Tuesday, August 25, 2020

ரிஷபம் - ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

 

ரிஷபம்  - ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

சாந்தமான குணம் இருந்தாலும் கோபம் வந்தால் கட்டுப்படுத்த முடியாத இயல்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2, 8-ல் சஞ்சரித்த சர்ப்ப கிரகங்களான ராகு கேது திருக்கணிதப்படி வரும் 23-9-2020 முதல் 12-04-2022 வரை (வாக்கியப் பஞ்சாங்கபடி 01-09-2020 முதல் 21-03-2022 வரை) ராகு ஜென்ம ராசியிலும், கேது 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவி விட்டு கொடுத்து செல்வது, கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்படும் சிறு சிறு சிக்கல்களை எதிர் கொள்ள முடியும். 8-ல் சஞ்சரித்த கேது 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் கடந்த கால உடல் நிலை பாதிப்பு விலகும் என்றாலும் உணவு விஷயத்தில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்ப ஒற்றுமை சற்று சாதகமாக இருக்கும் நிலை, பெற்றோர்களின் ஆதரவு மூலம் குடும்பத்தில் நல்லது நடக்கும் வாய்ப்பு உண்டாகும்.

சுக்கிரனின் ராசியில் பிறந்த உங்களுக்கு ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி தற்போது திருக்கணிதப்படி 9-ல் சஞ்சரிப்பதால் உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வேலை நிமித்தமாக வெளியூர்களில் இருந்தவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இனைந்து வாழம் வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு வெளியூர் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.

வரும் 20-11-2020 முதல் 06-04-2021 வரையும் மற்றும் வரும் 14-09-2021 முதல் 20-11-2021 வரையும் குரு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் ஏற்படும். பொருளாதார நிலையும் தேவைக்கு ஏற்றபடி இருப்பதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். வீடு, மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் அனுகூலப்பலன் கிடைக்கும். பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் இருந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு செய்யும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும். உயர் அதிகாரிகளால் சிறுசிறு கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடன் பணி புரியவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

குரு உங்கள் ராசிக்கு 10-ல் அதிசாரமாக (கும்ப ராசியில்) வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை மற்றும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை சஞ்சரிக்க உள்ள காலத்தில் தொழில் வியாபாரத்தில் சற்று கவனத்துடன் இருப்பது வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. குறிப்பாக இக்காலத்தில் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும் நிலை, அலைச்சல் டென்ஷன்கள் ஏற்படலாம் என்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

 

உடல் ஆரோக்கியம்

உடல் நிலையில் கவனம் செலுத்துவது உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. உங்களின் விடா முயற்சியால் எதையும் எதிர் கொள்வீர்கள். எந்தவொரு காரியத்திலும் அதிக உழைப்பினை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் ஆரோக்கிய பாதிப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும். தூர பயணங்கள் உங்களுக்கு அலைச்சலை தந்தாலும் அதனால் பொருளாதார அனுகூலங்கள் உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை

பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகள் உண்டாகும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் அனுசரித்து நடப்பது மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் நற்பலன் உண்டாகும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வேலைபளு அதிகரித்தாலும் அதனால் ஆதாயம் இருக்கும். எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகள் வரும் நாட்களில் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானமாக இருந்தால் நல்ல நிலையை அடைய முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வெளியூர் மூலம் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். வீண் பழிச் சொற்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்பதால் சக நண்பர்களிடம் பேச்சை குறைத்து கொண்டு தங்கள் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தக்க நேரத்தில் கிடைத்து வாழ்வில் படிப்படியான வளர்ச்சியை அடைவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலங்கள் கிடைக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் வளமான பலனை அடைய முடியும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதும் அவர்களை கலந்தாலோசித்து எந்த முடிவுகளையும் எடுப்பதும் நல்லது. அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் மூலம் அனுகூலப்பலன்கள் கிடைக்கும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றில் சற்று கவனத்துடன் செயல்பட்டால் மேன்மைகள் உண்டாகும். கொடுத்த கடன்களை வசூலிக்க முடியும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் நல்ல தீர்ப்புகள் கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும். முடிந்த வரை மற்றவர்கள் விஷயத்தில் தலையீடாமல் இருப்பது நல்லது.

அரசியல்

மக்களின் ஆதரவும் சிறப்பாக இருப்பதால் எதிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நற்பெயர் எடுப்பீர்கள். கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைகள் இருந்தாலும் அதனால் உங்கள் பெயர் புகழ் மேன்படும். அடிக்கடி தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். உங்கள் முன் கோபத்தை குறைத்து கொண்டு பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பத்திரிக்கை நண்பர்களை அனுசரித்து செல்வது உத்தமம்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் நன்றாக அமைந்து லாபகரமான பலனை அடைவீர்கள். உழைப்பிற்கு ஏற்ற லாபத்தை பெற்று உங்களின் கடந்த கால கடன்கள் படிப்படியாக குறையும். சரியான நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டாலும் எதையும் தனித்து நின்று சமாளித்து விடுவீர்கள். அரசு வழியில் கிடைக்க வேண்டிய மானிய உதவிகள் மூலம் மன மகிழ்ச்சி ஏற்படும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். மற்றவர்கள் விஷயத்தில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம்.

கலைஞர்கள்

புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். ரசிகர்களின் ஆதரவுகள் குறையாமல் இருப்பதால் எதிலும் உற்சாகத்துடன் ஈடுபட முடியும். கார், பங்களா வாங்கும் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். வெளியூர்  பயணங்கள் மேற்கொண்டு அதன் மூலம் ஆதாயம் அடைவீர்கள். பத்திரிக்கைகளில் வரும் கிசுகிசுக்களால் மனநிம்மதி குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளில் ஓரளவுக்கு சுறுசுறுப்பாக செயல்பட முடியும். திருமண சுபகாரியங்கள் நிறைவேறி மன மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவி அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். பொருளாதார நிலை தேவைக்கு ஏற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை சற்று குறைத்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மாணவ மாணவியர்

கல்வியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுப்பீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். தேவையற்ற பொழுது போக்குகளால் மனம் வேறுபாதைகளுக்கு மாறிச் செல்லும். விளையாட்டுப் போட்டிகளின் போது சற்று கவனமுடன் செயல்படுவதும் உடல் நலத்தில் அக்கறை எடுத்து கொள்வதும் நல்லது. கல்விக்காக பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புகள் அமையும்.

 

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 23-09-2020 முதல் 26-01-2021 வரை

ராகு ஜென்ம ராசியில் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், கேது 7-ல் கேட்டை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்து கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிப்பதோடு உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவு நிலவினாலும் உங்கள் ராசிக்கு தர்மகர்மாதிபதி சனி 9-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தற்போது 8-ல் சஞ்சரிக்கும் குரு வரும் 20-11-2020 முதல் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால்  பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடும் வாய்ப்பு உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலப்பலன் கிட்டும். தொழில் வியாபாரத்தில் கடந்த கால மந்த நிலை விலகி முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினைப் பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் லாபகரமான பலனை அடைய முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் நற்பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவரின் ஒத்துழைப்பால் எதையும் சமாளிப்பீர்கள். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களை தவிர்த்தால் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 27-01-2021 முதல் 01-06-2021 வரை

ராகு ஜென்ம ராசியில் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 7-ல் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமையும் சுபிட்சமும் சிறப்பாகவே இருக்கும். உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு, சனி சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். பணம் பல வழிகளில் தேடி வரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வீடு மனை போன்றவற்றை வாங்கும் முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். நல்ல வரன்களும் தேடி வரும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். பல பெரிய மனிதர்களின் உதவிகளும் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகளும், பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதையும் சிறப்புடன் செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். பெற்றோர் ஆசிரியர்களுக்கு கீழ் படிந்து நடந்து கொண்டால் அனைவரின் ஆதரவுகளையும் பெறுவீர்கள்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 02-06-2021 முதல் 05-10-2021 வரை

ராகு ஜென்ம ராசியில் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 7-ல் அனுஷ நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் சற்று பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாது என்றாலும் அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் எந்த சிரமமும் இருக்காது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. குருவும் அதிசாரமாக 10-ல் 14-09-2021 முடிய சஞ்சரிப்பதால் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சில காலம் தள்ளி வைப்பது உத்தமம். உங்கள் ராசிக்கு 9-ல் சனி சஞ்சரிப்பதால் எந்த வித எதிர்ப்புகளையும் சமாளித்து வெற்றிகளை பெற்று விடுவீர்கள். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சற்று பிரச்சினைகளை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் எதையும் சமாளிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை உண்டாக கூடும் என்பதால் முழு மூச்சுடன் முயன்று படிப்பது உத்தமம்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 06-10-2021 முதல் 08-02-2022 வரை

ராகு ஜென்ம ராசியில் கிருத்திகை நட்சத்திரத்திலும், கேது 7-ல் அனுஷ நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றும் என்பதால் உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் மட்டுமே தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். குரு வரும் 20-11-2021 முதல் 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளை எதிர்கொள்ள நேரிடும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவும் என்றாலும் சனி 9-ல் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். நீங்கள் எதிர் நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் வேலைபளு கூடும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளைத் ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 09-02-2022 முதல் 12-04-2022 வரை

ராகு ஜென்ம ராசியில் கிருத்திகை நட்சத்திரத்திலும், கேது 7-ல் விசாக நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதாலும் குரு 10-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது சிறப்பு. நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலைகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்து கொள்ளலாம். பாக்கிய ஸ்தானமான 9-ல் சனி சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்து குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருந்தாலும் அடிக்கடி சிறு சிறு ஒற்றுமை குறைவுகளும் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்கு பின்பு அனுகூலமானப் பலனை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னெறி விட கூடிய ஆற்றல் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளர்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்து செல்வது சிறப்பு. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். விளையாட்டு போட்டிகளில் கவனம் தேவை.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,8.

நிறம் - வெண்மை, நீலம்,

கிழமை - வெள்ளி,சனி

கல் - வைரம்,

திசை - தென்கிழக்கு,

தெய்வம் - விஷ்ணு, லட்சுமி

 

பரிகாரம்

ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்குவது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்பயன்படுத்துவது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

No comments: