Saturday, January 2, 2021

புத்தாண்டு பலன் & 2021 - மேஷம்

 

புத்தாண்டு பலன் & 2021 - மேஷம்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1&ஆம் பாதம்.

எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் திறம்பட செயல்பட்டு வெற்றி பெறக் கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் 2021&ஆம் ஆண்டில் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்பட்டால் வாழ்வில் வளமான பலனை அடைய முடியும்.

சர்ப்ப கிரகமான ராகு உங்கள் ராசிக்கு 2&லும், கேது 8&லும் சஞ்சரிப்பதால் அதிக அலைச்சலால் உடல் அசதி, சோர்வு, இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாகும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கூட வீண் வாக்கு வாதங்கள் ஏற்படும் என்பதால் கணவன்& மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன் கோபத்தை குறைத்து கொள்வது உத்தமம்.

உங்கள் ராசிக்கு இந்தாண்டு முழுவதும் 10&ஆம் வீட்டில் சனி பகவான் சஞ்சாரம் செய்ய உள்ளார். அது மட்டுமின்றி ஆண்டு கோளான குரு உங்கள் ராசிக்கு 10&ல் வரும் 06&04&2021 வரையும் மற்றும் 14&09&2021 முதல் 20&11&2021 வரையும் சஞ்சரிக்க உள்ளதால் உங்களது பொருளாதார நிலை தேவைக்கு ஏற்றபடி இருக்கும். எதிலும் சிக்கனமாக செயல்பட்டால் கடன் இல்லாத கண்ணிய வாழ்க்கை ஏற்படும்.

 தொழில் வியாபார ரீதியாக எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே நற்பலனை அடைய முடியும். எந்த ஒரு பணியிலும் நீங்கள் முன் நின்று செயல்பட்டால் மட்டுமே அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகள், உங்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் தாமதப்படும் நிலை ஏற்படும் என்றாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிப்படியாக இருக்கும் என்றாலும் உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது.

இவ்வாண்டு தொடக்கத்தில் சில நெருக்கடிகள் இருந்தாலும் ஆண்டு கோளான குரு பகவான் வரும் 06&04&2021 முதல் 14&09&2021 வரை மற்றும் 20&11&2021 முதல் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11&ல் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபார ரீதியாக இருக்கும் சிக்கல்கள் எல்லாம் விலகி ஏற்றமிகுந்த பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள் எற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்படும் என்பதால் முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. முன்கோபத்தை குறைத்து கொண்டு நிதானமாக செயல்பட்டால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்& மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகளில் தேக்க நிலை இருந்தாலும் ஏப்ரலுக்கு பிறகு எதிர்பாராத அனுகூலங்கள் கிடைக்கும் யோகம், சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்பு ஏற்படும். வரவுக்கு மிறிய வீண் செலவுகள் ஏற்படலாம் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

கொடுக்கல்& வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி போன்றவற்றில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது மிகவும் சிறப்பு. கொடுக்கல்& வாங்கல்களில் சில நெருக்கடிகள் இருந்தாலும் ஏப்ரலுக்கு பிறகு லாபகரமான பலனை அடைய முடியும்.  பணபுழக்கம் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடைய முடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சிக்கல்கள் ஏற்படும் என்பதால் பெரிய தொகைகளை முதலீடு செய்வதை தவிர்க்கவும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் ஆண்டின் தொடக்கத்தில் சில நெருக்கடிகள் இருந்தாலும் ஏப்ரலுக்கு பிறகு நல்ல லாபமும் முன்னேற்றமும் ஏற்படும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். வேலையாட்களிடமும், கூட்டாளிகளிடமும் விட்டுக் கொடுத்து நடப்பது மூலம் தொழிலை சிறப்பாக நிர்வகிக்க முடியும்.

உத்தியோகம்

உங்களுக்கு வேலைப்பளு சற்று அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். எதிர்பாராத இடமாற்றங்களால் சிலருக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். ஏப்ரல் முதல் புதிய வேலை வாய்ப்பு கிடைத்து மன நிம்மதி ஏற்படும். எதிர்பார்க்கும் உயர்வுகள் அடைய மறைமுக இடையூறுகள் ஏற்படும். பேச்சிலும் செயலிலும் சற்று பொறுமையுடன் இருந்தால் நன்மை கிடைக்கும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய காலமாகும். குடும்பத்தில் ஒற்றுமை சுமாராக இருக்கும்.  சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் ஏப்ரல் மாதம் முதல் நல்லது நடக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். புத்திரர்களால் மகிழ்ச்சி உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது, ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.

அரசியல்

எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடித்து ஏற்றம் பெற முடியும் என்றாலும் பொருளாதரா ரீதியாக செலவுகள் அதிகப்படியாக இருக்கும். மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் எதையும் சாதிக்க முடியுமென்றாலும், கட்சிக்காக செய்யும் செலவுகளில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.  உடனிருப்பவர்களின் முகஸ்துதிகளுக்கு மயங்காமல் சிந்தித்து செயல்பட்டால் பதவிகளை சிறந்த முறையில் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருந்தாலும் அதற்கான விலையை அடைய இடையூறுகள் ஏற்படும். உழைப்பிற்கேற்றப் பலன்களை அடைய தேவையற்ற தடைகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் பொறுமையுடன் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். புதிய பூமி மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. பங்காளிகள் உடன் பேச்சில் கவனத்துடன் இருப்பது நல்லது.

கலைஞர்கள்

பணவரவுகள் சற்று சாதகமாக இருக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை தற்போது பயன்படுத்தி கொள்வது சிறப்பு.  பயணங்களால் உடல் அசதி ஏற்படும். முடிந்த வரை தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துக் கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும். பத்திரிகைகளில் வரும் தேவையற்ற கிசுகிசுக்களால் மன சஞ்சலங்கள் ஏற்படும்.

மாணவ மாணவியர்

கல்வி பயிலுபவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். ஆசிரியர்களையும் பெரியவர்களையும் மதித்து நடப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும் போது சற்று கவனமாக இருப்பது அவசியம். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பதன் மூலம் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் & 1,2,3,9,      நிறம் & ஆழ்சிவப்பு           கிழமை & செவ்வாய்

கல் & பவளம்    திசை & தெற்கு         தெய்வம் & முருகன்

No comments: