Friday, April 23, 2021

மகரம் - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022

 

மகரம்  - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022

(06-04-2021 முதல் 13-04-2022)

ஜோதிட மாமணி

முனைவர் முருகுபாலமுருகன்

 

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

ஏற்றுக் கொண்ட லட்சியங்களை நிறைவேற்றுவதையே குறிக்கோளாகக் கொண்ட மகர ராசி நேயர்களே! உங்கள் ராசியாதிபதி சனி ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்மச் சனி நடைபெறுவதால் உங்கள் தேக ஆரோக்கியத்தில் பாதிப்பு, உடல் அசதி, பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும் காலம் என்றாலும் உங்கள் ராசியில் இது நாள் வரை சஞ்சரித்த குரு வரும் 06-04-2021 முதல் 13-04-2022 வரை உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் சர்ப்ப கிரகமான கேது 11-ல் சஞ்சரிப்பதாலும் பண வரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். உங்கள் தேவைகள் அனைத்து பூர்த்தியாகும். கடந்த கால கடன் பிரச்சினைகள் எல்லாம் குறைந்து குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் குரு தனது சிறப்பு பார்வையாக 6, 8, 10-ஆம் வீடுகளை பார்வை செய்வதால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். கணவன்- மனைவி ஒற்றுமை மிகவும் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்கு உள்ள உடம்பு பாதிப்புகள் கூட படிப்படியாக குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் வாய்ப்பு, கடந்த கால வம்பு, வழக்குகள் விலகி நிம்மதியான நிலை, எடுக்கும் முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் அனைத்தும் தடைகள் விலகி கைகூடும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை விலகி படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். வேலையாட்கள் மற்றும் கூட்டாளிகளின் ஆதரவால் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் விலகி நற்பலன்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பெரிய மனிதர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில்  சிறப்பான நிலை இருக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். உங்களுக்கு இருந்த வேலைபளு குறைந்து நிம்மதியான நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மன மகிழ்ச்சி தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

உங்கள் ராசிக்கு குரு 2-ல் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்றாலும் 15-09-2021 முதல் 19-11-2021 வரை குரு உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது.

 

தேகஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். இதுவரை இருந்து வந்த மருத்துவச் செலவுகள் யாவும் குறையும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை எடுத்த வந்தவர்களுக்கு தற்போது உடல் ஆரோக்கியத்தில் மேன்மைகள் கிடைக்கும்.

குடும்பம் பொருளாதாரம்

குரு பகவான் தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் குடும்பத்தில் தடைப்பட்டு வந்த திருமண சுப காரியங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்குவீர்கள்.

கொடுக்கல்- வாங்கல்

பணவரவுகள் தாராளமாக இருப்பதால் எல்லா விதமான தேவைகளும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனத்துடன் செயல்பட்டால் அனுகூலம் உண்டாகும். உங்களுக்கு இருந்து வந்த கடன் பிரச்சினைகளும் வம்பு வழக்குகளும் குறையும். சேமிப்புகளும் பெருகும்.

தொழில் வியாபாரிகளுக்கு

செய்யும் தொழில் வியாபாரத்தில் கடந்த கால நெருக்கடிகள் குறைந்து நல்ல லாபங்கள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகள் மூலம் லாபங்கள் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அபிவிருத்தியும் பெருகும். பொருளாதாரம் நிலை மிகவும் சிறப்பாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

பணிபுரிபவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பொன், பொருள் சேரும். சிலருக்கு திருமண சுப காரியங்கள் நடைபெறும். சிலர் நினைத்தவரையே கைப்பிடிப்பர். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன், கடன்களும் குறையும். அசையும் அசையா சொத்துகள் சேரும்.

அரசியல்வாதிகளுக்கு

பெயர், புகழ், பெருமை யாவும் உயரக் கூடிய காலமாகும். பணவரவுகளும் தாராளமாக இருக்கும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்வீர்கள். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதால் மக்களின் பேராதரவினையும் தடையின்றி பெற முடியும்.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் மிக சிறப்பாக இருக்கும். உழைப்பிற்கான பலனை பெற முடியும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சியில் அரசின் உதவி கிடைக்கும். பூமி நிலம் போன்றவற்றையும் வாங்கிப் போடுவீர்கள். சேமிப்பும் பெருகும். பங்காளிகளிடம் இருந்த கருத்து வேறுப்பாடுகள் விலகி ஒற்றுமை ஏற்படும். கூலி ஆட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் உங்களின் மன அழத்தம் குறைந்து நிம்மதியுடன் செயல்பட முடியும்.

படிப்பு

இதுவரை கல்வியில் இருந்து வந்த மந்த நிலை விலகி கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பார்த்த மதிப்பெண்களை தடையின்றிப் பெற முடியும். பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மனதிற்கு மகிழ்ச்சியினை உண்டாக்கும். நல்ல நட்புகளால் நற்பலன் அமையும். உடல் சோர்வு ஏற்படும் என்றாலும் மன உறுதியுடன் செயல்பட்டால் நற்பெயர் எடுக்க முடியும்.

 

குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 06-04-2021 முதல் 21-05-2021 வரை

குரு பகவான் செவ்வாய் நட்சத்திரத்திரல் ஜென்ம ராசிக்கு 2-ல் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் குறைந்து பண வரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். குடும்பத்தில் இருந்த கடன் பிரச்சினைகள் யாவும் விலகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாவதற்கான அறிகுறிகள் தோன்றும். ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடப்பதால் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்பு தோன்றினாலும் கேது 11-ல் சஞ்சரிப்பதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள்  இருந்தாலும் கிடைக்க வேண்டிய லாபங்கள் தடைபடாது. கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனத்துடன் செயல்பட்டால் லாபங்களை அடையமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் தடையின்றிக் கிடைக்கும். சமுதாயத்தில் கௌரவமான நிலையினைப் நீங்கள் பெற முடியும். 

 

குரு பகவான் சதய நட்சத்திரத்தில் 22-05-2021 முதல் 20-06-2021 வரை

குரு பகவான் சதய நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 2-ல் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். பணம், பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். தடைப்பட்ட சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்த முடியும். ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. அதிக அலைச்சலால் உடல் அசதி ஏற்படும். கேது 11-ல் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளையும் கௌரவமான அந்தஸ்துகளையும் பெற முடியும். தொழில் வியாபாரம் தடையின்றி நடைபெறும். போட்டி பொறாமைகள் விலகி தொழிலில் நல்ல நிலையை அடைய முடியும்.

 

குரு பகவான் வக்ர கதியில் 21-06-2021 முதல் 17-10-2021 வரை

குரு பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடப்பதாலும் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகளில் சற்று ஏற்ற இறக்கமான நிலையிருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை ஏற்படும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களின் வருகையால் அனுகூலங்கள் உண்டாகும். செய்யும் தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. கேது 11-ல் சஞ்சரிப்பதால் கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். இதனால் கிடைக்க வேண்டிய லாபங்கள் தடையின்றிக் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு இருந்தாலும் உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைக்கும்.

 

குரு பகவான் மகர ராசியில் 18-10-2021 முதல் 19-11-2021 வரை

குருபகவான் ஜென்ம ராசியில் சனி சேர்க்கை பெற்று சஞ்சாரம் செய்வதால் அலைச்சல், டென்ஷன், எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகள் உண்டாகும் என்றாலும் கேது 11-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். ராகு 5-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. பொருளாதார நிலை ஒரளவுக்கு சாதகமாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு செலவுகளை சந்திப்பீர்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் ஏற்படும் நெருக்கடிகளை சமாளித்து போட்ட முதலீட்டை எடுக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிலும் சற்று கவனமுடன் செயல்படவும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற சற்று சிரமப்பட வேண்டியிருக்கும்.

 

குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 20-11-2021 முதல் 01-01-2022 வரை

குரு பகவான் தனது நட்பு கிரகமான செவ்வாய் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 2-ல் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். புத்திர வழியில் மகிழ்ச்சியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய திருமண சுப காரியங்களும் கைகூடும். ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் கேது 11-ல் சஞ்சரிப்பதால் நற்பலனை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபங்கள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் ஆதரவும் அபிவிருத்தியை நல்லபடி பெருக்க உதவும். வெளியூர் செல்லக் கூடிய வாய்ப்புகளும் பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடந்த கால வேலைபளு சற்று குறையும்.

 

குரு பகவான் சதய நட்சத்திரத்தில் 02-01-2022 முதல் 01-03-2022 வரை

குரு பகவான் சதய நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் சிறப்பான நிலை ஏற்படும். கடந்த கால தடைகள் விலகி வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. முன் கோபத்தைக் குறைத்து பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகி கொடுத்த கடன்கள் வீடு தேடி வரும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும் என்றாலும் எதையும் சமாளித்து லாபகரமான பலனை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களிடம் வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நற்பலனைத் தரும்.

 

குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 02-03-2022 முதல் 13-04-2022 வரை

குரு பகவான் தனது நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 2-ல் சஞ்சரிப்பதாலும், கேது 11-ல் சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் சுபிட்சமான நிலை ஏற்படும். தொட்டதெல்லாம் துலங்கும். நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்ற முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்பதால் சேமிப்புகள் பெருகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிட்டும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடப்பதால் உடல் நலத்தில் சிறிது பாதிப்பு தேவையற்ற வீண் மருத்துவ செலவுகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கடந்த கால பிரச்சினைகள் குறைந்து  உயர்வடைவார்கள். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. இருக்கும் இடத்தில் கௌரவமான பதவிகள் உங்களை தேடி வரும்.

 

பரிகாரம்

மகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரை சனியில் ஜென்மச் சனி நடைபெறுவதால் சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் வெங்கடாசலபதியை வழிபட்டால் சனியால் துன்பம் ஏதும் ஏற்படாது. அனுமனையும் விநாயகரையும் வழிபடுவதாலும் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும். சனிக்கிழமைகளில் எள்எண்ணெய் தீபமேற்றுவது, சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. நல்லெண்ணெய், எள், கடுகு, தோல் பொருட்கள் போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் செய்யவும்.

ஜென்ம ராசிக்கு 5-ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சரபேஸ்வரரை வழிபடுவது, சிவன் மற்றும் பைரவரை வணங்குவது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் -  5,6,8                      நிறம் - நீலம், பச்சை                            கிழமை - சனி, புதன்

கல் - நீலக்கல்            திசை - மேற்கு                                          தெய்வம் - விநாயகர்

No comments: