Monday, April 11, 2022

குரு பெயர்ச்சி பலன் 2022 - 2023 மிதுனம்

 குரு பெயர்ச்சி பலன் 2022 - 2023 மிதுனம்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

நல்ல அறிவாற்றலும், சிறந்த ஞாபக சக்தியும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் தொழில், உத்தியோக ரீதியாக நெருக்கடிகள் அதிகரிக்கும் என்றாலும் சர்ப கிரகமான ராகு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்களையும் எதையும் எதிர் கொள்ளும் பலத்தையும் அடைய முடியும். 10-ல் குரு பதவி பாழ் என்பது பழமொழி. சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி கொள்ளும் திறன் கொண்ட உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை கவனமாக பயன்படுத்தி கொண்டால் நற்பலனை அடைய முடியும்.

                குரு பார்வை தனது விஷேச பார்வையாக 2, 4, 6-ஆம் வீடுகளை பார்ப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் தக்க நேரத்தில் கிடைத்து குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்து விட முடியும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கடந்த காலங்களில் நிலவிய தேவையற்ற அலைச்சல்கள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் குறையும். இதுவரை இருந்து வந்த வம்பு வழக்குகளில் கூட தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும்.

சனி உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரித்து அஷ்டமச்சனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, நேரத்திற்கு உணவு உன்பது நல்லது. முடிந்த வரை வேலைபளுவை குறைத்து கொள்ளவும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது, முடிந்த வரை கடன் வாங்காமல் இருக்கும் நிதி நிலையை வைத்து நிலைமையை சமாளிப்பது நல்லது. பொதுவாக அஷ்டமச்சனி காலத்தில் தேவையற்ற வழியில் கடன்கள் அதிகரிக்கும் என்பதால் உங்கள் கை இருப்பை மீறி பண விஷயத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்காமல் இருப்பது நல்லது.

சனி திருக்கணிதப்படி அதிசாரமாக வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரையும் அதன் பின்பு முழுமையாக 17-01-2023 முதல் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிக்க இருக்கும் காலங்களில் உங்கள் சிக்கல்கள் எல்லாம் ஒரளவுக்கு குறைந்து பல்வேறு வளமான பலனை பெறுவீர்கள்.

                தொழில் வியாபாரத்தில் எதிலும் நீங்கள் முழு கவனம் செலுத்தினால் மட்டுமே போட்ட முதலீட்டை எடுக்க முடியும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும் என்பதால் அவர்களை கவனமாக கையாள்வது நல்லது. தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்து கொள்ளவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிசுமை அதிகரிக்கும். மற்றவர்கள் வேலையை சேர்த்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது, உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகி விடுவதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் ஒரு சில மருத்துவ செலவுகள் ஏற்படும். எதிர்பாராத பயணங்கள் அலைச்சலை ஏற்படுத்தக் கூடும் என்பதால் முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உணவு விஷயங்களில் சற்று கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினையை தவிர்க்கலாம்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி இடையே அன்னோன்னியம் நன்றாக அமையும். புத்திரர்களால் சில நேரங்களில் சிறுசிறு மனக்கவலைகள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். பண வரவுகள் தேவைக்கு ஏற்றவாறு இருக்கும். ஆடம்பரமாக செலவு செய்வதை சற்று குறைத்து கொள்வது நல்லது. அசையா சொத்து வகைகளில் வீண் செலவுகள் ஏற்படும். பெரியவர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உங்கள் சேமிப்புகள் சற்று குறையும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் ஷேர் போன்றவற்றில் இருப்பவர்கள் கவனமுடன் செயல்படவும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருக்கவும். கொடுத்ததை கேட்டால் அடுத்தது பகை மற்றும் தேவையற்ற விரோதங்களை சம்பாதிப்பீர்கள். ராகுவின் சாதக சஞ்சாரத்தால் எந்த வித நெருக்கடிகளையும் சமாளித்து ஏற்றங்களை அடைவீர்கள். 2023 முதல் உங்களுக்கு பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும்.

தொழில் வியாபாரம் 

நிறைய நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய காலணிது. எடுக்கும் எந்தவொரு காரியங்களிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். வேலையாட்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதமாக கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் அலைச்சல் டென்ஷன் ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். போட்டிகளையும் பொறாமைகளையும் எதிர்கொள்ள நேரிடும்.

உத்தியோகம் 

பணியில் கவனமுடன் செயல்பட வேண்டும். எவ்வளவு தான் பாடுபட்டாலும் திறமைக்கு ஏற்ற உயர்வினை அடைய முடியாது. பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டி வரும். சில நேரங்களில் வீண் பழிகளை சுமக்க வேண்டி வரலாம். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பும் அவ்வளவு சாதகமாக இருக்கும் என்று கூற முடியாது. எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டு பிரிய கூடிய சூழ்நிலைகள் உண்டாக கூடும். உயரதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

அரசியல்

மக்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருந்தாலும் நல்ல பதவி அடைவதற்கு அதிகம் பாடுபட வேண்டியிருக்கும். கட்சி பணிகளுக்காக அதிக அளவில் செலவு செய்ய வேண்டியிருக்கும். மறைமுக வருவாய்களால் தேவையற்ற சிக்கல்களில் சிக்கி கொள்வீர்கள். பத்திரிக்கை நண்பர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும், இருக்கும் பதவியை தக்க வைத்துக் கொள்வதும், தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதும் நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சுமாராகத்தான் இருக்கும். விளைப்பொருட்களுக்கு ஏற்ற விலையை சந்தையில் எதிர்பார்க்க முடியாது. அரசு வழியில் சிறுசிறு மானியத் தொகைகள் கிடைக்கும். பங்காளிகள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிர்பாராத பனவரவுகளால் உங்கள் கடன்கள் குறையும். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். கால்நடைகளால் எதிர்பார்த்த லாபங்களை பெற முடியும்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் சில காரணங்களால் கைமாறிப் போகும். எடுக்கும் எந்தவொரு முயற்சியிலும் ஜான் ஏறினால் முழம் சறுக்கும். ஆடம்பரமான செலவுகளை செய்ய முடியாமல் திண்டாட வேண்டியிருக்கும். கையில் இருக்கும் வாய்ப்புக்களை நழுவ விடாமல் காப்பாற்றி கொள்வதும், கௌரவம் பாராமல் எல்லோரிடமும் சகஜமாக பழகுவதும் நல்லது. வெளி நபர்களிடம் வீண் பேச்சை குறைக்கவும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அனுகூலப்பலனை பெற முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். புத்திர வழியில் ஒரு சில மன சஞ்சலங்கள் உண்டாகலாம். பணிபுரியும் பெண்களுக்கு சற்று வேலைபளு அதிகரிக்கும். பணவரவுகள் சற்று சாதகமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பேச வேண்டாம்.

மாணவ மாணவியர் 

படிப்பில் சற்றே நாட்டம் குறைய கூடிய காலம் என்பதால் முழு முயற்சியுடன் கல்வியில் ஈடுபாடு காட்டுவது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஒத்துழைப்புகள் உங்களுக்கு புத்துணர்ச்சியை உண்டாக்கும். புதிய நட்புகள் மூலம் உங்களின் பொது அறிவினை வளர்த்துக் கொள்ள முடியும். திறனை வெளிகாட்டும் போட்டிகளில் வெற்றி கிட்டும்.

 

குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 13.04.2022 முதல் 28.04.2022

ஜென்ம ராசிக்கு 10-ல் குரு சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும் 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதாலும் உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகி மன நிம்மதி ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெற்று விட கூடிய ஆற்றல் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சிலருக்கு வண்டி வாகனங்கள் மூலம் வீண் செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். சனி 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வேலையாட்களால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். உத்தியோகஸ்தர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை தற்போது பயன்படுத்தி கொள்வது நல்லது. சக ஊழியர்கள் உதவியால் கடினமான காரியங்களையும் எளிதில் செய்து முடிக்க முடியும்.

குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 29.04.2022 முதல் 28.07.2022

குரு பகவான் சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பது சுமாரான அமைப்பு என்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக தான் இருக்கும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, முன் கோபத்தைக் குறைப்பது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். சனி 9-ல் வரும் 29-04-2022 முதல் அதிசாரமாக சஞ்சரிப்பதால் உங்களது ஆரோக்கிய பாதிப்புகள் சற்று விலகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ராகு 11-ல் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். திறமைகளை வெளிகாட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேற சற்று தாமதநிலை ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளால் சில மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். வேலையாட்களை சற்று கவனமாக கையாள்வது நல்லது. ஒரு சில வாய்ப்புகள் கிடைத்து உங்களுக்கு இருந்த பொருட் தேக்கங்கள் குறைந்து ஆதாயம் கிடைக்கும்.

குரு பகவான் வக்ரகதியில் 29.07.2022 முதல் 23.11.2022

ஜென்ம ராசிக்கு 10-ல் சஞ்சரிக்கும் குருபகவான் வக்ர கதியில் சஞ்சரித்தாலும், 8-ல் சனி சஞ்சாரம் செய்வது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது என்பதால் எடுக்கும் முயற்சிகளில் தேவையற்ற தடைகள் வீண் விரயங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்களுக்குப் பிறகே அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள்பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும் ராகு 11-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சமாளிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்ப்புகள் இருந்தாலும் அதனை சமாளித்து ஏற்றங்களை அடைவீர்கள். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்க சற்று தாமதம் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பெற சற்று தாமத நிலை ஏற்படும். பணியில் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடுவதை தவிர்த்து உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 24.11.2022 முதல் 24.02.2023

குரு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பதாலும், சனி 8-ல் சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் நடந்து கொண்டால் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். கணவன்- மனைவி இடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. ராகு 11-ல் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் குடும்பத்தில் நல்லது நடக்கும் வாய்ப்பு, எதையும் சமாளித்து ஏற்றம் அடையும் யோகம் உண்டாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது சிறப்பு. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் என்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வேலையாட்கள் ஆதரவாக இருப்பதால் தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். சக ஊழியர்கள் உதவியால் உங்கள் வேலைபளு குறையும். சிறிது காலம் பொறுமையுடன் செயல்பட்டால் உயர் பதவிகளை அடைய முடியும்.

குரு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25.02.2023 முதல் 22.04.2023

குரு புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனமாக இருந்தால் நற்பலனை அடைய முடியும். உங்கள் ராசிக்கு 9-ல் சனி, 11-ல் ராகு சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் முன்னேற்றங்களை அடைய முடியும். கேது 5-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது சிறப்பு. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். தொழிலில் பொருட் தேக்கங்கள் விலகி நல்ல வளர்ச்சி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடி கொண்டு இருந்தவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற சிறப்பான வாய்ப்பு கிடைக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம்.

 

பரிகாரம்

மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 10-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குருப்ரீதி தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது நல்லது.

சனி பகவான் 17-01-2023 வரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சனிக்கிழமை தோறும் அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, நல்லெண்ணெய் தீபமேற்றுவது நல்லது. சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீவெங்கடாசலபதியை வழிபட்டாலும் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும்.

கேது 5-ல் சஞ்சரிப்பதால் கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,8,                     நிறம் - பச்சை, வெள்ளை,              கிழமை - புதன், வெள்ளி

கல் - மரகதம்              திசை - வடக்கு                                          தெய்வம் - விஷ்ணு

No comments: