Friday, April 23, 2021

தனுசு - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022

 

தனுசு  - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022

(06-04-2021 முதல் 13-04-2022)

ஜோதிட மாமணி

முனைவர் முருகுபாலமுருகன்

 

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

நல்லவர்களிடம் மட்டும் சகஜமாகப் பழகக்கூடிய பண்பு கொண்ட தனுசு ராசி நேயர்களே! உங்கள் ராசியாதிபதி குரு பகவான் வரும் 06-04-2021 முதல் 13-04-2022 வரை உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் தேவையற்ற தடை தாமதங்கள் உண்டாகும். பணவரவில் தேக்க நிலை இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குரு தனது விஷேச பார்வையாக 7, 9, 11-ஆம் வீடுகளை பார்வை செய்வதால் குடும்பத்தில் திருமணம் சார்த்த சுப முயற்சிகள் வெற்றி பெறும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உதவியாக இருப்பதால் எவ்வளவு பெரிய பிரச்சினைகளையும் சிறப்பாக எதிர் கொண்டு அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும்.

                ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் தற்போது உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் சஞ்சரித்து ஏழரைச் சனியில் பாதச்சனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகளும்  நெருங்கியவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் உண்டாகும் என்பதால் பொதுவாக பேச்சில் பொறுமையுடன் இருந்து விட்டு கொடுத்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். சர்ப் கிரகமாக ராகு உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளும் திறன் ஏற்படும்.

தொழில் வியாபாரத்தில் நீங்கள் எதிலும் முன்நின்று செயல்பட்டால் ஏற்றங்களை அடைய முடியும். தேவையற்ற அலைச்சல் வேலையாட்களால் பிரச்சினைகள் ஏற்படும் என்றாலும் நீங்கள் நிதானமாக செயல்பட்டால் பொருட் தேக்கமின்றி லாபங்களை அடைய முடியும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் சற்று கவனத்துடன் செயல்பட்டால் வீண் இழப்புகளை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு அதிகரிக்கும். உழைப்பிற்கான ஊதியங்களை பெற இடையூறுகள் ஏற்படும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும்.

உங்கள் ராசிக்கு குரு 3-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் வரும் 21-06-2021 முதல் 14-09-2021 வரை குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும், வரும் 15-09-2021 முதல் 19-11-2021 வரை குரு உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிக்க இருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் இக்காலத்தில் உங்களுக்கு எல்லா வகையிலும் மேன்மைகள் பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் வாழ்க்கை தரம் உயரும் நிலை ஏற்படும்.

 

தேகஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய காலமாகும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், அஜீரணமின்மை, உடல் சோர்வு ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் தேவையற்ற மருத்துவ செலவுகள் உண்டாவதால் மன நிம்மதியற்ற நிலை ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் வீண் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும்.

குடும்பம் பொருளாதாரம்

கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நன்றாக இருப்பதால் எந்த நெருக்கடிகளையும் சமாளிக்க முடியும். உற்றார் உறவனர்களிடையே தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிக்கவும், திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் சாதகமாக இருந்தாலும் எதிர்பாராத செலவுகளால் உங்கள் சேமிப்பு குறையும். எதிர்பாராத உதவிகளால் உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

கொடுக்கல்- வாங்கல்

தனகாரகன் குருபகவான் ஜென்மராசிக்கு 3-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாகவே இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலிக்க சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். பெரிய தொகைகளுக்கு மற்றவர்களை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும்.

தொழில்,வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருள் தேக்கம் உண்டாகாது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளையும், உடன் பணி புரிபவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. 6-ஆம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் அடைய வேண்டிய லாபங்களை அடைந்து விட முடியும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அதனால் ஆதாயம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று கவனமுடன் செயல்படுவதும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது. எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் சில தடைகளுக்குப்பின் கிடைக்கும். ஊதிய உயர்வுகள் தாமதப்படும். சிலர் எதிர்பார்க்கும் இடமாற்றங்களைப் பெற முடியும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் கிட்டும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாடப் பணிகளில் சற்று சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே அன்யோன்னியம் அதிகரிக்கும். சனி 2-ல் சஞ்சரிப்பதால் முடிந்த வரை அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்வது ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது. உங்களுக்கு வேலைபளு அதிகரிப்பதால் உடல் அசதி ஏற்படும்.

அரசியல்வாதிகளுக்கு

தங்கள் பெயர், புகழ், பதவிகளை காப்பாற்றிக்கொள்ள சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகளும் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உடனிருப்பவர்களிடம் சற்று கவனமுடன் பழகுவது நல்லது. பெரிய மனிதரின் உதவியால் கஷ்டங்கள் விலகி நல்ல வாய்பை பெறுவீர்கள்.

விவசாயிகளுக்கு

வயல் வேலைகளுக்கு சரியான வேலையாட்கள் கிடைக்காமல் பணியில் நீங்கள் நேரடியாக சென்று செயல்பட வேண்டி இருக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நீர்மட்டம் குறைவு. அதிக காற்று, மண்வளமின்மை போன்றவற்றால் பயிர்கள் பாதிப்படையும். ஒரு சில உதவிகளால் உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பங்காளிகளிடம் சற்று கவனமாக பேசுவது நல்லது.

படிப்பு

கல்வியில் மிகவும் கவனம் செலுத்தினால் மட்டுமே தகுந்த மதிப்பெண்களைப் பெற முடியும். தேவையற்ற நட்புகளாலும், பொழுது போக்குகளாலும் கல்வியில் நாட்டம் குறையும். அரசு வழியில் கிடைக்க வேண்டிய அனுகூலங்கள் சற்று தாமதப்படும். பயணங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

 

 

குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 06-04-2021 முதல் 21-05-2021 வரை

குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது என்றாலும் ராகு 6-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பணம் கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனமுடன் நடந்து கொண்டால் நற்பலனை அடைய முடியும். மற்றவர்களுக்கு முன்ஜாமீன் கொடுப்பதால் வீண் பிரச்சினைகளில் சிக்குவீர்கள். சனி 2-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதால் கூட்டாளிகளின் ஆதரவுடன் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமாக செயல்பட்டால் நல்ல நிலையை அடைய முடியும்.  வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

 

குரு பகவான் சதய நட்சத்திரத்தில் 22-05-2021 முதல் 20-06-2021 வரை

குரு பகவான் ராகு நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 3-ல் சஞ்சாரம் செய்ய இருக்கும் இக்காலங்களில் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. சனி 2-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக் கூடிய பாதிப்புகளால் எதிலும் சுறுசுறுப்பற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை உண்டாகும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. சர்ப்ப கிரகமான ராகு 6-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விடமுடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அலைச்சல், டென்ஷன் இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

 

குரு பகவான் வக்ர கதியில் 21-06-2021 முதல் 17-10-2021 வரை

குரு பகவான் வக்ர கதியிலில் இருப்பதால் எதிலும் உயர்வுகளைப் பெற முடியும். ராகு 6-ல் இருப்பதால் பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் கடன்களும் படிப்படியாகக் குறைந்து நிம்மதி நிலவும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும். 2-ல் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சி நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே அபிவிருத்தியைப் பெருக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் நிம்மதியுடன் செயல்பட முடியும். சிலருக்கு எதிர்பார்க்கும் பதவிகள் கிடைத்து நல்ல நிலையை அடைய முடியும்.

 

குரு பகவான் மகர ராசியில் 18-10-2021 முதல் 19-11-2021 வரை

உங்கள் ராசியாதிபதி குருபகவான் தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் மகர ராசியில் சஞ்சாரம் செய்வது மிகவும் சிறப்பான அமைப்பு என்பதால் பண வரவுகள் நன்றாக இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். சர்ப்ப கிரகமான ராகு உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்கும் அமைப்பாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைத்து மன நிம்மதி ஏற்படும்.

 

குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 20-11-2021 முதல் 01-01-2022 வரை

உங்கள் ராசியாதிபதி குரு பகவான் ஜென்ம ராசிக்கு தனக்கு நட்பு கிரகமான செவ்வாய் நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சாரம் செய்வதால் ஒரளவுக்கு அனுகூலங்களைப் பெற முடியும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை, அதிக அலைச்சலால் உடல் சோர்வு ஏற்படும். சர்ப்ப கிரகமான ராகு உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதால் எதிர்பார்க்கும் உதவிகள் ஒரளவுக்கு கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சனி 2-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடப்பது, முன் கோபத்தைக் குறைப்பது, முடிந்து வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. தெய்வ காரியங்களுக்காகவும், பொது நலத் திட்டங்களுக்காகவும் சிறுசிறு செலவுகளைச் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். தற்போது கிடைத்த வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது.

 

குரு பகவான் சதய நட்சத்திரத்தில் 02-01-2022 முதல் 01-03-2022 வரை

குரு பகவான் ராகு நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சாரம் செய்தாலும் இக்காலங்களில் ராகு 6-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு வெற்றி பெற முடியும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். சனி 2-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், கை கால் மூட்டுகளில் வலி போன்றவை உண்டாகும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருக்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் குறையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் இருந்தாலும் ஒரளவுக்கு அனுகூலங்கள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் தேவையற்ற பிரச்சினைகளை குறைத்துக் கொள்ள முடியும். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது மூலம் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடைய முடியும்.

 

குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 02-03-2022 முதல் 13-04-2022 வரை

குரு பகவான் தனது நட்சத்திரத்தில் 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும் சர்ப கிரகமான ராகு உங்கள் ராசிக்கு 6-ல் வலுவாக சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு முன்னேற முடியும். உங்களுக்குள்ள எதிர்ப்புகள் யாவும் ஓரளவுக்கு குறையும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத திடீர் தனவரவுகளால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். சனி 2-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது, முன் கோபத்தைக் குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகப்படியாக இருந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில் நெருக்கடிகள் இருந்தாலும் உங்கள் முயற்சியால் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும்.

 

பரிகாரம்

தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராசியாதிபதி குரு ஜென்ம ராசிக்கு 3-ல் சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்குவது நல்லது.

ஏழரை சனியில் பாதச்சனி நடைபெறுவதால் சனிக்கு தொடர்ந்து பரிகாரம் செய்வது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது மிகவும் நல்லது. வியாழக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9                   நிறம் - மஞ்சள், பச்சை                      கிழமை - வியாழன், திங்கள்

கல் - புஷ்ப ராகம்    திசை - வடகிழக்கு                                தெய்வம் - தட்சிணா மூர்த்தி

No comments: