Friday, April 21, 2023

குரு பெயர்ச்சி பலன் 2023 – 2024 துலாம்

 


குரு
பெயர்ச்சி பலன் 2023 – 2024

துலாம் ( சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள் )

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கு தானமளிக்க கூடிய அளவிற்கு பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் துலா ராசி நேயர்களே, சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு 3, 6-க்கு அதிபதியான குரு பகவான் வரும் 22.04.2023 முதல் 01.05.2024 வரை சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களின் பொருளாதார நிலை உயர்வது மட்டுமில்லாமல் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குடும்பத்தில் சுபிட்சமும், சந்தோஷமும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் எல்லாம் முழுமையாக முடிவுக்கு வந்து மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். உடல் பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குரு பார்வை ஜென்ம ராசி 3, 11-ஆகிய ஸ்தானங்களுக்கு இருப்பதால் மன தைரியம், எடுக்கும் முயற்சியில் வெற்றி, எதிர்பாராத லாபங்களை அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. பங்காளிகள் மற்றும் உடன் பிறந்தவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் படிப்படியாக குறைந்து சுமூகமான சூழ்நிலை உண்டாகும். பூர்வீக சொத்து ரீதியாக நீண்ட நாட்களாக இருந்த வம்பு, வழக்குகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும். தந்தை மற்றும் மூதாதையர் வகையில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய சொத்து மற்றும் பொருளாதார உதவிகள் வரும் நாட்களில் கிடைக்கும்.

இந்த தருணத்தில் சனி பகவான் உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சாரம் செய்வது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்க கூடிய அமைப்பாகும். தொழில், வியாபாரத்தில் கடந்த கால பொருட் தேக்கங்கள் எல்லாம் விலகி உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து சிறப்பான லாபங்களை அடைய முடியும். தொழில் நிமித்தமாக நீங்கள் வாங்கிய கடன்களை அடைப்பது மட்டுமில்லாமல் கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்ற முடியும். வேலையாட்கள் ஆதரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் விலகி பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு நிலுவையில் இருந்து வந்த சம்பள தொகை எல்லாம் தற்போது கிடைத்து உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். வெளியூர், வெளிநாடுகள் மூலம் அனுகூலமான செய்தி கிடைக்கும்.

சர்ப்ப கிரகமான கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-லும் வரும் 30.10.2023 முடிய சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, சில நேரங்களில் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. அக்டோபரில் ஏற்படக்கூடிய ராகு கேது பெயர்ச்சி மூலம் ராகு 6-ஆம் வீட்டுக்கும் கேது 12-ஆம் வீட்டுக்கும் மாறுதலாக இருப்பது அற்புதமான அமைப்பாகும். குறிப்பாக அக்டோபருக்கு பிறகு குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

 

உடல் ஆரோக்கியம் 

உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களால் கடந்த காலங்களில் இருந்த மருத்துவ செலவுகள் குறைந்து மன நிம்மதி ஏற்படும். பயணங்கள்  மூலம் ஏற்றமிகுந்த பலனை அடைய முடியும். எடுத்த பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உணர்ச்சி வசப்படாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.

குடும்பம் பொருளாதார நிலை   

குரு 7-ல் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். கடந்த காலத்திலிருந்த பொருளாதார தடைகள் விலகி குடும்பத்தின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாவதுடன், கடன்களும் படிப்படியாக குறையும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, நெருங்கிவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பூமி, வீடு, வாகனங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

கமிஷன், ஏஜென்ஸி 

கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் துறையில் இருப்பவர்களுக்கு இதுவரை ஏற்பட்ட கஷ்டங்கள் விலகி  லாபங்களை அடைய முடியும். பணபரிமாற்ற விஷயங்களில் இருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் பெற முடியும். கொடுத்த கடன்களும் வீடு தேடி திருப்பி வரும். இதுவரை இருந்த வம்பு, வழக்குகள் யாவும் ஒரு முடிவுக்கு வரும்.

தொழில் வியாபாரம் 

தொழில், வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகளும், போட்டி, பொறாமைகளும் இருந்த இடம் தெரியாமல் மறைவதால் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவதால் உங்களின் பலமும், வலிமையும் கூடும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஒத்துழைப்புகளால் லாபத்தை பெருக்கி கொள்ள முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உத்தரவுகளை பெற்று தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு சிறுசிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் கடந்த காலங்களில் இருந்த பிரச்சினைகள் விலகும். தடைப்பட்டுக் கொண்டிருந்த ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைத்து நிம்மதி ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் கிடைப்பதால் எதையும் சிறப்பாக செய்து முடித்து அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.

அரசியல்

உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மக்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். கட்சி பணிக்காக நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் அதிகப்படியாக இருக்கும். கௌரவ பதவிகள் உங்களை தேடி வரும். உடனிருப்பவர்களிடம் பேச்சில் கவனமாக இருக்கவும். பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைப்பதால் நல்ல நிலையை அடைய முடியும்.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு மகசூல் சிறப்பாக இருந்து உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தியும் பெருகும். பூ, காய்கனி போன்றவற்றாலும், கால்நடைகளாலும் லாபம் உண்டு. புதிய பூமி, மனை வாங்கும் யோகம் ஏற்படும். பட்டபாட்டிற்கான பலனை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சிறிது அக்கறை எடுத்துக்கொண்டால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மண வாழ்க்கை சிறப்பாக அமையும். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன், பொருள்களை வாங்கி சேமிப்பீர்கள். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது-.

மாணவ- மாணவியர்

கல்வியில் இருந்த மந்தநிலை சற்றே விலகும். பள்ளிப் படிப்பில் சிறுசிறு இடையூறுகள் ஏற்பட்டாலும், கல்லூரிகளில் பயிலுபவர்கள் சிறப்பான சாதனையை செய்ய முடியும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவும் உற்சாகத்தை உண்டாக்கும். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைப்பீர்கள். நல்ல நட்புகளும் கிட்டும்.

 

அஸ்வினி நட்சத்திரத்தில்                       22-04-2023 முதல் 21-06-2023 வரை

குரு பகவான் கேது நட்சத்திரமான அஸ்வினியில் 7-ல் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். பொருளாதார நெருக்கடிகள் விலகி தாராள தனவரவுகள் உண்டாகும். உங்களுடைய நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கணவன்- மனைவியிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் எல்லாம் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் அரங்கேறும். கடந்த கால அலைச்சல் டென்ஷன் எல்லாம் குறைந்து மன நிம்மதி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் அடைவது மட்டுமில்லாமல் வெளி நபரிடம் இருந்து உங்களுக்கு வரவேண்டிய பணங்கள் எல்லாம் தற்போது வந்தடைந்து உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். பொன் பொருள், வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நிலை, எதிர்பார்த்த பதவி உயர்வுகளை அடையக்கூடிய யோகம் உண்டு. குறிப்பாக உங்கள் மீது இருந்த பழிச்சொற்கள் எல்லாம் விலகி நல்ல பெயர் எடுக்க முடியும். விநாயகர் வழிபாடு, துர்க்கை அம்மன் வழிபாடு மிகவும் நல்லது.

குரு பகவான் பரணி நட்சத்திரத்தில்                           22-06-2023 முதல் 04-09-2023 வரை.

குரு பகவான் ராசியாதிபதி நட்சத்திரமான பரணியில் 7-ல் சஞ்சரிப்பதால் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். பணப்பரிமாற்ற விஷயங்களில் மிகவும் அனுகூலமான பலன்கள் ஏற்பட்டு குடும்பத்தில் அனைத்து தேவைகளும் நிறைவேறுவது மட்டுமில்லாமல் நீங்கள் நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்ற எண்ணிய நவீன பொருட்களை வாங்குவீர்கள். உறவினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு எல்லாம் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்ற முடியும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். பூர்வீக சொத்து வகையில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனுகூலங்கள் தற்போது கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் உங்கள் உழைப்புக்கான பலனை விட அதிகப்படியான தன வரவு ஏற்பட்டு மகிழ்ச்சி உண்டாகும். திறமை வாய்ந்த வேலையாட்கள் உங்களுடன் இணைவார்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் பணியில் மன நிம்மதியும், உடன் வேலை செய்பவர்கள் உங்கள் வேலையை பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு அனுகூலமான நிலையும் உண்டாகும். உக்கிர தெய்வங்களை வழிபடுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

குரு பகவான் வக்ரகதியில்                                     05-09-2023 முதல் 30-12-2023 வரை.

குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் நீங்கள் சற்று பொறுமையோடு செயல்பட்டால் அனுகூலங்களை அடைய முடியும். பணப்பரிமாற்ற விஷயங்களில் சற்று சிக்கனத்தோடு செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் சற்று தாமதமாகும். சனி பகவான் 5-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்க கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் சற்று கவனத்தோடு செயல்பட்டால் போட்ட முதலை எடுக்க முடியும். வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. அதிக முதலீடு கொண்ட விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் இருந்தால் பெரிய இழப்புகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது, இயற்கை உணவுகளை உட்கொள்வது உத்தமம். வேலைக்கு செல்பவர்களுக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வு நேரம் குறையும். அதிகாரியிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பேச்சில் சற்று பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. ஒரு சிலருக்கு தேவையில்லாத பயணங்கள் ஏற்படும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது, பிரித்தியங்கரா தேவி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

குரு பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில்                 31-12-2023 முதல் 03-02-2024 வரை.

குரு பகவான் கேது நட்சத்திரமான அஸ்வினியில் 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும், சர்ப்ப கிரகமான ராகு 6-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குறிப்பாக கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் முழுமையாக மறைந்து வளமான பலன்களை பெறுவீர்கள். பொருளாதார நிலை மிகவும் சாதகமாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடும். உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து சிறப்பான லாபங்களை பெறுவீர்கள். கடந்த கால அலைச்சல்கள் எல்லாம் குறையும். வேலைக்கு செல்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது ஒரு நல்ல விடிவு காலம் பிறக்கப் போகிறது என்று கூறினால் மிகையாகாது. நீண்ட நாட்களாக புதிய வாய்ப்பு தேடியவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமியை தரிசிப்பது நன்மை தரும்.

குரு பகவான் பரணி       நட்சத்திரத்தில்                    04-02-2024 முதல் 16-04-2024 வரை.

ராசி அதிபதி சுக்கிர நட்சத்திரத்தில் குரு 7-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை அடையும் யோகம் உண்டு. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் அமையும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு கூட தற்போது ஒரு நல்ல செய்தி கிடைக்கும். மற்றவர்களுக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். உறவினர்களுடைய ஆதரவு மிகச் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் தடைபட்ட சுப காரியங்கள் எளிதில் கைகூடும். தொழில், வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறுவது மட்டுமில்லாமல் நல்ல லாபங்கள் கிடைக்கும். தொழில் அபிவிருத்திக்காக நவீன கருவிகளை வாங்கக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உங்களுக்கு இருந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் குறைவதால் மன மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் திறமையை வெளிப்படுத்த நல்லதோர் சூழ்நிலை உண்டாகும். அதிகாரிகள் ஆதரவு மிகச் சிறப்பாக இருப்பதால் மன நிம்மதியுடன் பணி புரிய முடியும். விநாயகரை தரிசிப்பதன் மூலம் வளமான பலன்களை பெறலாம்.

குரு பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில்            17-04-2024 முதல் 01-05-2024 வரை.

குரு பகவான் சமசப்தம ஸ்தானமான 7-ல் தனது நட்பு நட்சத்திரமான கிருத்திகையில் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் கைகூடும். உங்கள் ராசிக்கு 5-ல் சனி, 6-ல் ராகு சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிக மிக நன்றாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் வீடு, மனை போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உங்களிடம் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட தற்போது நட்புடன் பழகுவார்கள். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். பெரியோர்களுடைய ஆசி கிடைப்பதால் நீண்ட நாட்களாக தீராத பிரச்சினைக்கு எல்லாம் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நவீன யுக்திகளை பயன்படுத்தி நல்ல லாபத்தை பெற முடியும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகள் மூலம் அனுகூலமான செய்தி தேடி வரும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய ஒரு பலமும், உங்களுக்கு இருந்த நிலுவைத் தொகைகள் எல்லாம் கிடைத்து குடும்பத்தில் நிம்மதி ஏற்படக்கூடிய சூழலும் உண்டு. உறவினருடைய ஆதரவு சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் நல்லது நடக்கும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.

 

பரிகாரம்

துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு வரும் 30.10.2023 முடிய சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன் படுத்துவதும் நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 4,5,6,7,8                               நிறம் - வெள்ளை, பச்சை               கிழமை - வெள்ளி, புதன்

கல் - வைரம்                               திசை - தென் கிழக்கு         தெய்வம் - லக்ஷ்மி

No comments: