Saturday, March 25, 2017

தமிழ் புத்தாண்டு பலன்கள் மேஷம்

தமிழ் புத்தாண்டு பலன்கள்  மேஷம்
14-4-2017 முதல் 13-4-2018 வரை
12 ராசியினருக்கும் ஓராண்டு வழிகாட்டி!

கணித்தவர் ஜோதிட மாமணி முனைவர்
முருகு பாலமுருகன்
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

அன்புள்ள மேஷ ராசி நேயர்களே! நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும், தன்னை நம்பியவர்களை எந்த கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றக்கூடிய தர்ம குணமும் கொண்ட உங்களுக்கு இந்த ஹேவிளம்பி வருடத்தில் பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் ருண, ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதால், ஆண்டில் முற்பாதியில் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமாக நடந்து கொள்வது நல்லது. ஆண்டின் தொடக்கத்தில் அதிசாரமாக 9-ல் சஞ்சரிக்கும் சனி ஆனி 6-ஆம் தேதி முதல் ஜப்பசி 9-ஆம் தேதி வரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கவுள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது சிறப்பு. இக்காலங்களில் உழைப்பிற்கான பலனை அடைவதிலும் சில இடையூறுகள் உண்டாகும்.  ஆண்டின் முற்பாதியில் சில தடைகளை சந்தித்தாலும், ஜப்பசி 9-ஆம் தேதி முதல் சனி முழுமையாக 9-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதும், ஆவணி 27-ஆம் தேதி ஏற்படவுள்ள மாற்றத்தின் மூலம் குரு உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் ஆண்டின் பிற்பாதியில் அதிகப்படியான லாபத்தை அடைய முடியும். போட்டிகள், எதிர்ப்புகள் யாவும் படிப்படியாகக் குறைந்து எல்லா வகையிலும் அனுகூலப் பலனை அடைவீர்கள். திருமணம் போன்ற சுபகாரியங்கள் ஆவணி மாதத்திற்குப் பிறகு எளிதில் கைகூடும். இவ்வருடம் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய சம்பவங்களும் நடைபெறும். பொருளாதாரநிலையில் முற்பாதியில் சில தடைகள் நிலவினாலும், பிற்பாதியில் பணவரவுகள் தாராளமாக இருக்கும். சிலருக்கு அழகான புத்திர பாக்கியமும் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும், பதவி உயர்வுகளும் கிடைக்கப் பெறுவதோடு திறமைக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். ஆண்டின் முற்பாதியில் கவனமுடன் செயல்பட்டால் ஆண்டின் பிற்பாதியில் நினைத்தது நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும். ஆண்டின் தொடக்கத்தில் 5, 11-ல் சஞ்சரிக்கும் சர்ப்ப கிரகங்களான ராகு- கேது ஆவணி 2-ஆம் தேதி முதல் கேந்திர ஸ்தானங்களான 4, 10-ல் சஞ்சரிக்க இருப்பது தேவையற்ற அலைச்சல்கள், இருப்பதை அனுபவிக்கத் தடைகள், அசையா சொத்து வழியில் சுபச்செலவுகள் போன்றவற்றை ஏற்படுத்தும். என்றாலும் குரு, சனியின் சாதகமான சஞ்சாரத்தால் எதையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.
குடும்பம், பொருளாதார நிலை

குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் விலகி அன்யோன்யம் உண்டாகும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். புதிய பொருள் சேர்க்கைகள் அமையும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பு சாதகமான பலன்கள் உண்டாகும்.
உடல் ஆரோக்கியம்

உடல் நிலையிலிருக்கும் பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். அடிக்கடி சிறுசிறு பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. குடும்பத்தில் உள்ளவர்களும் மகிழ்ச்சியுடனே அமைவார்கள். எதிர்பாராத சுபச்செய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். தேவையற்ற அலைச்சல்களைக் குறைத்துக்கொண்டால் ஆரோக்கியமான உடல் நிலை அமையும்.
உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் ஆண்டின் முற்பாதியில் சுமாரான பலனை அடைய நேர்ந்தாலும் ஆண்டின் பிற்பாதியில் அனுகூலமான  பலன்களைப் பெறுவீர்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிட்டும். விரும்பிய இடமாற்றங்களையும் பெறமுடியும். திறமைக்கேற்ற உயர்வுகளும் அதிகாரிகளின் ஆதரவுகளும் கிடைத்து மனமகிழ்ச்சியை அடைவீர்கள்.
தொழில், வியாபாரம்

ஆண்டின் தொடக்கத்தில் பெரிய முதலீடு செய்து தொடங்க நினைக்கும் காரியங்களில் சற்று கவனம் தேவை. கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது உத்தமம். தேவையற்ற சோதனைகள் மற்றும் மறைமுக எதிர்ப்புகளை சந்திக்க நேர்ந்தாலும் ஆண்டின் பிற்பாதியில் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில், வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் கடனுதவிகள் கிடைக்கப்பெறும். அரசு வழியிலும் அனுகூலங்கள் உண்டாகும்.
கொடுக்கல்- வாங்கல்

கமிஷன், ஏஜென்சி, கான்டிராக்ட் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் சில தடைகளுக்குப்பின் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதால் பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். பொருளாதார நிலை உயர்வாக அமையும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் லாபம் கிட்டும்.
அரசியல்

எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பெரிய மனிதர்களின் மத்தியில் உங்கள் புகழ், கௌரவம் யாவும் கூடும். உங்களின் வார்த்தைக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். எதிலும் திட்டமிட்டு செயல்பட்டு அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். மக்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். நல்ல பதவி தேடி வரும்.
விவசாயிகள்

ஆண்டின் தொடக்கத்தில் வாய்க்கால், வரப்பு பிரச்சினைகளால் தேவையற்ற வீண்விரயங்கள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளும் அதிகரிக்கும். முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. ஆண்டின் பிற்பாதியில் வாழ்வில் நல்ல முன்னேற்றம் உண்டாவதோடு விளைச்சலும் பெருகும். சந்தையிலும் விளைபொருள்களை நல்ல விலைக்கு விற்க முடியும். பூமி, மனை போன்றவற்றையும் வாங்குவீர்கள். கால்நடைகளாலும் நல்ல லாபம் உண்டு.
கலைஞர்கள்

ஆண்டின் முற்பாதியில் சில சோதனைகளை சந்தித்தாலும், பிற்பாதியில் முன்னேற்றம் அடைவீர்கள். தடைப்பட்ட பணவரவுகள் கிடைக்கப்பெறும். தொழிலில் சாதனைகள் பலசெய்து ரசிகர்களின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். வெளிநாடு சென்று படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகளும் அமையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
பெண்கள்

ஆண்டின் முற்பாதியில் சிறுசிறு சோதனைகளை சந்திக்க நேர்ந்தாலும் ஆண்டின் பிற்பாதியில் நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலவும். தாய்வழியில் ஆதரவு கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக அமைந்து பொன், பொருள் சேரும். புத்திரர்களின் ஆதரவு சிறப்பாக அமையும். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். சிலர் நினைத்தவரையே கைப்பிடிக்கும் யோகத்தைப் பெறுவார்கள். பணிபுரியும் பெண்கள் ஆண்டின் பிற்பாதியில் ஏற்றத்தைப் பெறுவார்கள்.
மாணவ- மாணவியர்

ஆண்டின் முற்பாதியில் கல்வியில் ஈடுபாடற்ற நிலை ஏற்பட்டாலும் ஆண்டின் பிற்பாதியில் கல்வியில் நிலவிய மந்தநிலைகள் மாறி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். விளையாட்டுத் துறைகளிலும் ஈடுபட்டு வெற்றி பெறமுடியும். சக நண்பர்களின் ஆதரவுகளும் கிடைக்கும். விடுமுறை நாட்களை நல்ல விதமாக கழிக்க சுற்றுலா செல்லும் வாய்ப்பு உண்டாகும். 


அதிர்ஷ்டம் அளிப்பை

எண்:           1, 2, 3, 9.     
நிறம்:     ஆழ் சிவப்பு. 
கிழமை:     செவ்வாய்.
கல்:         பவளம்.
திசை:     தெற்கு. 
தெய்வம்:     முருகன்.

No comments: