Friday, April 21, 2023

குரு பெயர்ச்சி பலன் 2023 – 2024 கன்னி

 


குரு
பெயர்ச்சி பலன் 2023 – 2024

கன்னி ( உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள் )

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி உடையவராகவும், சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பி விடுபவராகவும் விளங்கும் கன்னி ராசி நேயர்களே, புதனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4, 7-க்கு அதிபதியான குரு பகவான் வரும் 22.04.2023 முதல் 01.05.2024 வரை உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். சர்ப்ப கிரகமான கேது 2-லும் ராகு 8-லும் வரும் 30.10.2023 முடியவும் அதன் பின் ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு எனவும் சஞ்சாரம் செய்ய உள்ளனர். கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, உணர்ச்சிவசப்படாமல் எதிலும் சற்று நிதானத்தோடு இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வதும், உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பதும் நல்லது.

குரு 8-ல் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதார ரீதியாக ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்றாலும் உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 6-ஆம் வீட்டில் சனி வலுவாக சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொண்டு சிக்கனத்தோடு இருந்தால் எதையும் எதிர்கொண்டு அனுகூலமான பலன்களை அடைய முடியும். அசையும், அசையா சொத்து வகையில் எதிர்பாராத சுபச் செலவுகளை எதிர்கொள்வீர்கள்.

குரு தனது சிறப்பு பார்வையாக 2, 4, 12-ஆகிய ஸ்தானங்களை பார்வை செய்ய இருப்பதால் எந்த பிரச்சினையையும் நீங்கள் உங்கள் தனித் திறமையால் எளிதில் கையாண்டு அனுகூலங்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் திறமையோடு செயல்பட்டு நல்ல லாபங்களை அடையக்கூடிய வாய்ப்பு உண்டாகும். தொழில் ரீதியாக மறைமுக போட்டிகள் அதிகரித்தாலும் நீங்கள் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது. சில நேரங்களில் பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அதன் மூலம் பொருளாதார அனுகூலத்தை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை காரணமாக உங்களது ஓய்வு நேரம் குறையும் என்றாலும் உங்கள் உழைப்புக்கான ஊதியங்களை பெற முடியும். வெளியூர், வெளிமாநிலங்களில் பணிபுரியக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு ஒரு சிலருக்கு குடும்பத்தை விட்டு வெளியில் சென்று சிறிது காலம் தங்க வேண்டிய ஒரு சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் எந்தவித நெருக்கடியும் சமாளிக்க முடியும். குரு 8-ல் சஞ்சரிக்கும் இந்த காலத்தில் சனி பகவான் 6-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக சாதகமான நிலை, எதையும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு யோகம் ஏற்படும். ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து செயல்பட்டால் அடைய வேண்டிய ஆதாயங்களை அடைய முடியும்.

 

உடல் ஆரோக்கியம் 

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அலைச்சல், உடல் சோர்வு இருந்தாலும் எதையும் சமாளித்து சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களால் மன நிம்மதி குறைவு, தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படும் என்பதால் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. உடற்பயிற்சி செய்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது மிகவும் நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை   

குடும்பத்தில் நிம்மதி குறைவு, கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடு உண்டாகும் நேரம் என்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் தங்கள் பங்கிற்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். நல்லதே செய்தாலும் அவற்றால் வீண் அவபெயர் தான் வரும். சனி 6-ல் வலுவாக சஞ்சரிப்பதால் பணவரவுகள் சாதகமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். சிலருக்கு எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை உண்டாகும். முடிந்தவரை அனைவரையும் அனுசரித்து செல்ல பழகி கொள்வது நல்லது.

கமிஷன்- ஏஜென்ஸி 

கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றத் துறைகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபங்கள் சிறு தடைக்கு பின்பு கிடைக்கும். பணவிஷயத்தில் மிகவும் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே அடைய வேண்டிய லாபத்தை அடைய முடியும். பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுத்தால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். ஏற்றுமதி இறக்குமதி தொடர்புடைய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அனுகூலங்கள் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் 

தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். வங்கி கடன்களை தக்க நேரத்தில் திருப்பி செலுத்தி விடுவீர்கள். போட்டி இருந்தாலும் உங்களுக்கு வரவேண்டிய வாய்ப்புகள் தக்க நேரத்தில் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது உயர்வான நிலையை அடைவீர்கள். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் எதிர்பாராத உதவிகளும், லாபங்களும் கிடைக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும்.

உத்தியோகம் 

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயரதிகாரிகளால் நிம்மதி குறையும். எந்த வேலை செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிப்பதே அவர்களின் வேலையாக இருக்கும். தேவையற்ற வீண் பழிச்சொற்களை சுமக்க வேண்டியிருப்பதால் பணியில் நிம்மதி குறையும். சிலருக்கு வெளியூர் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். உங்கள் உழைப்பிற்கான பலனை அடைவீர்கள். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சற்று சாதகமாக இருந்து வேலைபளு குறையும். நெருங்கியவர்களின் உதவியால் எதையும் சமாளிக்கும் திறன் உண்டாகும்.

அரசியல் 

அரசியல்வாதிகள் எதிலும் நிதானத்தை கடைப்பிடித்தால் மட்டுமே பதவிகளை தக்கவைத்துக் கொள்ள முடியும். தலைவர்களிடம் பேசும் போது சற்று நிதானமாக பேசுவது மூலம் நற்பலனை அடைய முடியும். மக்களின் தேவையறிந்து அவற்றை நிறைவேற்றினால் மட்டுமே அவர்களின் ஆதரவை தொடர்ந்து பெற முடியும். மேடை பேச்சுகளில் வேகத்தை குறைப்பது நல்லது. கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டிவரும்.

விவசாயிகள் 

பயிர் விளைச்சல் சுமாராக இருந்தாலும் போட்ட முதலை எடுத்து விட முடியும். புழு பூச்சிகளின் தொல்லை மற்றும் நீர்வரத்து குறைவு போன்றவற்றால் எதிர்பார்த்த மகசூலைப் பெற முடியாது. பட்டபாட்டிற்கான பலனை அடைந்து ஒரளவுக்கு கடனை அடைக்க முடியும். பங்காளிகளிடம் தேவையற்ற கருத்து வேறுபாடு ஏற்படும். கால்நடைகளுக்கு நோய்கள் ஏற்படுவதால் எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் தட்டிப்போகும் என்றாலும் கடின முயற்சிக்கு பின் சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புத்திரர்களால் சுப செலவுகள் உண்டாகும். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது உத்தமம். சேமிப்புகள் குறையும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் மந்தநிலை, ஞாபகமறதி ஏற்படும். உடல்நிலை பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடுவதால் தகுந்த பாடங்களைப் படிக்க முடியாமல் போகும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை வேறு பாதைக்கு அழைத்து செல்லும் என்பதால் எதிலும் கவனம் தேவை. தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்தால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.

 

அஸ்வினி நட்சத்திரத்தில்                       22-04-2023 முதல் 21-06-2023 வரை

குரு பகவான் கேது நட்சத்திரமான அஸ்வினியில் உங்கள் ராசிக்கு 8-ல் ராகு சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் நீங்கள் நிதானத்தோடு செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். பண பரிமாற்ற விஷயங்களில் மிகவும் கவனத்தோடு செயல்படுவது, உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. அலர்ஜி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருக்கவும். உங்கள் ராசிக்கு 6-ல் சனி சஞ்சரிப்பதால் பணவரவுக்கு எந்த விதத்திலும் குறை இருக்காது. தொழில், வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைய கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்களை நம்பாமல் எதிலும் நீங்கள் நேரடியாக செயல்பட்டால் பிரச்சினைகளை எதிர்கொண்டு அனுகூலங்களை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு காரணமாக உடல் அசதிகள் உண்டானாலும் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பொருளாதார ஆதாயத்திற்கு எந்த விதத்திலும் குறை இருக்காது. ஒரு சிலருக்கு தேவையற்ற பயணங்கள் உண்டாகும். வெளிநபர்களிடம் சற்று பக்குவமாக பழகுவது நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றுவது நன்று.

குரு பகவான் பரணி நட்சத்திரத்தில்                           22-06-2023 முதல் 04-09-2023 வரை.

குரு சுக்கிர நட்சத்திரமான பரணியில் 8-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. சனி 6-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் சாதகமாக இருந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படலாம். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது உத்தமம். நம்பியவர்களே உங்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். பேச்சில் பொறுமையோடு இருக்க வேண்டும். குடும்ப விஷயங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் அடைய வேண்டிய லாபங்களை நீங்கள் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு மற்றவர்கள் பணியை நீங்கள் சேர்த்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான சூழ்நிலை இருந்தாலும் உங்களுக்கு கிடைக்க வேண்டிய சன்மானங்களுக்கு எந்த விதத்திலும் குறை இருக்காது. அதிகாரியிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருந்தால் நல்ல நிலையினை அடைய முடியும். வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு அர்ச்சனை செய்வது, பாம்பு புற்றுக்கு பால் விடுவது நன்று.

குரு பகவான் வக்ரகதியில்                                     05-09-2023 முதல் 30-12-2023 வரை.

குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து ஏற்ற மிகுந்த பலன்களை பெறுவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மனைவி, பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து போட்ட முதலை எடுக்க முடியும். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு எளிதில் கிடைத்து மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள் மூலமாக அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். சனி 6-ல் இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் வேலைபளு குறைய கூடிய ஒரு சூழ்நிலையும் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய யோகமும் உண்டாகும். கணவன்- மனைவி இடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. துர்க்கைக்கு தீபம் ஏற்றுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நன்று.

குரு பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில்                 31-12-2023 முதல் 03-02-2024 வரை.

குரு கேது நட்சத்திரமான அஸ்வினியில் 8-ல் சஞ்சரிப்பதாலும், ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதாலும் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஒன்றுமே இல்லாத விஷயத்துக்கு கூட குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள், எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாக கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நேரம் என்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. சனி பகவான் உங்கள் ராசிக்கு 6-ல் வலுவாக சஞ்சரிப்பதால் பண வரவுக்கு எந்த விதத்திலும் குறையில்லாமல் உங்களின் அனைத்து குடும்ப தேவைகளும் பூர்த்தியாகும் என்றாலும் எதிலும் சிக்கனத்துடன் இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் வேலையாட்களால் சிறு சிறு நெருக்கடி இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளித்து நல்ல லாபத்தை அடைவீர்கள். தொழில் விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய பலம் இருந்தாலும் வேலை பளு காரணமாக உடல் அசதிகள் உண்டாகும். உக்கிர தெய்வங்களை வழிபடுவது, குரு பகவானுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

குரு பகவான் பரணி       நட்சத்திரத்தில்                    04-02-2024 முதல் 16-04-2024 வரை.

குரு பகவான் பரணி நட்சத்திரத்தில் 8-ல் சஞ்சரிப்பதாலும், ராகு 7-ல் சஞ்சரிப்பதாலும் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பண பரிமாற்ற விஷயங்களில் சிக்கனத்தோடு இருப்பது உத்தமம். கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் சனி 6-ல் இருப்பதால் எதிர்பாராத தனவரவுகள் ஏற்பட்டு நல்ல லாபத்தை அடையும் வாய்ப்பு, போட்ட முதலை எடுத்து விடக்கூடிய பலம் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் மறைந்து அனுகூலம் உண்டாகும். உங்களிடம் பகைமை பாராட்டியவர்கள் கூட நட்புடன் பழகுவார்கள். உங்களுக்கு இருந்த வம்பு, வழக்குகள் எல்லாம் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரியுடைய கெடுபிடிகள் அதிகப்படியாக இருந்தாலும் நீங்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பணியில் சகஜமாக செயல்பட உடல் ஆரோக்கியம் சிறிதளவு தடையாக இருக்கும். நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும். துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் அர்ச்சனை செய்வது நல்லது.

குரு பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில்            17-04-2024 முதல் 01-05-2024 வரை.

குரு சூரியன் நட்சத்திரமான கிருத்திகையில் 8-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நீங்கள் கவனத்தோடு செயல்படுவது நல்லது. ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உங்களது அன்றாட செயல்களில் தேவையற்ற தடங்கல்கள் ஏற்பட்டாலும் சனி பகவான் 6-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சிறப்பாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். பொருளாதார நிலை மிக திருப்திகரமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் அனைத்திலும் சிறப்பாக செயல்பட கூடிய வாய்ப்புகள் உண்டு. சிறு சிறு சட்ட சிக்கல்கள் ஏற்படும் என்றாலும் அதனை உங்கள் தனித்திறமையால் எதையும் சமாளித்து விடுவீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைபளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். பிறர் சொல்வதைக் கேட்காமல் உங்கள் பணியில் நீங்கள் கவனத்தோடு செயல்பட்டால் விரைவில் ஒரு பெரிய மாற்றம் உண்டாகும். உங்கள் உழைப்புக்கான பலனை அடைய முடியும். நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள். குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

 

பரிகாரம்

கன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு 8-ல் சஞ்சரிப்பதால் குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி கொண்டை கடலை மாலை சாற்றுவது, வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது, குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்வது, ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது உத்தமம். மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிற பூக்களை அணிவது நல்லது.

சர்பகிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சரபேஸ்வரரை வழிபடுவது, சிவன் மற்றும் பைரவரை வணங்குவது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது உத்தமம்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,7,8                   நிறம் - பச்சை, நீலம்           கிழமை - புதன், சனி

கல் -  மரகத பச்சை                              திசை - வடக்கு          தெய்வம் - ஸ்ரீவிஷ்ணு

No comments: