Thursday, August 27, 2020

சிம்மம்   - ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

 

சிம்மம்   - ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்

மனசாட்சிக்கு கட்டுப்பட்டவராகவும், எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறக்கூடிய ஆற்றல் கொண்டவராகவும் விளங்கும் சிம்மராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இது நாள் வரை நிழல் கிரகமான ராகு 11லும், கேது 5லும் சஞ்சாரம் செய்தனர். திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் 23-9-2020 முதல் 12-04-2022 வரை (வாக்கியப் பஞ்சாங்கபடி 01-09-2020 முதல் 21-03-2022 வரை). சர்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசிக்கு 10-ஆம் வீட்டிலும், கேது 4-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய உள்ளது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். பண வரவு சிறப்பாக இருந்தாலும் வேலைபளு சற்று அதிகப்படியாக இருக்கும். வீடு வாகனங்கள் மூலம் எதிர்பாராத வகையில் வீண் செலவுகள் ஏற்படும்.

சர்ப கிரக சஞ்சாரம் சாதகமற்று இருந்தாலும் ஒரு ராசியில் அதிக நாள் சஞ்சரிக்கும் கிரகமான சனி திருக்கணிதப்படி உங்கள் ராசிக்கு ருண ரோக ஸ்தானமான 6-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பது மிகவும் சிறப்பான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். தாராள தன வரவால் சகல விதத்திலும் மேன்மையான பலனை அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் அலைச்சல் இருந்தாலும் லாபங்கள் அதிகரிக்கும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக முயற்சிகள் மேற்கொண்டால் அது பரிபூரண வெற்றியை தரும். கடந்த கால கடன்கள் குறைந்து சேமிக்கும் வாய்ப்பு ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் யோகம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும் சூழ்நிலை ஏற்படும். சக நண்பர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

            உங்கள் ராசியாதிபதி சூரியனுக்கு நட்பு கிரகமும் தன காரகனுமான குரு பகவான் வரும் 20-11-2020 வரை பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதும் அடுத்து சமசப்தம ஸ்தானமான 7-ல் (அதிசாரமாக கும்ப ராசியில்) வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை மற்றும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை சஞ்சரிக்க உள்ள காலத்தில் உங்களது பொருளாதார நிலை மேலும் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும், கணவன்- மனைவியிடையே அன்னோன்யம் அதிகரிக்கும். அழகிய குழந்தையை பெறும் வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களில் தொடக்கத்தில் சில பிரச்சினைகளை சந்தித்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். கொடுத்த கடன்களும் தக்க நேரத்தில் திரும்ப வரும். கடந்த கால வீண் வம்பு வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

குரு (மகர ராசியில்) வரும் 20-11-2020 முதல் 06-04-2021 வரையும் மற்றும் வரும் 14-09-2021 முதல் 20-11-2021 வரையும் உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ள காலத்தில் மட்டும் பண விஷயத்தில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு சிக்கல்களை எதிர் கொள்ள நேரிட்டாலும் சனி 6-ல் சஞ்சரிப்பதால் அனுகூலப்பலனை அடைய முடியும்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களால் மன நிம்மதி ஏற்படும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள், இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாக கூடிய காலம் என்பதால் எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. தூர பயணங்களை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கடினமாக உழைத்தால் தான் நற்பலனை அடைய முடியும்.

குடும்பம் பொருளாதாரநிலை

பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் உற்றார் உறவினர்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பு வெற்றி பெற முடியும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு சுப செலவுகளை சந்திப்பீர்கள்.

உத்தியோகம்

எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் பதவி உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு அதிகமாக இருக்கும் என்பதால் மனநிம்மதியற்ற நிலை ஏற்படும். உடல் நிலை காரணமாக எதிலும் திறம்பட செயல்பட முடியாத நிலை ஏற்படும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பதும், பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் மேன்மைகள் அடைவீர்கள் என்றாலும் அதிக அலைச்சல் இருக்கும். தொழில் சிறப்பாக இருந்தாலும் மறைமுக பிரச்சினைகளால் அனைத்து விஷயத்திலும் அதிக அக்கறை எடுக்க வேண்டி இருக்கும். உடனிருப்பவர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பையும் பெற முடியாமல் போகும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி முன்னேற்றத்தை அடைய முடியும். கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு வாங்குவதற்கு பலமுறை அலைந்து தான் வாங்க முடியும்.  நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.

அரசியல்

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதால் உங்கள் பதவிக்கு பங்கம் ஏற்படாது பார்த்து கொள்ள முடியும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டி வருவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வாக்குறுதிகள் கொடுக்கும் போது சிந்தித்து செயல்படவும். பத்திரிக்கை நண்பர்களை பகைத்து கொள்ளாது இருப்பது உத்தமம்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். நவீன முறைகளை கையாண்டு விளைச்சலைப் பெருக்க முடியும் என்றாலும் வேலைக்கு தக்க சமயத்திற்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். இதனால் செய்யும் பணியில் சுனக்கம் ஏற்படும். எதிலும் நீங்களே முன் நின்று செயல்பட வேண்டிய நிலை இருப்பதால் ஒய்வு இல்லாமல் உழைக்க வேண்டி இருக்கும். பங்காளிகளை பகைத்து கொள்ளாமல் இருப்பது, தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

கலைஞர்கள்

எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் கிடைத்த வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்து கொள்வது நல்லது. வரவேண்டிய பணத்தொகைகள் வரவேண்டிய நேரத்தில் வந்து சேரும். கார், பங்களா வாங்கும் யோகம் ஏற்படும். உடனிருப்பவர்களிடம் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் சுகவாழ்விற்கு இடையூறு தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். குடும்ப பிரச்சினைகளை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ளாது இருக்கவும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் அமைந்து மகிழ்ச்சி ஏற்படும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றவாறு சிறப்பாக இருக்கும்.

மாணவ- மாணவியர்

மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடிய காலமிது என்பதால் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. கல்வி ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் தடைளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். விளையாட்டுப் போட்டிகளின் போது சற்று கவனமுடன் செயல்படுவது, தேவையற்ற நட்புக்களை தவிர்ப்பது நல்லது.

 

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 23-09-2020 முதல் 26-01-2021 வரை

உங்கள் ராசிக்கு 10-ல் ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், சனி 6-லும் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து வெற்றிகளை பெற்று விட முடியும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்திலுள்ள அனைவரையும் அனுசரித்துச் செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கடந்த கால வம்பு வழக்குகள் மறைந்து நிம்மதி ஏற்படும். உங்கள் ராசிக்கு 5-ல் குரு 20-11-2020 முடிய சஞ்சரிப்பதால் திருமண சுபகாரிய முயற்சியில் முனைப்புடன் முயற்சித்தால் சாதகப்பலன் கிடைத்து குடும்பத்தில் மங்கள நிகழ்வு நடக்கும். கேது 4-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள், தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகி லாபங்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. மாணவர்கள் முயன்று படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 27-01-2021 முதல் 01-06-2021 வரை

ஜென்ம ராசிக்கு ராகு 10-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், ருண ரோக ஸ்தானமான 6-ல் சனி ஆட்சி பெற்று சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சிகளில் லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கேது 4-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் மந்தமான நிலை உடல் சோர்வு ஏற்படும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும்.  குரு உங்கள் ராசிக்கு 06-04-2021 முடிய 6-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வகையில் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும். திருமண சுபகாரியங்கள் தடைக்கு பின்பு கைகூடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலையை சந்திக்க நேர்ந்தாலும் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். வேலையாட்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்து நடந்து கொண்டால் தொழிலில் முன்னேற்றத்தை அடைய முடியும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு குறைவாகவே இருந்தாலும் அடைய வேண்டிய மதிப்பெண்களை பெறுவார்கள். தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 02-06-2021 முதல் 05-10-2021 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 10-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 4-ல் அனுஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும் 6-ல் சனி சஞ்சரிப்பதும் உங்களுக்கு நன்மைகளை தரும் அமைப்பு என்றாலும் தேவையற்ற இடையூறுகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தாலும் அலைச்சல் உடல் அசதி ஏற்படும் என்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை காணப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றாலும் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. ஆண்டு கோளான குரு பகவான் அதிசாரமாகவும் வக்ர கதியிலும் 7-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும் எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும். வேலையாட்கள் மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மேலதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு மன ஆறுதலை தரும். மாணவர்களின் கல்வி திறன் சிறப்பாகவே இருக்கும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது நல்லது.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 06-10-2021 முதல் 08-02-2022 வரை

உங்கள் ராசியாதிபதி சூரியன் நட்சத்திரமான கிருத்திகையில் ராகு 10-ல் சஞ்சரிப்பதாலும். 6-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும் கடந்த கால சிக்கல்கள் விலகி நீங்கள் நினைத்ததை நிறைவேற்ற முடியும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் 4-ல் கேது சனி நட்சத்திரத்தில் இருப்பதால் தேவையற்ற அலைச்சல் வண்டி, வாகனங்கள் மூலம் வீண் செலவுகள் ஏற்படும். வரும் 20-11-2021 முதல் குரு உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிப்பதால் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் நல்லது நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கடன் பிரச்சினைகள் குறைந்து சேமிக்கும் அளவிற்கு தாராள தன வரவு ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த போட்டிகள் மற்றும் மறைமுக எதிர்ப்புகள் விலகி ஒரு தெளிவான நிலை ஏற்படும். கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்றுக் கூடுதலாக இருந்தாலும் பதவி உயர்வுகளும் சம்பள உயர்வுகளும் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதோடு விளையாட்டு போட்டிகளில் சிந்தித்து செயல்பட்டால் வெற்றியினைப் பெற முடியும்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 09-02-2022 முதல் 12-04-2022 வரை

உங்கள் ராசியாதிபதி சூரியன் நட்சத்திரத்தில் ராகு 10-லும், குரு நட்சத்திரமான விசாகத்தில் கேது 4-லும் சஞ்சரிப்பது மட்டுமின்றி இக்காலத்தில் உங்கள் ராசிக்கு 6-ல் சனி, 7-ல் குரு சஞ்சரிக்க உள்ளதால் சகல விதத்திலும் நற்பலன்கள் தேடி வரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை மிக சிறப்பாக இருப்பது மட்டுமின்றி எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நன்மைகள் நடக்கும். பொன் பொருள் வாங்க கூடிய வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். பணியில் நிம்மதியான நிலை இருக்கும். வேலைபளு குறையும். சிலருக்கு வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு மூலம் அனுகூலமான செய்தி கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தேக்கங்கள் விலகி லாபகரமான பலனை அடைவீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும். 

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9

நிறம் - வெள்ளை, சிவப்பு

கிழமை - ஞாயிறு, திங்கள்

கல் - மாணிக்கம்

திசை- கிழக்கு

தெய்வம் - சிவன்

 

பரிகாரம்

சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 4-ல் கேது, 10-ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை தொழு நோயாளிகளுக்கு தானம் கொடுப்பது. அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறி வருவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்  கூறுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

No comments: