Monday, April 11, 2022

குரு பெயர்ச்சி பலன் 2022 - 2023 கன்னி

 குரு பெயர்ச்சி பலன் 2022 - 2023 கன்னி

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

மென்மையான குணமும், அனைவரிடமும் இதமாக பழகும் ஆற்றலும் கொண்ட கன்னி ராசி நேயர்களே, பொன்னவன் என போற்றபடும் குருபகவான் வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தையும் எளிதில் பூர்த்தி செய்ய முடியும். இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். கடன் பிரச்சினைகள் குறைந்து மனநிம்மதியுடன் இருக்க முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். இதுவரை தடைபட்டு கொண்டிருந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் அனைத்தும் கைகூடி தடபுடலாக நிறைவேறும். சிலருக்கு புத்திர பாக்கியம் அமையும். குரு பார்வை ஜென்ம ராசிக்கும், 3, 11-ஆம் வீடுகளுக்கும் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பாக இருந்து அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நினைத்தபடி நிறைவேறும். சிலருக்கு வீடு மனை வாங்க கூடிய வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மறைந்து போட்ட முதலீட்டை விட அதிகப்படியான பண வரவை பெற்று லாபத்தை அடைய முடியும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தக்க நேரத்தில் காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். கூட்டாளிகள் மூலம் நற்பலன்களை அடைய முடியும். உத்தியோகத்தில் வேலைபளு குறைந்து நிம்மதியுடன் பணி புரிய முடியும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த பதவி உயர்வுகள் கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிகாட்ட நல்ல வாய்ப்புகள் அமையும்.

                சர்ப கிரகமான ராகு 8-ஆம் வீட்டிலும், கேது 2-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். குறிப்பாக மனைவி வழி உறவினர்கள் மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படும். முன்கோபத்தை குறைத்து பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உடல் நிலை நன்றாக இருக்கும் என்றாலும் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது, உணவு விஷத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது, இயற்கை உணவுகளை எடுத்து கொள்வது நல்லது.

                சனி 5-ல் சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்து ரீதியாக வீண் செலவுகள் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஆதாயத்தை அடைய முடியும். சனி திருக்கணிதப்படி அதிசாரமாக வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரையும் அதன் பின்பு முழுமையாக 17-01-2023 முதல் ருண ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் உங்களுக்கு இக்காலங்களில் மிகவும் அனுகூலங்களை அடையும் வாய்ப்பு உண்டு. தொழில், வியாபாரத்தில் மிகபெரிய முன்னேற்றம் ஏற்பட்டு நீங்கள் சமுதாயத்தில் உயர்வான நிலையை அடைய முடியும். கடன்கள் எல்லாம் குறைந்து நிம்மதியுடன் வாழ முடியும். நீண்ட நாட்களாக உள்ள தீர்க்க முடியாமல் இருந்த வம்பு, வழக்குகளில் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். வேலைபளு காரணமாக உடல் அசதி ஏற்பட்டாலும் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். அஜீரண கோளாறு, வயிறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கடந்த காலங்களில் இருந்த வீண் மருத்துவ செலவுகள் தற்போது குறையும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் பொருளாதார நிலையானது சிறப்பாக இருக்கும். இருக்கும் கடன்கள் படிப்படியாக குறையும். தடைப்பட்ட சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் தடபுடலாக நிறைவேறி மகிழ்ச்சியை உண்டாகும். புத்திர வழியில் சிறுசிறு தேவையற்ற கவலைகள் ஏற்படலாம் என்பதால் அவர்களை கவனமாக கையாள்வது நல்லது. பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும். நெருங்கியவர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைபிடித்தால் அவர்களால் அனுகூலங்களை பெற முடியும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் நற்பலன் கிடைக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த கடன்கள் தக்க நேரத்தில் திரும்பி வரும். கடந்த கால வம்பு வழக்குகளில் சாதகப்பலன் கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை அடைய முடியும்.

தொழில் வியாபாரம்

தொழிலில் இருந்த போட்டிகள் குறைந்து நல்ல வளர்ச்சி கிடைக்கும். உங்களின் கடின உழைப்பாலும் விடா முயற்சியாலும் சமுதாயத்தில் கௌரவமான நிலையை அடைய முடியும். தொழிலை விரிவு செய்வதற்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் சற்று அலைச்சல் டென்ஷன்கள் அதிகரித்தாலும் வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களால் ஆதாயத்தை அடைய முடியும்.

உத்தியோகம்

பணியில் வேலைபளு அதிகரித்தாலும் கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும் உடனிருப்பர்களின் ஒத்துழைப்புகளும் மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கும். பணி நிமித்தமாக இடமாற்றங்கள் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களும் தகுந்த வாய்ப்பினை பெறுவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களுக்கு விருப்பங்கள் நிறைவேறும். உழைப்பிற்கான ஊதியத்தை பெற முடியும்.

அரசியல்

அரசியல்வாதிகளுக்கு இது வரை இருந்த நெருக்கடிகள் குறைந்து சமுதாயத்தில் நல்ல நிலையை அடைய முடியும். பதவிக்கோ, மக்களின் ஆதரவுக்கோ குறை இருக்காது என்றாலும் கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேரிடும். அலைச்சல் காரணமாக ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகளால் எதையும் திறம்பட செய்து முடிக்க முடியும்.

விவசாயிகள்

விளைச்சல் சிறப்பாக இருந்து நல்ல லாபத்தை அடைய முடியும். பொருளாதார மிகுதியால் பூமி, மனை வாங்குவது, புதிய நவீன கருவிகள் வாங்குவது போன்றவற்றில் அனுகூலப் பலன் உண்டாகும். பங்காளிகளிடையே இருந்த பிரச்சினைகள் யாவும் விலகி ஒற்றுமை பலப்படும். வம்பு, வழக்குகள் முடிவுக்கு வந்து நிம்மதி ஏற்படும். கால்நடைகள் மூலம் ஆதயாங்களை அடைவீர்கள்.

கலைஞர்கள்

புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக் கூடிய வாய்ப்புகள் அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சில நேரங்களில் போட்டிகளும், பணவரவுகளில் நெருக்கடிகளும் நிலவினாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பயணங்களால் சிறுசிறு அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீடு, கார் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிப்புகள் பெருகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும்.

மாணவ மாணவியர்

மாணவர்கள் கல்வியில் நல்ல மேன்மையினை அடைய முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவித் தொகைகள் கிடைக்கும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை, தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை போன்ற யாவும் விலகும். விளையாட்டு போட்டிகளில் சாதனைகளை செய்வீர்கள்.

 

குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 13.04.2022 முதல் 28.04.2022

குரு தனது சொந்த நட்சத்திரத்தில் 7-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் மறைந்து உங்கள் பலமும் வளமும் கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று கடன்கள் யாவும் நிவர்த்தியாகும். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி சிறப்பான லாபங்களை பெறுவீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்வர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் யாவும் விலகுவதால் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விட முடியும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளால் ஒரளவுக்கு அனுகூலம் ஏற்படும். வெளியூர் தொடர்புகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் கிட்டும். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து கடந்த கால சோதனைகள் விலகும்.

குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 29.04.2022 முதல் 28.07.2022

குரு உங்கள் ராசியாதிபதிக்கு நட்பு கிரகமான சனியின் நட்சத்திரத்தில் 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், 6-ஆம் வீட்டில் சனி அதிசாரமாக சஞ்சாரம் செய்வதும் அனுகூலமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் நல்லது நடக்கும். நல்ல வரன்களும் தேடி வரும். சிலருக்கு வீடு மனை வாங்க கூடிய வாய்ப்பும், சுகவாழ்வு, சொகுசு வாழ்வும் சிறப்பாக அமையும். ராகு 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது பயணங்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எது எப்படி இருந்தாலும் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைப்பதால் வெளிவட்டார தொடர்புகளும் விரிவடையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நற்பெயரை எடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் குறைவதால் லாபங்கள் சிறப்பாக இருக்கும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். கூட்டாளிகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். இடமாற்றத்தை விரும்பியவர்களுக்கு இனிய செய்தி கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவு உங்களுக்கு இருப்பதால் நினைத்ததை நிறைவேற்றி கொள்ள முடியும்.

குரு பகவான் வக்ரகதியில் 29.07.2022 முதல் 23.11.2022

குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் ராகு 8-ல் சஞ்சரிப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலையும் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும் என்பதால் நினைத்த காரியங்களையும் நிறைவேற்றி விட முடியும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் கருத்து வேறுப்பாடுகள் குறையும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நவீன பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். அசையும், அசையா சொத்துகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலமானப்பலனை பெறுவார்கள். தற்போது உள்ள வாய்ப்புகளை பயன் படுத்தி கொண்டால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். தொழிலில் நல்ல லாபங்களை அடைய முடியும் என்றாலும் வேலையாட்களால் வீண் நெருக்கடிகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிட்டும். சக ஊழியர்களிடம் பேச்சில் பொறுமையுடன் இருக்கவும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும் என்பதால் நிதானமாக இருப்பது நல்லது.

குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 24.11.2022 முதல் 24.02.2023

குரு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 7-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது நற்பலன்களை வாரி வழங்கும் அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சினைகள் விலகி அதன் மூலம் சாதகப்பலன் அமையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். ராகு 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது உணவு விஷயத்தில் கட்டுப்படுடன் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி ஆதாயம் அடைய முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பொது நலக் காரியங்களுக்காக செலவு செய்யும் வாய்ப்பும், ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதுடன் எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். பயணங்களால் அலைச்சல் உடல் அசதி ஏற்படும் என்பதால் தேவையற்ற தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது.

குரு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25.02.2023 முதல் 22.04.2023

உங்கள் ராசியாதிபதி புதனின் நட்சத்திரத்தில் 7-ஆம் வீட்டில் குருபகவான் சஞ்சரிப்பதும், சனி 6-ல் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். பொன், பொருள் சேரும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் தொழிலை விரிவு படுத்த முடியும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்பு அமையும்.

 

பரிகாரம்

கன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 8-ல் ராகு 2-ல் கேது சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன் படுத்துவதும் நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,7,8                                                   நிறம் - பச்சை, நீலம்           கிழமை - புதன், சனி

கல்மரகத பச்சை                              திசை - வடக்கு                          தெய்வம் - ஸ்ரீவிஷ்ணு

No comments: