Sunday, January 1, 2017

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி 02.01.2017


உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி 02.01.2017



கேள்வி           எனக்கு தொழில் லாபகரமாக எப்போது அமையும் பரிகாரம் கூறவும்
பழனிராமன் காஞ்சிபுரம்.

பதில்                
                                கடக லக்கினம், ரேவதி நட்சத்திரம், மீன ராசியில் பிறந்துள்ள தங்கள் ஜாதகத்தில் 10ம் அதிபதி செவ்வாய் தனக்கு நட்பு கிரகமான சூரியனின் வீட்டில் தன ஸ்தானத்தில் அமைந்திருப்பதும், லக்கினாதிபதி சந்திரனும், 9ம் அதிபதி குருவும் இடம் மாறி மாறி பரிவர்த்தனை பெற்றிருப்பதும், சுக்கிரன் ஆட்சி பெற்று இருப்பதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் தொழிலில் சாதிக்கும் வாய்ப்பு, நல்ல லாபங்களை அடையும் யோகம் உண்டாகும்.
                வேலையாட்களுக்கு காரகனான சனி உங்கள் ஜாதகத்தில் வக்ர கதியில் இருப்பதால் வேலையாட்களிடம் கவனமாக இருப்பது அவசியம். தற்போது 28.10.2019 வரை சனி சேர்க்கை பெற்று அமைந்த சந்திரனின் தசா நடப்பதால் தேவையற்ற மனக்குழப்பங்கள் நிறைய ஏற்படும். மனது அலைபாயும். உறக்கமின்மை பய உணர்வு போன்றவையும் உண்டாகும். என்றாலும் ஒரளவுக்கு அடைய வேண்டிய லாபங்களை அடைந்து விடுவீர்கள். அடுத்து 2019 முதல் தொடங்கவுள்ள செவ்வாய் தசா காலங்களில் அதிகப்படியான லாபங்களை அடைய முடியும்.
                சந்திர தசா நடப்பதால் பெருமாள் வழிபாடு மேற்கொள்வது சிறப்பு, சூரியன் ராகுவின் நட்சத்திரத்தில் அமைந்து நீசம் பெற்று இருப்பதால் குல தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.


கேள்வி           நான் தனியார் வங்கி துறையில் நல்ல பதவியில் உள்ளேன். பதவி உயர்வு அல்லது நிறுவன மாற்றம் உண்டா.
சத்தியமூர்த்தி. அரக்கோணம்

பதில்                
                                துலா லக்கினம், பூராட்டாதி நட்சத்திரம், மீன ராசியில் பிறந்துள்ள தங்களுக்கு 10ம் அதிபதி சந்திரன் தனக்கு நட்பு கிரகமான குருவின் நடசத்திரத்தில் குருவின் வீட்டில் அமைந்திருப்பது  அற்புதமான அமைப்பாகும். குருவின் நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் வங்கி துறையில் வாய்ப்பு கிடைத்ததுள்ளது. தற்போது 7ல் உள்ள கேதுவின் தசா 28.2.2016 முதல் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது.
                சாய கிரகமான கேதுவை பொறுத்த வரை கேது நின்ற வீட்டு அதிபதி பலமான இருந்தால் நற்பலன் உண்டாகும். உங்கள் ஜாதகத்தில் கேது நின்ற வீட்டு அதிபதி செவ்வாய் ஆட்சி பெற்றுள்ளதாலும் கேதுவின் திசை 4வது தசாவாக நடை பெறுவதாலும் வேறு நிறுவனத்தில் நிர்வாக தொடர்புடைய வேலை கிடைக்கும் யோகம் உண்டு.


கேள்வி           எனக்கு சொந்தமாக வீடு கட்டும் யோகம் எப்போது உண்டாகும் வங்கி மூலம் கடன் கிடைக்குமா
செந்தில்குமார் கோவை.

பதில்                
                சொந்த வீடு யோகத்திற்கு உரிய ஸ்தானமான 4ம் வீடு பலம் பெற்றாலோ, 4ம்அதிபதி கேந்திர ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 1,4,7,10ம் இடங்களில் அமைந்தாலோ, அல்லது கேந்திராதிபதிகளுடன் இணைந்து அமையப்பெற்றாலோ, திரிகோண ஸ்தானங்களில் அமைந்தோ அல்லது 5,9 ம் அதிபதிகளின் சேர்க்கை பெற்றலோ சுப ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 2,11ல் அமைந்தோ அல்லது 2,11க்கு அதிபதிகளின் சேர்க்கைப் பெற்றாலோ சொந்த வீடு யோகம் உண்டாகும். அது மட்டுமின்றி சுக்கிரனும் பலமாக இருந்தால் சொந்த வீடு யோகம் உண்டாகும்
                தனுசு லக்கினம், உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 4ம் வீட்டு அதிபதி குரு 7ம் வீட்டில் தன சுய நட்சத்திரமான புனர்பூசத்தில் அமைந்து வர்கோத்தமமும் பெற்று அமைந்துள்ளார். உபய லக்கினமான தனுசு லக்கினத்தில் பிறந்துள்ள உங்களுக்கு 7ம் வீடு பாதக ஸ்தானம் என்றாலும் குரு லக்கினாதிபதி என்பதால் நற்பலனை தருவார். சொந்த வீடு யோகத்திற்கு காரகனான சுக்கிரன் திரிகோண ஸ்தானமான 9ல் தனது சொந்த நட்சத்திரமான பூரத்தில் அமைய பெற்று தற்சமயம் 01.05.2016 முதல் சுக்கிர திசை நடப்பது அற்புதமான அமைப்பு என்பதால் சொந்தமாக வீடு கட்டும் யோகம் உண்டு. சூரியனின் வீட்டில் சனி இருப்பதால் வங்கி கடன் கிடைக்க தாமதம் ஆகும். கடன் பெறுவதற்கு தனித்து செயல்படாமல் கூட்டாக சேர்ந்து 2017ல் முயற்சித்தால் நல்லது நடக்கும்.


கேள்வி           எனக்கு தகுதியான வேலை எப்போது கிடைக்கும்
டேனியல் சென்னை

பதில்                
                சிம்ம லக்கினம், அனுச நட்சத்திரம், விருக்சிக ராசியில் பிறந்துள்ள தங்கள் ஜாதகத்தில் 10ம் அதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று பஞ்சமாக புருஷ யோகத்தில் முக்கிய யோகமான மாளவிய யோகம் உண்டாகி இருப்பது அற்புதமான அமைப்பாகும். கடந்த காலத்தில் கேது தசா நடைபெற்றதால் பல்வேறு சங்கடங்களை சந்தித்து இருந்தாலும் தற்போது 10ல் வலுவாக உள்ள சுக்கிரனின் தசா நடப்பதால் வாழ்வில் படிப்படியாக முன்னேற்றத்தை அடைவீர்கள். சுக்கிர தசாவில் சுய புத்தி கடந்த பிறகு வாழ்வில் சிறப்பான முன்னேற்ற பலன்களை அடைவீர்கள்.
                விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கோட்சார ரீதியாக ஏழரை சனி நடை பெறுவதால் வேலைபளு சற்று அதிகமாக இருக்கும். உடல் நிலையில் சோர்வு உண்டாகும். என்றாலும் சனியின் நட்சத்திரமான அனுஷத்தில் பிறந்திருப்பதால் ஏழரைச்சனியால் அதிகம் பாதிப்பு ஏற்படாது. சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது அம்மன் வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.


கேள்வி           என் மகனுக்கு பேச்சு வரவில்லை எப்போது வரும்
ஸ்ரீகாந்த் காரைக்கால்

பதில்                
                ரிஷப லக்கினம், புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசியில் பிறந்துள்ள உங்கள் மகனுக்கு வாக்கு ஸ்தானமான 2ம் வீட்டின் அதிபதி புதன் திரிகோண ஸ்தானமான 9ல் அமைந்து இருப்பது நல்ல அமைப்பு என்பதால் சிறப்பான பேச்சாற்றல், எதிர்காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கும் தன்மை யாவும் ஜாதகருக்கு சிறப்பாக அமையும்.
                புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்துள்ள தங்கள் மகனுக்கு நட்சத்திராதிபதி குரு வக்ரம் பெற்றுள்ளதாலும், நவகிரகங்களில் மந்தனுக்கு காரகனான சனி ராகுவின் நட்சத்திரத்தில் அமைந்து ராகுவின் சேர்க்கை பெற்று தற்போது சனியின் புத்தி நடை பெறுவதால் ஜாதகரின் அனைத்து விதமான செயல்களிலும், நடவடிக்கைகளிலும் தாமத நிலை ஏற்படும். என்றாலும் 25.04.2017 முதல் நடைபெறவுள்ள  புதன் புத்தி காலங்களில் ஜாதகருக்கு பேசும் திறன் படிப்படியாக உயரும்.
                குரு வக்ர கதியில் அமைந்து குரு தசா நடப்பதால் குரு ப்ரீதி, தட்சிணமூர்த்தியை வழிபாடு செய்வது, குல தெய்வ வழிபாடுகள் மேற்கொள்வது நல்லது.



கேள்வி  எனக்கு எப்போதும் கடன் இருக்கிறது எப்போது குறையும். பரிகாரம் கூறவும்.
சீனிவாசன், கோவை.

பதில்
                தனுசு லக்கினம், மக நட்சத்திரம், சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கடன்களுக்கு காரகனான சனி வக்ரம் பெற்று, தனக்கு பகை கிரகரமான செவ்வாயின் வீட்டில், பாவ கிரகமான ராகுவின் சேர்க்கை பெற்று, விரய ஸ்தானமான 12ல் அமைய பெற்றதால் உங்கள் பெயரில் வாங்கும் கடன்களை அடைக்க சிரம்மங்கள் உண்டாகும்.
                ஜனன ஜாதகத்தில் சனி பலம் இழந்தவர்கள் கடன் வாங்காமல் இருப்பது நல்லது. அப்படியே வாங்கினாலும் தன் பெயரில் வாங்காமல் மற்றவர்கள் பெயரில் வாங்குவது உத்தமம். உங்களுக்கு தற்சமயம் 12ல் உள்ள ராகு தசாவில் லக்கினத்திற்கு 6ம் அதிபதியான சுக்கிரனின் புத்தி 30.2.2018 வரை நடைபெறவுள்ளதால் கடன் பிரச்சனைகள் இருந்து கொண்டு தான் இருக்கும். 2018 ஏப்ரல் முதல் லக்கினாதிபதி குருவுக்கு நட்பு கிரகமான சூரியனின் புக்தி தொடங்கும் போது கடன்கள் படிப்படியாக குறையும். தற்போது ராகு தசா நடை பெறுவதால் முன்கோபத்தை குறைத்து கொள்வது, அம்மன் வழிபாடு துர்கை வழிபாடு மேற்கொள்வது சிறப்பு.


கேள்வி           எனக்கு அரசு துறையில் வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டா
கார்த்திகேயன்

பதில்                
                                மகர லக்கினம், மிருக சீரிஷ நட்சத்திரம், மிதுன ராசியில் பிறந்துள்ள தங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்கினத்திற்கு 10ம் அதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று 3ல் அமைந்து, 3,12க்கு அதிபதியான குரு  சுக்கிரனின் வீடான ரிஷபத்தில் அமைந்து குரு சுக்கிரன் பரிவர்த்தனை பெற்றிருப்பது நல்ல அமைப்பாகும். மிதுன ராசிக்கு 10,12க்கு அதிபதியான குருவும் சுக்கிரனும் பரிவர்த்தனை பெற்று அமைந்திருப்பதாலும் ஜலராசியான மீனத்தில் சுக்கிரன் அமைந்து கால புருஷப்படி 12ம் பாவகமாக வருவதாலும், அதிலும் தற்சமயம் ஜல ராசியான கடகத்தில் அமைந்த சனியின் தசா 06.04.2012 முதல் நடைபெறுவதாலும் அரசு துறையை விட வெளியூர், வெளிநாடு மூலம் அனுகூலம், பன்னாட்டு நிறுவனம் மூலம் சாதகமான பலனை அடையும் யோகம் உள்ளது. அதற்கான முயற்சிகளை செய்வது நல்லது.  



No comments: