Friday, March 18, 2022

ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2022-2023 மேஷம்

 ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2022-2023

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்

தன்னை நம்பியவர்களை எத்தகைய துன்பத்தில் இருந்தும் காப்பாற்றக்கூடிய பரந்த மனப்பான்மை கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இது நாள் வரை 2, 8-ல் சஞ்சரித்த ராகு, கேது தற்போது ஏற்படும் ராகு கேது பெயர்ச்சியால் திருக்கணிப்படி வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை (வாக்கியப்படி 21-03-2022 முதல் 08-10-2023 வரை). சர்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசியிலும், கேது 7-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய உள்ளனர். செவ்வாயின் ராசியில் பிறந்த உங்களுக்கு ராகு ஜென்ம ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் சில நேரங்களில் உங்கள் நிதானத்தை இழக்க நேரிடும் என்பதால் எதை செய்வது என்றாலும் யோசித்து செய்வது நல்லது. முன்கோபத்தை குறைத்து கொண்டு எதிலும் பொறுமையுடன் செயல்பட்டால் தான் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது சிறப்பு. அதிலும் குறிப்பாக புது மண தம்பதிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அலர்ஜி பிரச்சினை, மனைவிக்கு உடம்பு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது.

                இக்காலங்களில் ஆண்டு கோளான குரு உங்கள் ராசிக்கு 13-04-2022 முதல் 22-04-2023 முடிய விரய ஸ்தாதனமான 12லும் அதன் பின்பு ஜென்ம ராசியிலும் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகளில் ஏற்ற தாழ்வுகள் தான் இருக்குமே தவிர தாராள வரவுகளை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டு உங்கள் கையில் இருப்பதை வைத்து செலவு செய்தால் நிலைமையை சமாளிக்க முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பது, வாக்குறுதி அளிப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படலாம் என்பதால் கடினமாக முயற்சித்தால் தான் ஒரு சிறு செயலையும் செய்து முடிக்க முடியும். 2023 ஏப்ரலுக்கு பிறகு ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்கும் போது 5, 7, 9-ஆம் வீட்டை பார்க்கும் என்பதால் திருமண சுப காரிய முயற்சிகள் எளிதில் கைகூடும் யோகமும் பிள்ளைகள் மூலம் நற்பலனும் கிடைக்கும்.                

                ஒரு ராசியில் நீண்ட நாட்கள் சஞ்சரிக்கும் கிரகமான சனி உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் கவனமாக செயல்படுவது நல்லது. சிறிது காலம் சற்று பொறுமையுடன் இருப்பது உத்தமம். திருக்கணிதப்படி வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரை சனி அதிசாரமாக 11-ல் சஞ்சரிக்க இருப்பதும், அதன் பிறகு முழுமையாக வரும் 17-01-2023 முதல் சனி 11-ல் சஞ்சாரம் செய்யும் காலத்தில் தொழில் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். தொழிலில் அதிகபடியான லாபத்தை அடையும் யோகமும், தொழிலை விருத்தி செய்யவும் முடியும். உத்தியோகஸ்தர்கள் திறமைகள் பாராட்டப்படும். உயர் பதவியை அடையும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வாழ்க்கை தரம் உயரும். பல்வேறு வகையில் முன்னேற்றங்களை அடைய முடியும்.

  

உடல் ஆரோக்கியம்

உடல் நிலை சற்று சாதகமாக இருக்கும், குரு பார்வை 6, 8-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் கடந்த கால சோர்வுகள் விலகி நீங்கள் சற்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள் என்றாலும் முன் கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. மனைவி பிள்ளைகளுக்கு அடிக்கடி உடல் நிலை பாதிப்புகள் ஏற்படும் என்பதால் அவர்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாக கூடிய காலம் என்பதால் பயணங்களில் கவனம் தேவை. வீண் குழப்பங்களால் மன நிம்மதி குறையும்.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது சிறப்பு. பண வரவுகள் சற்று சாதகமாக இருப்பதால் குடும்ப சூழ்நிலையை சமாளிக்க முடியும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்ளவும். அசையும் அசையா சொத்துக்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

உத்தியோகம்

பணியில் வேலைபளு அதிகமாக இருக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக இருப்பதால் எடுத்த பணியை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்து விட முடியும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு மனைவி பிள்ளைகளை விட்டு வெளியிடங்களில் தங்க நேரிடும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானம் தேவை. புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டால் 2023 ஜனவரிக்கு பிறகு உங்களுக்கு ஒரு உயர்வான நிலை காத்திருக்கிறது.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வேலையாட்களையும், கூட்டாளிகளையும் அனுசரித்து சென்றால் நற்பலனை பெறுவீர்கள். எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே உங்கள் இலக்கை அடைய முடியும். தொழில் வளர்ச்சிக்காக அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். நிறைய போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை தற்போது தவிர்த்து விட்டு இருக்கும் ஆடர்களை கை நழவாமல் பார்த்து கொள்வது நல்லது. சனி 2023 முதல் 11-ல் சஞ்சரிக்கும் காலத்தில் நல்லதொரு வளர்ச்சியை தொழிலில் அடைய முடியும்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை தேவைக்கு ஏற்றபடி இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கையாலும் போது ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல்பட்டால் வீண் இழப்பை தவிர்க்க முடியும். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றில் கவனமாக செயல்படுவது நல்லது. கடந்த கால வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும். விரைவில் நல்ல மாற்றங்களை பெற முடியும்.

அரசியல்

உங்களது பெயர் புகழுக்கு எந்த விதத்திலும் குறை ஏற்படாது. கட்சி பணிகளுக்காக நிறைய செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். முன்கோபத்தை குறைத்து கொள்வது, மேடை பேச்சுகளில் கவனமுடன் செயல்படுவது உடன் பழகுபவர்களிடமும் எச்சரிக்கையுடன் இருப்பது, பத்திரிக்கையாளர்களை பகைத்து கொள்ளாது இருப்பது நல்லது. பணவரவுகள் தாராளமாக இல்லை என்றாலும் உங்கள் தேவைக்கு ஏற்றவாறு அமையும். தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் பொறுமையுடன் இருக்கவும்

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். பட்ட பாட்டிற்கான பலனைப் பெறுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் சற்று தாமதமாக கிடைக்கும். சந்தையில் விளைபொருளுக்கு ஏற்ற விலை சற்று குறைவாக கிடைக்கும். பொருளாதார நிலை எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. நெருங்கியவர்களையும் பங்காளிகளையும் அனுசரித்து சென்றால் எதையும் சமாளித்து விட முடியும்.

கலைஞர்கள்

தகுந்த கதா பாத்திரங்கள் கிடைத்து சமுதாயத்தில் நல்ல நிலையை அடைவீர்கள். போட்டி, பொறாமைகள் அதிகமாக இருந்தாலும் எதையும் சமாளிக்கும் பலம் உங்களிடம் இருக்கும். பணவரவுகள் சற்று சாதகமாக அமையும். அதிக அலைச்சலால் சுகபோக வாழ்க்கையில் சிறிது பாதிப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும்.

பெண்கள்

குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றும் காலம் என்பதால் விட்டு கொடுத்து செல்லவும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும். குடும்ப விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கவும். உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடுடன் இருக்கவும். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளை தற்போது தவிர்ப்பது நல்லது.

மாணவ- மாணவியர்

கல்வியில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். நல்ல மதிப்பெண் பெற்று நல்ல பெயர் எடுப்பீர்கள். உடல் நிலை மந்தமாக இருக்கும் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்களை வேறுபாதைக்கு அழைத்து செல்லும் என்பதால் கவனம் தேவை. பெரிய மனிதர்கள் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

 

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 12-04-2022 முதல் 14-06-2022 வரை

ஜென்ம ராசியில் ராகு சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. குரு 12-ல் சஞ்சரிப்பதால் பணவரவில் தேக்கங்கள் இருந்தாலும் சனி அதிசாரமாக வரும் 29-04-2022 முதல் 11-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடைவீர்கள். 7-ல் சஞ்சரிக்கும் கேது குரு நட்சத்திரத்தில் இருப்பதால் உடனிருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே சோர்வு உண்டானாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். முன் கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, கணவன்-- மனைவி இடையே அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்றாலும் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் தேவையற்ற பிரச்சினைகளை குறைத்துக் கொள்ள முடியும்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 15-06-2022 முதல் 17-10-2022 வரை

ஜென்ம ராசியில் ராகு சுக்கிரன் நட்சத்திரத்தில், 7-ல் கேது குரு நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து சென்றால் உங்களது பொருளாதார நிலை சற்று சாதகமாக இருக்கும். சனி 10-ல், குரு 12-ல் சஞ்சரிப்பதால் அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தள்ளி வைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவி இடையே பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் தேவையற்ற மன சஞ்சலங்கள் தோன்றி ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். புத்திரர்களால் நிம்மதி குறையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களை சற்று தள்ளி வைப்பது உத்தமம். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள்.------ தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்றாலும் செய்ய வேண்டிய பணிகளை சிறப்பாக செய்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 18-10-2022 முதல் 20-02-2023 வரை

ஜென்ம ராசியில் ராகு சுக்கிரன் நட்சத்திரத்தில், 7-ல் கேது ராகு நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. சனி 10-ல், குரு 12-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பணம் வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையில் இருக்கும். பூமி, மனை, வண்டி வாகனங்கள் போன்றவற்றால் வீண் விரயங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியாமல் போகும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் அதிகரிப்பதால் வர வேண்டிய வாய்ப்புகள் கை நழுவிப் போகும். கூட்டாளிகளும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படுவதோடு பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். உங்கள் உழைப்பிற்கான ஊதியம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 21-02-2023 முதல் 26-06-2023 வரை

சர்ப கிரகமான ராகு ஜென்ம ராசியில் அசுவனி நட்சத்திரத்தில், 7-ல் கேது சுவாதி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் உணர்ச்சி வசப்படாமல் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. சனி லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருக்கும் நிலை கடந்த கால நெருக்கடிகள் விலகி ஏற்றங்களை அடையும் யோகம் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்ப தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துவிட முடியும். வரும் 22-4-2023 முதல் ஜென்ம ராசியில் குரு சஞ்சரித்து 7-ஆம் வீட்டை பார்ப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது மூலம் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுத்தால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில்  கவனம் தேவை. கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. கிடைக்க வேண்டிய லாபங்கள் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சித்திரை நட்சத்திரத்தில் 26-06-2023 முதல் 30-10-2023 வரை

ஜென்ம ராசியில் ராகு அசுவனி நட்சத்திரத்தில், 7-ல் கேது சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது, கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது, சனி 11-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் நீங்கள் அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்த நிலை போன்ற பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவச் செலவுகளை எதிர் கொள்ள நேரிடும். கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது மூலம் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கல் சற்று சாதகமாக இருக்கும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சினையும் ஏற்படாது. தொழிலில் நல்ல முன்னேற்றம், வியாபாரத்தை அபிவிருத்தி செய்யும் யோகம் உண்டாகும். வரவேண்டிய லாபங்கள் தடையின்றி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நற்பலனை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செல்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9,                 நிறம் - ஆழ்சிவப்பு                               கிழமை - செவ்வாய்

கல் - பவளம்               திசை - தெற்கு                          தெய்வம் - முருகன்

 

பரிகாரம்

மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்குவது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

உங்களுக்கு குரு பகவான் சாதகமின்ற சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். 5 முக ருத்ராட்சம் அணிவதும், குரு எந்திரம் வைத்து வழிபடுவதும் நல்லது. அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்யவும்.

No comments: