Monday, July 24, 2017

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017- 2019

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017- 2019
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் -  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடுஇந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


தனுசு  
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் 

செய்த நன்றியை மறவாத குணமும் நல்ல மனவலிமையும், வைராக்கியமும் கொண்டவராகவும் விளங்கும் தனுசு ராசி நேயர்களே! வரும் 27-7-2017 முதல் 13-2-2019வரை சர்ப்ப கிரகங்களான ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு 8-ஆம் வீட்டிலும், கேது 2-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. இதனால் குடும்பத்தில் நிம்மதியற்றநிலை ஏற்படும். கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது, முடிந்தவரை குடும்ப விஷயங்களை பிறரிடத்தில் பகிர்ந்து கொள்ளாதிருப்பது உத்தமம். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச்செல்வது நல்லது. 19-12-2017முதல் சனியும் ஜென்ம ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி தொடங்கவுள்ளது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் வீண்செலவுகள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும்.   

வரும் 2-9-2017முதல் 4-10-2018வரை ராசியாதிபதி குரு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் குடும்பத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் ஏற்படும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் கிடைக்கப் பெறும். பொருளாதாரநிலையும் தேவைக்கு ஏற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உற்றார்- உறவினர்களும் சாதகமாகவே செயல் படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தைப் பெறமுடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றிவிடுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் சற்று போட்டிகளை எதிர்கொண்டே முன்னேற்றம் அடையமுடியும். உத்தியோகஸ்தர்களுக்குச் செய்யும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும். உயரதிகாரிகளால் சிறுசிறு கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடன்பணிபுரியவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படு வார்கள். அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவுகளைப் பெற்று கட்சியில் முன்னேற்றமடையமுடியும். கலைஞர்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தாமதப்பட்டாலும் கையிலிருக்கும் வாய்ப்புகளைக் கொண்டே நல்ல புகழை அடைவீர்கள். மாணவர்கள் அடிக்கடி விடுப்பு எடுப்பதைத் தவிர்த்து கல்வியில் அதிக ஈடுபாட்டினைச் செலுத்துவது உத்தமம்.

 உடல் ஆரோக்கியம் 

உங்கள் ராசிக்கு ஏழரைச்சனி தொடர்வதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகளையும் சந்திக்க நேரிடும், மருத்துவச் செலவுகளும் உண்டாகும் என்றாலும் எதையும் சமாளிக்கும் வலிமையும் வல்லமையும் பெறுவீர்கள். நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும்.எதிலும் கவனமாக இருப்பது நல்லது.

குடும்பம், பொருளாதார நிலை 

சர்ப்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால் குடும்பவாழ்வில் வீண்பிரச்சினைகள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கணவன் -மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு உண்டாகும். பொருளாதாரரீதியாக ஓரளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, தாராள தனவரவுகள் உண்டாகும். புதிய பொருட்சேர்க்கைகள் அமையும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சேமிப்பு பெருகும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி, கொடுக்கல்- வாங்கலில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதால் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும் .பெரிய தொகைகளையும் எளிதாக ஈடுபடுத்தி லாபம் அடையமுடியும். வம்பு வழக்குகளை சமாளிக்க வேண்டி இருக்கும். 

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொண்டால் மட்டுமே எதிர்பார்த்த லாபத்தை அடையமுடியும். பெரிய மனிதர்களின் ஆதரவுகளால் தொழிலை அவிபிருத்திச் செய்யும் நோக்கம் நிறைவேறும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் நல்ல லாபம் உண்டாகும். புதிய நவீன கருவிகள் வாங்க அரசுவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மறைமுக போட்டி பொறாமைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். 

உத்தியோகம் 

உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்ட உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பொருளாதாரநிலை மேம்படும். எந்தக் காரியத்தையும் எளிதில் செய்துமுடித்து அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புவர்களின் நோக்கம் சில தடைகளுக்குப்பின் நிறை வேறும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. 

பெண்கள் 

நினைத்த காரியம் நிறைவேறும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். வாகனம் வாங்கக்கூடிய உன்னத அமைப்பு உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டியிருக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றிக் கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு உயர்வுகள் உண்டாகி மகிழ்ச்சி ஏற்படும். 

அரசியல் 

அரசியல்வாதிகள் தங்கள் புகழைக் காப்பாற்றிக்கொள்ள அதிகம் பாடுபட வேண்டி இருக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் அனுகூலம் தரும். மறைமுக வருவாய் பெருகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற்று மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் சாதகமான பலனை ஏற்படுத்தும். 

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சுமாராக இருப்பதால் உழைப்பிற்கேற்ற பலனைப் பெறமுடியாமல் போகும். பூமி, மனை போன்றவற்றால் வீண்விரயங்களும் அதிகரிக்கும். வாய்க்கால், வரப்பு பிரச்சினைகளால் வம்பு வழக்குகள் ஏற்படும். பயிர்களை இன்சூரன்ஸ் செய்வது நல்லது.

கலைஞர்கள் 

கலைஞர்களுக்குத் தடைப்பட்ட பணவரவுகள் கிடைக்கப்பெறும். புதிய வாய்ப்புகளிலும் கையெழுத்திடும்போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் பொருளாதார நிலை உரும். இசைத்துறை, நடனத் துறையில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். 

மாணவ- மாணவியர்

கல்வியில் நல்ல முன்னேற்றமும் பெற்றோர்களால் பாராட்டக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். ஏழரைச்சனிக் காலம் என்பதால் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தால் வீண்பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். வாகனங்களில் செல்லும்போது வேகத்தைக் குறைத்துக்கொள்வது உத்தமம்.

ராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது அவிட்ட நட்சத்திரத்தில் 27-7-2017முதல் 29-11-2017வரை

ராகு பகவான் புதனின் நட்சத்திரத்தில் 8-ஆம் வீட்டிலும், கேது பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் 2-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது.2-9-2017முதல் குரு லாப ஸ்தானமான 11-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். உற்றார், உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது, பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப்பெற்றாலும் உடன்பணிபுரிபவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் சிறப்பான லாபங்கள் அமையும். போட்டி பொறாமைகள் குறையும். நல்ல வாய்ப்புகள் தேடிவரும். தொழிலாளர்களால் சிறுசிறு வீண் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். ராகு-கேதுவுக்கு சர்ப்ப சாந்தி செய்வது நல்லது.

ராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 30-11-2017முதல் 4-4-2018 வரை

ராகு பகவான் புதனின் நட்சத்திரத்தில் 8-ஆம் வீட்டிலும், கேது பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 2-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் குருவும் 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பிள்ளைகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். அசையும், அசையா சொத்துகளையும் வாங்கிச் சேர்க்க முடியும். 19-12-2017 முதல் சனி ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றும். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். உற்றார், உறவினர்களை அனுசரித்துச்செல்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தாதிருப்பதன்மூலம் வீண்பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெறமுடியும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் நற்பலன் அமையும்.  சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

ராகு பூச நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 5-4-2018முதல் 8-8-2018வரை

ராகு பகவான் சனியின் நட்சத்திரத்தில் 8-ஆம் வீட்டிலும், கேது பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 2-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலையே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில்  உண்டாகக்கூடிய பாதிப்புகளால் அன்றாடப் பணிகளில் திறம்படச் செயல்பட முடியாமல் போகும். குடும்பத்திலுள்ளவர்களும் சுபிட்சமாக அமையமாட்டார்கள். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். என்றாலும் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல்போட்டாவது வெற்றிகளைப் பெற்றுவிடுவீர்கள். பொருளாதாரநிலையும் தேவைக் கேற்றபடி இருக்கும். வீடு, மனை போன்றவற்றை வாங்குவதன்மூலம் செய்யும் செலவுகள் சுபச்செலவாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினை அடைந்துவிடமுடியும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கப்பெறும். கூட்டாளிகளை சற்று அனுசரித்துச்செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். முடிந்தவரை பெரிய தொகையை பிறருக்குக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் திறமைக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். உடனிருப்பவர்களின் ஆதரவுகளால் வேலைப்பளு குறையும். ராகு காலங்களில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

ராகு பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 9-8-2018முதல் 12-12-2018வரை

ராகு பகவான் சனியின் நட்சத்திரத்தில் 8-ஆம் வீட்டிலும், கேது பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 2-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் சனியும் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாவதோடு, குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருப்பதால் குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். 4-10-2018முதல் குரு 12-ஆம் வீட்டிற்கு மாறுதலாவதால் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். வாகனம் வாங்கும் முயற்சிகளில் வீண்விரயம் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் சற்று தாமதப்படும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே ஓரளவுக்கு முன்னேற்றப்பலன்களைப் பெறுவீர்கள். எடுக்கும் காரியங்களிலும் வெற்றிகளைப் பெறமுடியும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது உத்தமம். 

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-12-2018முதல் 13-2-2019வரை

ராகு பகவான் குருவின் நட்சத்திரத்தில் 8-ஆம் வீட்டிலும், கேது பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 2-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. உற்றார் -உறவினர்களிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். பணம் கொடுக்கல் -வாங்கலிலும் சரளமான நிலை ஏற்படாது. சுபகாரியங் களுக்கான முயற்சிகளில் தடைகளைச் சந்திக்க நேரிடும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றத்தினை அடைந்துவிடமுடியும். தொழிலாளர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப் பதாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வினை அடையமுடியும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களால் உடல் சோர்வு உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

பரிகாரம்

தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் சர்ப்ப சாந்தி செய்வது, ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை தொழுநோயாளிகளுக்கு தானம் கொடுப்பது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைக்குட்டை போன்றவற்றைப் பயன்படுத்துவது, கேதுவுக்குப் பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பீஜ மந்திரத்தைக் கூறிவருவது, செவ்வரளிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்  கூறுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ணமயமான போர்வை, வெள்ளைப் புள்ளிகள் உடைய பழுப்பு நிறப்பசு போன்றவற்றை  ஏழைகளுக்கு தானம் தருவது, 

ஏழரைச்சனி நடைபெறுவதால் சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது, சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் தீபமேற்றுவது நல்லது. திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வேங்கடாசலபதியை வழிபடுவது, சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்குப் பூக்கள் மற்றும் கருங்குவளைப் பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது, கருப்புநிற ஆடை அணிவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9
நிறம் - மஞ்சள், சிகப்பு,
கிழமை - திங்கள், வியாழன், 
கல் - புஷ்ப ராகம்,
திசை - வடகிழக்கு,
தெய்வம் - தட்சிணாமூர்த்தி

No comments: