Friday, March 18, 2022

ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2022-2023 கடகம்

 ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2022-2023

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

யாருக்கும் அஞ்சாத குணமும் மற்றவர்களை கவரக்கூடிய உடலமைப்பும் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5, 11-ல் சஞ்சரித்த ராகு கேது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை (வாக்கியப்படி 21-03-2022 முதல் 08-10-2023 வரை). கேது ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டிலும், ராகு ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதும், சனி 7-ல் சஞ்சாரம் செய்வதும் அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. தேவையில்லாத அலைச்சல், வேலைபளு காரணமாக உடல் அசதி இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். அசையும் அசையா சொத்துக்களால் சுப செலவுகளை சந்திப்பீர்கள்.

பொன்னவன் என போற்றப்படும் குரு வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் உங்களது பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் அடையும் யோகம் உண்டு. குரு பார்வை 1, 3, 5 ஆகிய ஸ்தானங்களுக்கு இருப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும் யோகம், பிள்ளைகளால் இருந்த கவலைகள் மறைந்து மகிழ்ச்சி ஏற்படும் யோகம் வரும் நாட்களில் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். ஆன்மீக தெய்வீக தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

                தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் கிடைப்பது மட்டுமின்றி தொழிலை அபிவிருத்தி செய்யும் யோகம் உண்டாகும். கூட்டாளிகளையும், வேலையாட்களையும் அனுசரித்து செல்வது செல்வது மூலம் வீண் செலவுகளை தவிர்க்க முடியும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் உங்கள் முயற்சிகளுக்கு நற்பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைபளு அதிகமாக இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எடுக்கும் பணிகளை உங்கள் தனி திறமையால் சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் உண்டு. புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

                உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிக்கும் சனி திருக்கணிதப்படி வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரை அதிசாரமாகவும், அதன் பின்பு முழுமையாக 17-01-2023 முதல் உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரித்து அஷ்டம சனி நடைபெற இருப்பதால் உங்கள் உடல் நலத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது.

                2023 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை உங்களுக்கு பல்வேறு அனுகூலமான பலன்கள் கிடைக்கும் யோகம் உண்டு என்றாலும் 22-04-2023 முதல் குரு 10-ல் சஞ்சரிக்க உள்ளதாலும் அக்காலத்தில் அஷ்டமச் சனியும் நடக்கும் என்பதால் நீங்கள் பொருளாதார ரீதியாக சற்று நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என்பதால் எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாக கூடிய காலம் என்பதால் பயணங்களை தவிர்க்கவும். தொழில் வியாபாரதில் நீங்கள் கவனமாக செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றியபடியே இருக்கும் என்பதால் உடற்பயிற்சி செய்வது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது உத்தமம். தேவையற்ற மனக்குழப்பங்களால் நிம்மதி குறைவு உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது சற்று ஆறுதலை தரும். அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும் என்பதால் எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும் விட்டுக் கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்பதால் உங்களது அனைத்து தேவைகளும் எளிதில் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை சற்று குறைப்பது உத்தமம். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். சுபகாரிய முயற்சிகளில் வரும் நாட்களில் நற்பலன் கிடைக்கும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வேலைபளு காரணமாக உடல் அசதி இருந்தாலும் கௌரவ பதவிகளை அடைய முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். பொருளாதாரநிலை மிக சிறப்பாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எடுத்த பணியை குறிப்பிட்ட நேரத்தில் சிறப்பாக முடிக்க முடியும். உயர் அதிகாரிகள் ஆதரவால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வரும் நாட்களில் சிறப்பாக வாய்ப்புகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறைந்து படிபடியான முன்னேற்றம் ஏற்படும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் நீங்கள் அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் சாதிக்கும் யோகம் உண்டாகும். கூட்டாளிகள் ஆதரவு சற்று சுமாராக இருக்கும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வெளியூர், வெளிநாடு மூலம் எதிர்பார்க்கும் லாபம் ஓரளவுக்கு கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் பொருளாதார அனுகூலம் உண்டு.

கொடுக்கல்- வாங்கல்

பண வரவுகள் சிறப்பாக இருக்கும் காலம் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நற்பலனை அடைய முடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இழுபறி நிலை நிடித்தாலும் தக்க நேரத்தில் திரும்பி வரும்பண விஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதில் சிந்தித்து செயல்பட்டால் நற்பலன் கிடைக்கும். உடன் இருப்பவர்களை சற்று அனுசரித்து சென்றால் எந்த நெருக்கடிகளும் இன்றி அன்றாட செயல்களை செய்ய முடியும்.

அரசியல்

மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் இடையூறுகள் உண்டாவதால் அவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். பத்திரிக்கை நண்பர்களை பகைத்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். நீங்கள் எதிர்பார்க்கும் கௌரவ பதவிகள் தேடி வரும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேரிடும்- என்றாலும் பணவரவுகள் தக்க நேரத்தில் கிடைக்கும். உடன் பழகுபவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்து சந்தையில் விலை பொருளுக்கு ஏற்ற விலை கிடைக்கும். காய், கனி, பூ போன்றவற்றாலும் கால் நடைகளாலும் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். சில இடங்களில் நீர் வரத்து குறைவதால் தொடர்ந்து பயிரிட முடியாத நிலை ஏற்படும். அரசு வழியில் மானிய உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் கூலி ஆட்கள் ஒத்துழைப்பு நன்றாக இல்லாத காரணத்தால் உங்களுக்கு வேலைபளு அதிகரிக்கும்.

கலைஞர்கள்

நல்ல வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வரவேண்டிய பணத் தொகைகள் தக்க நேரத்தில் கிடைப்பதால் கடந்த கால கடன்கள் பைசல் ஆகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். சுகபோக வாழ்வை அனுபவிக்க இடையூறு ஏற்படும். இசைத் துறைகளில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றங்கள் உண்டாகும்.

பெண்கள்

உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் நல்ல செய்தி கிடைக்கும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு ஆதாயப்பலனை அடைய முடியும்.

மாணவ மாணவியர்

கல்வியில் சற்றே மந்த நிலை உண்டாகும். முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடையலாம். தேவையற்ற நட்புக்களால் வீண் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும் என்பதால் நல்ல நண்பர்களை தோந்தெடுத்து பழகுவது உத்தமம். கல்வி ரீதியாக மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை.

 

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 12-04-2022 முதல் 14-06-2022 வரை

ராகு சூரியன் நட்சத்திரத்தில் 10-ல், கேது குரு நட்சத்திரத்தில் 4-ல் சஞ்சரிப்பதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே அனுகூலங்களை அடைய முடியும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். அசையா சொத்து வழியில் சுப செலவுகள் உண்டாகும். குரு 9-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொருளாதாரம் மேன்மையடையும். கடன்களும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மகிழ்ச்சி நிலவும். கணவன்--- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரிய முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் அவர்கள் மூலம் ஆதாயம் அடைய முடியும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நி¬வேறும். பயணங்களால் அலைச்சல் அதனால் உடல் அசதி ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கடந்த காலங்களில் இருந்த நெருக்கடிகள் மறைந்து தற்போது லாபத்தை ஈட்ட முடியும்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 15-06-2022 முதல் 17-10-2022 வரை

ராகு சுக்கிரன் நட்சத்திரத்தில் 10-ல், கேது குரு நட்சத்திரத்தில் 4-ல் சஞ்சரிப்பதால் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதனை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். குரு 9-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் நன்றாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றியினைப் பெறுவீர்கள். சனி 7-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்லவும். அசையும் அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்தவர்களுக்கு இக்காலத்தில் நல்ல செய்தி கிடைக்கும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்க கூடும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகள் மூலம் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் அவர்களை கலந்தாலோசித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருந்தாலும் உயரதிகாரிகளின் ஊக்குவிப்புகள் உற்சாகத்தை அளிக்கும். எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 18-10-2022 முதல் 20-02-2023 வரை

ராகு சுக்கிரன் நட்சத்திரத்தில் 10-ல், கேது ராகு நட்சத்திரத்தில் 4-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் சற்று நிதானமாக செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். குரு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலங்களை அடைவீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலன்களை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். சிலருக்கு எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் மூலம் நல்ல செய்தி வரும். தொழில் வியாபாரத்தில் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். நல்ல வாய்ப்புகள் கிடைத்து போட்ட முதலீட்டை உங்கள் தனி திறமையால் எடுத்து விட முடியும். கூட்டாளிகளையும் வேலையாட்களை அனுசரித்து சென்றால் நற்பலனை அடையலாம்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 21-02-2023 முதல் 26-06-2023 வரை

ராகு அசுவனி நட்சத்திரத்தில் 10-ல், கேது சுவாதி நட்சத்திரத்தில் 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். சனி 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது இயற்கை உணவுகளை உண்பது உடல் நலத்திற்கு நல்லது. வரும் 22-04-2023 வரை குரு 9-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளும் பலம், பண வரவுகள் சாதகமாக இருக்கும் நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும் என்பதால் சிறு பிரச்சினை என்றாலும் உடனே சிகிச்கை எடுத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவி இடையே பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். தேவையற்ற பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை உண்டாகும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள்  கூட்டாளிகளை அனுசரித்து செல்வது, கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். அரசு வழி அதிகாரிகள் செய்யும் கெடுபிடிகளால் செய்யும் தொழிலில் நிம்மதி குறையும். வேலையாட்கள் தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தும் காலம் என்பதால் அவர்களை கவனத்துடன் கையாள்வது நல்லது.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சித்திரை நட்சத்திரத்தில் 26-06-2023 முதல் 30-10-2023 வரை

ராகு அசுவனி நட்சத்திரத்தில் 10-ல், கேது சித்திரை நட்சத்திரத்தில் 4-ல் சஞ்சரிப்பதாலும், சனி 8-ல், குரு 10-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் கவனமாக செயல்பட வேண்டிய காலமாகும். உடல் ஆரோக்கிய பாதிப்புகளால் எடுத்த பணிகளை முடிப்பதில் இடையூறுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது கவனமுடன் இருப்பது நல்லது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். அசையும் அசையா சொத்துக்கள் மூலமும் வீண் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று நெருக்கடி நிலை நிலவினாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கிடைக்கும் வாய்ப்புகளை தற்போதிய காலத்தில் பயன்படுத்தி கொள்வது நல்லது. நீங்கள் தொழிலுக்காக எதிர்பார்க்கும் பண உதவிகள் கிடைக்க இடையூறுகள் ஏற்படும். கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். சக ஊழியர்களை அனுசரித்து சென்றால் எடுத்த பணியை சரியான நேரத்தில் முடித்து விட முடியும்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9,                 நிறம் - வெள்ளை, சிவப்பு              கிழமை - திங்கள், வியாழன்

கல்முத்து திசை - வடகிழக்கு               தெய்வம் - வெங்கடாசலபதி

 

பரிகாரம்

கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 4-ல் கேது, 10-ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை தொழு நோயாளிகளுக்கு தானம் கொடுப்பது. அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்  கூறுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

No comments: