Monday, December 30, 2019

2020 - ஜனவரி மாத ராசிப்பலன்


2020 - ஜனவரி மாத ராசிப்பலன்   

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,





ராகு

திருக்கணித கிரக நிலை


சுக்கி


சனி, கேது குரு,   சூரிய
புதன்

செவ்



     
கிரக மாற்றம்
09----01-2020 கும்பத்தில் சுக்கிரன் அதிகாலை 04.23 மணிக்கு
13-01-2020 மகரத்தில் புதன் பகல் 11.35 மணிக்கு
15-01-2020 மகரத்தில் சூரியன் அதிகாலை 02.08 மணிக்கு
24-01-2020 மகரத்தில் சனி காலை 09.57 மணிக்கு
31-01-2020 கும்பத்தில் புதன் அதிகாலை 02.53 மணிக்கு

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 9-ல் குரு சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். மாத பிற்பாதியில் சூரியன் 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மை அடையும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நட்பு கரம் நீட்டுவார்கள். தடைப்பட்டுக் கொண்டிருந்த வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேறும். பொன் பொருள் சேரும். கடன்கள் குறையும். திருமண சுபமுயற்சிகளில் தடைக்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே இருந்த பிரச்சினைகள் விலகி குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடலில் சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதோடு விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்கி பாராட்டுகளையும் பரிசுகளையும் பெறுவார்கள்.
பரிகாரம் - விநாயகர் வழிபாடு செய்வதாலும், சதுர்த்தி விரதங்கள் இருப்பதாலும் எடுக்கும் காரியத்தில் சித்தி உண்டாகும்.
சந்திராஷ்டமம் - 19-01-2020 மாலை 05.47 மணி முதல் 21-01-2020 இரவு 11.43 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய், 8-ல் சூரியன், குரு, சனி, கேது சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலமாகும். தேவையற்ற நெருக்கடிகளால் மன அமைதி குறைவு ஏற்படும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு சிக்கனமாக நடந்து கொள்வது உத்தமம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் அமைதி இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் லாபம் சற்று குறைய நேரிடும். தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள்.
பரிகாரம் -  சிவ வழிபாடு செய்வதாலும், பிரதோஷ கால விரதங்கள் மேற்கொள்வதாலும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
சந்திராஷ்டமம் - 21-01-2020 இரவு 11.43 மணி முதல் 24-01-2020 காலை 07.39 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 7-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். தொழில் வியாபாரத்தில் வலமான பலன்களை பெறுவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். போட்டி பொறாமைகள் மறைமுக எதிர்ப்புகள் விலகும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் படிபடியாக குறையும். உங்கள் ராசிக்கு மாத கோளான சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் முடிந்த வரை உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, விட்டு கொடுத்து செல்வது, பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்களுக்குரிய பணிகளை சிறப்புடன் செய்து முடித்து பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் இருக்கும். மாணவர்கள் வீண் பொழுது போக்குகளில் ஈடுபடாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண் பெறலாம்.
பரிகாரம் -  சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபடுவதும், சனிக்கவசம் படிப்பதும், உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவுவதும் நல்லது.
சந்திராஷ்டமம் - 24-01-2020 காலை 07.39 மணி முதல் 26-01-2020 மாலை 05.39 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சிறப்பான பணவரவால் உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது மட்டும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த பிரச்சினைகள் குறைந்து லாபகரமான பலன்கள் உண்டாகும். பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றம் எற்படும். பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை நீங்கி புது உற்சாகத்துடனும் தெம்புடனும் செயல்பட்டு முன்னேற்றம் அடைவார்கள்.
பரிகாரம் -  துர்க்கையம்மனுக்கு கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் விலகும்.
சந்திராஷ்டமம் - 26-01-2020 மாலை 05.39 மணி முதல் 29-01-2020 அதிகாலை 05.29 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக உயர்வையும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஏற்படுத்தும் அமைப்பாகும். நல்ல பணவரவுகள் இம்மாதம் ஏற்பட்டு உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடன்கள் சற்று குறையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பார்த்த வாய்ப்புகள் எளிதில் கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொண்டால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் லாபம் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் மட்டும் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள்.
பரிகாரம் -  முருக வழிபாடு செய்வதாலும், சஷ்டி விரதம் மேற்கொள்வதாலும் அனைத்து துயரங்களும் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
சந்திராஷ்டமம் - 01-01-2020 இரவு 09.38 மணி முதல் 04-01-2020 காலை 10.05 மணி வரை மற்றும் 29-01-2020 அதிகாலை 05.29 மணி முதல் 31-01-2020 மாலை 06.09 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சூரியன், சனி, கேது சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். செவ்வாய் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய யோகம் உண்டாகும். எடுக்கும் முயற்சியில் வெற்றி, எந்த எதிர்ப்புகளை சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் நிலவிய சிறு சிறு பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அளிக்கும் என்றாலும் அவர்களுடன் பழகும் போது பேச்சில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமானப் பலனைப் பெறுவீர்கள். உடல் நிலையில் ஏற்படும் சோர்வு மற்றும் கை கால் வலியால் அன்றாட பணிகளை கூட செய்ய சிரமபட வேண்டியிருக்கும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்குவதில் சற்று கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் போட்டி பொறாமைகள் குறையும். விரோதிகள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்போடு அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகமாக இருந்தாலும் உயர் அதிகாரிகளின் ஊக்குவிப்புகள் உற்சாகத்தை அளிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவார்கள்.
பரிகாரம் -  பிரதோஷ காலங்களில் சிவாலயங்களுக்குச் சென்று சிவ பெருமானை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும்.
சந்திராஷ்டமம் - 04-01-2020 காலை 10.05 மணி முதல் 06-01-2020 இரவு 08.36 மணி வரை மற்றும் 31-01-2020 இரவு 06.09 மணி முதல் 03-02-2020 அதிகாலை 05.40 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே ராசியதிபதி சுக்கிரன் இம்மாதம் 4, 5-ல் சஞ்சரிப்பதும் முயற்சி ஸ்தானமான 3-ல் சனி கேது சூரியன் சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை தரும் அமைப்பாகும். பொருளாதார ரீதியாக இருக்கக் கூடிய சிறு சிறு பிரச்சினைகள் கூட முழுமையாக விலகி அனுகூலங்களை அடைவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியைப் பெறுவீர்கள். உடனிருப்பவர்கள் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சிக்கனத்தை கடைப்பிடிப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்களும் ஓரளவு ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். சிலரின் வெளிநாட்டு கனவு நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் முயற்சி செய்தால் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும்.
பரிகாரம் -  வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து, நெய் தீபமேற்றி வழிபட்டால் இறை அருள் கிட்டும்.
சந்திராஷ்டமம் - 06-01-2020 இரவு 08.36 மணி முதல் 09-01-2020 அதிகாலை 03.49 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் குரு சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும் ஏற்றத்தை தரக்கூடிய அமைப்பாகும். எதிர்நீச்சல் போட்டாவது எதையும் சமாளிப்பீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணமும் நிறைவேறும். உங்கள் ராசிக்கு 2-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களையும், நெருங்கியவர்களையும் அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை செய்வதில் எந்த பாதிப்பும் இருக்காது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடை தாமதங்களுக்குப் பின் கிட்டும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும்.
பரிகாரம் -  சனிக்கிழமைகளில் உபவாச விரதம் இருந்து மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்தால் மன சங்கடங்கள் குறையும்.
சந்திராஷ்டமம் - 09-01-2020 அதிகாலை 03.49 மணி முதல் 11-01-2020 காலை 07.52 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சனி, கேது, சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையுடன் செயல்பட வேண்டிய காலமாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு இடையூறுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெற முடியும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் முன் கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது உத்தமம். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சாதகமான பலனை அடையலாம். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்தே எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். வேலையாட்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கடினமாக உழைத்தால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும்.
பரிகாரம் - செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து முருக கடவுளை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.
சந்திராஷ்டமம் - 11-01-2020 காலை 07.52 மணி முதல் 13-01-2020 காலை 09.55 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் சனி, கேது, குரு சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். ராகு 6-ல், செவ்வாய் 11-ல் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைத்து பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் சற்று குறையும். உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தை குறைப்பது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உடல் நிலையில் சிறுசிறு ஆரோக்கிய குறைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை குறைப்பதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒரு சில ஆதாயங்களை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றமான நிலை இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் நிம்மதி குறைவு ஏற்படும் என்பதால் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் எதையும் சமாளித்து விடுவீர்கள். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.
பரிகாரம் - சனி பகவானை வழிபடுவதாலும் சனி பிடிக்காத தெய்வமாகிய ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபடுவதாலும் கஷ்டங்கள் நீங்கி நல்ல பலன்களை அடையலாம்.
சந்திராஷ்டமம் - 13-01-2020 காலை 09.55 மணி முதல் 15-01-2020 காலை 11.28 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், 11-ல் குரு, சனி, கேது, சூரியன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் வெற்றி மேல் வெற்றியை தரும் அமைப்பாகும். எத்தகைய எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடி மகிழ்ச்சியை அளிக்கும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கும் வாய்ப்பும் அமையும். கடன்கள் குறையும். புதிய வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஒருசில ஆதாயங்கள் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். வெளி தொடர்புகளால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கொடுத்த கடன்களும் வசூலாகும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம் - புதன் கிழமைகளில் விஷ்ணு வழிபாடும் மகா லட்சுமி வழிபாடும் செய்து வந்தால் மேன்மையான பலன்களை அடையலாம்.
சந்திராஷ்டமம் - 15-01-2020 காலை 11.28 மணி முதல் 17-01-2020 பகல் 01.49 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இம்மாதம் சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் ராகு 4-ல், சனி, கேது 10-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பொன் பொருள் சேரும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை பெற முடியும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் சிறு தடை தாமதம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பது, ஜாமின் கையெழுத்து போடுவது போன்றவற்றை தவிர்ப்பது உத்தமம். மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.
பரிகாரம் - ராகு காலங்களில் அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்தால் குடும்பத்தில் மங்களங்கள் உண்டாகும்.
சந்திராஷ்டமம் - 17-01-2020 பகல் 01.49 மணி முதல் 19-01-2020 மாலை 05.47 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

02.01.2020 மார்கழி 17 ஆம் தேதி வியாழக்கிழமை சப்தமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 10.00 மணி முதல் 11.00 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

05.01.2020 மார்கழி 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தசமி திதி அசுவினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

08.01.2020 மார்கழி 23 ஆம் தேதி புதன்கிழமை திரயோதசி திதி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

12.01.2020 மார்கழி 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவிதியை திதி பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

20.01.2020 தை 06 ஆம் தேதி திங்கட்கிழமை ஏகாதசி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

27.01.2020 தை 13 ஆம் தேதி திங்கட்கிழமை திருதியை திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை

30.01.2020 தை 16 ஆம் தேதி வியாழக்கிழமை பஞ்சமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை

No comments: