Friday, April 21, 2023

குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 மேஷம்


 குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024

 மேஷம் ( அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் )

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

 

தன்னிடத்தில் அன்பும், பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே,          இது நாள் வரை உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரித்த பொன்னவன் என போற்றப்படக்கூடிய குருபகவான் வரும் 22.04.2023 முதல் 01.05.2024 வரை ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இந்த தருணத்தில் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சனி ஆட்சி பெற்று சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். கடந்த கால வீண் செலவுகள் குறைந்து சேமிக்க கூடிய அளவிற்கு பண வரவுகள் சிறப்பாக இருக்கும்.

உங்களது உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்த கால கடன்கள் படிப்படியாக குறையும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்க கூடிய குரு பகவான் தனது சிறப்பு பார்வையாக 5, 7, 9 ஆகிய வீடுகளை பார்ப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். பூர்வீக சொத்து வகையில் முடியாத பிரச்சினைகள் எல்லாம் தற்போது ஒரு முடிவுக்கு வரும். பல்வேறு பொது காரியங்களில் ஈடுபடக்கூடிய ஒரு வாய்ப்பு உண்டாகும். அசையும், அசையா சொத்து வகையில் சுபச் செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானத்தோடு செயல்பட்டால் நல்ல லாபத்தை அடைய முடியும்.

தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் படிப்படியான வளர்ச்சியையும் அடைவீர்கள். தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பமும், எதிர்பார்த்த பதவி உயர்வுகளும் கிடைக்கும். விரும்பிய இடமாற்றங்களை விரைவில் பெற்று குடும்பத்துடன் இணையக்கூடிய ஒரு உன்னதமான நிலை உண்டாகும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் குறையும். சர்ப கிரகமான ராகு ஜென்ம ராசியிலும், கேது 7-ஆம் வீட்டிலும் அக்டோபர் 2023 முடிய சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சில நேரங்களில் உங்களுடைய முன்கோபத்தால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். பொறுமையோடு செயல்பட்டால் சிக்கல்களை சமாளிக்க முடியும். 30.10.2023-க்கு பிறகு கேது 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்தது உங்களுடைய பலத்தை அதிகரிக்க கூடிய அமைப்பாகும்.

 

உடல் ஆரோக்கியம் 

உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மனைவி மற்றும் நெருங்கியவர்களால் எதிர்பாராத வகையில் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உங்களுக்கிருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி விரோதிகள் கூட நண்பர்களாக செயல்படுவதால் மனநிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். மற்றவர்களின் உதவிகள் தடையின்றி கிடைத்து எதிலும் வெற்றி பெறுவீர்கள்.

குடும்பம் பொருளாதார நிலை 

குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சனி 11-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையானது மிகவும் நன்றாக இருந்து குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதில் சிந்தித்து செயல்படவும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உற்றார் உறவினர்களிடம் சற்று விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் உண்டாவதை தவிர்க்கலாம்.

கமிஷன் ஏஜென்ஸி 

குருபகவான் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்வதால் பணவிஷயங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. சனி 11-ல் இருப்பதால் கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றத் துறைகளில் இருப்போருக்கு நல்ல லாபம் கிடைக்கும். முடிந்தவரை பெரிய முதலீடுகளில் கவனமாக செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும்.

தொழில் வியாபாரம் 

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி ஓடும். எதிர்பார்த்த லாபங்களும், புதிய வாய்ப்புகளும் சற்று தாமதப்பட்டாலும் கிடைக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பயணங்களால் அனுகூலம் கிட்டும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து விடக்கூடிய ஆற்றல் உண்டாகும். அரசு மூலம் எதிர்பார்த்த உத்தரவுகளை பெற முடியும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, ஊதிய உயர்வுகள் போன்ற யாவும் தடையின்றி கிட்டும். பணியில் நிம்மதியான நிலையிருக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களும் கிடைப்பதால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும், ஆதரவும் சிறப்பாக இருக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். உடன் பணிபுரிபவர்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவதால் வேலைபளு குறையும்.

அரசியல்

அரசியல்வாதிகள் பதவிகளை தக்கவைத்துக் கொள்ள மக்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேரிட்டாலும் பொருளாதார நிலை சிறப்பாக அமையும். உடனிருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

விவசாயிகள்

விவசாயிகள் பட்டபாட்டிற்கான பலனை தற்போது அடைந்து விடுவார்கள். விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் சந்தையில் விளைபொருளுக்கேற்ற விலையினைப் பெற சிறு சிறு தடைகள் ஏற்படும்கால்நடைகளால் ஓரளவுக்கு அனுகூலங்கள் உண்டு. புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த நற்பலன் கிடைத்து மன நிம்மதி ஏற்படும்.

பெண்கள்

குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. முடிந்தவரை குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைகேற்ற படியிருந்தாலும் ஆடம்பரமாக செலவுகள் செய்வதை தவிர்த்து விட்டால் கடன்கள் ஏற்படுவதையும் குறைக்கலாம். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வுகளும் நடைபெறும். பணிபுரிபவர்களுக்கும் உயர்வுகள் ஏற்படும்.

மாணவ- மாணவியர்

கல்வி பயிலுபவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைத்து மகிழ்ச்சியடைவார்கள். பெற்றோர், ஆசிரியர்களின் அன்பும், ஆதரவும் மேலும் மேலும் உற்சாகத்தை அளிக்கும். உல்லாசப் பயணங்கள் செல்லும் வாய்ப்புகள் கிட்டும். தேவையற்ற நட்புகள் விலகி நல்ல நண்பர்களின் நட்பு மகிழ்ச்சி தரும். அரசு வழியில் ஆதரவுகள் கிடைக்கும்.

 

அஸ்வினி நட்சத்திரத்தில்                       22-04-2023 முதல் 21-06-2023 வரை

குரு பகவான் ஜென்ம ராசியில் கேது நட்சத்திரமான அஸ்வினியில் ராகு சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் நீங்கள் பொறுமையோடு செயல்பட்டால் ஏற்ற மிகுந்த பலன்களை அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சனி லாப ஸ்தானத்தில் இருப்பதால் பணப்பரிமாற்ற விஷயங்களில் ஆதாயங்களை அடைய முடியும் என்றாலும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால் நல்ல லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கூட்டாளிகளை அனுசரித்து செல்வது, வேலையாட்களை பக்குவமாக கையாள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் செய்யும் பணியில் கவனத்துடன் இருப்பது, அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது உத்தமம். உடல்நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. கடந்த கால கடன் பிரச்சினைகள் குறைந்து மன அமைதி உண்டாகும். வெளியூர் தொடர்புகள் மூலம் ஆதாயங்களை அடைவீர்கள். துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது நல்லது.

குரு பகவான் பரணி நட்சத்திரத்தில்                           22-06-2023 முதல் 04-09-2023 வரை.

குரு பகவான் ஜென்ம ராசியில் சுக்கிரன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். பணவரவுகள் எதிர்பார்த்ததை விட சற்று சிறப்பாக இருந்து உங்கள் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பரத்தை சற்று குறைத்துக் கொள்வது, அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் கைகூடக்கூடிய அமைப்பு, பெண்கள் வழியில் அனுகூலங்கள் கிடைக்கும். ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதால் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையோடு செயல்பட்டால் வளமான பலன்களை பெற முடியும். உற்றார் உறவினர் வகையில் இருந்து வந்த கடந்த கால சோதனைகள் எல்லாம் விலகி அனுகூலங்களை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் உங்களின் தனித் திறமையால் எதையும் சமாளித்து அடைய வேண்டிய அனுகூலங்களை அடைய முடியும். சனி பகவான் 11-ல் இருப்பதால் பல்வேறு வளமான பலன்களை பெறக்கூடிய யோகங்கள் உண்டு. உத்தியோக ரீதியாக வேலை பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை பெறுவீர்கள். மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுக்கக்கூடிய விஷயங்களில் சற்று கவனத்தோடு செயல்படுவது நல்லது. விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றுவது நன்று.

குரு பகவான் வக்ரகதியில்                                     05-09-2023 முதல் 30-12-2023 வரை.

ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ள கூடிய பலம் உண்டாகும். வரும் 30-10-2023 முதல் கேது 6-ல் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் சனி வலுவாக இருப்பதாலும் உங்களின் பொருளாதார நிலை மிகவும் நன்றாக இருக்கும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் முழுமையாக மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அசையும், அசையா சொத்துக்களில் முதலீடு செய்யக்கூடிய பலம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் புதிய யுக்திகளை பயன்படுத்தி ஏற்ற மிகுந்த பலன்களை பெறுவீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் டெலிவரி செய்து நல்ல லாபத்தை பெற முடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் அதிகாரிகள் ஒத்துழைப்பும் மிகச் சிறப்பாக இருக்கும். கடந்த கால கடன் பிரச்சினைகள் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களின் நீண்ட நாளைய கனவுகள் எல்லாம் இக்காலங்களில் நிறைவேறி மன நிம்மதி ஏற்படும். துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவதன் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள்.

குரு பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில்                 31-12-2023 முதல் 03-02-2024 வரை.

ஜென்ம ராசியில் குரு அஸ்வினி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் நிதானத்தோடு செயல்பட்டால் அனுகூலங்களைப் பெற முடியும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் லாபங்களை அடைவதற்கான சூழல் அமையும். குரு பார்வை 5, 7, 9--ஆகிய ஸ்தானங்களுக்கு இருப்பதால் குடும்பத்தில் அனுகூலங்கள், பிள்ளைகள் வழியில் சாதகமான பலன்கள் ஏற்படும். சிலருக்கு அழகிய குழந்தைகளை பெற்றெடுக்கக்கூடிய யோகமானது உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 11-ல் சனி சஞ்சரிப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை அடையும் வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றக்கூடிய பலம் ஏற்படும். மறைமுக போட்டிகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் அனைத்தையும் எளிதில் சமாளித்து அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான நிலை ஏற்படுவது மட்டுமில்லாமல் பயணங்களால் ஆதாயங்கள் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் கடினமான பணிகளை கூட எளிதில் செய்து முடிக்க முடியும். தெய்வீக ஸ்தலங்களுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது, உக்கிர தெய்வங்களை வழிபடுவது நன்று.

குரு பகவான் பரணி       நட்சத்திரத்தில்                    04-02-2024 முதல் 16-04-2024 வரை.

குரு பகவான் சுக்கிரன் நட்சத்திரமான பரணியில் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் இக்காலத்தில் பணப்பரிமாற்ற விஷயங்களில் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலங்களை அடைய முடியும். தேவையற்ற அலைச்சல், எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாகும் நிலை ஏற்பட்டாலும் எதையும் எதிர்கொண்டு அடைய வேண்டிய அனுகூலங்களை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 11-ல் சனி சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஏற்படும் இடர்பாடுகளை எதிர்கொண்டு நல்ல நிலை அடைவீர்கள். பூர்வீக சொத்து வகையில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பிள்ளைகள் வழியில் இருந்து வந்த கவலைகள் எல்லாம் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகளால் சில நெருக்கடி இருந்தாலும் உங்கள் உழைப்புக்கான ஆதாயங்களை அடைவீர்கள். உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் கடினமான காரியங்களை கூட எளிதில் செய்து முடிக்க முடியும். உடல் ரீதியாக அலர்ஜி பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது, தேவையற்ற அலைச்சல்களை குறைத்துக் கொள்வது நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, பாம்பு புற்றுக்கு பால் விடுவது உத்தமம்.

குரு பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில்            17-04-2024 முதல் 01-05-2024 வரை.

ஜென்ம ராசியில் குரு கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நீங்கள் சற்று பொறுமையோடு செயல்பட்டால் அனுகூலமான பலன்களை அடையலாம். பூர்வீக சொத்து வகையில் ஆதாயங்களை பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 11-ல் சனி சஞ்சரிப்பதால் பண வரவுக்கு எந்த விதத்திலும் குறை இருக்காது. உங்களுடைய விருப்பங்கள் நிறைவேறுவதுடன் உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகளும் விலகி மகிழ்ச்சியும் மனநிம்மதியும் உண்டாகும். தொழில் ரீதியாக நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகளும் உங்களுக்கு கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் எடுத்த பணியை சிறப்பாக செய்து முடிக்க முடியும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.

 

பரிகாரம்

மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்க இருப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது, கொண்டை கடலை மாலை சாற்றுவது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, மஞ்சள் நிற பூக்களை சூடி கொள்வது, ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்குவது நல்லது.

ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது வரும் 30.10.2023 முடிய சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9,                 நிறம் - ஆழ்சிவப்பு                               கிழமை - செவ்வாய்

கல் - பவளம்               திசை - தெற்கு                          தெய்வம் - முருகன்

No comments: