Saturday, December 21, 2019

தனுசு - புத்தாண்டு பலன் - 2020


தனுசு  - புத்தாண்டு பலன் - 2020

கணித்தவர்
ஜோதிட மாமணி
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
எதையும் சிந்தித்து சீர்தூக்கி பார்த்து அறியும் திறமை கொண்ட தனுசு ராசி நேயர்களே! நவகிரகங்களில் முழு சுபராக விளங்கும் குரு பகவான் ராசியில் பிறந்த உங்களுக்கு ராசியாதிபதி குரு திருக்கணிதப்படி 20-11-2020 முடிய ஜென்ம ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் கடந்த கால வீண் விரயங்கள் சற்று குறைந்து படிப்படியான முன்னேற்றங்களை அடைவீர்கள். உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் உண்டாகும். அதிக அலைச்சல் இருக்கும் என்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது சிறப்பு. பண வரவுகள் சற்று சாதகமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் எதிலும் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. குருபகவான் 5, 7, 9-ஆம் வீடுகளை பார்ப்பதால் திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும் அமைப்பு, சிலருக்கு குழந்தை பாக்கியம் அமையும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் ஏற்படும் சுபசெலவிற்காக கடன் வாங்க நேரிடும்.
ஜென்ம ராசியில் சஞ்சரித்த சனி பகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் தன ஸ்தானமான 2-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி முடிந்து பாதச்சனி தொடர உள்ளது.  சர்ப்ப கிரகமான ராகு 7-லும், கேது ஜென்ம ராசியிலும் வரும் 23-09-2020 வரை சஞ்சாரம் செய்வதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன் கோபத்தை குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபார ரீதியாக படிப்படியான முன்னேற்றம் இருக்கும் என்றாலும் பெரிய முதலீடுகளில் ஈடுபடும் போது உங்கள் பெயரில் செய்யாமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் வேலையாட்களால் நிம்மதி குறையும் என்பதால் மிகவும் கவனமாக செயல்படவும். கூட்டு தொழில் செய்பவர்கள் எதிலும் நிதானமாக இருப்பது மூலம் ஏற்றத்தை அடைய முடியும். உத்தியோத்தில் நல்ல வாய்ப்புகளை பெறும் அமைப்பு மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும் நிலை உண்டாகும் என்றாலும் வேலைபளு அதிகப்படியாக இருக்கும், நேரத்திற்கு உணவு உன்ன முடியாது. உடன் வேலை செய்பவர்கள் உங்கள் மிது வீண் பழி சொற்களை சொல்வார்கள் என்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருக்கவும்.
ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு தன ஸ்தானத்தில் அதிசாரமாக திருக்கணிதப்படி 30-03-2020 முதல் 14-05-2020 முடியவும் அதன் பின்பு 20-11-2020 முதல் மகர ராசியில் சஞ்சரிக்க உள்ள காலத்தில் உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் நிலை, சகல விதத்திலும் மேன்மை அடையும் வாய்ப்பு உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள், உடல் சோர்வு உண்டாகும். நேரத்திற்கு உணவு உன்ன முடியாத அளவிற்கு அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களால் தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படும். உங்களின் முன் கோபத்தால் தேவையற்ற வாக்குவாதங்களும் வீண் பிரச்சினைகளும் ஏற்பட்டு மனநிம்மதி குறையும்.
குடும்பம் பொருளாதார நிலை
கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்படக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களும் தங்கள் பங்கிற்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பணவரவில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
உத்தியோகம்
எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கும் என்றாலும் வீண் பழிச் சொற்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டு பணியில் ஈடுபாடற்ற சூழ்நிலை உண்டாகும். உடல் அசதி காரணமாக சில நேரங்களில் பணியில் கவன குறைவு ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும்.
தொழில் வியாபாரம்
எதிர்பார்த்த லாபங்களை அடைவதில் சில சிக்கல்களை சந்திப்பீர்கள். நிறைய போட்டி பொறாமைகளை எதிர் கொள்ள நேரிடும். தொழில் வியாபாரத்தில் கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை விலகும். லாபம் பெருகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.
கொடுக்கல்- வாங்கல்
கொடுக்கல்- வாங்கலில் சிறிது நெருக்கடிகள் இருந்தாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. அவ்வப்போது தேவையற்ற வம்பு வழக்குகள் மற்றும் பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் எதிர்கொள்ளக் கூடிய வலிமையும் வல்லமையும் கூடும். கடன்கள் படிப்படியாக குறையும்.
அரசியல்
மக்களின் ஆதரவைப் பெற அரும்பாடுபட வேண்டி இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தேவையற்ற தடைகள் ஏற்படுவதால் மன நிம்மதி குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவால் ஒரளவுக்கு செல்வாக்கினைப் பெறுவீர்கள். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டி இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
கலைஞர்கள்
கையில் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது. அனைவரையும் அனுசரித்து நடப்பது, நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவது நல்லது. எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். எதிர்பாராத பயணங்களால் சற்று அலைச்சல், உடற் சோர்வு உண்டாகும்.
விவசாயிகள்
கடந்த காலங்களில் இருந்த வம்பு பிரச்சினைகள் யாவும் விலகி லாபம் பெருகும். உழைப்பிற்கேற்ற பலன்களை அடைய முடியும். பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும், புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பாராத ஏற்படக் கூடிய செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டி வரும். பங்காளிகளிடம் கருத்த வேறுப்பாடுகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் நிதானமாக இருக்கவும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய காலமாகும். கணவன்- மனைவி இடையே விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் எதிலும் ஒற்றுமையுடன் செயல்பட முடியும். குடும்பத்தில் மங்களகரமான சுப நிகழ்ச்சிகள் கைகூடும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்பட்டு மகிழ்ச்சி உண்டாகும். பேச்சில் பொறுமை காப்பது உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது.
மாணவ மாணவியர்
ஆரோக்கிய ரீதியாக இருக்கும் சிறுசிறு பாதிப்புகளால் சில நேரங்களில் விடுப்பு எடுக்க வேண்டியிருக்கும், தேவையற்ற நட்புகளை தவிர்க்க வேண்டிய காலமாகும். கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும், பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மன நிம்மதியை தரும்.

மாதப்பலன்
ஜனவரி.
உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் சுக்கிரன், புதன் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெற்று தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். சிவனை வழிபடுவது சிறப்பு.
சந்திராஷ்டமம் - 11-01-2020 காலை 07.52 மணி முதல் 13-01-2020 காலை 09.55 மணி வரை.
பிப்ரவரி. 
உங்கள் ராசிக்கு சுக்கிரன் 4-ல் உச்சம் பெற்று சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் நல்ல பணவரவை தந்து உங்களுக்குள்ள நெருக்கடிகளை குறைக்கும் அமைப்பாகும். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டால் எதையும் சாதிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 07-02-2020 மாலை 06.24 மணி முதல் 09-02-2020 இரவு 07.43 மணி வரை.
மார்ச்.
உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும் சுக்கிரன் பஞ்சம ஸ்தானமான 5-ல் சாதகமாக சஞ்சரிப்பதும் பல்வேறு வகையில் அனுகூலங்களை தரும் அமைப்பாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் சனி சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. உணவு விஷயத்தில் கவனம் செலுத்தினால் மருத்துவச் செலவுகளை குறைத்துக் கொள்ள முடியும். நெருங்கியவர்களால் ஒரளவுக்கு அனுகூலங்களை பெறுவீர்கள். தொழிலில் போட்டி நிலவினாலும் நஷ்டம் ஏற்படாமல் சமாளிக்க முடியும். சுபகாரிய முயற்சிகளை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் - 06-03-2020 அதிகாலை 04.55 மணி முதல் 08-03-2020 காலை 06.52 மணி வரை.
ஏப்ரல்.
ஜென்ம ராசிக்கு செவ்வாய், சனி 2-லும், சூரியன் 4-லும் சஞ்சரிப்பதால் உங்களுக்கு அலைச்சலை தரும் அமைப்பு என்றாலும் குரு அதிசாரமாக 2-ல் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய யோகம் உண்டாகும். பொருளாதார ரீதியாக மேன்மைகள் ஏற்படும். பயணங்களில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மன நிம்மதி குறையும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் விலகும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்து நிம்மதி குறையும். துர்கை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 02-04-2020 பகல் 01.33 மணி முதல் 04-04-2020 மாலை 05.08 மணி வரை மற்றும் 29-04-2020 இரவு 07.57 மணி முதல் 02-05-2020 அதிகாலை 01.05 மணி வரை.
மே.
உங்கள் ராசிக்கு குரு பகவான் அதிசாரமாக 2-ல் சஞ்சரிப்பதாலும் வரும் 4-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய், மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் தொழில் பொருளாதார ரீதியாக மேன்மை, குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். சுப முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிகளை பெற்று விடுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உடல் அசதி உண்டாகும். விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 27-05-2020 அதிகாலை 01.25 மணி முதல் 29-05-2020 காலை 06.59 மணி வரை.
ஜுன்.
உங்களுக்கு இம்மாத முற்பாதியில் செவ்வாய் 3-ல், சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். இதனால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடப்பதாலும், பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதாலும் அனைவரின் ஆதரவையும் பெற முடியும். பண வரவுகள் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் குறையும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் நடந்து கொண்டால் லாபத்தினை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் நற்பலன்களை அடையலாம். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 23-06-2020 காலை 07.35 மணி முதல் 25-06-2020 பகல் 12.25 மணி வரை.
ஜுலை.
உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 7-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் அலைச்சல், டென்ஷன், குடும்பத்தில் ஒற்றுமை குறையும் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து நடந்துக் கொள்வது உத்தமம். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிப்பதால் நிம்மதியற்ற நிலை உண்டாகும். சிவ வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 20-07-2020 மாலை 03.28 மணி முதல் 22-07-2020 இரவு 07.15 மணி வரை.
ஆகஸ்ட்.
ஜென்ம ராசியில் குரு மாத முற்பாதியில் 4-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உடல் சோர்வு ஏற்படலாம் என்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உணவு விஷயத்தில் கவனமுடன் இருப்பது சிறப்பு. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பண வரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து நடப்பது உத்தமம். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் சற்றே மந்த நிலை உண்டாகும். சிவ வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 17-08-2020 அதிகாலை 00.50 மணி முதல் 19-08-2020 அதிகாலை 04.10 மணி வரை.
செப்டம்பர்.
உங்களுக்கு இம்மாதத்தில் சூரியன் 9, 10-லும், புதன் 10, 11-லும் சஞ்சரிப்பதால் எந்த பிரச்சினைகளையும் சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய ஆற்றல் உண்டாகும். தனவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. தொழிலில் இருந்த நெருக்கடிகள் குறைந்து லாபத்தினை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கல் சுமாராக இருக்கும். சுபமுயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும். ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி வழிபாடு உத்தமம்.
சந்திராஷ்டமம் - 13-09-2020 காலை 10.35 மணி முதல் 15-09-2020 பகல் 02.25 மணி வரை.
அக்டோபர்.
உங்கள் ராசிக்கு சர்ப கிரகமான ராகு 6-லும், இம்மாதத்தில் சூரியன் 10, 11-லும், புதன் 11-லும் சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்பாராத பயணங்களும் அதன் மூலம் சாதகமான பலன்களும் அமையும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். பண வரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். முருகரையும் விநாயகரையும் வழிபடவும்.
சந்திராஷ்டமம் - 10-10-2020 இரவு 07.10 மணி முதல் 12-10-2020 பின்இரவு 12.30 மணி வரை.
நவம்பர்.
உங்கள் ராசிக்கு ராகு 6-லும், புதன் 11-லும், மாத முற்பாதியில் சூரியன் 11-லும் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைத்து உங்களுக்குள்ள நெருக்கடிகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலனைப் பெற முடியும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சுமாரான லாபத்தினை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அமையும். விநாயகரை வழிபடவும்.
சந்திராஷ்டமம் - 07-11-2020 அதிகாலை 01.49 மணி முதல் 09-11-2020 காலை 08.43 மணி வரை.
டிசம்பர்.
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 6-ல் ராகு சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். உற்றார் உறவினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். பணவரவுகள் ஒரளவுக்கு சிறப்பாக இருந்தாலும் சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு லாபம் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். சிவ வழிபாடும், முருக வழிபாடும் செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 04-12-2020 காலை 07.20 மணி முதல் 06-12-2020 பகல் 02.45 மணி வரை மற்றும் 31-12-2020 பகல் 01.37 மணி முதல் 02-01-2021 இரவு 08.15 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9            நிறம் - மஞ்சள், பச்சை    கிழமை - வியாழன், திங்கள்
கல் - புஷ்ப ராகம்     திசை - வடகிழக்கு           தெய்வம் - தட்சிணா மூர்த்தி



No comments: