Wednesday, April 8, 2020

மேஷம் - சார்வரி வருட பலன்கள் 2020-2021


மேஷம் - சார்வரி வருட பலன்கள் 2020-2021
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
வாக்கு சாதுர்யமும், வசீகர பேச்சுத்திறனும் கொண்ட மேஷ ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த சார்வரி வருடத்தில் பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் வரும் ஆனி 15 முதல் கார்த்திகை 5 வரை (30-06-2020 முதல் 20-11-2020) சஞ்சரிப்பதாலும் சர்ப்ப கிரகமான ராகு 3-ல் புரட்டாசி 7 (23.09.2020) வரை சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சியில் வெற்றி, தாராள தன வரவு, உங்களது குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களின் உழைப்பாற்றலால் புதிய வாய்ப்புகளை பெற்று உயர்வடைவீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எதையும் எளிதில் சாதிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் ஏற்படும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீகச் சொத்துகளால் அனுகூலமும் கிட்டும்.
குரு பகவான் ஆனி 15 (30-06-2020) முடியவும், அதன் பின்பு கார்த்திகை 5-ஆம் தேதி (20-11-2020) முதல் உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது, அதிக முதலீடு கொண்ட செயல்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது.         
இந்த ஆண்டு முழுவதும் திருக்கணிதப்படி சனி பகவான் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுக்கு குறை இருக்காது என்றாலும் தொழில் வியாபாரத்தில் எதிர் நீச்சல் போட வேண்டி இருக்கும். வேலையாட்களை அனுசரித்து சென்றால் தான் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் வேலைபளு அதிகரிக்கும். மற்றவர்கள் பணியை நீங்கள் செய்ய வேண்டிய நிலை உண்டாகும். சக நண்பர்களால் தேவையற்ற குழப்பம் உண்டாகும்.   
சர்ப கிரகமான ராகு 2-லும், கேது 8-லும் வரும் புரட்டாசி 7 (23-09-2020) முதல் சஞ்சரிக்க இருப்பதால் தேவையற்ற அலைச்சல்களும் உடல் அசதியும், வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுபாடுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது உத்தமம். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

உடல் ஆரோக்கியம்
உங்களது உடல் ஆரோக்கியமானது ஆண்டின் முற்பாதியில் சிறப்பாக இருக்கும். எதிலும் சாதகமான பலன்கள் ஏற்பட்டு மன மகிழ்ச்சி நிலவும். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேற்றங்களை அடைவீர்கள். ஆண்டின் பிற்பாதியில் சர்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள், நேரத்திற்கு சாப்பிட முடியாத நிலை, வாழ்க்கையில் எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது, நேரத்திற்கு உணவு உன்பது நல்லது.
குடும்பம் பொருளாதாரம்
உங்களுக்கு ஆண்டின் முற்பாதியில் குரு, ராகு சாதகமாக சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். சிலர் நினைத்தவரை கைபிடிப்பர். பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். புரட்டாசி முதல் சர்பகிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால் உறவினர்களை அனுசரித்துச் சென்றால் மட்டுமே எதிலும் நிம்மதியுடன் செயல்பட முடியும்.
உத்தியோகம்
குரு, ராகு சாதகமாக சஞ்சரிப்பதால் ஆண்டின் முற்பாதியில் ஊதிய உயர்வுகளும் விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் திறமைக்கேற்ற பணி அமையும். சனி 10-ல் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். செய்யும் பணிகளில் தடை, இடையூறு ஏற்பட்டு எந்தவொரு வேலையையும் திறம்பட செய்து முடிக்க முடியாத நிலை ஏற்படலாம் என்பதால் சகநண்பர்களை அனுசரித்து செல்வது நல்லது.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் வருவாய் சூடு பிடித்து பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். இந்த வருடம் முழுவதும் தொழில் ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் போட்டி பொறாமைகள் மற்றும் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும் என்பதால் வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. மற்றவர்களுக்கு முன்பணம் கொடுக்கும் விஷயத்தில் சற்று கவனத்துடன் இருப்பது உத்தமம். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.
பெண்கள்
குடும்பத்தில் மகிழ்ச்சி, கணவன்- மனைவியிடையே அன்னோன்னியம், திருமண சுபகாரியங்கள் கைகூடும் வாய்ப்பு, தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும் யோகம் இவ்வாண்டு முற்பாதியல் உண்டு. இந்த ஆண்டு பிற்பாதியில் பண விவகாரங்களில் கவனமுடனிருப்பதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதும் உத்தமம். பிறர் விஷயங்களில் தேவையின்றி தலையீடு செய்வது, குடும்ப விஷயங்களை வெளியாட்களிடம் பகிர்ந்து கொள்வது போன்றவற்றை தவிர்க்கவும். 
கொடுக்கல்- வாங்கல்
குரு, ராகு அனுகூலமாக சஞ்சரிப்பதால் ஆண்டின் முற்பாதியில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். ஆண்டின் பிற்பாதியில் பண விஷயத்தில் பிறருக்கு வாக்கு கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றில் கவனத்துடன் இருப்பது நல்லது.
அரசியல்
உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருந்து சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சனி 10-ல் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் ஏற்படலாம் என்பதால் உடனிருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஆண்டின் பிற்பாதியில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதும் நல்லது.  பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல்கள் சிறப்பாக இருந்து உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். புழு, பூச்சிகளின் தொல்லைகளால் வீண் விரயங்கள் உண்டாகும் என்றாலும் உற்றார் உறவினர்களின் ஆதரவுகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். அரசு வழியில் எதிர்பாரத்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைத்து மன நிம்மதி ஏற்படும். கால் நடைகளால் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும்.
கலைஞர்கள்
குரு, ராகு சிறப்பாக சஞ்சரிப்பதால் ஆண்டின் முற்பாதியில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்து உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். சனி 10-ல் சஞ்சரிப்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. நிறைய போட்டி பொறாமைகள் நிலவினாலும் உங்கள் திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். நண்பர்களிடம் கவனம் தேவை.
மாணவ- மாணவியர்
கல்வியில் சற்று மந்த நிலை நிலவினாலும் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தையும் வீணான பொழுது போக்குகளையும் தவிர்ப்பது நல்லது. பயணங்களில் நிதானமும் எச்சரிக்கையும் அவசியம். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். ஆண்டின் பிற்பாதியில் உணவு விஷயத்தில் சற்று கட்டுபாடுடன் இருப்பது நல்லது.

மாதப்பலன்
சித்திரை       
உங்கள் ராசியதிபதி செவ்வாய் 10,11-ல் சஞ்சரிப்பதும், சுக்கிரன் 2-ல் சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக அனுகூலத்தை தரக்கூடிய அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணம் சிறு தடைக்குப் பின் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வு, ஊதிய உயர்வுகள் சிறு தடைக்கு பின்பு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவும். வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. விஷ்ணுவையும் மகாலட்சுமி தேவியையும் வழிபடுவது உத்தமம்.
வைகாசி 
உங்கள் ராசியதிபதி செவ்வாய் 11-லும், ராகு 3-லும் சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். 2-ல் சூரியன் இருப்பதால் வீண் வாக்கு வாதங்கள் ஏற்படும் என்பதால் குடும்பத்தில் உள்ளவர்களையும், நெருங்கியவர்களையும் அனுசரித்து செல்லவும். பண வரவுகள் சுமாராகத்தானிருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். சனி பகவான் வழிபாடு செய்வது உத்தமம்.
ஆனி                
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். பணவரவுகள் பலவகையில் உங்களை தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி, மனநிம்மதி ஏற்படும். கடன்கள் குறையும். தேக ஆரோக்கியம் நல்ல முறையில் இருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். தொழில் வியாபாரம் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும்.  விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன்களை செய்வார்கள். விநாயகப் பெருமானையும் மகாலட்சுமியையும் வழிபாடு செய்யவும்.
ஆடி                   
உங்கள் ராசியதிபதி செவ்வாய் 12-லும், சூரியன் 4-லும் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், மன நிம்மதிக் குறைவுகள் தோன்றும். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் 3-ல் ராகு, 9-ல் குரு சஞ்சரிப்பதால் தக்க உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளை பிறர் தட்டி செல்வார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்ற கவனமுடன் இருப்பது நல்லது. சிவ பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
ஆவணி        
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 9-ல் குரு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும் யோகம் உண்டாகும். சூரியன் 5-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். நவீனகரமான கருவிகள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருந்து தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களிடம் சற்று விட்டு கொடுத்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்-.
புரட்டாசி      
உங்கள் ராசிக்கு 4, 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன், 9-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். கடன் பிரச்சினைகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன், பொருள் சேரும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். முருக வழிபாடு செய்வது நல்லது.
ஐப்பசி             
குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளால் ஒரளவுக்கு அனுகூலம் ஏற்படும். எந்தவித போட்டிகளையும் சமாளித்து அடைய வேண்டிய இலக்கை அடைந்து விட முடியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளால் லாபம் கிட்டும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.
கார்த்திகை                
உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் வரும் கார்த்திகை 5-ஆம் தேதி முதல் குரு 10-ல் சஞ்சரிப்பதாலும் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பயணங்களால் தேவையற்ற அலைச்சலும் டென்ஷனும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பதும், பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். துர்கையம்மன் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
மார்கழி         
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிக்க இருப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருந்து உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவும். எதிர்பார்த்த லாபத்தை பெற எதிர் நீச்சல் போட வேண்டி வரும். உத்தியோகத்தில் நிம்மதியான நிலையிருக்கும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. துர்க்கை மற்றும் லட்சுமி வழிபாட்டை மேற்கொள்ளவும்.
தை                    
இம்மாதம் சுக்கிரன் 9, 10-ல் சஞ்சரிப்பதும், சூரியன் 10-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பண வரவுகள் சிறப்பாக அமைந்து உங்களுடைய கடந்த கால நெருக்கடிகள் சற்று குறையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பாராத திடீர் உதவிகள் கிடைக்கப் பெற்று எதையும் சமாளிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளால் நற்பலனைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமாக இருப்பது நல்லது. முருக வழிபாடு செய்வது நல்லது.
மாசி                  
இம்மாதம் மாத கோளான சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், சுக்கிரன், புதன் 10, 11-ல் சஞ்சரிப்பதும் மிகச் சிறப்பான அமைப்பு என்பதால் தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை அற்புதமாக இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். லாபங்கள் சிறப்பாக இருக்கும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். சுப காரியங்கள் கைகூடும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உற்றார், உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபங்களை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம் பட செயல்பட முடியும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.
பங்குனி
உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், ராகு, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் சுபகாரியங்களில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் வீண் செலவுகளைக் குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9, நிறம் - ஆழ்சிவப்பு                                 கிழமை - செவ்வாய்
கல் - பவளம்               திசை - தெற்கு                           தெய்வம் - முருகன்

No comments: