Saturday, January 2, 2021

புத்தாண்டு பலன் - 2021 - மீனம்

 புத்தாண்டு பலன் & 2021 - மீனம்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

 

மீனம்  பூரட்டாதி 4&ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

கம்பீரமான தோற்றமும், பிறரை வசீகரிக்க கூடிய அழகான உடல் அமைப்பும் கொண்ட மீன ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் 2021&ஆம் வருடம் முழுவதும் சனி பகவான் ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11&ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதுமட்டுமின்றி ராகு பகவான் முயற்சி ஸ்தானமான 3&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், உங்கள் ராசியாதிபதியும் பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11&ஆம் வீட்டில் வரும் 06&04&2021 வரை மற்றும் 14&09&2021 முதல் 20&11&2021 வரை சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் நற்பலன்களை அள்ளி தரும் காலமாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறி மட்டில்லா மகிழ்ச்சியினை அடைவீர்கள்.

உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமைவதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் இருந்து வந்த மருத்துவ செலவுகள் குறையும். கடந்த கால அலைச்சல்கள் குறைந்து எதிலும் நிம்மதியுடன் செயல்பட முடியும். பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். கடன்கள் குறைந்து குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். திருமண  சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கணவன்& மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை பலப்படும். உற்றார், உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்ற உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். கொடுக்கல்& வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் பெறுவீர்கள்.

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி உங்கள் பலமும் வலிமையும் கூடும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் மேற்கொள்ளும் பயணங்களால் லாபம் கிட்டும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் தடையின்றி கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு நல்ல பெயரை எடுப்பீர்கள். எதிர்பார்க்கும் உயர் பதவிகளும், ஊதிய உயர்வுகளும், இட மாற்றங்களும் கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிபடுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

குரு பகவான் வரும் 06&04&2021 முதல் 14&09&2021 வரை மற்றும் 20&11&2021 முதல் விரய ஸ்தானமான 12&ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பணம் கொடுக்கல்& வாங்கல் போன்றவற்றில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட்டாலும் சனி, ராகு சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்கள் ஏற்படும்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் இருந்த கடந்த கால பாதிப்புகள் விலகி சிறப்பான ஆரோக்கியத்தை பெறுவீர்கள். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றியினை அடைவீர்கள். எதிரிகளின் பலம் குறைந்து உங்களின் பலம் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களால் சாதகமானப் பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களும் நோயின்றி மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

குடும்பம் பொருளாதார நிலை

திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்& மனைவி ஒற்றுமை பலப்படும். பிரிந்த உறவினர்கள் தேடி வந்து நட்பு கரம் நீட்டுவார்கள். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கடன்கள் யாவும் குறையும். பொன் பொருள், ஆடை ஆபரணம் சேரும். சிலருக்கு வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பாராத மகிழ்ச்சி தரும் சுபசெய்திகள் வந்து சேரும்.

கொடுக்கல்& வாங்கல்

காண்டிராக்ட் கமிஷன் ஏஜென்சி போன்ற துறைகளில் சிறப்பான லாபம் கிடைக்கும். போட்ட முதலீடுகளுக்கு மேலாக லாபத்தை பெற முடியும். கொடுக்கல்& வாங்கல் சரள நிலையில் இருப்பதால் பண புழக்கம் சிறப்பாக இருக்கும். கொடுத்த பணத்தை தடையின்றி வசூலிக்க முடியும். பெரிய மனிதர்களின் தொடர்பும் நட்பும் நற்பலனை உண்டாக்கும். ஏப்ரலுக்கு பிறகு கொடுக்கல்& வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் தடையின்றி வெற்றிகளை பெற முடியும்தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவர்களாலும் மேலும் முன்னேற்றமான நிலை உண்டாகும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் அனுகூலம் ஏற்படும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு அரசு வழியில் கடனுதவி கிடைக்கும்.

உத்தியோகம்

உத்தியோகத்தில் வேலைபளு குறைவதால் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு மேலும் ஊக்கத்தை ஏற்படுத்தும். எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து அனைவரின் அபிமானியாக மாறுவீர்கள். உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சாதகமானப் பலன்கள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும்.

பெண்கள்

குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். மணவயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கை கூடும். புத்திர வழியில் பூரிப்பினை பெறுவீர்கள். பணவரவுகள் சரளமாக இருப்பதால் சேமிக்க முடியும். கணவன்& மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். ஆடம்பர பொருட்களை வாங்கும் யோகம் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். உற்றறர் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

அரசியல்

எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றிகளை பெறுவீர்கள். உடனிருப்பவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். எதிர்பாராத கௌரவ பதவிகள் தேடி வரும். கட்சி பணிகளுக்காக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். மக்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதோடு அவர்களின் ஆதரவைப் தொடர்ந்து பெறுவதற்காக புதுபுது முயற்சிகளை கையாள்வீர்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருப்பதால் சந்தையில் விளை பொருளுக்கேற்ற விலை கிடைக்கும். அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகளும் கிடைக்கும். புதிய பூமி மனை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். வேலையாட்களின் உதவி கிடைக்கும். பொருளதாரநிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறையும். உங்களுக்கு இருந்து வந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.

கலைஞர்கள்

எதிர்பார்த்து காத்திருந்த கதாபாத்திரங்கள் புதிய வாய்ப்புகள் மூலம் கிடைக்கும். தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறைந்து உங்களுக்கென ஒரு நிலையான இடம் கிடைக்கும். வரவேண்டிய சம்பள பாக்கிகள் தடையின்றி வந்து சேரும். சொகுசு கார், பங்களா போன்றவற்றை வாங்க முடியும். நடிப்பு துறையில் உள்ளவர்கள் மட்டுமின்றி இசை, நடனம் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கும் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும்.

மாணவ& மாணவியர்

கல்வியில் நல்ல ஈடுபாட்டுடன் செயல்பட்டு அதிக மதிப்பினை பெறுவீர்கள். உடன் பயிலும் மாணவர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். விளையாட்டு போட்டிகளில் வெற்றிகளை தட்டி செல்ல முடியும். அரசு வழியில் எதிர்பாராத உயர்வுகள் கிடைக்கும். நினைத்த கல்வியினை தேர்ந்தெடுத்து படிக்க முடியும்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் & 1,2,3,9             கிழமை & வியாழன், ஞாயிறு     திசை & வடகிழக்கு

கல் & புஷ்ப ராகம்  நிறம் & மஞ்சள், சிவப்பு    தெய்வம்தட்சிணாமூர்த்தி

No comments: