Monday, April 11, 2022

குரு பெயர்ச்சி பலன் 2022 - 2023 மகரம்

 குரு பெயர்ச்சி பலன் 2022 - 2023 மகரம்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

அனைவரிடமும் அன்பாக பழகும் ஆற்றலும், உதவிகள் செய்யும் நல்ல குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, இது வரை தன ஸ்தானமான 2-ல் சஞ்சரித்த ஆண்டு கோளான குரு பகவான் வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளார். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்களும் எதிலும் எதிர் நீச்சல் போட வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். இது மட்டுமின்றி சனி உங்கள் ராசியிலும் வரும் 17-01-2023 முதல் 2-லும் சஞ்சரிப்பதால் ஏழரைச்சனி நடைபெறுகிறது. சர்ப கிரகமான ராகு 4-ஆம் வீட்டிலும், கேது 10-ஆம் வீட்டிலும் இக்காலங்களில் சஞ்சரிக்க உள்ளனர். இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் தேவையற்ற செலவுகள் உண்டாகும். எதிர்பாராத மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள மருத்துவ காப்பீடு எடுத்து கொள்வது நல்லது. பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை நிலவுவதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்ளவும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கே சிரமப்பட வேண்டி இருக்கும். சிக்கனமாக செயல்படவில்லை என்றால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். குரு பார்வை 7, 9, 11-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நிலவும். குடும்ப உறுப்பினர்கள் தக்க நேரத்தில் உதவி செய்வதால் எதையும் சமாளிக்கும் பலம் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலனைப் பெற முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, நேரத்திற்கு உணவு உண்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது உத்தமம்.

தொழில் வியாபாரத்தில் நிறைய போட்டி பொறாமைகள் மறைமுக எதிர்ப்புகள் போன்றவற்றை சமாளிக்க வேண்டியிருந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களை தற்போதிய காலத்திற்கு தவிர்ப்பது, அப்படி அவசியம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தால் அதனை உங்கள் பெயரில் செய்யாமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது. எந்த வேலை என்றாலும் நீங்களே நேரடியாக களத்தில் இருந்து செயல்பட்டால் தான் போட்ட முதலீட்டை எடுக்க முடியும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று கூடுதலாக இருக்கும். சில நேரங்களில் உங்கள் பணியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட முடியாது. சக ஊழியர்களை சற்று அனுசரித்து சென்றால் நீங்கள் எடுத்த வேலையை குறித்த நேரத்தில் முடிக்க முடியும். வேலை தேடுபவர்கள் பெரிய வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்து இருக்காமல் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது, நேரம் கிடைக்கும் போது உங்கள் கல்வி திறனை மேன்படுத்தி கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடுவது எதிர்கால வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

 

உடல் ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தியபடியே இருக்கும். அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் மந்த நிலை ஏற்படும். மனைவி பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படுவதால் குடும்பத்தில் நிம்மதி குறையும். அதிக வேலைபளுவால் அலைச்சல் உடல் அசதி ஏற்படும். எடுக்கும் காரியங்களில் தடையும் உடன்பிறப்புகளால் தேவையற்ற மனசஞ்சலங்களும் ஏற்படக்கூடிய காலம் என்பதால் எதிலும் கவனம் தேவை.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்களும் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டாலும் ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். எதிர்பார்க்கும் உதவிகள் கூட சில தடைகளுக்கு பின் கிடைக்கும். அசையா சொத்துகளால் எதிர்பாராத விரயங்கள் அதிகரிக்கும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்படுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கே கடன் வாங்க வேண்டியிருக்கும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம்.

கொடுக்கல்- வாங்கல் 

கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் துறைகளில் இருப்போர் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டிய காலமிது. பணவரவுகளில் இடையூறுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை  ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படவும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் பல இடையூறுகளை சந்திப்பீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும்.

தொழில் வியாபாரம் 

தொழில் வியாபாரத்தில் வரவேண்டிய ஆடர்கள் கைமாறி போகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் ஒரு சில வாய்ப்புகள் வந்தாலும் குறித்த நேரத்திற்கு டெலிவரி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடனுதவிகள் தாமதப்படுவதால் தொழிலை விரிவு செய்வதில் இடையூறு ஏற்படும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்களும் டென்ஷன்களும் அதிகரிக்கும். எது எப்படி இருந்தாலும் உங்களின் மனோ தைரியத்தால் அடைய வேண்டிய இலக்கை அடைந்து வீடுவீர்கள்.

உத்தியோகம்

பணியில் இருப்பவர்கள் மிகவும் வளைந்து கொடுத்து செல்ல வேண்டிய காலமாகும். நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். உங்களுக்கு வரவேண்டிய பதவி உயர்வுகளை பிறர் தட்டி செல்வார்கள். இது மட்டுமின்றி பிறர் செய்யும் தவறுகளுக்கும் உங்களை பொறுப்பேற்க செய்வார்கள். வீண் பழிச்சொற்கள் உங்களின் மன நிம்மதியை குறைக்கும். வேலைபளு அதிகரிப்பதால் உடல் நிலையானது சோர்வடையும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம்.

அரசியல்

அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை காப்பாற்றி கொள்ள அதிக பாடுபட வேண்டிய இருக்கும். மக்களின் ஆதரவு குறையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடைகள் ஏற்படுவதால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற இடையூறு ஏற்படும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மற்றவர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருக்கவும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சுமாராகத்தான் இருக்கும். வயல் வேலைகளுக்கு சரியான வேலையாட்கள் கிடைக்காத காரணத்தால் உங்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளில் தாமத நிலை ஏற்படும். நீர்மட்டம் குறைவு, அதிக காற்று, மண் வளமின்மை போன்றவற்றால் பயிர்கள் பாதிப்படையும். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் வீண் வம்பு வழக்குகள் ஏற்படும். விளை நிலங்கள் வாங்கும் முயற்சிகளில் இடையூறு ஏற்படும்.

கலைஞர்கள்

கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்து கொண்டால் மட்டுமே காலத்தை நகர்த்த முடியும். பிடிவாதம், முன்கோபம், அதிகார குணம், போன்ற அனைத்தையும் தவிர்த்து சக கலைஞர்களையும் அனுசரித்து நடப்பதே நல்லது. பத்திரிக்கை நண்பர்களை பகைத்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். சுகவாழ்வு சொகுசு வாழ்வில் பாதிப்பு ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும்.

பெண்கள்

பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. மாதவிடாய் கோளாறு, உடல் சோர்வு, ஏற்படும். கணவர் வழி உறவுகளை அனுசரித்து நடந்தால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றலை பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமையால் மற்றவர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். எவ்வளவு தான் பாடுபட்டாலும் சிலரிடம் நல்ல பெயரை எடுக்க முடியாது. மனதில் உள்ள குறைகளை கூறுவதென்றால் கூட நம்பிக்கையான நபர்களிடம் கூறுவது நல்லது. பணவரவுகள் சுமாராக இருப்பதால் ஆடம்பரத்தை குறைத்து கொள்வது சிறப்பு.

மாணவ- மாணவியர் 

கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. மந்தநிலை, ஈடுபாடுயின்மை, தேவையற்ற பொழுதுபோக்கு மற்றும் நண்பர்களின் சகவாசங்கள் போன்றவற்றால் வீண் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். மதிப்பெண்கள் குறைவதால் பெற்றோர் ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாகுவீர்கள். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனம் தேவை.

 

குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 13.04.2022 முதல் 28.04.2022

குரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும் உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் சஞ்சரிப்பதும், ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாகும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் சுபகாரியங்களுக்கான முயற்சிகள் சிறு தடைக்கு பின்பு கைகூடும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் நிலவினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். வேலைபளு இருந்தாலும் அதற்கான ஆதாயம் கிடைக்காது.

குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 29.04.2022 முதல் 28.07.2022

குரு பகவான் ஜென்ம ராசிக்கு 3-ல் சனியின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், ஜென்ம ராசிக்கு 2-ல் சனி அதிசாரமாக சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் ஏற்ற இறக்கமானப் பலன்களைப் பெறுவீர்கள். பண வரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் மன வலிமையால் எதையும் சமாளிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை சோர்வு உற்சாகமின்மை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்தே இருக்கும். அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. சிறு வாய்ப்புகள் கிடைத்தாலும் அதனை தகுந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டிய நேரமாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைபளு காரணமாக ஒய்வு நேரம் குறையும். உடன் பணிபுரிபவர்கள் ஒரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம்.

குரு பகவான் வக்ரகதியில் 29.07.2022 முதல் 23.11.2022

குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகளை எதிர் கொள்ள நேரிடும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் சிறுசிறு பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலப்பலன் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். வீடு, மனை வாங்கும் எண்ணத்தை சற்று தள்ளி வைக்கவும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற முடியும். 4-ல் ராகு சஞ்சரிப்பதால் தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிப்பதால் சுக வாழ்வு பாதிப்படையும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் உயரதிகாரிகளின் ஆதரவு மனதிற்கு நிம்மதி அளிக்கும். நேரம் காலம் பார்க்காமல் உழைத்தால் விரைவில் நல்ல நிலை அடைய முடியும்.

குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 24.11.2022 முதல் 24.02.2023

குரு ஜென்ம ராசிக்கு 3-ல் சனி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி வீண் செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது முன்கோபத்தை குறைப்பது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். ராகு 4-ல், கேது 10-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த லாபத்தை ஓரளவுக்கு அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் அதிகரிக்க கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலை இருக்கும். மற்றவர்கள் வேலையையும் நீங்கள் செய்ய வேண்டி இருக்கும். சக ஊழியர்களிடம் சற்று கவனமாக நடந்து கொள்வது நல்லது.

குரு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25.02.2023 முதல் 22.04.2023

குரு புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 3-ல் சஞ்சரிப்பதும், 2-ல் சனி சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டு கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே ஏற்பட கூடிய பிரச்சினைகளால் நடக்க விருந்த சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. நேரத்திற்கு உணவு உண்பது, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். ராகு 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற பயணங்களை குறைத்து கொண்டால் அலைச்சலை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும் என்றாலும் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். வேலைபளு காரணமாக உடல் அசதி ஏற்படும்.

 

பரிகாரம்

மகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 3-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவிப்பது, வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வது, நெய் தீபமேற்றி வழிபடுவது, குரு யந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்யவும்.

ஏழரைச்சனி நடைபெறுவதால் சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வருவது நல்லது. ஆஞ்சநேயரையும், வெங்கடாசலபதியையும் வழிபடுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நல்லது.

உங்கள் ராசிக்கு 4-ல் ராகு, 10-ல் கேது சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் -  5,6,8                     நிறம் - நீலம், பச்சை                           கிழமை - சனி, புதன்

கல் - நீலக்கல்            திசை - மேற்கு                                           தெய்வம் - விநாயகர்

No comments: