Friday, April 21, 2023

குரு பெயர்ச்சி பலன் 2023 – 2024 தனுசு


 குரு பெயர்ச்சி பலன் 2023 – 2024

தனுசு ( மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி குரு பகவான் வரும் 22.04.2023 முதல் 01.05.2024 வரை பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது மிகவும் உன்னதமான அமைப்பாகும். உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி ஆட்சி பெற்று சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு இருக்கக்கூடிய கடன்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். கடந்த கால சோதனைகள் எல்லாம் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சியும், மன நிம்மதியும் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூட கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு.

5-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் குருபகவான் ஜென்ம ராசி, 9, 11-ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் உங்களது உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் தந்தை வழியில் அனுகூலங்கள், பெரிய மனிதர்களின் ஆதரவு, அதிகப்படியான பண வரவுகள் கிடைக்கும் வாய்ப்புகள் வருகின்ற நாட்களில் உண்டு. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியமும் மிக மிக நன்றாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் அதிகரிக்கும். உங்களுக்கு இருந்த வம்பு வழக்குகளில் எல்லாம் ஒரு முடிவு கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடப்பது மட்டுமில்லாமல் நல்ல லாபத்தையும் தரும். உங்களின் நீண்ட நாளைய கனவுகள் எல்லாம் கூட வருகின்ற நாட்களில் நிறைவேறி தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கும். கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் வருகின்ற நாட்களில் விடிவுகாலம் பிறந்து உங்களின் பொருளாதார நிலை மேம்படும். நீண்ட நாட்களாக உங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள் எல்லாம் தற்போது கிடைத்து அனைத்து பிரச்சனைகளும் குறையும். வீடு, மனை வாங்க வேண்டும் என்ற உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகும். வெளியூர், வெளிநாடு தொடர்புகளால் கூட அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

இந்த தருணத்தில் சர்ப்ப கிரகமான ராகு 5-ல், கேது 11-ல் 30.10.2023 வரை சஞ்சாரம் செய்கின்றனர். அதன் பின்னர் 4-ல் ராகு, 10-ல் கேது என சஞ்சரிக்க உள்ளனர். உணவு விஷயத்தில் மட்டும் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. குரு, சனி சாதக சஞ்சாரத்தால் எல்லா வகையிலும் ஏற்ற மிகுந்த பலன்களை வரும் நாட்களில் அடைவீர்கள்.

 

உடல் ஆரோக்கியம் 

உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். செய்யும் பணிகளை ஒழுங்காக செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் மனைவி, பிள்ளைகள் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். நெருங்கியவர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருந்து மகிழ்ச்சியை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள் கிடைப்பதால் நிம்மதி நிலவும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.

குடும்பம் பொருளாதார நிலை   

குடும்பத்தின் பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும். இதுநாள் வரை தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் எளிதில் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும். கடந்த கால கடன்கள் படிப்படியாக குறைந்து சேமிக்க முடியும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

கமிஷன் ஏஜென்ஸி 

கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றத் துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருப்பதால் கொடுத்த கடன்களை திரும்பப் பெற முடியும். பெரிய மனிதர்களின் நட்புகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தற்போது உள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.

தொழில் வியாபாரம் 

தொழில், வியாபார ரீதியாக சந்தை சூழ்நிலை மிகவும் சாதகமாக மாறுவதால் நல்ல லாபம் கிடைக்கும். பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி வெற்றி காண்பீர்கள். அரசு வழியில் ஆதரவு கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் அனுகூலம் கிட்டும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் சாதகமாக நடப்பதால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.

உத்தியோகம்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறைந்து மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். திறமைகளை வெளிப்படுத்தி நற்பெயரை எடுக்க முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுக்கள் மனதிற்கு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். எதிர்பார்த்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும்.

அரசியல்

அரசியல்வாதிகளுக்கு மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளை எளிதில் பெற முடியும். பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். உடனிருப்பவர்களால் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேர்ந்தாலும் மறைமுக வருவாய்கள் பெருகும். அடிக்கடி வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு அமையும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய நவீன கருவிகளை வாங்க முடியும். விளை நிலங்களை வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துகள் வகையில் இருந்த தீர்க்க முடியாத சிக்கல்கள் தற்போது உங்களுக்கு சாதகமாக முடியும். கால்நடைகளால் ஓரளவுக்கு லாபத்தினைப் பெறமுடியும். காய்கனி போன்றவற்றால் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் தேடிவரும். குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் அனுகூலப் பலனை ஏற்படுத்தும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். பொன்பொருள் சேரும்.

மாணவ- மாணவியர்

கல்வி பயிலுபவர்களுக்கு கல்வியில் நல்ல ஈடுபாடு அதிகரிக்கும். ஞாபக சக்தி திறனும் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். நல்ல நடப்புகளாலும் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும்.

 

அஸ்வினி நட்சத்திரத்தில்                       22-04-2023 முதல் 21-06-2023 வரை

ராசி அதிபதி குரு 5-ல் அஸ்வினி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைக்கூடும். அலைச்சல், டென்ஷன், பிரச்சினைகள் எல்லாம் குறைந்து மன அமைதி ஏற்படும், சனி 3-ல் இருப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, உங்களுக்குள்ள கடன்கள் எல்லாம் குறைந்து மனமகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் வெற்றி மேல் வெற்றி கிடைப்பது மட்டுமில்லாமல் தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். தொழிலுக்காக நவீன கருவிகளை வாங்கக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வேலையாட்கள் வைத்த கோரிக்கைகளை தற்போது நிறைவேற்ற முடியும். வெளியாட்களால் இருந்த இடையூறுகள் எல்லாம் தற்போது விலகி தொழிலில் வளர்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது விடிவுகாலம் பிறக்கப் போகிறது. உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு வேலையில் மாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்துடன் இணைந்து வாழக்கூடிய அமைப்பு ஏற்படும். அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

குரு பகவான் பரணி நட்சத்திரத்தில்                           22-06-2023 முதல் 04-09-2023 வரை.

குரு பகவான் சுக்கிரன் நட்சத்திரமான பரணியில் 5-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, நீண்ட நாளைய கனவுகள் நிறைவேற கூடிய யோகம் உண்டு. கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமண வயது அடைந்தவர்களுக்கு மங்கள நிகழ்வுகள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து குடும்பத்துக்கு தேவையான நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய யோகங்கள் உண்டு. பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். வெளியூர், வெளிநாடுகள் மூலம் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை விட அதிகப்படியான லாபங்களை அடைய முடியும். அரசு வழியில் எதிர்பார்த்த உத்தரவுகள் கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். வேலையாட்கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதையும் எளிதில் செய்து முடிக்க முடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பமும், உங்களுடைய கனவுகள் நிறைவேற கூடிய ஒரு அதிர்ஷ்டங்களும் வரும் நாட்களில் உண்டு. பிரித்தியங்கரா தேவி வழிபாடு நன்மை தரும்.

குரு பகவான் வக்ரகதியில்                                     05-09-2023 முதல் 30-12-2023 வரை.

குரு 5-ல் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணப்பரிமாற்ற விஷயங்களில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். எந்த செயலிலும் யோசித்து செயல்பட்டால் ஏற்றங்களை அடைய முடியும். சனி 3-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உங்களுக்கு இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலையாட்களால் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்படலாம். தொழில் விஷயங்களை வெளி நபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களை தற்காலிகமாக தள்ளி வைப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் இருக்கும் என்றாலும் உடன் வேலை செய்பவர்கள் உங்கள் மீது வீண் பழிச் சொற்களை சொல்வார்கள். உங்கள் பணியில் மட்டும் நீங்கள் கவனத்தோடு இருந்தால் விரைவில் ஒரு நல்ல நிலையை அடைய முடியும். பிள்ளைகள் வழியில் தேவையற்ற கவலைகள் ஏற்படலாம் என்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதன் மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.

குரு பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில்                 31-12-2023 முதல் 03-02-2024 வரை.

ராசி அதிபதி குரு 5-ல் அஸ்வினி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், சனி 3-ல் இருப்பதாலும் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிப்பது மட்டுமில்லாமல் மங்கள நிகழ்வுகள் கைகூடும். உடல் ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பூர்வீக சொத்து வகையில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள முடியும். தொழில் ரீதியான போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் விலகி எதிர்பார்த்த வாய்ப்புகளை பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் டெலிவரி செய்ய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை, எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. அதிகாரியிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் முழுமையாக விலகும். படித்து முடித்த மாணவ மாணவியர்களுக்கு பெரிய இடத்திலிருந்து நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். அம்மன் வழிபாடு, துர்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.

குரு பகவான் பரணி நட்சத்திரத்தில்                           04-02-2024 முதல் 16-04-2024 வரை.

குரு பகவான் பரணி நட்சத்திரத்தில் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் உயர்வான நிலையினை அடைவீர்கள். சனி 3-ல் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்கள் அனைத்தும் வெற்றி அடையும். பணவரவுகள் மிக மிக நன்றாக இருந்து கடன்களைப் பைசல் செய்வது மட்டுமில்லாமல் அசையா சொத்துகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ராகு 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட்டாலும் சகல விதத்திலும் அணுகூலமான பலன்களை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு உயர்வான நிலையை எட்டுவீர்கள். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் ஈடுபட்டு அதன் மூலம் நல்ல லாபங்களை ஈட்ட முடியும். கூட்டாளிகள் மூலமாக அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் விலகி மன மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் லாபகரமான பலன்களும் உண்டாகும். பெண்கள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். விநாயகர் வழிபாடு வாழ்க்கையை வளமாக்கும்.

குரு பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில்            17-04-2024 முதல் 01-05-2024 வரை.

குரு சூரியன் நட்சத்திரமான கிருத்திகையில் 5-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிக மிக நன்றாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். பெரியவர்களின் ஆசி சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக தீராமல் இருந்த பிரச்சினைகளுக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். தொழில் ரீதியாக சமுதாயத்தில் ஒரு உயர்வான நிலையை எட்டுவீர்கள். உங்களிடம் பகைமை பாராட்டியவர்கள் கூட தற்போது நட்புடன் பழகுவார்கள். சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக அமைந்து உங்களின் கடந்த கால உழைப்புக்கு தற்போது அனுகூலமான பலன்கள் கிடைக்கும் யோகம் ஏற்படும். தகுதி வாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த வெளி உதவிகளை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். அதிகாரிகள் ஆதரவு மிக மிக நன்றாக இருக்கும். உங்கள் உழைப்புக்கான பலனை எளிதில் அடைவீர்கள். உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பாம்பு புற்றுக்கு பால் விடுவது, விநாயகரை தரிசிப்பது நல்லது.

 

பரிகாரம்

தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 5-ல் ராகு வரும் 30.10.2023 முடிய சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9          நிறம் - மஞ்சள், பச்சை              கிழமை - வியாழன், திங்கள்

கல் - புஷ்ப ராகம்   திசை - வடகிழக்கு                      தெய்வம் - தட்சிணா மூர்த்தி

No comments: