Saturday, March 10, 2012

சொந்தவீடு யோகம்

சொந்தவீடு யோகம் என்வொரு மனிதனின் வாழ்விலும் இருக்கக்கூடிய லட்சியமாகும். எலி வலை ஆனாலும் தனிவலை வேண்டும். என விரும்புபவர்களே அதிகம். எப்படியாவது கஷ்டப்பட்டு சம்பாதித்து ஒரு சொந்த வீடு கட்டியோ, வாங்கியோ விட வேண்டும் என்பது அனைவரின் கனவாகும். இந்த யோகம் எல்லோருக்கும் அமையுமா என்றால் அதற்கு விடை கூற முடியாது. கற்பனைகள் அனைத்தும் கனவாகவே முடிந்து விடுவதும் உண்டு.

சிலர் சொந்த வீடு கட்ட நினைத்து வங்கியில் கடன் வாங்கி அலைச்சல் பட்டு அதை ஒழுங்காக கட்ட முடியாமல் போதுமாடாசாமி என நினைப்பவர்களும் உண்டு. சிலர் மூதாதையர் சேர்த்து வைத்த சொத்துக்களை வைத்துக் கொண்டு சொந்த வீட்டில் வாழும்  யோகத்தைப் பெறுகிறார்கள். ஒரு சிலர் சிறுக சேமித்து ஒரு சொந்த  வீட்டிற்கு  அதிபதியாகவும் ஆகிவிடுகிறார்கள்.

இப்படி சொந்த வீட்டுமனை அமைய  ஜாதக ரீதியாக 4ம் பாவம் பலமாக அமைந்திருக்கிறதா என ஆராய வேண்டும். நவகிரகங்களில் சுக்கிரனை வீடு யோக காரகன் என்றும், செவ்வாயை பூமி காரகன் எனவும் குறிப்பிடுகிறோம். ஜென்ம லக்னத்திற்கு 4ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று இருந்தால் பலமான வீடு யோகமும் அதிகப்படியான சொத்து யோகமும்  உண்டாகும். 4ம் அதிபதி கேந்திர ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 1,4,7,10 ம் இடத்து அதிபகளுடன் இணைந்து அமையப்பெற்றோ இருந்தாலும், திரிகோண ஸ்தானங்களில் அமைந்தோ அல்லது 5,9 ம் அதிபதிகளின் சேர்க்கை பெற்றோ இருந்தாலும் சுப ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய, 2,11 க்கு அதிபதிகளின் சேர்க்கைப் பெற்றோ இருந்தாலும் சொந்த வீடு யோகம் உண்டாகும்.

4  அதிபதியும், 4ம் வீட்டையும் குரு போன்ற சுபகிரக பார்வை செய்வது நல்லது. 4ம் வீட்டதிபதி பலம் பெறுவது மட்டுமின்றி சுக்கிரனும் பலமாக இருந்தால் சொந்த வீடு யோகம் உண்டாகி, அதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். அது போல பூமி காரகன் செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்று பலமாக 4ல் அல்லது 4 ம் அதிபதியின் சேர்க்கை பெற்றிருந்தால்,  ஒருவருக்கு பூமியோகம் உண்டாவது மட்டுமின்றி பூமியுடன் கூடிய வீட்டை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். அல்லது பூமியை வாங்கி அதில் வீடு கட்டக்கூடிய யோகம் உண்டாகும்.

4ம் வீட்டில் எத்தனை பலமான கிரகங்கள் அமைகின்றதோ, 4ம் அதிபதியுடன் எத்தனை பலமான கிரகங்கள் சேர்க்கை பெறுகின்றதோ, 4ம் வீட்டை எத்தனை பலமான கிரகங்கள் பார்வை செய்கின்றதோ அத்தனை வீடுகள் அமையக் கூடிய யோகம் உண்டாகும்.
வீட்டின் அமைப்பு

ஒருவருக்கு சொந்தவீடு அமையக்கூடிய யோகம் உண்டானாலும், அந்த வீட்டின் அமைப்பு எப்படி இருக்கும் என்பதனையும் 4 ம் பாவத்தின் மூலம் அறியலாம். சிலருக்கு மாட  மாளிகையும், உயரமான கட்டிடங்களில் வசிக்கக்கூடிய யோகமும், சிலருக்கு ஓட்டு வீடு, குடிசை வீடு என அவரவர் 4ம் பாவத்தில் உள்ள கிரகங்களுக்கேற்றவாறு வீடுகள் அமையும்.

பொதுவாக சூரியன், கேது 4ம் வீட்டில் இருந்தால் அமையக்கூடிய வீடானது பார்பதற்கு அழகாக இருந்தாலும் உறுதி தன்மையற்றதாக இருக்கும்.

சந்திரனிருந்தால் அழகான புதிய வீடு அமையும் யோகமும், சுக்கிரன் இருந்தால் மிகவும் அம்சமான வீடும் அமையும்.

குரு இருந்தால் மிகவும் உறுதியான தரமிக்க வீடு அமையும். புதிய வீடும் கட்டக்கூடிய யோகம் உணண்டாகும். 

செவ்வாய் இருந்தால் வீட்டில் விரிசல்கள் உண்டாகக்கூடிய நிலை, சில நேரங்களில் வீட்டிற்கு தீயால் பாதிப்புபள் உண்டாகும்.

சனி, ராகு அமையப்பெற்றாலோ, 4ம் வீட்டையோ, 4ம் அதிபதியையோ, சனி, ராகு பார்த்தாலும் பழைய வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.

யார் மூலம் சொத்து

பூர்வீகச் சொத்து
ஒருவரின் ஜாதகத்தில் 5ம் பாவமானது பூர்வீகத்தைப் பற்றி குறிப்பிடுவதாகும். என்றாலும் பூர்வீக வழியில் அசையா சொத்து யோகம் உண்டாக 4,5க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருந்தாலோ, 4,5 க்கு அதிபதிகள் இணைந்திந்தாலோ, 4,5 க்கு அதிபதிகளிடையே பலமான தொடர்பு ஏற்பட்டிருந்தாலோ பூர்வீக வழியில் வீடு யோகம் உண்டாகும்.


தந்தை,

நவகிரகங்களில் சூரியன் தந்தை காரகனாவார். 9ம் இடம் தந்தை ஸ்தானம் ஆகும். 4,9 க்கு  அதிபதிகள் பலமாக அமைந்து சூரியனும், பலமாக இருந்தால் தந்தை வழியில் அசையாச் சொத்து யோகம் உண்டாகும். 4,9 க்கு அதிபதிகள் பரிவர்த்தனைப் பெற்று இருப்பதும் 4ம் அதிபதி 9ல் 9ம் அதிபதியின் சேர்க்கை பெற்று இருப்பது போன்றவற்றாலும் தந்தை வழியில் அசையாச் சொத்து யோகத்தைக் கொடுக்கும்.

தாய்,

நவகிரகங்களில் தாய் காரகன் சந்திரனாவார். ஒருவர் ஜாதகத்தில் 4ம் அதிபதி பலமாக அமைந்து தாய் காரகன் சந்திரனும் பலமாக இருந்தால் தாய் மூலம் அசையாச் சொத்து யோகம் அமையும்.

உடன் பிறந்தோர்,

நவகிரகங்களில் சகோதரகாரகன் செவ்வாய் ஆவார். ஒருவர்  ஜாதகத்தில் 3,11 க்கு அதிபதிகள் பலமாக அமையப் பெற்றோ, பரிவர்த்தனை பெற்றோ அமைந்து, செவ்வாயும் பலமாக இருந்தால் உடன் பிறந்த சகோதரர்கள் மூலம் பலமான வீடு யோகம் உண்டாகும்.

அதுவே பெண் கிரகங்களான சந்திரன், சுக்கிரன் பலமாக இருந்தால், உடன் பிறந்த
சகோதரிகள் மூலம் வீடு யோகம் உண்டாகும்.


திருமணத்தின் மூலம் சொத்து யோகம்

ஒருவருடைய ஜாதகத்தில் 7ம் பாவம் திருமண வாழ்வு  பற்றி குறிப்பிடுவதாகும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் 4,7 க்கு அதிபதிகள் பலமாக அமையப் பெற்றிருந்து இருவருக்கு மிடையே பலமான தொடர்பு ஏற்பட்டு இருந்தால்  அதாவது பரிவர்த்தனை பெற்றிருந்தாலோ, சேர்க்கைப் பெற்றிருந்தாலோ, பார்வை பெற்றிருந்தாலோ திருமண பந்தத்தின் மூலம் அசையாச் சொத்து அமையும் யோகம் உண்டாகும். அதுமட்டுமின்றி இருவரும் சேர்ந்து கூட்டாக  சொத்துக்கள் வாங்கி மேலும் மேலும் அபிவிருத்தி செய்து கொள்ள முடியும்.

மற்றவர்கள் பெயரில் சொத்து (பினாமி)

பொதுவாக ஒருவரின் ஜனன ஜாதகத்தில் உள்ள பலமான கிரகங்களின் தசாபுத்தி நடைபெறும் காலங்களில்தான் வீடு, மனை, அசையாச் சொத்து யோகம் உண்டாகும். சிலருக்கு 4ம் அதிபதி பலஹீனமாக இருந்தாலோ, நடைபெறக்கூடிய தசா புத்தி  சாதகமற்று இருந்தாலோ, அவர்கள் சம்பாதிக்கக்கூடிய பணத்தைச் சொத்தாக மாற்றக்கூடிய யோகம் இருக்காது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் ஜாகத்தில் எந்த கிரகம் பலமாக அமையப் பெற்றிருக்கின்றதோ, அந்த கிரகத்திற்குரிய நபர்களின் மீது சொத்துக்கள் வாங்கும்போது, அதன்மூலம் அபிவிருத்தி முன்னேற்றம் உண்டாகும்.

சூரியன், குரு போன்ற கிரகங்கள் வலுவாக இருந்தால் தந்தை, குடும்பத்தில் மூத்தவர்கள் பிள்ளைகள் பெயரில் சொத்துக்கள் வாங்குவது சிறப்பைத் தரும்.

செவ்வாய் பலமாக இருந்தால் உடன் பிறந்தவர்கள் பெயரில்  சொத்தும்,

சுக்கிரன், சந்திரன் பலமாக இருந்தால் பெண்கள் பெயரிலும் சொத்துக்கள் வாங்குவது நல்லது.

புதனிருந்தாலும் உறவினர்கள் பெயரிலோ, தொழில் செய்யக்கூடிய நிறுவனத்தின் பெயரிலோ முதலீடு செய்வது  நல்லது.

சனி பலமாக இருந்தால் வேலையாட்களால் பலவிதத்தில் ஆதாயம் அடைவார்கள்.

எப்பொழுது சொத்து அமையும்?

ஒருவருக்கு 4ம் அதிபதி பலம் பெற்று அமைந்திருந்து அதனுடைய  திசை அல்லது புத்தி நடைபெற்றாலும், 4ல் பலமாக அமையப்பெற்ற  கிரகத்தின் திசை அல்லது புத்தி நடைபெற்றாலும், சுக்கிரனின் திசை அல்லது புத்தி நடைபெற்றாலும், அத்துடன் கோட்சார கிரக நிலையும் சாதகமாக இருந்தால் அசையாச் சொத்து யோகம் உண்டாகும்.

சொத்துக்களால் பிரச்சினை

ஒருவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 6ம் பாவமானது கடன், வம்பு, வழக்குகளை குறிக்கக்கூடிய ஸ்தானமாகும். பொதுவாக 6ம் அதிபதி 4 ல் அமைந்திருந்தாலும், 4,6 க்கு அதிபதிகள்  இணைந்து இருந்தாலும், 6ம் அதிபதியின் சாரம் பெற்று 4ம் அதிபதி இருந்தாலும் சொத்துக்களால் பிரச்சினை, வம்பு, வழக்கு, கடன் தொல்லைகள் உண்டாகும்.

வீடு, மனை யோகம் இல்லாத அமைப்பு

ஒருவர் ஜாதகத்தில் 4ம் அதிபதி 6,8,12 ல் மறைவுப் பெற்றிருந்தாலும், பாதக ஸ்தானத்தில் அமையப் பெற்றிருந்தாலும், சனி போன்ற பாவகிரகங்கள் பார்வை செய்தாலும் சொந்தவீடு அமைய தடை உண்டாகும். 4ம் அதிபதி நீசம், அஸ்தங்கம், பாவிகளின் சேர்க்கைப் பெற்றிருந்தால் வீடு, அசையா சொத்துக்கள் அமையாது.

வண்டி, வாகனம் யோகம்

நடைமுறை வாழ்க்கையே மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் எல்லாமே அவசர கதியில் நடைபெறுகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் நடந்து செல்வதற்கு யாரும் விரும்புவதில்லை. இருசக்கர வாகனங்களையோ, நான்கு சக்கர வாகனங்களையோதான் பயன்படுத்துகிறார்கள். நடந்து செல்வதற்கு பாதைகள் இல்லை என்பது வேறு விஷயம் என்றாலும் வண்டி, வாகனங்களை பயன்படுத்துவதை பேஷனாகவும், பெருமையாகவும் நினைக்கிறார்கள். செல்ல வேண்டிய இடத்திற்குக் குறிப்பிட்ட நேரத்தில் செல்வதற்கும் பணிகளை எளிதாக முடிப்பதற்கும், அலைச்சலைக் குறைப்பதற்கும் சொந்தமாக வண்டி, வாகனங்களைப் பயன்படுத்துவது எளிய முறையாக உள்ளது.  இப்படி சொந்தமாக  வண்டி, வாகனங்களைப் பயன்படுத்துவது என்பது எல்லோருக்குமே அமைந்து விடுவதில்லை. அதற்கு ஜோதிட ரீதியாக 4ம் பாவம் பலம் பெற்றிருக்க வேண்டும். எந்தெந்த  கிரகங்களின் சேர்க்கையால் சொந்த வண்டி, வாகன யோகம் உண்டாகும் என்று பார்ப்போமா?

நவகிரகங்களில் வண்டி, வாகன காரகன் சுக்கிரனாவார். ஒருவரது ஜாதகத்தில் 4 பாவமும், சுக்கிரனும் பலம் பெற்றால் வண்டி, வாகன யோகம் சிறப்பாக அமையும்.

4ம் அதிபதி லக்னாதிபதி சந்திரன் இணைந்து கேந்திர திரிகோணங்களில் இருந்தால் நான்கு சக்கர வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

இத்துடன் சுக்கிரனும் இணைந்து பலமாக அமையப் பெற்றால் சொகுசான நான்கு சக்கர வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

4,9 க்கு அதிபதிகள் இணைந்து உடன் குரு, சுக்கிரன் சேர்க்கை பெற்று சந்திரனும் பலம் பெற்றிருந்தால் நான்கு சக்கரம் வாங்கும் யோகம், மதிப்பு மிக்க உயர்பதவிகளால் அரசாங்க வாகனங்களை பயன்படுத்தும் யோகம் உண்டாகும்.

அது போல 4ம் அதிபதி 9,10 க்கு அதிபதிகளுடன் பரிவர்த்தனைப் பெற்று குரு பார்வைப் பெற்றால் உயர்ரக வாகன யோகம் உண்டாகும்.  4,9 க்கு அதிபதிகள் இணைந்து கேந்திர திரிகோணங்களில் நட்பு வீட்டில் அமைந்து சுபர் பார்வையுடன் இருந்தால் ஜாதகருக்கு வலிமையான வாகன யோகம் உண்டாவது மட்டுமின்றி செல்வம், செல்வாக்கு உயரும்.

4ம் அதிபதியும் சுக்கிரனும் சுபர் பார்வையுடன் வலுவாக இருந்தால் வலிமையான வண்டி, வாகன யோகம் உண்டாகும். அதுவே பாவிகள் பார்வையுடனிருந்தால் வாகனங்கள் அமைந்தாலும் அனுபவிக்கமுடியாத அளவிற்கு இடையூறுகள், நாளடைவில் பழுதடையக்கூடிய நிலை உண்டாகும்.

4 ம் அதிபதி சந்திரன் அல்லது சுக்கிரனுடன் இருந்து கேந்திர, திரிகோணங்களிலோ அல்லது 2,11 லிலோ இருந்தால் பலவகையில் வாகன யோகம் உண்டாகும்.

4ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும் அம்சத்தில் ஆட்சி உச்சம் பெற்றாலும் வாகன யோகம் உண்டாகும்.

ஜென்ம லக்னத்தில் 4ம் அதிபதி அமையப் பெற்று குருபார்வைப் பெற்றால் வலிமையான வாகன யோகம் உண்டாகும்.

4 ம்  அதிபதி பகை பெற்றாலோ, நீசம் பெற்றாலோ 6,8,12 ல் மறைந்திருந்தாலோ ஜாதகருக்கு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் வாகனங்கள் வாங்க இடையூறுகள் உண்டாகும்.

அது மட்டுமின்றி வாகனங்களை அனுபவிக்கவும் தடைகள் ஏற்படும். அது போல  சுக்கிரன் நீசம் பெற்றாலும் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்று சுபர் பார்வையில்லாமலிருந்தால் வாகனங்கள் அமைய இடையூறுகள்,
அப்படி அமைந்தாலும் அதன் மூலம் விபத்துக்களை எதிர்கொள்ளக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

4 ம் அதிபதி வலுவாக அமையப்பெற்று உடன் புதன் பலமாக இருந்தால் வாகன யோகம் உண்டாகும்.

4ம் அதிபதிக்கும் சுக்கிரனுக்கும் சனியின் சம்மந்தமிருந்தால் புதிய  வாகனத்தை வாங்குவதைவிட  பழைய வாகனங்களை வாங்கி புதுப்பித்து அனுபவிக்கக்கூடிய யோகம் உண்டாகும். 

அதுபோல 4ம் இடம் சனியின் வீடாக இருந்தாலும். சனியின் ராசியில் பிறந்தவர்களுக்கும், சனி திசை நடைபெறுவபவர்களுக்கும் பழைய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

பொதுவாக 4ம் அதிபதியின் திசை அல்லது புத்தியிலோ, சந்திரன், சுக்கிரனின் திசை அல்லது புத்தியிலோ 4ல் அமையக்கூடிய கிரகங்களின் திசை அல்லது புத்தியிலோ பலமான வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 

அது போல 4ம் அதிபதியும், சுக்கிரனும் அமைந்துள்ள வீட்டிற்கு திரிகோணத்தில் குரு கோட்சாரத்தில் வரும் போது வாகன யோகம் உண்டாகும்.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001



No comments: