Wednesday, July 26, 2017

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017- 2019


ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017- 2019
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் -  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடுஇந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


மீனம்  
பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி 


எல்லாருக்கும் எல்லா வகையிலும் நன்மை செய்ய நினைக்கும் நற்குணம் கொண்ட மீன ராசி நேயர்களே! வாக்கியப்படி வரும் 27-7-2017முதல் 13-2-2019வரை சர்ப்ப கிரகங்களான ராகு பகவான் ஜென்ம ராசிக்கு 5-ஆம் வீட்டிலும், கேது பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பதால் ஏற்ற இறக்கமான பலன்களைப் பெறுவீர்கள்.2-9-2017முதல் 4-10-2018வரை அட்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதும், 19-12-2017முதல் சனி ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதும் அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது என்பதால் உடல் ஆரோக்கியத்தில் வயிறு தொடர்பான சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது, குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதிருப்பது உத்தமம். பிள்ளைகளால் தேவையற்ற மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். சிலருக்கு பூர்வீகச் சொத்துகளால் வீண்விரயங்கள் ஏற்படும். உற்றார் -உறவினர்களை அனுசரித்துச்செல்ல வேண்டியிருக்கும். திருமண சுபகாரியங்களைத் தடைகளுக்குப்பின்பே நிறைவேற்ற முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல் -வாங்கலிலும் பெரிய தொகையை ஈடுபடுத்தும்போது சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதன்மூலம் வீண்பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். உயரதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொண்டால் படிப்படியான முன்னேற்றத்தை அடையமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றமான பலன்களைப் பெறுவீர்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேறுவது நல்லது. அரசியல்வாதிகள் மக்களின் தேவையறிந்து செயல்பட்டால் அவர்களின் ஆதரவுகளைப் பெறமுடியும். மாணவர்கள் கல்வியில் முழுமுயற்சியுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். வரும் 4-10-2018முதல் குருபகவான் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் எவ்விதப் பிரச்சினைகளில் இருந்தும் படிப்படியான முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். பொருளாதாரநிலை முன்னேற்றமடையும். கடன்கள் சற்றே குறையும். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.உடல் ஆரோக்கியம், உடல் நலனில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். ஜலத் தொடர்பான பாதிப்புகளும் உஷ்ணம் தொடர்பான பாதிப்புகளும் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை செய்யவேண்டி இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் வீண்பிரச்சினைகள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன், உடல் சோர்வு உண்டாகும். எந்தக் காரியத்தை எளிதில் செய்துமுடிக்க முடியாதபடி உடல்சோர்வு உண்டாகும். 

குடும்பம், பொருளாதார நிலை 

குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளால் அமைதி குறையும் என்பதால் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. புத்திரர்களும் சாதகமின்றி அமைவார்கள். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின்பே வெற்றியினைப் பெறமுடியும்.  பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தையில் திருப்தியற்ற நிலை உண்டாகும். 

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் துறைகளில் சுமாரான லாபம் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. சில நேரங்களில் நம்பியவர்களே துரோகம் செய்யக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். கொடுத்த கடன்களையும் வசூலிக்க முடியாது. வம்பு வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். 

தொழில், வியாபாரம் 

தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகளும் சோதனைகளும் உண்டாகும். கூட்டாளிகளிடையே நம்பிக்கையின்மை ஏற்படும். உடனிருப்பவர்களே ஏமாற்றக்கூடிய சூழ்நிலை உண்டாகும். பெரிய முதலீடுகளில் ஆரம்பிக்கும் காரியங்களில் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே அனுகூலத்தை அடையமுடியும். எதிர்பார்த்த வங்கிக் கடன்களும் தாமதப்படும். தொழிலாளர்களால் வீண்பிரச்சினைகள் ஏற்படும். 

உத்தியோகம் 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அதிகாரிகளின் கெடுபிடிகளை சமாளிக்க அதிகம் பாடுபடநேரிடும். எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரியக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டாகும். கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டியிருப்பதால் உடல்நிலை சோர்வடையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்காது. 

பெண்கள்

குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளும் குழப்பங்களும் ஏற்படும். கணவன் -மனைவியிடையே வாக்குவாதங்கள் உண்டாகும். புத்திரர்களால் நிம்மதி குறையும். உற்றார் -உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். தாய்வழியில் எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும். பிறரிடமிருந்து பொருளையோ நகையையோ இரவலாகப் பெறுவதைத் தவிர்க்கவும். பொருளாதாரநிலை சுமாராக அமையும். 

அரசியல்  

தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள நிறைய பாடுபட வேண்டிவரும். எடுக்கும் காரியங்களை எதிர்நீச்சல்போட்டே செய்துமுடிக்க முடியும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல் மக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். உடனிருப்பவர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது நல்லது. 

விவசாயிகள்

விளைச்சல் சுமாராக இருந்தாலும் பட்டபாட்டிற்கான பலன்களைப் பெற்றுவிடமுடியும். பங்காளிகளிடையே ஒற்றுமைக்குறைவுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் வீண்வம்பு வழக்குகளும் உண்டாகும். எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நன்மையளிக்கும்.

கலைஞர்கள்

தொழில்ரீதியாக அதிக போட்டி பொறாமைகளும் தொல்லைகளும் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்களை அடிக்கடி மேற்கொள்ள நேரிடும். புதிய பட வாய்ப்புகள் கிடைப்பதில் தடை தாமதம் ஏற்படும். வரவேண்டிய சம்பள பாக்கிகளும் கிடைக்கப்பெறாமல் பொருளாதார நிலையிலும் சங்கடங்கள் ஏற்படும். 

மாணவ- மாணவியர்

படிப்பில் கவனம் செலுத்த முடியாமல்போகும். எந்த ஒரு செயலையும் கஷ்டப்பட்டே முடிக்க வேண்டி இருக்கும். தேவையற்ற நண்பர்களின் சகவாசம் பிரச்சினைகளை ஏற்படுத்தும். விளையாட்டுப்போட்டிகளில் ஈடுபடும்போது சற்று கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. உல்லாசப் பயணங்களால் ஓரளவு மகிழ்ச்சி உண்டாகும். 

ராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது அவிட்ட நட்சத்திரத்தில் 27-7-2017முதல் 29-11-2017வரை

ராகு பகவான் 4,7--க்கு அதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 5-ஆம் வீட்டிலும் கேதுபகவான் 2,9-க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் 11-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஒரளவுக்கு எதிலும் முன்னேற்றமான நிலையினை அடைந்துவிடமுடியும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பூர்வீகச் சொத்துகளாலும் அனுகூலம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும் என்றாலும் பெரிய கெடுதிகள் இல்லை. 2-9-2017முதல் குரு 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உற்றார் -உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் மட்டுமே சாதகமான பலனைப் பெறமுடியும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் சிறந்த அனுகூலத்தை அடையமுடியும். போட்டிகள் சற்றே குறையும். எந்தவித வம்பு வழக்குகளையும் எதிர்கொண்டு வெற்றி பெறக்கூடிய ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவுகள் ஓரளவுக்குக் கிடைப்பதால் பணிகளை சிறப்புடன் செய்துமுடிக்க முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம். 

ராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 30-11-2017முதல் 4-4-2018வரை

ராகு பகவான் 4,7-க்கு அதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 5-ஆம் வீட்டிலும், கேதுபகவான் 5-க்கு அதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் 11-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சுமாராக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. குருவும் அட்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியவிஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது.வாகனங்களில் பயணம் செய்யும்போது நிதானம் தேவை. 19-12-2017முதல் சனி 10-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபங்கள் உண்டாகும் என்றாலும் கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச்செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கப்பெற்றாலும் வேலைப்பளு அதிகரிப்பதால் பணிகளை செய்துமுடிக்க சற்று காலதாமதம் ஏற்படும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது நல்லது. 

ராகு பூச நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 5-4-2018முதல் 8-8-2018வரை

ராகு பகவான் ஜென்ம ராசிக்கு 11,12-க்கு அதிபதியான சனியின் நட்சத்திரத்தில் 5-ஆம் வீட்டிலும் கேதுபகவான் 5-க்கு அதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் 11-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் இக்காலங்களில் உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களால் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் மறையும். மணமாகாதவர்களுக்கு நல்லவரன்கள் சில தடைகளுக்குப்பின் தேடிவரும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பொன் பொருள் சேரும். சொந்த வீடு, வாகனங்களையும் வாங்குவீர்கள். இதுவரை இருந்து வந்த அலைச்சல்கள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் திறமைக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப்பெறுவதால் மனநிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். எதிர்பார்த்துக் காத்திருந்த ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விரும்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கப்பெறும். தொழில், வியாபாரமும் முன்னேற்றமடையும். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

ராகு பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 9-8-2018முதல் 12-12-2018வரை

ராகு பகவான் ஜென்ம ராசிக்கு 11,12-க்கு அதிபதியான சனியின் நட்சத்திரத்தில் 5-ஆம் வீட்டிலும், கேதுபகவான் 6-க்கு அதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் 11-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் இக்காலங்களில் ஓரளவுக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும். 4-10-2018முதல் குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். மருத்துவச் செலவுகள் குறையும். அசையும், அசையாச் சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகையை ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடிகள் குறைந்து வாய்ப்புகள் தேடிவரும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்யும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் பணிகளைச் சிறப்புடன் செய்து முடிக்க முடியும். பயணங்களால் நற்பலனை அடைவீர்கள். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம். 

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-12-2018முதல் 13-2-2019வரை

ராகு பகவான் உங்கள் ராசியாதிபதியான குருவின் நட்சத்திரத்தில் 5-ஆம் வீட்டிலும் கேதுபகவான் 6-க்கு அதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் 11-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் குருபகவான் 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி சுபிட்சமான நிலை உண்டாகும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு அசையும், அசையாச் சொத்துகள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். புத்திரவழியில் மகிழ்ச்சி, பூர்வீகச் சொத்துகளால் அனுகூலம் ஏற்படும். பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றிலும் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள் குறையும். வம்பு வழக்கு போன்றவற்றில் தீர்ப்பு சாதகமாக வரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலையிருக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தி பெருகுவதுடன் லாபங்களும் தாராளமாக அமையும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் அனுகூலம் உண்டாகும். தொழில்ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

பரிகாரம்

மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராகு 5-ல் சஞ்சாரம் செய்வதால் ராகுவுக்குப் பரிகாரமாக ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்கள், மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைக்குட்டை போன்றவற்றைப் பயன்படுத்துவது, ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் சஹ ராஹவே நமஹ என்ற பீஜ மந்திரத்தைக் கூறிவருவது நல்லது. சனி 10-ல் சஞ்சரிப்பதால் சனிக்குத் தொடர்ந்து பரிகாரம் செய்வது, அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, சனிக்கிழமைகளில் விரதமிருந்து நல்லெண்ணெய் தீபமேற்றுவது, கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்குப் பூக்கள் மற்றும் கருங்குவளைப் பூக்களால் அர்ச்சனை செய்வது நல்லது.

 அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9,
நிறம் - மஞ்சள், சிவப்பு
கிழமை - வியாழன், ஞாயிறு
கல் - புஷ்ப ராகம்
திசை - வடகிழக்கு
தெய்வம் - தட்சிணாமூர்த்தி

No comments: