Thursday, April 9, 2020

கும்பம் - சார்வரி வருட பலன்கள் 2020-2021


கும்பம் - சார்வரி வருட பலன்கள் 2020-2021
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
வெள்ளை உள்ளமும், நெறி தவறாத பண்பும் கொண்ட கும்ப ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய  தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த சார்வரி வருடத்தில் பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் லாப ஸ்தானமான 11-ல் வரும் ஆனி 15 முதல் கார்த்திகை 5 வரை (30-06-2020 முதல் 20-11-2020) சஞ்சரிப்பதும், சர்ப்ப கிரகமான கேது வரும் புரட்டாசி 7 (23-09-2020) வரை லாப ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உங்களது பொருளாதரா நிலை சாதகமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தாலும் நேரத்திற்கு உணவு உண்ண இயலாத நிலை ஏற்படும். இந்த வருடத்தில் உங்கள் ராசியாதிபதி சனிபகவான் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரைச் சனியில் விரயசனி நடைபெறுவதால் ஒருபுறம் பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் தேவையற்ற திடீர் செலவுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். ஏழரைச் சனி நடந்தாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை  ஏற்படுத்தாது.
                எடுக்கும் முயற்சிகளில் ஏற்றங்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். அசையும் அசையாச் சொத்துகள் வாங்கக் கூடிய யோகம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சில போட்டி பொறாமைகளைச் சந்தித்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். பொருட் தேக்கங்கள் இல்லாமல் லாபகரமான பலன்களை அடைவீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பு சற்று சுமாராக இருக்கும் என்பதால் சற்று கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு சற்று அதிகமாக இருக்கும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தாலே வீண் பிரச்சினைகளில் சிக்காமல் விலகிக் கொள்ளலாம். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
குரு பகவான் வரும் ஆனி 15 (30-06-2020) முடியவும் அதன் பின்பு கார்த்திகை 5-ஆம் தேதி (20-11-2020) முதல் விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிக்க உள்ள நேரங்களில் பண வரவுகள் சற்று சுமாராக இருக்கும் என்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவதே நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது மூலம் ஏற்படும் எந்த வித நெருக்கடிகளையும் எதிர் கொண்டு வலமான பலன்களை அடையும் வாய்ப்புகள் ஏற்படும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டிய ஆண்டாகும். உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெறுவதால் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு வீண் மருத்துவச் செலவுகள் உண்டாகும். நெருங்கியவர்களால் மன நிம்மதி குறையும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது சிறப்பு. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது நிதானமாக இருப்பது நல்லது. மனைவிக்கு சிறு சிறு உடம்பு பாதிப்பு ஏற்படும்.
குடும்பம் பொருளாதாரம்
குடும்பத்தில் உள்ளவர்களை சற்று அனுசரித்துச் செல்வதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து கொள்வதும் நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களிடம் பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. உங்களுக்கு தேவையற்ற நெருக்கடிகள் இருந்தாலும் எதிர்பாராத தன சேர்க்கைகள் ஏற்பட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் சிறுசிறு மனக்கவலைகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும்.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்கள் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலைப் பளுவும் சற்று அதிகமாக இருக்கும். உங்களின் திறமைகளுக்கு ஏற்ற சன்மானத்தை அடைவீர்கள். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும்.  உடன் பணிபுரிபவர்கள் செய்யும் தவறுகளுக்கு சில நேரங்களில் நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய காலம் என்பதால் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவதும் தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்ட முதலீட்டினை எடுக்கும் அளவுக்கு லாபங்கள் கிடைக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது கூட்டாளிகளிடம் கலந்து ஆலோசித்து செயல்படுவது முலம்அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். வேலையாட்களிடம் சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் விண் செலவுகளை குறைத்து கொண்டு ஏற்றத்தை அடைய முடியும். எதிலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்பட்டால் எவ்வித நெருக்கடிகளையும் சமாளித்து முன்னேற்றம் காண முடியும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் வயிறு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் நேரத்திற்கு உணவு உன்பது எதிலும் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அவர்களால் உங்களுக்கு சாதகப்பலன் உண்டாகும். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் நிலவினாலும் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் சமாளிக்க முடியும். குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுபகாரியங்கள் சிறு தடைக்கு பின்பு கைகூடும். புத்திரர்களால் சிறுசிறு மனக்குழப்பங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை.
கொடுக்கல்- வாங்கல்
பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும் என்றாலும் உற்றார் உறவினர்கள் உதவியால் எதையும் சமாளிப்பீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் இருப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூல் செய்து விட முடியும். வம்பு வழக்குகளில் ஒரு நல்ல முடிவு கிடைக்கும். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கும் நல்ல லாபம் அடைய முடியும். பெரிய தொகைகளை முதலீடுகளில் ஈடுபடுத்தும் போது கவனமாக இருப்பது நல்லது.
அரசியல்
அரசியல்வாதிகளுக்கு தங்கள் பேச்சாலேயே பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. சனி விரய ஸ்தானத்தில் இருப்பதால் கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேரிடும். மக்களின் செல்வாக்கினைப் பெற அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது நல்லது.  வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் அனுகூலமும் உண்டாகும்.
விவசாயிகள்
விவசாயிகளுக்கு மகசூல் ஒரளவுக்கு திருப்தி அளிப்பதாக அமையும். விளை பொருளுக்கேற்ற விலையை சந்தையில் பெற முடியும். வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் உறவினர்களிடையே சிறுசிறு மன சஞ்சலங்கள் உண்டாகக் கூடும். எதிலும் சற்று எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கும். வங்கிக் கடன்கள் தக்க சமயத்தில் கிடைத்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும். கால்நடைகளால் ஒரளவுக்கு லாபத்தினை அடைவீர்கள்.
கலைஞர்கள்
இந்த ஆண்டு உங்கள் திறமைகள் வெளிப்படும் அளவிற்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்பட்டாலும் அதன் மூலம் பொருளாதார ரீதியாக மேன்மைகளை அடைய முடியும். ரசிகர்களின் ஆதரவு பெருகும். பண விவகாரங்களில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற கிசுகிசுக்களால் மன அமைதி குறையும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் சாதகமான பலனைப் பெற முடியும். உடன்பழகும் நண்பர்களிடம் சற்று கவனமுடன் செயல்படுவதும், பெற்றோர், ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடப்பதும் மிகவும் நற்பலனை உண்டாக்கும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது நிதானமாக இருப்பது உத்தமம்.

மாதப்பலன்
சித்திரை       
உங்கள் ராசிக்கு சூரியன் 3-ல், சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குரு, சனி 12-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று எதிர்பார்த்த லாபங்களை அடைய முடியும். சனி பகவான் வழிபாடு செய்வது உத்தமம்.
வைகாசி 
ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் எடுக்கும் முயற்சிகளில் தடை போன்ற அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகும். கேது 11-ல் இருப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். சிவ பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
ஆனி                
உங்கள் ராசிக்கு 5-ல் சூரியன், புதன், 11-ல் கேது சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, எதிலும் சிந்தித்துச் செயல்படுவது மிகவும் நல்லது. உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்களை அடையலாம். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடவும்.
ஆடி                   
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், 11-ல் குரு, கேது சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும், பணியில் நிம்மதியான நிலையிருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்யவும்.
ஆவணி        
ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், 11-ல் குரு, கேது சஞ்சரிப்பதால் எதிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். சூரியன் 7-ல் இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பண வரவுகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கடந்த கால பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கணவன்-- மனைவி இடையே சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். திருமண சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள் ஏற்படும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலப்பலனைப் பெற முடியும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் யாவும் கிடைக்கும். சிவ பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
புரட்டாசி      
ஜென்ம ராசிக்கு 8-ல் சூரியன் சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற நெருக்கடிகள், உடல் நிலையில் உஷ்ண சம்மந்தபட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. குரு 11-ல் இருப்பதால் தாராள தனவரவு உண்டாகி உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். எதையும் சமாளிக்கும் ஆற்றல் பெறுவீர்கள். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். தொழில் வியாபார ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.
ஐப்பசி             
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் குரு பலமாக சஞ்சரிப்பது, 9-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதும் அனுகூலமான பலன்களை தரும் அமைப்பாகும். பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். செவ்வாய் 2-ல் இருப்பதால் வெளியாட்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். எடுக்கும் முயற்சிகளில் தடைக்குப் பின் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. ராகுவுக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.
கார்த்திகை                
ஜென்ம ராசிக்கு 2-ல் செவ்வாய், 4-ல் ராகு சஞ்சரிப்பது மனநிம்மதியை குறைக்கும் அமைப்பாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளை ஏற்படுத்தும் என்பதால் எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி சிறு சிறு உபாதைகள் தோன்றி மறையும். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்து காத்திருந்த வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அவிருத்தி பெருகும். சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அமையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.
மார்கழி         
மாத கோளான சூரியன் 11-ல் சஞ்சரிப்பதும் வரும் 9-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் ஓரளவுக்கு அனுகூலத்தை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் எடுக்கும் காரியங்களில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். கடந்த கால சோதனைகள் மறைந்து ஏற்றங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதால் எதிர்பாராத உதவிகளை பெறுவீர்கள். அசையும் அசையா சொத்துக்களால் சிறு விரயங்களை சந்திக்க நேரிடும. பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தினை பெற்றுவிட முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். சனி பகவானை வழிபாடு செய்வது உத்தமம்.
தை                    
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பது எடுக்கும் முயற்சியில் அனுகூலத்தை தரும் அமைப்பு என்றாலும் 12-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். தொழில் வியாபார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கும் உடன் பணிபுரிவர்களின் ஆதரவு கிட்டும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண் வாக்குவாதங்கள் உண்டாகும் என்பதால் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது, ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
மாசி                  
ஜென்ம ராசியில் சூரியன், 12-ல் குரு, சனி சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக இருப்பது உத்தமம். முன்கோபத்தை குறைப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சல்களை உண்டாக்கும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். முடிந்த வரை குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது சிறப்பு. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் மூலம் வீண் செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டி இருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவைப் பெற முடியும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் வீண் பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். சிவ பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
பங்குனி
உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 4-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடு, பொருளாதார ரீதியாக பிரச்சினைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவி இடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதத்தால் மன நிம்மதி குறையும். பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்யும் சூழ்நிலை ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் வரவேண்டிய வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள், எதிர்பாராத திடீர் செலவுகளை எதிர்கொள்வீர்கள்.  சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5,6,8              கிழமை - வெள்ளி, சனி                              திசை - மேற்கு
கல் - நீலக்கல்            நிறம் - வெள்ளை, நீலம்                   தெய்வம் - ஐயப்பன்


No comments: