Friday, March 30, 2012

வயிற்றில் பிரச்சினை தரும் அமைப்பு

யாரையாவது நாம் எதிரில் பார்க்க நேர்ந்தால் முதலில் கேட்கும் கேள்வி எப்படி இருக்கிறீர்கள? என்றுதான். அந்த  எப்படி இருக்கிறீர்கள் என்பதற்கு அர்த்தம் சொந்த வீடு இருக்கிறதா, கார் இருக்கிறதா, சொத்து சுகம் இருக்கிறதா என்பது பற்றி அல்ல. உடல் நிலை நன்றாக இருக்கிறதா என்றுதான்.

இன்று விஞ்ஞான முன்னேற்றம் எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு புதுப்புது நோய்களும் உண்டாகிக் கொண்டு இருக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது. அவற்றிற்கு நம் விஞ்ஞானிகள் புதுப்புது பெயர்களை சூட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாம் அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதை விரும்பினாலும் இந்த அவசர யுகத்தில் அது இயலாத ஒன்றாகி விடுகிறது.

எல்லாமே ரெடிமேடாக கிடைப்பது போல உணவு வகைகளும் ரெடிமேடாகவே கிடைப்பதால் மக்களுககு உணவு பழக்க வழக்கங்களும் சரியாக அமைய வாய்ப்புகள் குறைந்து கொண்டே இருக்கிறது. பொதுவாகவே உண்ணும் உணவு சரியாக இல்லையென்றால் அஜீரணக் கோளாறு, வாயுத் தொல்லை உண்டாகும் என்றாலும், எல்லாவற்றிலும் பார்த்து பார்த்து உடல்நிலையைப் பேணிக்காப்பவர்களுக்குக் கூட வயிறு  சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகி அவதியுற வைக்கிறது. இதற்கு ஜோதிட ரீதியாக என்ன காரணம் என்று பார்த்தால் 5ம் பாவம் சரியாக அமையாதததுதான்.

ஜென்ம லக்னத்திற்கு 5ம் வீட்டைக் கொண்டு வயிறு, குடல், சிறுகுடல், குடலின் கீழ் பகுதி, உண்ணும் உணவு, ஜீரணிக்கும் உறுப்பு, அஜீரணக்கோளாறு, அல்சர் போன்ற பாதிப்புகள் ஏற்படுமா என்பதனைப் பற்றி தெளிவாக அறியலாம். 5ம் வீட்டில் சுப கிரகங்கள் அமையப் பெற்று 5ம் அதிபதி வலுவாக இருந்தால் நல்ல ஜீரண சக்தி, உண்ணும் உணவு செரிக்கும் அமைப்பு உண்டாகும்.

5ம் வீட்டில் பாவகிரகங்கள் அமையப் பெற்றாலும் வயிறு கோளாறு, அஜீரண சக்தி, உண்ணும் உணவு செரிக்கும் அமைப்பு உண்டாகும்.

5ம் வீட்டில் பாவ கிரகங்கள் அமையப் பெற்றாலும் வயிறு கோளாறு, அஜீரணக் கோளாறு உண்டாகும்.

5ம் வீட்டில் சூரியன் அமையப் பெற்றால் நல்ல ஜீரண சக்தியும், அதிகமான உணவு உண்ணுவதில் அதிக  விருப்பமும் உண்டாகும். சூரியனுடன் பாவிகள் சேர்க்கை பெற்றாலும் குறிப்பாக செவ்வாய் அமையப் பெற்றாலும் ஜீரணக்கோளாறு உண்டாகி குடலில் புண் ஏற்படும்.

5ம் வீட்டில் சந்திரன் பலமாக அமையப் பெற்றால் விதவிதமான உணவு உண்பதில் அதிக அக்கறை கொண்டவராக இருப்பார். அதுவும் வளர்பிறை சந்திரன் என்றால் கேட்கவே தேவையில்லை. பாவிகள் பார்வை சேர்க்கை இல்லாமலிருந்தால் உண்ணும் உணவு உடனடியாக செரிக்கும் நல்ல ஆரோக்கியம் யாவும் அமையும். அதுவே தேய்பிறை சந்திரனாகி பாவிகள் பார்வை சேர்க்கைப் பெற்றிருந்தால் அஜீரணக் கோளாறு, தேவையற்ற மனக் கவலைகளால் அல்சர் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். குறிப்பாக கேதுவின் சம்மந்தம் சந்திரனுக்கு இருந்தால் குடலில் பாதிப்புகள் ஏற்பட்டு அதிக ஆபத்தை ஏற்படுத்தும்.

5ம் வீட்டில் செவ்வாய் பலமாக அமைந்து, சுபர் பார்வையோ, சுப்ர் சாரமோ பெற்றிருந்தால் சூடான உணவு உண்பதில் அதிக விருப்பம், காரமான உணவுகளை விரும்பி உண்ணக்கூடிய அமைப்பு உண்டாகும் என்றாலும், செவ்வாய் உஷ்ண கிரகம் என்பதால் பாவிகள் தொடர்பு இருந்தால் உண்ணும் உணவு செரிக்காத நிலை, குடல் புண், வாயு தொல்லை, அல்சர் போன்றவை உண்டாகும். குறிப்பாக நீசம் பெற்றிருந்தால் செவ்வாய் திசை, செவ்வாய் புத்தி காலங்களில் இன்னும் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளை அதிகமாக ஏற்படுத்தும். வயிற்றுப் போக்கு கூட உண்டாகி பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யக்கூடிய சூழ்நிலை கூட உண்டாகும்.

அதுவும் பெண்கள் என்றால், செவ்வாய் ரத்த காரகன் என்பதால், பெண்களுக்கு மாதவிடாய்க்கோளாறு, கர்ப்பப்பையில் கோளாறு, கருச்சிதைவு போன்றவை உண்டாகும். செவ்வாய், சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கைப் பெற்று அமைந்து விட்டால், கர்ப்பபையையே எடுக்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும்.

புதன் 5ம் வீட்டில் பலமாக அமைந்து சுபச் சேர்க்கை பார்வைப் பெற்றிருந்தால் உணவை ரசித்துஉண்பவராக இருப்பார். நல்ல ஜீரண சக்தி இருக்கும். உடல் நிலை ஆரோக்கியமாக அமையும். அதுவே புதன் பலஹீனமாக அமைந்து விட்டால் பசியின்மை, உணவு உட்கொள்ளாததால் மயக்கம், உடல்நிலையில் தளர்ச்சி உண்டாகும். வாயுத் தொல்லைகளால் கை, கால் மூட்டுகளில் வலி, வீக்கம் உண்டாகும். உண்ட உணவு சரியாக செரிக்காமல் வயிற்றுப் போக்கும் உண்டாகும்.

ஐந்தில் குரு அமையப் பெற்றால் நன்றாக பசி எடுத்து உண்ணக்கூடிய அமைப்பு, நல்ல ஜீரணத்தன்மை இருக்கும். குரு பகவான் செவ்வாய், ராகு, கேது சேர்க்கைப் பெற்றால் அல்லது பார்வை பெற்றால் அஜீரணக் கோளாறு, வயிற்றில் புண், வாயுத் தொல்லை உண்டாகும்.

ஐந்தில் சுக்கிரன் அமைந்தால், இனிப்பான உணவு வகைகளை விரும்பி உண்பார்கள். சுக்கிரன், சூரியன் சேர்க்கைப் பெற்றிருந்தால், எண்ணெயில் செய்த உணவுப் பண்டங்களை அதிகம் உட்கொள்வார்கள். சுக்கிரன் செவ்வாய் வீட்டிலோ அல்லது செவ்வாயின் பார்வை பெற்றால் சூடான உணவுவகைக¬ள் விரும்பி உண்பார்கள். சனி சேர்க்கைப் பெற்றிருந்தால் எல்லா உணவு வகைகளையும் விரும்பி உட்கொள்பவராக இருப்பார்கள்.

சனி 5ல் அமைந்திருந்தால், அதிக அளவில் உணவு உட்கொள்பவராகவும், எந்த நேரமும் அசை போட்டுக் கொண்டே இருப்பவராகவும் இருப்பார். இதனால் அஜீரணக் கோளாறு, குடலில் புண், போன்ற பாதிப்புகள் உண்டாகும்.

ராகு கேது 5ல் அமைந்தால் சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள  முடியாத காரணத்தால் குடலில் புண், வயிற்றுவலி போன்றவற்றால் குடும்பத்திலேயே மகிழ்ச்சி குறையும். குறிப்பாக  ராகு புத்தி காலங்களில் வயிறு பிரச்சினைகள் அதிகரிக்கும்.

5ம் வீட்டிற்கு குரு பார்வை அல்லது சுபக்கிரக பார்வை இருந்தால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இல்லாமல் நல்ல ஆரோக்கியம் அமையும். அதுவே சுபர் பார்வையின்றி 5ல் பாவிகள் அமையப் பெற்றால், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும்.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001


Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001



No comments: