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 27-01-2021 முதல் 01-06-2021 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 2-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 8-ல் கேட்டை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. சனி 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் ரீதியாக வீண் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கலாம். எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வாக்கு வாதங்கள் தோன்றும் என்பதால் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைய வாய்ப்பு உண்டு. அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் ஏற்படக்கூடும். வீடு வாகனம் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். வரும் 06-04-2021 முதல் குரு அதிசாரமாக 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும் என்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது சிறப்பு. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடனில்லா கண்ணிய வாழ்க்கை அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்று அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்வது உத்தமம்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 02-06-2021 முதல் 05-10-2021 வரை

ஜென்ம ராசிக்கு ராகு 2-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 8-ல் அனுஷ நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படும். தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். சனி 10-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகப்படியாக இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் மூலம் நல்லது நடக்கும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகலாம். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. வரும் 14-09-2021 வரை குரு அதிசாரமாக 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் தொழில்- வியாபாரத்தில் எதிர்பாராத நன்மைகள் ஏற்பட்டு அனுகூலங்களை அடைவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே அனுகூலப்பலனைப் பெற முடியும். உறவினர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மனதிற்கு நிம்மதியை தரும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 06-10-2021 முதல் 08-02-2022 வரை

ஜென்ம ராசிக்கு ராகு 2-ல் கிருத்திகை நட்சத்திரத்தில், கேது 8-ல் அனுஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கட்டுப்பாடு தேவை. முடிந்த வரை தூர பயணங்களை தவிர்க்கவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றும் காலம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். 10-ல் சனி சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் வரும் 20-11-2021 முதல் குரு 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதார நிலையில் நல்லதொரு மாற்றம் உண்டாகி பண வரவு சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். தொழில்- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் மேன்மைகளை அடையலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். தேவையற்றப் பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 09-02-2022 முதல் 12-04-2022 வரை

உங்கள் ராசிக்கு ராகு 2-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும், கேது 8-ல் விசாக நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும் என்றாலும் 11-ல் குரு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று சாதகமான பலன்களை அடைவீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தேவையற்ற செலவுகள் குறையும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. முடிந்த வரை மற்றவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலன் ஏற்படும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் மேன்மைகளை அடைவார்கள். கடந்த கால பொருட் தேக்கம் விலகி முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளி மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். வேலைபளு இருந்தாலும் சம்பள உயர்வு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படுவார்கள்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9,           

நிறம் - ஆழ் சிவப்பு

கிழமை - செவ்வாய்

கல் - பவளம்

திசை - தெற்கு

தெய்வம் - முருகன்

 

பரிகாரம்

மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 2-ல் ராகு 8-ல் கேது சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

சனி 10-ல் சஞ்சரிப்பதால் சனிக்கு தொடர்ந்து பரிகாரம் செய்வது அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, சனிக்கிழமைகளில் விரதமிருந்து நல்லெண்ணெய் தீபமேற்றுவது, கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வது நல்லது.

 

No comments: