Monday, April 11, 2022

குரு பெயர்ச்சி பலன் 2022 - 2023 துலாம்

குரு பெயர்ச்சி பலன் 2022 - 2023 துலாம்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்

கள்ளமில்லா உள்ளத்துடன் அனைவரிடமும் அன்பாக பழகும் கருணை உள்ளம் கொண்ட துலா ராசி நேயர்களே, ஆண்டுக் கோளான குரு பகவான் வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை ஜென்ம ராசிக்கு ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார். 6-ல் சஞ்சரிக்க உள்ள குரு தனது விஷேச பார்வையாக 2, 10, 12-ஆகிய வீடுகளை பார்வை செய்ய உள்ளார். உங்களின் பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் நீங்கள் எதிலும் சிக்கனமாக இருப்பது, கை இருப்பை கொண்டு செலவு செய்வது நல்லது. அதிக முதலீடு கொண்ட செயல்களை தற்காலிகமாக தவிர்ப்பது நல்லது.

சனிபகவான் உங்கள் ராசிக்கு வரும் 17-01-2023 முடிய 4-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு அர்தாஷ்டம சனி நடைபெறுவதாலும், கேது ஜென்ம ராசியில், ராகு 7-ம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது, நேரத்திற்கு உணவு உன்பது நல்லது. இயற்கை உணவுகளாக எடுத்து கொள்வதும் சிறப்பு. கணவன்- மனைவியிடையே ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கூட கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளால் மன நிம்மதி குறைவுகள் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்களுக்குப் பின்பே நற்பலனை அடைய முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வழியில் வீண் செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இடையூறுகள் ஏற்படும்.

தொழில் வியாபாரம் செய்பவர்கள் நீங்கள் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே போட்ட முதலீட்டை எடுக்க முடியும். தற்போது இருக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் எதிலும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்து செல்வது மூலம் தொழிலில் ஒரு சில ஆதாயங்களை அடைய முடியும். வேலையாட்கள் மூலம் வீண் பிரச்சினை ஏற்படும். சில நேரங்களில் நீங்களே நேரடியாக வேலை செய்தால் தான் எடுத்த ஆடர்களை குறித்த நேரத்தில் முடிக்க முடியும். பெரிய தொகைளை ஈடுபடுத்தி புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் காரியங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். வெளியூர் தொடர்புகள் மூலம் சற்று அனுகூலப்பலன் கிடைக்கும்.

உத்தியோகத்தில் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கப் பெற்றாலும் தேவையற்ற இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டு பிரிய கூடிய சூழ்நிலை ஏற்படும். புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கேற்ற வாய்ப்புக்காக காத்து இருக்காமல் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். தேவையற்ற அலைச்சலால் வேலைபளு காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறு ஒய்வு நேரம் குறையும் சூழ்நிலை உண்டாகும்.

உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிக்கும் சனி திருக்கணிதப்படி அதிசாரமாக வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரையும் அதன் பின்பு முழுமையாக 17-01-2023 முதல் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிக்க இருப்பது சாதகமான அமைப்பு என்பதால் உங்களுக்கு உள்ள அலைச்சல்கள் குறைந்து நற்பலன்களை அடையும் வாய்ப்பு உண்டு. எந்த ஒரு செயலிலும் தற்போது நிதானமாக செயல்பட்டால் 2023 தொடக்கத்தில் நற்பலனை அடைய முடியும்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்ள வேண்டிய நேரமாகும். நேரத்திற்கு உணவு உட்கொள்வது மூலம் வயிறு கோளாறுகளை தவிர்க்க முடியும். மனைவி பிள்ளைகள் மூலம் வீண் மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் வம்பு பிரச்சினைகள் போன்றவற்றால் மனநிம்மதி குறையும். அலைச்சல் காரணமாக உடல் அசதி இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும்

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே அடிக்கடி உண்டாக கூடிய வாக்கு வாதங்களால் ஒற்றுமை குறையும். பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்யவே எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கவும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக அமைந்து விடும். புத்திர வழியில் சிறுசிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் மிகவும் எச்சரிக்கை தேவை. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பது வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க நேரிடலாம்.

தொழில் வியாபாரம்

தொழிலில் நிறைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் நிலவும். கூட்டாளிகள் ஓரளவுக்கு சாதகமாக இருந்தாலும் வேலையாட்களின் ஒத்துழைப்பற்ற நிலையால் எதிலும் தாமத நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. எவ்வளவு தான் சோதனைகளை சந்தித்தாலும் எதையும் எதிர்கொண்டு லாபங்களை பெறக்கூடிய அளவிற்கு ஆற்றலையும் துணிவையும் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள்

பணியில் கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும். உயரதிகாரிகளின் நெருக்கடி அதிகரிப்பதால் வேலை பளு அதிகரிக்கும். அதிக நேரம் உழைக்க வேண்டியிருப்பதால் உடல் நிலை சோர்வடையும். சில நேரங்களில் வீண் பழிச் சொற்களும் பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். திறமைகளை வெளிபடுத்த இடையூறுகள் ஏற்படும். உங்களுக்கு வரவேண்டிய உயர்வுகளையும் பிறர் தட்டி செல்வார்கள். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தற்போது பயன்படுத்தி கொள்ளவும்.

அரசியல்

பணவரவுகளுக்கு தடைகள் நிலவினாலும் பதவிக்கு இடையூறு வராது. உடனிருப்பவர்களிடம் சற்று கவனமுடன் செயல்படுவதும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும் உத்தமம். கட்சி பணிகளுக்காக அலைச்சல்கள் அதிகரிக்கும். மறைமுக வருவாய்களால் வீண் பிரச்சினைகள் உண்டாகும் என்பதால் எதிலும் அதிக கவனம் தேவை. மக்களின் ஆதரவை பெற அவர்களின் தேவையறிந்து செயல்படுவது மிகவும் உத்தமம். எந்தவொரு காரியத்தை செய்வதற்கு முன்பும் சிந்தித்து செயல்படுவது மிகவும் நல்லது. எதிரிகளின் பலம் அதிகரித்து உங்களின் பலம் குறையும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்காது. சிறிது லாபத்தைக் காணவே நிறைய பாடுபட வேண்டியிருக்கும். கால் நடைகளாலும் வீண் விரயங்கள் உண்டாகும். அரசு வழியில் சுமாரான உதவியே கிடைக்கும். பூமி, நிலம் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் பங்காளிகளிடையே வீண் விரோதம் உண்டாகும். தேவைக்கேற்ற வேலை ஆட்கள் கிடைக்காமல் நடக்க வேண்டிய வேலைகள் தடைப்படும்.

கலைஞர்கள்

கலைஞர்கள் தேவையற்ற பிடிவாதங்களை தளர்த்தி கொண்டு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதே நல்லது. வரவேண்டிய சம்பள பாக்கிகளில் தாமதநிலை ஏற்படுவதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் அதிகரிக்கும். தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் ஏற்படகூடிய காலம் என்பதால் அனைவரையும் அனுசரித்து நடப்பது நல்லது. வெளியூர் தொடர்புகளால் அலைச்சல் அதிகமாக இருக்கும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு பிரச்சினைகளை உண்டாக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானம் தேவை. சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. புத்திரர்களால் சில நேரங்களில் மனசஞ்சலங்கள் உண்டாக கூடும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பரமான செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.

மாணவ மாணவியர்

கல்வியில் மந்த நிலைகள் ஏற்பட கூடும் என்றாலும் விடாமுயற்சியுடன் பாடுபட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களை தவிர்த்தால் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க முடியும். வீணான பொழுது போக்குகள் உங்களின் மனநிலையை மாற்றுவதுடன் வீண் சஞ்சலங்களையும் ஏற்படுத்தும். தகுதி போட்டிகளில் ஈடுபடும் போது சற்று கவனமுடன் நடந்து கொள்வது மிகவும் உத்தமம்.

 

குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 13.04.2022 முதல் 28.04.2022

குரு தன் சொந்த நட்சத்திரத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் ஜென்ம ராசிக்கு 6-ல் சஞ்சாரம் செய்வதால் அவ்வளவாக சாதக பலன்களை பெற முடியாது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை காணப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். சனி 4-ல் சஞ்சரிப்பதால் அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தாலும் உங்கள் ராசிக்கு சனி யோக காரகன் என்பதால் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் உங்கள் தனித் திறமையால் எதிர்பார்க்கும் லாபங்களை அடைவீர்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வேலைபளு காரணமாக மன அமைதி குறையும். வேலை தேடுபவர்கள் பெரிய வாய்ப்பை எதிர்பார்க்காமல் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது.

குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 29.04.2022 முதல் 28.07.2022

குரு உங்கள் ஜென்ம ராசிக்கு 4, 5-க்கு அதிபதியான சனியின் நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதும், சனி 4-ல் சஞ்சாரம் செய்வதும் சுமாரான அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு மந்த நிலை தோன்றும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும். எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினை பெற்று விடக் கூடிய ஆற்றல் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன் தேடும் விஷயங்களை சற்று தள்ளி வைப்பது உத்தமம். அசையா சொத்து வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்று குறையும். ராகு 7-ல் சஞ்சரிப்பதால் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வேலையாட்களை அனுசரித்து சென்றால் போட்ட முதலை எடுக்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி சுமை அதிகரித்தாலும் தடைப்பட்டுக் கொண்டிருந்த பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் வேறு ஊருக்குச் சென்று பணிபுரிய நேரிடும்.

குரு பகவான் வக்ரகதியில் 29.07.2022 முதல் 23.11.2022

குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று சிறப்பாக இருந்து எதிலும் திறம்பட செயல்பட முடியும். ராகு 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே வாக்கு வாதங்கள் தோன்றும் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. எதிர்பாராத பணவரவுகள் கிடைப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும் என்றாலும் பேச்சில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் கடந்த காலங்களில் இருந்த பிரச்சினைகள் விலகும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைத்து மன நிம்மதி ஏற்படும். தொழிலாளர்களும் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். வெளியூர் மூலம் நல்ல வாய்ப்புகள் கிடைத்து உங்கள் நெருக்கடிகள் குறையும். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். நீங்கள் எடுத்த பணியை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். உழைப்பிற்கான ஊதியம் தற்போது கிடைக்கா விட்டாலும் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்

குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 24.11.2022 முதல் 24.02.2023

ஜென்ம ராசிக்கு 6-ல் குரு சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 4, 5-க்கு அதிபதியான சனியின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். ஜென்ம ராசியில் கேது, 4-ல் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று அதிக அக்கறை எடுக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்வர்களாலும் சிறுசிறு மருத்துவ செலவுகளை சந்திப்பீர்கள். ராகு 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாக கூடும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் சுப செலவுகளை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் தேவையற்ற வகையில் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாது இருப்பது உத்தமம். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிப்பது மட்டுமில்லாமல் மற்றவர்கள் வேலையும் சேர்த்து செய்ய வேண்டி இருக்கும். அதிகாரிகள் ஆதரவு சாதகமாக இருப்பதால் கடினமான பணியை கூட குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.

குரு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25.02.2023 முதல் 22.04.2023

குருபகவான் புதன் நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரித்தாலும், 5-ல் சனி சஞ்சாரம் செய்வதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து வெற்றிகளை பெறும் ஆற்றல் உண்டாகும். சர்ப கிரகங்கள் 1, 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளித்துவிட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு உண்டாக கூடிய போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் சில தடைகளுக்கு பின் கிட்டும். வேலையாட்களால் இருந்த பிரச்சினைகள் சற்று குறைந்து மனநிம்மதி ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைப்பதால் தொழீல் ரீதியாக இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். உங்களுக்கு வேலைபளு இருந்தாலும் கௌரவ பதவிகளை அடையும் வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது.

 

பரிகாரம்

துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 6-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குரு, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது.

சனி பகவான் 4-ல் 17-01-2023 முடிய சஞ்சரிக்க இருப்பதால் சனிக்கிழமை தோறும் அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, நல்லெண்ணெய் தீபமேற்றுவது நல்லது. சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீ வெங்கடாசலபதியை வழிபட்டாலும் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும்

ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,7,8                                   நிறம் - வெள்ளை, பச்சை               கிழமை - வெள்ளி, புதன்

கல் - வைரம்                               திசை - தென் கிழக்கு                         தெய்வம் - அஷ்டலக்ஷ்மி 

No comments: