Friday, April 21, 2023

குரு பெயர்ச்சி பலன் 2023 – 2024 கும்பம்


 குரு பெயர்ச்சி பலன் 2023 – 2024

கும்பம்  ( அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள் )

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும், சிறு வயதிலிருந்தே சிறந்த தெய்வ பக்தியும், நல்ல தர்ம சிந்தனையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2, 11-க்கு அதிபதியான குரு பகவான் வரும் 22.04.2023 முதல் 01.05.2024 வரை முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சாரம் செய்ய உள்ளார். ஏழரைச் சனியில் ஜென்ம சனி தற்போது நடைபெறுவதால் எடுக்கும் முயற்சியில் தேவையற்ற நெருக்கடிகள், எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டிய நிலை ஏற்படும். அலைச்சல், டென்ஷன், எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாக கூடிய நிலை உண்டாகும். பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டு மன நிம்மதி குறையும். உங்களது ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு எதிலும் சிக்கனத்தோடு இருப்பது மிகவும் நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நீங்கள் மிகவும் நம்பியவர்களே உங்களுக்கு துரோகம் செய்வார்கள் என்பதால் பிறரை நம்பி பெரிய தொகையை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும்.

3-ல் சஞ்சரிக்கும் குரு தனது சிறப்பு பார்வையாக 7, 9, 11-ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் திருமண வயது அடைந்தவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கக்கூடிய அமைப்பு, ஒரு பெரிய மனிதனின் ஆதரவால் உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகளை எதிர் கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். நீங்கள் கடினமான நெருக்கடியில் இருந்தாலும் ஒரு சில நேரங்களில் உங்கள் தேவைக்கேற்ப தக்க நேரத்தில் நல்ல உதவிகள் கிடைத்து அனைத்து பிரச்சினையும் சமாளிக்க முடியும். உங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது நல்லது. நீங்கள் எதிர்பாராத மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள மருத்துவ காப்பீட்டுகள் எடுத்துக் கொள்வது மிக மிக உத்தமம்.

தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலையும் சிந்தித்து செயல்பட்டால் தான் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். போட்டிகள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபங்கள் தடைப்படும். பண பரிமாற்ற விஷயங்களில் போட்ட முதலீட்டை எடுத்தால் போதும் என்ற அளவிற்கு கடுமையான சிக்கல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகப்படியாக இருப்பது மட்டுமில்லாமல் தேவையில்லாத வீண் பழிச் சொற்களை எதிர் கொள்ளக்கூடிய ஒரு நிலை உண்டாகும். உங்கள் பணியில் நீங்கள் கவனத்தோடு இருப்பது, அதிகாரிகள் சொல்வதைக் கேட்டு அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்வது மிகவும் நல்லது. தற்போது 3-ல் சஞ்சரிக்க கூடிய ராகு 30.10.2023-க்கு பிறகு 2-ல் ராகு, 8-ல் கேது என சஞ்சாரம் செய்ய இருப்பதால் நீங்கள் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, வெளியூர் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது சற்று பொறுமையோடு செல்வது, இரவு பயணங்களை தள்ளி வைப்பது மிகவும் நல்லது.

 

உடல் ஆரோக்கியம்  

உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றி கொண்டே இருக்கும். ரத்த அழுத்த சம்பந்தப்பட்ட நோய், சர்க்கரை வியாதி போன்றவற்றிற்காக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் மருத்துவ செலவுகள் ஏற்படும். இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை   

குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வீண் விரயங்களும் உண்டாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். பெரியவர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். முன்கோபத்தை குறைத்து கொள்வது மிகவும் உத்தமம்.

கமிஷன் ஏஜென்ஸி 

கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும். பிறரை நம்பி பண விஷயத்தில் முன்ஜாமீன் கொடுத்தால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தடை, தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். பெரிய தொகைகளை கையாளும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்கள் நெருக்கடியான நேரத்தில் வசூலாகி மன நிம்மதி அடைவீர்கள்.

தொழில் வியாபாரம் 

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்தநிலை நிலவினாலும், பொருட்தேக்கம் ஏற்படாது. கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை மிகவும் அனுசரித்து செல்வதே நல்லது. தொழிலில் உண்டாகக்கூடிய போட்டி பொறாமைகளால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படுவதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் பணியில் நெருக்கடியான நிலையினை சந்திப்பீர்கள். உயரதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் சேர்த்து பழிச்சொற்களை ஏற்க வேண்டிவரும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாவதால் குடும்பத்தை விட்டு பிரிய கூடிய சூழ்நிலையும் அதனால் மன உளைச்சலும் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது.

அரசியல்

அரசியல்வாதிகள் பேச்சில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய காலமாகும். பெயர், புகழுக்கு பஞ்சம் இருக்காது என்றாலும் வருவாய் குறைவடையும். செய்யாத தவறுகளுக்காக தேவையற்ற அவப்பெயரை சம்பாதிப்பீர்கள். மக்களின் ஆதரவைப் பெற மிகவும் பாடுபட வேண்டியிருக்கும். உடனிருப்பவர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானம் தேவை.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சுமாராக இருப்பதால் பொருளாதார நிலையும் சுமாராகத்தான் இருக்கும். பட்டபாட்டிற்கு ஏற்ற பலனைப் பெற முடியும். பூமி, மனை போன்றவற்றால் சிறுசிறு வீண் செலவுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். பங்காளிகளின் ஆதரவு மன நிம்மதியை தரும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொண்டால் மட்டுமே அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விடமுடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்ளவும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைபளு அதிகரிக்கும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற நட்புகளை தவிர்க்கவும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போடவேண்டியிருக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும்.

 

அஸ்வினி நட்சத்திரத்தில்                       22-04-2023 முதல் 21-06-2023 வரை

குரு அஸ்வினி நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டு மன நிம்மதி குறைவு ஏற்படும். நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். சக்திக்கு மீறிய செலவுகள் ஏற்படுவதால் உங்கள் கையிருப்பு குறையும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றுவதில் இடையூறுகள் உண்டாகும். உங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, சிறு பாதிப்பு என்றாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்வது நல்லது. நெருங்கியவர்களே தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்குவார்கள். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். உங்கள் உழைப்புக்கான பலனை நீங்கள் அடைவதில் இடையூறுகள் ஏற்படலாம். சில இடைத்தரகர்கள் செய்யக்கூடிய செயல்களால் தொழிலில் உங்களது அமைதி குறையும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தவிர்க்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் நீங்கள் கவனத்தோடு இருப்பது நல்லது. முடிந்தவரை பிறர் பேச்சுக்கு செவி சாய்க்காமல் பொறுமையோடு இருப்பது, அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். வேலைபளு காரணமாக உங்களது ஓய்வு நேரம் குறையும். ஆஞ்சநேயர் வழிபாடு, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நல்லது.

குரு பகவான் பரணி நட்சத்திரத்தில்                           22-06-2023 முதல் 04-09-2023 வரை.

குரு பகவான் பரணி நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிக்க கூடிய இக்காலத்தில் தேவையற்ற நெருக்கடிகளால் மன நிம்மதி குறைவு ஏற்படும். நீங்கள் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கடைசி நேரத்தில் தட்டி போகும். பொருளாதார ரீதியாக ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு சிக்கனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் வேலையாட்களால் வீண் பிரச்சனைகள் உண்டாகும். தொழில் ரீதியாக ஏற்படும் சில சட்ட சிக்கல்களால் வீண் செலவுகள் ஏற்படும். கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்படுவதன் மூலம் நிலைமையை சமாளிக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டிய நேரமாகும். சக ஊழியர்கள் உங்கள் மீது வீண் பழிச் சொற்கள் சொல்வார்கள். மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு செயல்பட்டால் அனுகூலமான பலன்களை அடைய முடியும். வெளியூர் தொடர்புகள் மூலம் ஒரு சில உதவிகள் கிடைக்கும். குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றுவது, உடல் ஊனமற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நல்லது.

குரு பகவான் வக்ரகதியில்                                     05-09-2023 முதல் 30-12-2023 வரை.

குரு வக்ர கதியில் சஞ்சரிக்க கூடிய இக்காலத்தில் உங்களுக்கு உள்ள நெருக்கடிகள் சற்று குறைந்து மன நிம்மதி ஏற்படும். சுப காரிய முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து பொருளாதார அனுகூலங்களை பெறுவீர்கள். உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் சற்று குறைவதால் எடுக்கும் வேலைகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்கள் குறையும். கொடுக்கல்- வாங்கல் ரீதியாக பிறருக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் பலம் உண்டாகும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் ஒரு நல்ல வாய்ப்புகள் கிடைத்து மன நிம்மதி ஏற்படும். உங்கள் திறமைகளை வெளிக்காட்ட சந்தர்ப்பங்கள கிடைக்கும். உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

குரு பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில்                 31-12-2023 முதல் 03-02-2024 வரை.

குரு பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிக்கக்கூடிய இக்காலத்தில் ஜென்ம ராசியில் சனி, 2-ல் ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதார ரீதியாக ஏற்படக்கூடிய நெருக்கடிகளால் மன அமைதி குறையும். எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாகும். நம்பியவர்களே உங்களுக்கு நெருக்கடிகளை தருவார்கள். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய இடையூறுகள் ஏற்படும். போட்டிகள் காரணமாக லாபங்கள் குறையும். நியாயப்படி கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தடைப்படும். தொழில் ரீதியான பொருளாதார நெருக்கடிகளால் கடன்கள் வாங்க நேரிடும். பெரிய முதலீடு கொண்ட செயல்களை தற்போதைக்கு தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத எதிர்ப்புகளை எதிர்கொள்வது மட்டுமில்லாமல் மற்றவர்கள் பணியும் சேர்த்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். அஜீரண கோளாறு காரணமாக உடல் உபாதைகள் ஏற்படும். மனைவி, பிள்ளைகள் வழியில் கூட தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படலாம். சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வது, குரு பகவானுக்கு தீபம் ஏற்றுவது நல்லது.

குரு பகவான் பரணி       நட்சத்திரத்தில்                    04-02-2024 முதல் 16-04-2024 வரை.

குரு பகவான் பரணி நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் பணவரவில் ஏற்ற இறக்கமான நிலை, எடுக்கும் முயற்சியில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். ஜென்மச் சனி நடப்பதாலும், 2-ல் ராகு இருப்பதாலும் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற நெருக்கடிகள் காரணமாக உங்களுக்கு கடன்கள் அதிகரிக்கும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தற்காலிகமாக தள்ளி வைப்பது நல்லது. குரு பார்வை ஏழாம் வீட்டுக்கு இருப்பதால் திருமண சுபகாரிய முயற்சிகளை மேற்கொண்டால் அதில் அனுகூலங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் மிகவும் கவனத்தோடு இருந்தால் மட்டுமே இருப்பதை தக்க வைத்துக் கொள்ள முடியும். போட்டிகள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தடைப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் பணியில் கவனம் செலுத்த உங்களது உடல் ஆரோக்கியமே ஒரு இடையூறாக இருக்கும். உங்கள் உழைப்புக்கான சன்மானம் கிடைக்கும் என்றாலும் உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது, குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது.

குரு பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில்            17-04-2024 முதல் 01-05-2024 வரை.

குரு பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடப்பதால் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, மனைவி, பிள்ளையின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது உத்தமம். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்ற முடியாது. தொழில், வியாபாரத்தில் தேவையில்லாத பிரச்சினைகளால் போட்ட முதலை எடுக்க இடையூறுகள் ஏற்படும். சட்டரீதியாக சிறு சிறு சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் ஒவ்வொரு செயலிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை காரணமாக ஓய்வு நேரம் குறையும். ஒரு சிலர் மனைவி, பிள்ளைகளை விட்டுவிட்டு வெளியிடங்களுக்கு சென்று பணிபுரியக்கூடிய நெருக்கடியான நிலை உண்டாகும். அதிகாரியிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் பொறுமையோடு இருப்பது நல்லது. அம்மன் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு தீபம் ஏற்றுவது நன்மை தரும்.

 

பரிகாரம்

கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 3-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவிப்பது, வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வது, நெய் தீபமேற்றி வழிபடுவது, குரு யந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்யவும்.

ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடைபெறுவதால் சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வருவது நல்லது. ஆஞ்சநேயரையும், வெங்கடாசலபதியையும் வழிபடுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,8             கிழமை - வெள்ளி, சனி                             திசை - மேற்கு

கல் - நீலக்கல்            நிறம் - வெள்ளை, நீலம்                    தெய்வம் - ஐயப்பன்

No comments: