Friday, December 9, 2016

புத்தாண்டு பலன்கள் 2017 கடகம்

புத்தாண்டு பலன்கள் 2017  கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் -  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி
சென்னை -- 600 026 தமிழ்நாடுஇந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

Visit as @ www.muruguastrology.com


சாந்தமும் சகிப்புத்தன்மையும் அமைதிகாக்கும் குணமும் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இந்த 2017-ஆம் ஆண்டு முழுவதிலும் சனி பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது  சுமாரான அமைப்பே ஆகும். அதுபோல ஆண்டு கோளான குருபகவானும் ஆண்டின் முற்பாதியில் முயற்சி ஸ்தானமான -ஆம் வீட்டிலும், அதன்பின்னர் சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க  இருப்பதும் சாதகமான அமைப்பு என்று கூறிவிடமுடியாது. எனவே, இந்த 2017-ஆம் ஆண்டில் நீங்கள் நன்மை, தீமை கலந்தப் பலன்களையேப் பெறுவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமைந்தாலும் ஆடம்பரமாகச் செலவுகள் செய்வதை தவிர்த்தால் மட்டுமே கடனின்றி தப்பிக்கலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரைநம்பி முன்ஜாமீன் கொடுப்பது வாக்குறுதி கொடுப்பது, போன்றவற்றை தவிர்க்கவும். முன்கோபத்தை குறைப்பது. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது போன்றவற்றால் நிறைய பிரச்சினைகளை சமாளித்து விடமுடியும். குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. சர்ப்பகிரகங்களான ராகு- கேது முதலில் 2, 8-ல் சஞ்சரிப்பதும்,  27-07-2017 முதல் ராகு ஜென்ம ராசியிலும், கேது 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். உற்றார்- உறவினர்களை மிகவும் அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வருடம் சற்று மந்தமான நிலையே தொடரும் என்றாலும் பொருள் தேக்கமின்றி சமாளிக்க முடியும். உத்தியோகஸ் தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். எந்தவொரு விஷயத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து கவனமுடன் செயல்படவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே முன்னேற முடியும்.

உடல் ஆரோக்கியம் 



உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தினாலும் உடனடியாக சரியாகிவிடும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடமுடியும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் நெருங்கியவர்களாலும் சிலநேரங்களில் மருத்துவச் செலவுகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன், மனசஞ்சலங்கள் போன்றவை ஏற்படும்.

குடும்பம், பொருளாதார நிலை  



குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துகொள்வதுபேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது போன்றவற்றின்மூலம் குடும்பத்தில் ஒற்றுமையை நிலைநாட்டமுடியும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் நடைபெறுவதில் சிலதடைதாமதங்கள் ஏற்பட்டாலும் கைகூடும். பணவரவுகள் ஏற்ற இறக்கத்தோடு அமையும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. பிறர் விஷயங்ளில் தலையீடு செய்வதை தவிர்ப்பது வீண்பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க வழிவகுக்கும். 

கொடுக்கல்- வாங்கல் 



கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் துறையில் இருப்பவர்களுக்கு இது ஏற்றம் தரும் ஆண்டு எனக் கூறமுடியாது. எனவே, பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதையும் பிறரைநம்பி வாக்குறுதிகள் கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவு குறையும். வம்பு வழக்குகளை சமாளிக்க முடியும்.
தொழில், வியாபாரம் 


தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் மிகவும் கவனம் தேவை. எதிர்பார்க்கும் கடன் உதவிகள் தாமதப்படக்கூடிய காலம் என்பதால் பணவிஷயங்களில் நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலும் ஏற்படும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்குமே தவிர அனுகூலங்கள் இருக்காது. உடனிருப்பவர்களையும் தொழிலாளர் களையும் அனுசரித்து நடப்பது நல்லது.

உத்தியோகம்  



உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கக் கூடும். என்றாலும் உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் உங்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமாகத் தோன்றாது. எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது செய்துமுடித்து வெற்றிபெறுவீர்கள். உடன் பணிபுரிபவர்களிடையே சிறுசிறு மனசஞ்சலங்கள் ஏற்பட்டாலும் உங்களின் திறமைகளுக்கு பாராட்டுகள் கிடைக்கும்.

பெண்கள்  



உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபடமுடியும். பணவரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் நிலவினாலும் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்ளுவது அனுகூலமான பலனை ஏற்படுத்தும். குடும்ப விஷயங்களை அனைவரிடமும் சகஜமாகப் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. பணிபுரியும் பெண்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

அரசியல்



அரசியல்வாதிகளின் பெயர், புகழ் உயரும். மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சற்று தடைகளை சந்தித்தாலும் உங்களின் முழுமுயற்சியால் எதையும் சமாளிப்பீர்கள். கட்சிப் பணிகளுக்காக அதிகம் செலவுசெய்ய நேரும். அலைச்சல்கள் அதிகரிக்கும் என்றாலும் மக்களின் ஆதரவுக்கு குறைவிருக்காது.

விவசாயிகள் 



விவசாயிகள் எதிர்பார்க்கும் லாபங்கள் தடைபட்டாலும் பட்ட பாட்டிற்கான பலனைப் பெற்றுவிடமுடியும். அரசுவழியில் எதிர்பார்க்கும் கடனுதவிகளும் சற்று தாமதத்துடன் அமையும். கால்நடைகளால் சிறப்பான நிலை ஏற்படும். குடும்பத்திலும் மகிழ்ச்சியான நிலை இருக்கும்.

மாணவ- மாணவியர் 



மாணவ- மாணவிகள் எதிர்பார்க்கும் மதிப்பெண்ணைப் பெற கல்வியில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு எப்போதும் உண்டு. அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தடைகளுக்குப்பின் கிட்டும். விளையாட்டுப் போட்டிகளிலும் பரிசுகளைப் பெற முடியும். பயணங்களில் கவனம் தேவை.

மாதப்பலன்கள்


ஜனவரி



உங்கள் ஜென்ம ராசிக்கு 2-ல் ராகு 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் மாத முற்பாதி வரை சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் உங்களுக்கு தேவையற்ற பிரசினைகளை ஏற்படுத்தும். உற்றார்- உறவினர்களின் ஒத்துழைப்பு இருக்காது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளிடையே சிறுசிறு பிரச்சனைகள் தோன்றும். பயணங்களால் சாதகமானப் பலன்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு சிறப்பான உயர்வுகள் உண்டாகும். துர்கை அம்மனை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்:  02-01-2017 அதிகாலை 04.25 மணி முதல் 04-01-2017 பகல் 11.15 மணி வரை. மற்றும்  29-01-2017 காலை 10.50 மணி முதல் 31-01-2017 மாலை 04.48 மணி வரை 

பிப்ரவரி



மாத கோளான சூரியன் 7, 8-ல் சாதகமற்று சஞ்சரிப்பதும் 2-ல் ராகு சஞ்சாரம் செய்வதும், அதிசாரமாக 4-ல் குரு சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்று கூறமுடியாது. இதனால் குடும்பத்தில் கணவன்- மனைவிடையே கருத்து வேறுபாடுகளும், நெருங்கியவர்களால் தேவை யற்ற பிரச்சினைகளும் உண்டாகும். பணவரவுகள் ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப் பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் ஏற்படும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திப்பார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. ராகுகாலங்களில் துர்க்கையை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்:  25-02-2017 இரவு 07.14 மணி முதல் 27-02-2017 இரவு 12.09 மணி வரை

மார்ச்



உங்கள் ஜென்ம ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் சூரியன், கேது சஞ்சாரம் செய்வதால் குடும்பத்திலுள்ளவர்களிடம் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். எதிலும் நிதானமாகச் செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடையமுடியும். பணவரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பதும், திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதையும் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்திலும் சுமாரான லாபம் அமையும். ஓரளவுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவதால் தொழிலில் அபி விருத்தி சற்றே பெருகும். உடல் ஆரோக்கியத்திலும் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். நீங்கள் சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்:  25-03-2017 அதிகாலை 04.53 மணி முதல் 27-03-2017 காலை 09.38 மணி வரை 

ஏப்ரல்



உங்கள் ஜென்ம ராசிக்கு 9-ல் சுக்கிரன் 11-ஆம் தேதி முதல் 11-ல் செவ்வாய், சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தெய்வீக காரியங்களிலும் ஈடுபாடு அதிகரிக்கும். பயணங்களாலும் அனுகூலங்கள் உண்டாகும். புத்திரர்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் இரட்டிப்பு லாபத்தைப் பெறமுடியும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். நினைத்ததை நிறைவேற்றி விடமுடியும். இம்மாதம் நீங்கள் சனிக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்:  21-04-2017 மதியம் 02.16 மணி முதல் 23-04-2017 இரவு 07.56 மணி வரை 

மே



மாத கோளான சூரியன் 10, 11-ல் சாதகமாக சஞ்சரிப்பதாலும், 9-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதாலும் நினைத்த காரியங்கள் நிறைவேறும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கல் போன்ற விஷயங்களில் சற்று கவனம் தேவை. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் ஓரளவுக்கு சாதகமானப் பலனைப் பெறுவார்கள். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயங்களிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. குரு ப்ரீதி தட்சிணா மூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்:  18-05-2017 இரவு 10.08 மணி முதல் 21-05-2017 அதிகாலை 05.18 மணி வரை 

ஜுன்



ஜீவன ஸ்தானமான 10ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதாலும், மாத முற்பாதியில்  11-ல் சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதாலும், தொழில், வியாபாரத்தில் லாபங்கள் ஏற்படும். கூட்டாளிகளையும், தொழிலாளர் களையும் சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றப்படியிருப்பதால், குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியும். பணம்  கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. கணவன்- மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ற உயர்வு சற்று தாமதப்படும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். இம்மாதம் தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்:  15-06-2017 அதிகாலை 04.24 மணி முதல் 17-06-2017 பகல் 12.44 மணி வரை 

ஜுலை



உங்கள் ஜென்ம ராசிக்கு 12-ல் சூரியன் செவ்வாய், 3-ல் குரு சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். இதுமட்டுமின்றி இம்மாதம் 27-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு- கேது பெயர்ச்சியின்மூலம் ராகு ஜென்ம ராசியிலும், கேது 7-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யவுள்ளதால்  தேவை யற்ற அலைச்சல் டென்ஷன், ஆரோக்கிய ரீதியாக பாதிப்பு உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் வீண்விரயங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பணவரவு சுமாராக இருக்கும். முருகப்பெருமானை வழிபாடுவது நல்லது.

சந்திராஷ்டமம்:  12-07-2017 காலை 09.59 மணி முதல் 14-07-2017 மாலை 06.33 மணி வரை 

ஆகஸ்ட்



உங்கள் ஜென்ம ராசியில்  சூரியன் செவ்வாய், 3-ல் குரு சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன்கோபத்தை குறைப்பது நல்லது. கூட்டுத்தொழில் செய்பவர்கள் வேலையாட்களாலும், கூட்டாளிகளாலும் சிறுசிறு பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பார்த்த லாபத்தை அடையமுடியும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் தேவையற்ற வீண் வம்பு வழக்குகளையும் சந்திக்க நேரிடும். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்  08-08-2017 மாலை 04.12 மணி முதல் 10-08-2017 இரவு 12.08 மணி வரை 

செப்டம்பர்



உங்கள் ஜென்ம ராசிக்கு குடும்ப ஸ்தானமான 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், மாதப் பிற்பாதியில் முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எடுக்கும் முயற்சி களில் எதிர்நீச்சல் போட்டாவது உயர்வினை அடைவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு நிம்மதிக் குறைவு ஏற்படும். ஆரோக்கிய ரீதியாக பாதிப்பு, குடும்பத்திலுள்ளவர்களால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். உற்றார்- உறவினர்களிடையேயும் வீண்வாக்குவாதங்கள் அதிகரிக்கும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில் மந்த நிலையில் நடைபெறும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்:  04-09-2017 இரவு 11.52 மணி முதல் 07-09-2017 காலை 07.00  மணி வரை 

அக்டோபர்



ஜென்ம ராசிக்கு குடும்ப ஸ்தானமான 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும், ஓரளவுக்கு அனுகூலங்களை ஏற்படுத்தும் அமைப்பு ஆகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது மூலம் தேவையற்ற மருத்துவச் செலவுகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவி இருவரும் அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடையமுடியும். கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்:  02-10-2017 காலை 08.48 மணி முதல் 04.10.2017 மதியம் 03.47 மணி வரை மற்றும்  29.10.2017 மாலை 05.56 மணி முதல் 01.11.2017 அதிகாலை 01.46 மணி வரை

நவம்பர்



ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சூரியன் சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு இல்லை என்றாலும், முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் ஏற்ற இறக்கமானப் பலன்களை பெற முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடனிருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாவதோடு குடும்பத்திலுள்ளவர்களாலும் அடிக்கடி மருத்துவச் செலவுகள் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாது. நெருங்கியவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதி குறையும். பெருமானை வழபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்:  26-11-2017 அதிகாலை 01.59 மணி முதல் 28-11-2017 பகல் 11.17 மணி வரை

டிசம்பர்



ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், மாதப் பிற்பாதியில் ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் ஓரளவுக்கு சாதகமான அமைப்பாகும். பொருளாதார ரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபார ரீதியாக ஓரளவுக்கு அனுகூலப்பலனை பெறுவீர்கள். உத்தியோகஸ்தலர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் சாதகமானப் பலன்களை அடைய முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்:  23-12-2017 காலை 08.29 மணி முதல் 25-12-2017 மாலை 06.55 மணி வரை 

அதிர்ஷ்டம் அளிப்பவை



எண் : 1, 2, 3, 9; நிறம் : வெள்ளை, சிவப்பு; கிழமை : திங்கள்,வியாழன்; கல் :  முத்து; திசை : வடகிழக்கு; தெய்வம் : வெங்கடாசலபதி.

No comments: