Friday, April 23, 2021

கும்பம் - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022

 

கும்பம்  - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022

(06-04-2021 முதல் 13-04-2022)

ஜோதிட மாமணி

முனைவர் முருகுபாலமுருகன்

 

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

ஆத்ம பலமும், மனோதிடமும் கொண்டு எதையும் சாதித்துக் காட்டும் வல்லமை பெற்ற கும்ப ராசி நேயர்களே! பொன்னவன் என போற்றப்படக் கூடிய குரு பகவான் வரும் 06-04-2021 முதல் 13-04-2022 வரை ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்வதும், ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும் கிரகமும், உங்கள் ராசியாதிபதியுமான சனி தற்போது உங்கள் ராசிக்கு 12-ல் சஞ்சரித்து ஏழரைச்சனியில் விரயச் சனி நடப்பதும் அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. உங்களது உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. பண வரவுகள் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. எதிர்பாராத வகையில் திடீர் செலவுகள் ஏற்படும் காலம் என்பதால் எதிலும் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு தனது சிறப்பு பார்வையாக  5, 7, 9-ஆம் வீடுகளை பார்வை செய்வதால் பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும், கணவன்- மனைவியிடையே ஒற்றுமையும் நிலவும். சிலருக்கு அழகான புத்திர பாக்கியமும், புத்திர வழியில் மகிழ்ச்சியும் நிலவும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களில் கூட அனுகூலங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்கும் பலம் உண்டாகும்.

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை நிலவினாலும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் கிடைக்க வேண்டிய லாபங்கள் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது என்பதால் உங்களுக்கு தேவையற்ற வேலைபளு ஏற்பட்டு அலைச்சல் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும் என்றாலும் பணி சுமை காரணமாக உடல் அசதி ஏற்படும். உழைப்பிற்கான சன்மானம் அடைய இடையூறுகள் ஏற்படும் என்பதால் மன நிம்மதி குறைவு ஏற்படும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. சர்ப்ப கிரகமான ராகு ஜென்ம ராசிக்கு 4-ல், கேது 10-ல் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வீடு, வாகனங்கள் பராமரிப்புக்காக செலவு செய்ய நேரிடும்.

 

தேகஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும். அதிக அலைச்சலால் நேரத்திற்கு சாப்பிட இடையூறுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் நலமாக இருப்பார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பெற்றோர் வழியில் இருந்த மருத்துவச் செலவுகள் குறையும்.

குடும்பம் பொருளாதாரம்

குடும்பத்தில் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திரர்களால் நற்பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சினைகள் விலகி ஒரளவுக்கு நற்பலன்கள் உண்டாகும். ஆடம்பரச் செலவைக் குறைக்கவும்.

கொடுக்கல்- வாங்கல்

பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் மிகவும் நிதானமாக இருப்பது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது மூலம் வீண் விரயங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறியான நிலை இருக்கும். கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும்.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தினை அடைய அதிக நேரம் உழைக்க வேண்டும். கூட்டாளிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். பெரிய தொகை கொண்ட முதலீடுகளை சிறிது காலம் தள்ளிவைப்பது நல்லது. அப்படி செய்ய வேண்டிய நிலை இருந்தால் அதனை உங்கள் பெயரில் செய்யாமல் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது. வெளியூர், வெளிநாட்டுத் மூலம் அனுகூலமான செய்தி கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

செய்யும் உத்தியோகத்தில் சற்று வேலைப்பளு அதிகரிக்கும். பொறுப்புகள் அதிகரிப்பதால் தேவையற்ற அலைச்சல் மன அமைதி குறையும் நிலை ஏற்படும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். பலரை வழி நடத்தக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உயரதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். சக ஊழியர்களிடம் சற்று கவனமாக செயல்படுவது நல்லது.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், மாதவிடாய் கோளாறுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சில தடைகளுக்குப் பின் அனுகூலப் பலன் உண்டாகும். சிலருக்கு அழகான புத்திர பாக்கியமும் அமையும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்றாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பூர்வீக சொத்துகளால் லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு

பெயர், புகழுக்கு எந்த விதத்திலும் பங்கம் ஏற்படாது என்றாலும் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நல்லது. கட்சிப் பணிகளுக்காக சில செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கும். வெளியூர் சென்றுவரக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். கௌரவம் உயரும். பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் சுமாராகத்தான் இருக்கும். விளைப்பொருளுக்கேற்ற விலையை சந்தையில் பெற முடியாது. அரசு வழியில் சிறுசிறு மானியத் தொகைகள் கிடைக்கும். பங்காளிகளால் ஒரளவுக்கு ஆதரவு உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும்.

படிப்பு

கல்வியில் சிறப்புடன் செயல்பட முடியும். முடிந்த வரை தேவையற்ற நட்புகளை தவிர்த்து விடுவது நல்லது. பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவுகள் முழுமையாகக் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக் கூடிய பாதிப்புகளால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு இடையூறுகள் ஏற்படும்.

 

குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 06-04-2021 முதல் 21-05-2021 வரை

குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். ஏழரைச்சனியில் விரயச்சனி நடைபெறுவதால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சனி ராசியாதிபதி என்பதால் அவற்றை சமாளிக்ககூடிய ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பதும் உற்றார் உறவினர்களிடையே விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதும் நல்லது. தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள முடியும். பண விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்பட்டால் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்க முடியும்.

 

குரு பகவான் சதய நட்சத்திரத்தில் 22-05-2021 முதல் 20-06-2021 வரை

குரு பகவான் சதய நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் ஏற்ற இறக்கமானப் பலன்களையே பெற முடியும். கணவன்-- மனைவியிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு 4-ல் ராகு, 12-ல் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படுவதுடன் குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபடமுடியாமல் மந்த நிலையை உண்டாக்கும். பணவரவுகளில் சற்று நெருக்கடிகள் நிலவக் கூடும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் ஒரளவுக்கு அனுகூலங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும் என்றாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைத்து விடும். பேச்சுக்களில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகளால் வேலைப்பளு அதிகரிக்கும். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

 

குரு பகவான் வக்ர கதியில் 21-06-2021 முதல் 17-10-2021 வரை

குரு பகவான் வக்ர கதியில் சஞ்சாரம் செய்தாலும் உங்கள் ராசிக்கு 4-ல் ராகு, 10-ல் கேது, 12-ல் சனி சஞ்சரிப்பது  அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரித்து, நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலை உண்டாகும். முன்ஜாமீன் கொடுப்பதால் வீண் பிரச்சினைகளில் சிக்குவீர்கள். வெளிவட்டார பழக்கப் வழக்கங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்துச் செயல்படுவது உத்தமம்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு காரணமாக உடல் அசதி ஏற்படும். உங்கள் உழைப்பிற்கான பலனை அடைய இடையூறுகள் ஏற்படும். அசையும் அசையா சொத்து வழியில் வீண் செலவுகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் உதவியால் இருக்கும் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் ஏற்படும் பிரச்சினைகளை தவிக்க முடியும்.

 

குரு பகவான் மகர ராசியில் 18-10-2021 முதல் 19-11-2021 வரை

குருபகவான் உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சனி சேர்க்கை பெற்று சஞ்சாரம் செய்வதால்  தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டி வரும். சுக வாழ்வு பாதிப்படையும். வண்டி வாகனம், வீடு மனை போன்றவற்றால் வீண் விரயங்கள் உண்டாகும். நெருங்கியவர்கள் உதவியால் எதையும் எதிர்கொள்ள முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்பதால் பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் மிகவும் கவனமாக செயல்பட்டால் தான் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிப்பது மட்டுமில்லாமல் அதிகாரிகளிடம் தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் உண்டாகும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன் படுத்திக் கொண்டால் மட்டுமே இருப்பதை சமாளிக்க முடியும்.

 

குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 20-11-2021 முதல் 01-01-2022 வரை

குரு பகவான் தனக்கு நட்பு கிரகமான செவ்வாய் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பது ஓரளவுக்கு நற்பலன்களை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் ராகு, 12-ல் சனி சஞ்சாரம் செய்வதால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. குடும்பத்தில் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன் கிடைக்கும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும்போது நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே வீண் பிரச்சினைகளும், பிள்ளைகளால் மனநிம்மதிக் குறைவும் ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும்.  தொழில் வியாபாரத்தில் நெருக்கடிகள் ஏற்படும் காலம் என்பதால் எதிலும் கவனத்துடன் செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். உத்தியோகத்தில் பணி சுமை காரணமாக உடல் அசதி ஏற்படும். சக நண்பர்களை அனுசரித்து செல்வது நல்லது.

 

குரு பகவான் சதய நட்சத்திரத்தில் 02-01-2022 முதல் 01-03-2022 வரை

குரு பகவான் சதய நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதாலும் ராகு 4-ல், சனி 12-ல் சஞ்சரிப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் நீங்கள் மிகவும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. அலைச்சல்கள் இருக்கும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்திலும் அடிக்கடி சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றி ஒற்றுமை குறைவை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் கவனமாக இருப்பது நல்லது. வேலைபளு காரணமாக மற்றவர்கள் வேலையையும் நீங்கள் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

 

குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 02-03-2022 முதல் 13-04-2022 வரை

குரு பகவான் தனது நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும் 4-ல் ராகு, 12-ல் சனி சஞ்சாரம் செய்வதால் ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி குறையக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவும் என்றாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளிக்க முடியும். அசையும் அசையா சொத்துகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான பேச்சு வார்த்தைகளில் நல்ல செய்தி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்திலும் சிறிது அக்கறை எடுத்து கொள்ள வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே இருப்பதை காப்பாற்றிக் கொள்ள முடியும். வேலையாட்கள் மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் எதிலும் நீங்கள் முன்நின்று செயல்பட்டால் ஒரு சில நன்மைகளை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிப்பதோடு வரவேண்டிய பணத்தொகைகளில் இழுபறி நிலை ஏற்படும். மேலதிகாரிகளிடம் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

 

பரிகாரம்

கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் விரதமிருந்து கொண்டை கடலை மாலை சாற்றுவது, மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது, இல்லத்தில் குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்வது, ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது உத்தமம்.

சனி பகவான் ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரித்து ஏழரைச் சனியில் விரய சனி நடப்பதால் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது, ஊனமுற்ற ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வது சனிக்கிழமைகளில் திருப்பதி வெங்கடாசலபதியை வழிபடுவது, அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது போன்றவற்றால் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும்.

சர்பகிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது. கேதுவுக்கு பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்  கூறுவது உத்தமம்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,8                       கிழமை - வெள்ளி, சனி                     திசை - மேற்கு

கல் - நீலக்கல்            நிறம் - வெள்ளை, நீலம்                   தெய்வம் - ஐயப்பன்

No comments: