Wednesday, July 26, 2017

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017- 2019

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017- 2019

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017- 2019
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் -  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடுஇந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



மகரம் 
உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்


அதிகமான தன்னம்பிக்கையும், எதிலும் போராடி வெற்றி பெறக்கூடிய ஆற்றலும் கொண்ட மகர ராசி நேயர்களே! வாக்கியப்படி  வரும் 27-7-2017முதல் 13-2-2019வரை சர்ப்ப கிரங்களான கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. கணவன் -மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். உற்றார் -உறவினர்களை மிகவும் அனுசரித்துச்செல்ல வேண்டி இருக்கும்.2-9-2017முதல் 4-10-2018வரை குரு ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், 19-12-2017முதல் சனி ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி தொடங்க இருப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிர்பாராத நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவரும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்யக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபங்களைப்பெற எதிர்நீச்சல் போடவேண்டி இருக்கும். கூட்டாளிகளிடமும் தொழிலாளர்களிடமும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை கண்ணெதிரேயே பிறர் தட்டிச்செல்வதால் மனநிம்மதி குறையும். தேவையற்ற இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப்பிரிய நேரிடும். 

குருபகவான் அடுத்தாண்டு அதாவது 4-10-2018முதல் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது, உற்றார்- உறவினர்களை அனுசரித்துச்செல்வதன்மூலம் குடும்பத்தில் ஒற்றுமையை நிலைநாட்டமுடியும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று கடன்கள் குறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். ஆன்மிக, தெய்வீகக் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் சிறப்பாக அமையும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். தேவையற்ற பயணங்களைக் குறைத்துக்கொண்டால் அலைச்சலைத் தவிர்க்க முடியும். அரசியல்வாதிகள் இக்காலங்களில் சற்று பிரகாசிக்க முடியும். கலைஞர்களுக்கு தேவையற்ற வதந்திகளால் நிம்மதி குறையும் என்றாலும் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி ஏற்படும். மாணவர்கள் கல்வியில் ஓரளவுக்கு சிறந்து விளங்க முடியும்.

உடல் ஆரோக்கியம் 

உடல்நிலை சுமாராகத்தான் அமையும். வாயு, உஷ்ணம் சம்பந்தமான பாதிப்புகளால் சற்று மருத்துவச் செலவுகளும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் தாமதப்பலனே ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் சிறிது மருத்துவச் செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். நெருங்கியவர்களுக்கும் உடல்நிலை பாதிப்பதால் மனஅமைதி குறையும். அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளிக்க்கூடிய பலமும் வலிமையும் கூடும்.

குடும்பம், பொருளாதாரநிலை 

குடும்ப ஒற்றுமை சுமாராக இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் உண்டாகும். புத்திரவழியில் செலவுகள் இருந்தாலும் அதனால் அனுகூலமும் உண்டாகும். உற்றார்-உறவினர்கள் ஒருநேரம் ஆதரவாக இருந்தாலும்  சில நேரங்களில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பொருளாதாரநிலை சுமாராகவே அமையும். தேவையற்றச் செலவுகளைக் குறைத்தால்மட்டுமே அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் உதவி சற்று கிடைக்கும். 

கொடுக்கல்- வாங்கல்

ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்றவற்றால் சுமாரான லாபம் கிடைக்கும். கொடுக்கல் -வாங்கலிலும் சரளமாக நிலை இருந்தாலும் பெரிய தொகை ஈடுபடுத்துவதையும், வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றையும் தவிர்த்துவிடுவது நல்லது. கொடுத்த கடன்கள் திருப்திகரமாக வசூலாகும்.

தொழில், வியாபாரம் 

தொழில், வியாபாரம் செய்பவர்கள் மந்தமானநிலையைச் சந்தித்தாலும் எதிர்பாராத லாபங்களையும் அடைவீர்கள். தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் தொழிலை அபிவிருத்திச் செய்யும் நோக்கம் நிறைவேறும். சில போட்டி பொறாமைகளை சந்தித்தாலும் எதிலும் எதிர்நீச்சல்போட்டு முன்னேறிவிடுவீர்கள்.

உத்தியோகம் 

உத்தியோகத்தில் வேலைப்பளுவும் கூடுதல் பொறுப்புகளும் அதிகரித்தாலும் உங்கள், பெயர் பதவி உயர்வுக்கு சிபாரிசு செய்யப்படும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்க சிரமம் ஏற்பட்டாலும் உங்கள் பேச்சாற்றலால் அனைவரின் ஆதரவைப் பெறுவீர்கள். சில சமயங்களில் எவ்வளவுதான் பாடுபட்டாலும் அதிகாரிகளின் ஆதரவைப் பெறமுடியாமல் திண்டாட நேரிடும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது.

பெண்கள் 

பொருளாதாரநிலை சிறப்பாக அமையும் என்றாலும் உறவினர்கள் வருகை அதிகமாகி வரவுக்குமீறிய செலவுகளை ஏற்படுத்தும். உடல்நிலை சுமாராக அமைந்தாலும் தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் சிறப்பாக அமையும். புத்திரவழியில் வீண்செலவுகள் ஏற்படும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு பல தடைகளுக்குப்பின்பே சுபகாரியம் கைகூடும். பணிபுரிபவர்களுக்கு வீண்சங்கடங்கள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்துவிடுவீர்கள். 

அரசியல் 

இதுவரை இருந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். தேவையற்ற சேர்க்கைகளையும், நட்புகளையும் தவிர்ப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் அமையும்.  

விவசாயிகள்

பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்காது. சிறிது லாபத்தைக் காணவே நிறைய பாடுபடவேண்டியிருக்கும். கால்நடைகளாலும் வீண்விரயங்கள் உண்டாகும். அரசுவழியில் சுமாரான உதவியே கிடைக்கும். பூமி, நிலம் போன்றவற்றால் பங்காளிகளிடையே வீண்விரோதம் உண்டாகும். 

கலைஞர்கள் 

நல்ல வாய்ப்புகள் கைநழுவிப்போனாலும் இருக்கும் வாய்ப்புகளை வைத்தே முன்னேறிவிடுவீர்கள். புதிய முயற்சிகளில் அனுகூல பலன்களே அமையும். இடைவிடாத உழைப்பால் உடல்நிலையில் சிறுபாதிப்புகள் உண்டாகும். எதையும் சமாளித்து முன்னேற்றத்தை அடையமுடியும். 

மாணவ- மாணவியர்

கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவதன்மூலம் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும். விளையாட்டுப்போட்டிகளில் ஈடுபடும்போது எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. தேவையற்ற பொழுதுபோக்குகளைத் தவிர்ப்பதால் கல்வியில் முழுகவனம் செலுத்த முடியும். நண்பர்களின் ஆலோசனை நல்ல பலனைத் தரும்.

ராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது அவிட்ட நட்சத்திரத்தில் 27-7-2017முதல் 29-11-2017வரை

ராகு பகவான் 6,9-க்கு அதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 7-ஆம் வீட்டிலும் கேது பகவான் 4,11-க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எதிலும் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே முன்னேற்றம் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஏற்படக்கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும்.2-9-2017முதல் குரு 10-ல் சஞசரிப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் சற்றே நெருக்கடியான காலமாக இருக்கும். புதிய முயற்சிகளில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.  உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். அசையும், அசையாச் சொத்துகளால் வீண்செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. தினமும் விநாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.

ராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 30-11-2017முதல் 4-4-2018வரை

ராகு பகவான் 6,9-க்கு அதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 7-ஆம் வீட்டிலும், கேது பகவான் 7-ஆம் அதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. 19-12-2017முதல் சனி 12-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உடல்நிலையில் சோர்வு ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்பட்டால் மட்டுமே லாபத்தை அடையமுடியும். வரவேண்டிய பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத விரயங்களும் உண்டாகும்.  முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. சுபகாரியங்களுக்கான பேச்சுவார்த்தைகளில் தடைகள் நிலவும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

ராகு பூச நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 5-4-2018முதல் 8-8-2018வரை

ராகு பகவான் ராசியாதிபதியான சனியின் நட்சத்திரத்தில் 7-ஆம் வீட்டிலும், கேது பகவான் 7-ஆம் அதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் ஓரளவுக்கு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் தடைவிலகி கைகூடும். பொன் பொருள் சேரும். பொருளாதார மேம்பாடுகளால் சொந்த பூமி, மனை வாங்கும் யோகம் அமையும். உற்றார்- உறவினர்களை சற்று அனுசரித்துச்செல்ல வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதுதன்மூலம் தேவையற்ற மருத்துவச் செலவுகளைக் குறைத்துக்கொள்ள முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறமுடியும். எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்களை சந்திப்பீர்கள். செய்யும் தொழில், வியாபாரத்திலும் ஓரளவுக்கு நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச்செய்ய நினைக்கும் காரியங்களை சற்று தள்ளிவைப்பது நல்லது. ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம். 

ராகு பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 9-8-2018முதல் 12-12-2018வரை

ராகு பகவான் ராசியாதிபதியான சனியின் நட்சத்திரத்தில் 7-ஆம் வீட்டிலும், கேது பகவான் 8-ஆம் அதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். வரும் 11.10.2018 முதல் குரு லாப ஸ்தானமான 11-ம் வீட்டில் சஞசரிக்க இருப்பதால் பணம் பலவழிகளில் தேடிவந்து பாக்கெட்டை நிரப்பும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் வெற்றிமேல்வெற்றி கொடுக்கும். பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் படிப்படியாகக் குறையும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் யாவும் தடையின்றி தடபுடலாகக் கைகூடும். பொன்னும் பொருளும் சேரும். தொழில், வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொண்டால் அபிவிருத்தியையும் பெருக்கிக்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்திருந்த ஊதிய உயர்வுகள், பதவி உயர்வுகள் யாவும் தடையின்றிக் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புபவரின் விருப்பம் தடைகளுக்குப்பின் நிறைவேறும். சனிப் பரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-12-2018முதல் 13-2-2019வரை

ராகு பகவான் குருவின் நட்சத்திரத்தில் 7-ஆம் வீட்டிலும், கேது பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் சனியும் 12-ல் சஞ்சரிப்பதால் நன்மை,தீமை கலந்த பலன்களே உண்டாகும் என்றாலும் குரு பகவான் 11-ம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். பணவரவுகள் ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக இருக்கும். குடும்பத்தேவைகளும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி யிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளால் ஓரளவுக்கு லாபத்தைப் பெறுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். ஆன்மிக, தெய்வீகக் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்டிகள் உண்டா னாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். உயரதிகாரி களிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. ராகு- கேதுவுக்கு சர்ப்ப சாந்தி செய்வது உத்தமம். 

பரிகாரம்

மகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-லும் சஞ்சாரம் செய்வதால் தினமும் விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பீஜ மந்திரத்தைக் கூறிவருவது, செவ்வரளிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது நல்லது. ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, சனிக் கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை தொழு நோயாளிகளுக்கு தானம் கொடுப்பது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைக் குட்டை போன்றவற்றைப் பயன்படுத்துவது நல்லது.

ஏழரைச்சனி நடைபெறுவதால் சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது, சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு எள்எண்ணெயில் தீபமேற்றுவது நல்லது.  திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வேங்கடாசலபதியை வழிபடுவது, சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்குப் பூக்கள் மற்றும் கருங்குவளைப் பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, கருப்பு நிற ஆடை அணிவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை,

எண்       -  5, 6, 7, 8
நிறம் -  நீலம், பச்சை
கிழமை -  புதன், வெள்ளி
கல் -  நீலக்கல்
திசை -  மேற்கு
தெய்வம் -  விநாயகர்

No comments: