Wednesday, April 8, 2020

கன்னி - சார்வரி வருட பலன்கள் 2020-2021


கன்னி - சார்வரி வருட பலன்கள் 2020-2021
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
அனைவரிடமும் சகஜமாகப் பழகினாலும் அளவோடு தன்மையுடன் பேசும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த சார்வரி வருடத்தில் உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகமான சனி பகவான் ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பாகும். பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் வரும் ஆனி 15 (30-06-2020) முடியவும் அதன் பின்பு கார்த்திகை 5ஆம் தேதி (20-11-2020) முதல் உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உங்களது உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து எதிலும் தெம்போடு செயல்படும் உடல் வலிமை பெறுவீர்கள். கடந்த கால அலைச்சல்கள் குறைந்து மன நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் கைகூடும். பூர்வீக சொத்து விஷயங்களில் உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலமான பலன்களை அடைய முடியும். புத்திரர்களால் ஒரு சில மன சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. தொழில் வியாபார ரீதியாக உங்களது முயற்சிகளுக்கு சாதகமான பலன்களை வரும் நாட்களில் அடையும் யோகம் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும், உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறைந்து வலமான பலன்களை அடைவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைத்து உங்களுக்கு இருந்த மன ஆதங்கம் எல்லாம் விலகி மன மகிழ்ச்சி ஏற்படும்.  சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்லும் யோகமும் அதன் மூலம் ஆதாயமும் உண்டாகும். 
                சர்ப்ப கிரகமான ராகு 10-ல், கேது 4-ல் ஆண்டின் முற்பாதியில் சஞ்சரிப்பது சற்று அலைச்சலை தரும் அமைப்பு என்றாலும் வரும் புரட்டாசி 7 (23-09-2020) முதல் ராகு 9-ல், கேது 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்களை அடையும் வாய்ப்பு உண்டாகும். அசையும் அசையா சொத்து வழியில் அனுகூலம் ஏற்படும். குரு பகவான் வரும் ஆனி 15 முதல் கார்த்திகை 5 வரை (30-06-2020 முதல் 20-11-2020) உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிக்க இருப்பதால் இக்காலத்தில் பொருளாதார நிலை சற்று சுமாராக இருக்கும் என்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்துடன் இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது சிறப்பு. பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும்.

உடல் ஆரோக்கியம்
உங்களின் உடல் ஆரோக்கியமானது அற்புதமாக இருக்கும். எதிரிகளின் பலம் குறைந்து உங்களின் பலமும் வலிமையும் கூடும். எடுக்கும் முயற்சிகளில் தங்குதடையின்றி செயல்பட்டு நல்ல அனுகூலத்தைப் பெறுவீர்கள். மனைவி பிள்ளைகளும் சுபிட்சமாக இருப்பார்கள். இதுவரை நீண்ட நாட்களாக தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை மேற்கொண்டிருப்பவர்களுக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக குறையும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் உடல் நிலையும் மனநிலையும் மிகவும் மகிழ்ச்சிகரமாக அமையும்.
குடும்பம் பொருளாதாரம்
இந்த வருடம் முழுவதும் குடும்பச் சூழ்நிலையானது மகிழ்ச்சியளிப்பதாக அமையும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். சிறப்பான புத்திர பாக்கியம் அமையும். குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் கைகூடும். பணவரவுகள் ஒரளவுக்கு சாதகமாக அமைவதால் வீடு, மனை, வண்டி வாகனம் போன்றவை வாங்கும் யோகம் அமையும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும்.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்கள் உயர்வடையும் காலமிது என்று சொன்னால் அது மிகையாகாது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கௌரவமான உயர்பதவிகள், பலரை வழி நடத்தும் நிர்வாகத்திறன் போன்றவை சிறப்பாக அமையும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள முடியும். செய்யும் பணியாவற்றிலும் உங்கள் திறமைகள் பளிச்சிடும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்பு தகுதிக்கேற்றபடி அமையும். சமுதாயத்தில் பெயர், புகழ் யாவும் உயரும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அபிரிமிதமான லாபம் கிட்டும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். புதிய கிளைகளை உருவாக்கும் நோக்கம், பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யும் நோக்கம் போன்ற யாவும் நிறைவேறும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடும், தொழிலாளர்களின் ஆதரவும் மேலும் மேலும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும். வெளியூர் வெளிநாடு தொடர்புடையவற்றால் அனுகூலம் உண்டாகும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் லாபம் அதிகரிக்கும்.
பெண்கள்
உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மண வாழ்க்கை சிறப்பாக அமையும். சிறப்பான புத்திர பாக்கியம் அமையும். பகைமை பாராட்டிய உறவினர்களும் தேடி வந்து நட்புக் கரம் நீட்டுவார்கள். பண வரவுகளும் தாராளமாக அமையும். பூர்வீகச் சொத்துகளால் அனுகூலம் ஏற்படும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். கடன்கள் குறையும். பணிபுரியும் பெண்களுக்கு நல்ல கௌரவமான பதவி கிடைக்கும். ஊதிய உயர்வுவை அடைய முடியும்.
கொடுக்கல்- வாங்கல்
இந்த ஆண்டில் தன காரகன் குரு பகவான் வரும் 30-06-2020 முடியவும் அதன் பின்பு 20-11-2020 முதல் 5-ல் சஞ்சரிக்க உள்ள காலத்தில் பணவரவுகள் மிகவும் சரளமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான லாபம் கிடைக்கும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி முன்னேற்றங்களை அடைய முடியும். வம்பு வழக்குகளில் சாதகமான பலன் கிட்டும்.
அரசியல்
அரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு ஒரு பொன்னான ஆண்டாக இருக்கும். நினைத்த காரியங்களை நினைத்தபடி நிறைவேற்றுவீர்கள். மக்களின் ஆதரவால் பெயர், புகழ், செல்வம் செல்வாக்கு உயரும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றக்கூடிய அளவிற்கு உங்களின் பலமும் வலிமையும் கூடும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும்
விவசாயிகள்
விவசாயிகள் விளைச்சலை இரட்டிப்பாகப் பெறுவார்கள். சந்தையில் உங்களின் விளைபொருளுக்கேற்ற விலையும் சிறப்பாகக் கிடைக்கும். எதிர்பாராத அரசாங்க உதவிகளால் அனுகூலம் ஏற்படும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் புதிய பூமி, மனை வாங்கும் யோகம், புதிய பம்ப் செட்டுகள் அமைக்கும் வாய்ப்பு போன்றவை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக் கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கலைஞர்கள்
கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும் ஆண்டாக இருக்கும். எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். தாராள தன வரவுகளும் உண்டாவதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வுக்குப் பஞ்சம் இருக்காது. நவீன பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். நடித்த படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் சிறப்பான மேன்மை அமையும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவும் பாராட்டுதல்களும் உங்களுக்கு மேலும் மேலும் உற்சாகத்தைத் தரும். நல்ல நட்பு மூலம் நற்பலனை அடைவீர்கள். விளையாட்டு போட்டிகளில் அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கமே வீசும்.

மாதப்பலன்
சித்திரை       
உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். இம்மாதம் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் ஏற்பட்டு உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். சிறப்பான பொருளாதாரத்தால் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய முடியும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு செலவுகளை சந்திப்பீர்கள். எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதி ஏற்படும். சிவ வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
வைகாசி 
உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 9-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடையும். கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் தடைப்பட்டுக் கொண்டிருந்த பதவி உயர்வுகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மன மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமும் நிறைந்து இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். சிலருக்கு வண்டி, வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும். ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது நல்லது.
ஆனி                
உங்கள் ராசியதிபதி புதன், சூரியன் சேர்க்கைப் பெற்று 10-ல் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள். சுக்கிரன் 9-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வினைப் பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைவீர்கள். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.
ஆடி                   
இம்மாதம் சூரியன் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதும் சுக்கிரன் 9, 10-ல் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் லாபகரமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். சுபச்செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபங்களை அடையலாம். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் சிறு தடை தாமதத்திற்குப் பின் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். உத்தியோகத்தில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
ஆவணி        
உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாகும். இம்மாதத்தில் சுக்கிரன் 10, 11-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றும் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக வீண் விரயங்களையும், நெருக்கடிகளையும் சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளிக்கும் வலிமையும் வல்லமையும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைபளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் நிம்மதியான நிலை இருக்கும். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.
புரட்டாசி      
ஜென்ம ராசியில் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பதும், நெருங்கியவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. வரும் 7-ஆம் தேதி முதல் கேது 3-ல் சஞ்சரிக்க இருப்பது சற்று சாதகமான அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுக்க வேண்டி இருக்கும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் தோன்றும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் ஏற்படும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்து கொள்வது உத்தமம். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும். சிவ வழிபாடு செய்வது நல்லது.
ஐப்பசி             
உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 5-ல் சனி சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக சற்று அனுகூலங்கள் ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றியினை அடைவீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சூரியன் 2-ல், செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்துச் செயல்பட்டால் லாபத்தினை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினைப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனம் தேவை. வேலையாட்களால் வீண் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.
கார்த்திகை                
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதும், வரும் 5-ஆம் தேதி முதல் குரு 5-ல் சஞ்சரிக்க இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி மேல் வெற்றி அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்களை அடைய முடியும். தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகத்தில் மன நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்துக் காத்திருந்த ஊதிய உயர்வு, இடமாற்றம் போன்றவை கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பேச்சில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. திருமண சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். கடன்கள் நிவர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொள்வது உத்தமம்.
மார்கழி         
குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும், முயற்சி ஸ்தானமான 3-ல் கேது சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பாகும்.  கணவன்- மனைவியிடையே சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். சூரியன் 4-ல், செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் வர வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். துர்கையம்மனை வழிபடவும்.
தை                    
உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 5-ல் சூரியன், குரு சஞ்சரிப்பதும், 4, 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் ஏற்றத்தை தரும் அமைப்பு என்பதால் முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் ரீதியாக வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். உத்தியோகத்தில் நிம்மதியான நிலை இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். சிவ வழிபாடு செய்வது நல்லது.
மாசி                  
உங்கள் ராசியதிபதி புதன்- குரு சேர்க்கைப் பெற்று பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதும் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் மிகவும் அனுகூலமான அமைப்பு என்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். ஓரளவுக்கு எதையும் எளிதில் எதிர்கொண்டு வெற்றியையும் லாபத்தினையும் பெறுவீர்கள். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவிற்கு பாதிக்காது. கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். அசையும் அசையா சொத்துகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கடன்கள் சற்று நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களை அடைய முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். சனி பகவான் வழிபாடு செய்வது நல்லது.
பங்குனி
குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும், 3-ல் கேது சஞ்சரிப்பதாலும் உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் சூரியன் 7-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பதும், பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5,6,7,8                   நிறம் - பச்சை, நீலம்            கிழமை - புதன், சனி
கல் -  மரகத பச்சை               திசை - வடக்கு          தெய்வம்ஸ்ரீவிஷ்ணு


No comments: