Saturday, December 21, 2019

துலாம் - புத்தாண்டு பலன் - 2020


துலாம் - புத்தாண்டு பலன் - 2020

கணித்தவர்
ஜோதிட மாமணி
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
மகிழ்ச்சியையோ துக்கத்தையோ பெரிதுபடுத்தாமல் அனைத்தையும் சமமாக பாவிக்கும் பண்பு கொண்ட துலா ராசி நேயர்களே! சுக வாழ்விற்கும் சொகுசு வாழ்விற்கும் காரகனான சுக்கிரனின் ராசியில் பிறந்த நீங்கள் இயற்கையிலே ஆடம்பர பிரியர், வரும் 2020-ஆம் ஆண்டில் தனகாரகன் குருபகவான் திருக்கணிதப்படி 20-11-2020 முடிய முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களது இயற்கை சுபாவத்தை சற்று மாற்றி கொண்டு எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. பொருளாதார ரீதியாக சற்று தேக்க நிலை நிலவினாலும் சர்ப்ப கிரகமான கேது பகவான் முயற்சி ஸ்தானமான 3-ல் வரும் 23-09-2020 வரை சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, எதிர்பாராத வகையில் பொருளாதாரா உதவிகள் கிடைத்து உங்களது அனைத்து குடும்ப தேவைகளும் எளிதில் பூர்த்தியாகும். எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்களின்றி வாழ முடியும். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் திருமணம் போன்ற சுப காரியங்கள் தங்கு தடையின்றி கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் நிறைய போட்டி பொறாமைகளும் மறைமுக எதிர்ப்புகளும் நிலவினாலும் எதிர் நீச்சல் போட்டாவது லாபத்தை பெறுவீர்கள். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கெண்டால் ஏற்றத்தை அடைய முடியும். வேலையாட்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு ஆறுதலை தரும். உத்தியோக ரீதியாக உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடப்பது மிகவும் உத்தமம். வீண் பழிச் சொற்களை சந்தித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். சிலர் வேண்டிய இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள்.
ஒரு ராசியில் நீண்ட நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் சுக ஸ்தானமான 4-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பதாலும் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி தொடங்குவதாலும் அலைச்சல், டென்ஷன், உடல் சோர்வுகள் போன்றவை ஏற்படும் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் அதிக முதலீடு கொண்ட செயல்களில் நிதானத்துடன் செயல்படுவதும் நல்லது. எதிலும் தனித்து செயல்படாமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செயல்படுவதும் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதும் வலமான பலனை உங்களுக்கு ஏற்படுத்தும்.    

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களால் உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து அனைவரிடமும் நற்பெயர் எடுப்பீர்கள். குடும்பத்தில் ஏற்படக் கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும் என்றாலும் எதையும் எதிர் கொண்டு ஏற்றத்தை அடைவீர்கள்.
குடும்பம் பொருளாதார நிலை
பொருளாதார ரீதியாக பணவரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் நிம்மதி நிலவும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது, தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது.
உத்தியோகம்
பணிபுரிபவர்களுக்கு பணியில் வீண் அலைச்சல், பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்வுகளும் நல்ல வாய்ப்புகளும் சிறு தடைகளுக்குப் பின் கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கும். நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகள் சற்று தாமதமாக கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் வேலை பளுவை குறைத்துக் கொள்ள முடியும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் ஏற்றங்களை அடைய முடியும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலங்களும் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது மிகவும் நல்லது.
கொடுக்கல்- வாங்கல்
பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது, பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். வெளியூர் தொடர்புகள் மூலம் பொருளாதார மேன்மை உண்டாகி ஏற்றம் அடைவீர்கள்.
அரசியல்
பெயர் புகழை காப்பாற்றிக் கொள்ள அரும்பாடு படவேண்டியிருக்கும். மக்களின் ஆதரவும் எதிர்பார்த்தபடி இருக்காது. எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளை சந்திக்க நேரிடும். பெரியோர்களின் ஆசியால் ஒரளவுக்கு நற்பலன்களை அடைய முடியும். கட்சிப் பணிகளுக்காக செலவு செய்ய நேர்ந்தாலும் அதன் மூலம் அனுகூலங்களை அடைவீர்கள். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது சிறப்பு.
கலைஞர்கள்
பொருளாதார ரீதியாக தேக்க நிலை இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைத்து உங்கள் பெயரை காப்பாற்றி கொள்ள முடியும். தேவையற்ற அலைச்சல்களால் மன அமைதி குறையும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்பதால் உடன் இருப்பவர்களிடம் பேச்சில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டி வரும். புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் செலவுகள் உண்டாகும். பங்காளிகள் மற்றும் உறவினர்களின் உதவியால் உங்களின் நெருக்கடிகள் சற்று குறையும். தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்க்கவும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கடன்கள் சற்று குறையும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாடப் பணிகளில் சுறு சுறுப்பாக செயல்பட முடியும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் நெருங்கியவர்களின் உதவியால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும், திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பெரியோர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை ஏற்படுத்துவதாக அமையும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் ஞாபகமறதி, நாட்டமின்மை போன்றவை ஏற்பட்டாலும், முழு முயற்சியுடன் பாடுபட்டால் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின்பு கிடைக்கும். பெற்றோர் ஆசிரியரிடம் நற்பெயரை பெறுவீர்கள்.

மாதப்பலன்
ஜனவரி. 
உங்கள் ராசியதிபதி சுக்கிரன் இம்மாதம் 4, 5-ல் சஞ்சரிப்பதாலும், முயற்சி ஸ்தானமான 3-ல் மாத முற்பாதியில் சூரியன், சனி சஞ்சரிப்பதாலும் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பண விஷயங்களில் சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். துர்கையம்மனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் - 06-01-2020 இரவு 08.36 மணி முதல் 09-01-2020 அதிகாலை 03.49 மணி வரை.
பிப்ரவரி. 
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன் சஞ்சரிப்பதும் வரும் 8-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ல் கேது சேர்க்கைப் பெற்று சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் உண்டாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். எதிர்பாராத லாபங்கள் தேடி வரும். குடும்பத்தில் சுபசெலவுகளை ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். மாத முற்பாதியில் சூரியன் 4-ல் இருப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் தடைகளைத் தாண்டி வெற்றிகளைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் - 03-02-2020 அதிகாலை 05.40 மணி முதல் 05-02-2020 பகல் 02.00 மணி வரை.
மார்ச்.
உங்கள் ராசிக்கு செவ்வாய், கேது 3-ல் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் வலமான பலன்களை தரும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளை பெறுவீர்கள். பணவரவுகளும் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. நெருங்கியவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் எதிர்பாராத பதவி உயர்வுகள் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்யும்.
சந்திராஷ்டமம் - 01-03-2020 பகல் 01.18 மணி முதல் 03-03-2020 இரவு 11.03 மணி வரை மற்றும் 28-03-2020 இரவு 07.30 மணி முதல் 31-03-2020 காலை 06.05 மணி வரை.
ஏப்ரல்.
உங்கள் ராசிக்கு கேது 3-லும், மாத முற்பாதியில் சூரியன் 6-லும் சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். குடும்பத்தில்  திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றங்கள் கிடைக்கும். முருகனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் - 25-04-2020 அதிகாலை 01.15 மணி முதல் 27-04-2020 பகல் 11.45 மணி வரை.
மே.
கேது 3-ல் சஞ்சரிப்பது சற்று சாதகமான அமைப்பு என்றாலும் சூரியன் 7, 8-லும் சுக்கிரன் 8-லும் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல், டென்ஷன், ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைக்குப் பின் அனுகூலம் உண்டாகும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலன் அடையலாம். உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. சிவ வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 22-05-2020 காலை 07.35 மணி முதல் 24-05-2020 மாலை 05.34 மணி வரை.
ஜுன்.
உங்கள் ராசிக்கு 3-ல் கேது 9-ல் புதன் சஞ்சரிப்பதும், 18-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக சாதகமான பலன்களை தரும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். மாத முற்பாதியில் சூரியன் 8-ல் இருப்பதால் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவதும், மற்றவர்களிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. உத்தியோகத்தில் உயர்வுகள் கிடைக்கும். தொழிலில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கல்களில் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. சிவனையும் முருகனையும் வழிபாடு செய்வது சிறப்பு.
சந்திராஷ்டமம் - 18-06-2020 மாலை 03.05 மணி முதல் 21-06-2020 அதிகாலை 00.35 மணி வரை.
ஜுலை.
கேது 3-லும், செவ்வாய் 6-லும் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். மாத கோளான சூரியன் 9, 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் விலகி முன்னேற்றமான நிலை ஏற்படும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகி முன்னேற்றமான நிலையும் லாபங்களும் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அரசு வழியில் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபடவும்.
சந்திராஷ்டமம் - 15-07-2020 இரவு 11.18 மணி முதல் 18-07-2020 காலை 09.00 மணி வரை.
ஆகஸ்ட்.
உங்கள் ராசியதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதார ரீதியாக வலமான பலன்கள் உண்டாகும். உங்களுக்குள்ள பிரச்சினைகள் யாவும் ஒரு முடிவுக்கு வரும். சமுதாயத்தில் பெயர், புகழ் உயரும். பணவரவுகள் சரளமாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு ஏற்படும். துர்க்கை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 12-08-2020 காலை 07.35 மணி முதல் 14-08-2020 மாலை 06.05 மணி வரை.
செப்டம்பர்.
உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் வலமான பலன்களை தரும் அமைப்பாகும். பணம் பல வழிகளில் தேடி வருவதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்கள் வாங்குவீர்கள். புத்திர வழியில் பூரிப்பும் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். சமுதாயத்தில் உன்னதமான உயர்வு உண்டாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். செவ்வாய் 7-ல் இருப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. முருக கடவுளை வழிபடுவதும், துர்க்கையம்மனை வழிபடுவதும் உத்தமம்.
சந்திராஷ்டமம் - 08-09-2020 மாலை 03.10 மணி முதல் 11-09-2020 அதிகாலை 02.38 மணி வரை.
அக்டோபர்.
உங்கள் ராசிக்கு 3-ல் குரு, 8-ல் ராகு, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பொருளாதார நிலையில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படும். எடுக்கும் எந்தவொரு காரியத்தையும் கஷ்டப்பட்டே முடிக்க வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலமான பலனைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வீண்பழிகளைச் சுமக்க நேரிடும். முன்கோபத்தைக் குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்கள் குறையும். சிவன், துர்க்கை வழிபாடு நல்லது.
சந்திராஷ்டமம் - 05-10-2020 இரவு 09.40 மணி முதல் 08-10-2020 காலை 09.45 மணி வரை.
நவம்பர்.
உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 12-ல் சஞ்சரிப்பதாலும், ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதாலும் வரவுக்கு மீறிய செலவுகள், வீண் அலைச்சல்கள் உண்டாகும். செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து உங்களது பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். முன்கோபத்தை குறைத்து கொண்டு பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களும் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது மூலம் வீண் சிக்கல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. சிவ வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 02-11-2020 அதிகாலை 03.40 மணி முதல் 04-11-2020 மாலை 03.44 மணி வரை மற்றும் 29-11-2020 காலை 10.02 மணி முதல் 01-12-2020 இரவு 09.37 மணி வரை.
டிசம்பர்.
உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள். எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமும் வலிமையும் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் திறம்பட செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். நெருங்கியவர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர் நீச்சல் போட்டாவது ஏற்றம் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொள்ளுதல் நல்லது. அம்மனை வழிபாடு செய்வதும், ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதும் உத்தமம்.
சந்திராஷ்டமம் - 26-12-2020 மாலை 05.17 மணி முதல் 29-12-2020 அதிகாலை 04.40 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 4,5,6,7,8         நிறம் - வெள்ளை, பச்சை  கிழமை - வெள்ளி, புதன்
கல் - வைரம்         திசை - தென் கிழக்கு       தெய்வம் - லக்ஷ்மி


No comments: