Thursday, January 23, 2020

மீன ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023


மீன ராசி -   சனி பெயர்ச்சி பலன்கள் 2020  -2023
24-01-2020 முதல் 17-01-2023 வரை
பலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட குறிப்புகள் அடங்கியது

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
கனிந்த பார்வையும், மலர்ந்த முகமும், கம்பீரமான தோற்றமும் கொண்ட மீன ராசி அன்பர்களே, பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் ராசியில் பிறந்த உங்களுக்கு இதுநாள் வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து தொழில் உத்தியோக ரீதியாக தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்த சனிபகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் 17-01-2023 வரை உங்கள் ராசிக்கு லாபஸ்தானமான 11-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க உள்ளதால் இதுவரை உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் அனைத்தும் பகலவனை கண்ட பனி போல விலகி விடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்த கால மருத்துவ செலவுகள் குறைந்து சேமிக்க முடியும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் கிடைக்கும். தற்போது உள்ள கடன்கள் எல்லாம் படிப்படியாக குறையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். உங்களது செல்வம், செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை நிலவும், தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் விலகி தொட்டதெல்லாம் லாபத்தை கொடுக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது பொன்னான காலமாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலமான பலனைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களின் கனவுகள் அனைத்தும் நினவாகும். எதிர்பார்த்த உயர்வுகளையும், இடமாற்றங்களையும் தடையின்றி பெற முடியும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களும் உடனிருக்கும் ஊழியர்களின் ஒத்துழைப்புகளும் வேலைபளுவை குறைக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும்.
சனி பகவான் சாதகமாக சஞ்சரிக்கும் இக்காலங்களில் குரு பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் 20-11-2020 முதல் 20-11-2021 வரை சஞ்சாரம் செய்ய இருப்பது மிகவும் அனுகூலமான அமைப்பு என்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்ற உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பூர்வீக சொத்து ரீதியாக இருந்த வழக்குகளில் தீர்ப்பும் உங்களுக்கு சாதகமாக கிடைக்கும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர்களுக்கு நற்பலன் உண்டாகும். சர்ப்ப கிரகமான ராகு உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் வரும் 23-09-2020 முதல் 12-04-2022 முடிய சஞ்சரிக்க இருப்பது உங்கள் பலத்தை அதிகரிக்க கூடிய சிறப்பான அமைப்பாகும்,

உடல் ஆரோக்கியம்  
உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். புது தெம்பும் உற்சாகமும் ஏற்படும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்தில் உள்ளவர்கள் சுபிட்சமாக இருப்பார்கள். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். மங்களகரமான சுபகாரியங்கள் நடைபெற்று உங்களின் கடமைகளை நிறைவேறி திருப்தி ஏற்படும்.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் சுபிட்சமும், லஷ்மி கடாட்சமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். மங்களகரமான சுபகாரியங்கள் தடபுடலாக நடந்தேறும். பொருளாதார நிலை திருப்திகரமாக அமைந்து வீடு மனை, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பொன் பொருள், ஆடை ஆபரணம் சேரும்.
கொடுக்கல்- வாங்கல்
கொடுக்கல்- வாங்கலில் கடந்த காலங்களில் இருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணலாம். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும்.  விரோதிகளும் நண்பர்களாவார்கள். நல்ல நட்புகளால் நற்பலன் கிடைக்கும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். பங்காளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதால் பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.
தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடையும். கூட்டாளிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். புதிய தொழில் தொடங்க, பெரிய தொகைகளை ஈடுபடுத்தி அபிவிருத்தி செய்ய அற்புதமான காலமாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளும் லாபத்தை ஏற்படுத்தும். முதலாளி தொழிலாளி இடையே உள்ள உறவு திருப்திகரமாக அமைந்து மேலும் மேலும் முன்னேற்றத்தை உண்டாக்கும்.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு செய்யும் பணியில் திருப்தியான நிலை இருக்கும். அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். திறமைக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். எதிர்பார்க்கும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிட்டும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பு உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெற்று உயர்வடைவார்கள்.
அரசியல்
பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை தடையின்றிக் காப்பாற்ற முடியும். கட்சிப் பணிகளை சிறப்பாகச் செய்ய முடியும். கட்சி ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் எந்த வித பிரச்சனைகளும் இன்றி சாதனை செய்வீர்கள். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளைப்பொருள்களுக்கு சற்று கூடுதலான விலை சந்தையில் கிடைக்கும். தாராள தனவரவுகளால் நவீன யுக்திகளைக் கையாள முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் கிடைக்கும். வீடு, மனை, புதிய நிலம் போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். கடன்கள் குறையும். பங்காளி உடன் இருந்த கருத்து வேறுப்பாடுகள் விலகி ஒற்றுமை ஏற்படும்.
கலைஞர்கள்
புதிய வாய்ப்புகள் தேடி வந்து கதவைத்தட்டும். எதிர்பார்க்கும் கதாப்பாத்திரங்கள் கிடைக்கப்பெற்று உங்கள் கனவுகள் நனவாகும். நினைத்த அளவிற்கு உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் நடித்தப் படங்கள் வசூலை வாரி வழங்குவதால் ரசிகர்களின் ஆதரவுப் பெருகும். பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். ஆடம்பர கார், பங்களா போன்றவற்றை வாங்குவீர்கள். சின்னத் திரையில் இருப்பவர்கள் எளிதில் ஜொலிக்க முடியும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு அழகான புத்திர பாக்கியம் கிட்டும். பொன், பொருள், ஆடை ஆபரணம் யாவும் சேரும். பணவரவுகள் சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மணமாகாதவர்களுக்கு திருமணமாகும். உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். நெருங்கியவர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
மாணவ மாணவியர்
கல்வியில் பல சாதனைகளைச் செய்ய முடியும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் பரிசுகளையும், பாராட்டுதல்களையும் பெற முடியும். நல்ல நட்புகளால் நற்பலன்கள் தேடி வரும். ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிக்கும்.

சனிபகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 24-01-2020 முதல் 10-05-2020 வரை
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சனி பகவான் சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் உடல்நிலை மிக சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பண வரவுகள் தாராளமாக இருந்து உங்களது நெருக்கடிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை நிலவும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். நண்பர்கள் மற்றும் தொழிலாளர்கள் மிகவும் அனுகூலமாக செயல்படுவார்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் செல்ல கூடிய வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குரு- கேது 10-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது சிறப்பு. சுபகாரியங்கள் தடைகளுக்கு பின்பு கைகூடி மகிழ்ச்சியளிக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் வக்ர கதியில் 11-05-2020 முதல் 28-09-2020 வரை
சனிபகவான் லாப ஸ்தானத்தில் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் தேவையற்ற இடையூறுகள் உண்டாகும் என்றாலும்  எந்த பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் வலிமையும் வல்லமையும் உண்டாகும். உங்கள் ராசிக்கு 4-ல் ராகு 10-ல் கேது சஞ்சரிப்பதால் உற்றார் உறவினர்களையும் அனுசரித்துச் செல்ல வேண்டி வரும். சிறிது காலம் குரு 11-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்படும். பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் மன நிம்மதி ஏற்படும். ஆஞ்சநேயரை வழிபடுவது, விநாயகரை தரிசிப்பது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 29-09-2020 முதல் 22-01-2021 வரை
ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சனி பகவான் சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பணவரவுகள் மிகச் சிறப்பாக இருந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். 10-ல் சஞ்சரிக்கும் குரு 20-11-2020 முதல் 11-ல் சஞ்சரிக்க உள்ளதால் தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ள முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். அழகான குழந்தை பாக்கியம் கிட்டும். தொழில் வியாபாரத்தில் இருந்த தேக்கங்கள் எல்லாம் முழுமையாக விலகி சிறப்பான லாபம் கிடைக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி தொழில் வியாபாரத்தை விரிவு படுத்த முடியும். கடன்கள் குறையும். பூர்வீக சொத்துகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்படச் செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர முடியும். விநாயகரை வழிபடுவது, சுதர்சன வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் திருவோண நட்சத்திரத்தில் 23-01-2021 முதல் 23-05-2021 வரை
ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சனி பகவான் சந்திரன் நட்சத்திரத்தில் குரு சேர்க்கை பெற்று சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உங்கள் கனவுகள் நனவாகும். பணம் பல வழிகளில் தேடி வரும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். சர்ப கிரகமான ராகு 3-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகளில் ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இதுவரை இருந்த தடைகள் விலகி கௌரவமான பதவிகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். கடந்த கால கடன்கள் எல்லாம் குறையும். வீடுமனை வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கப் பெற்று சேமிப்பு பெருகும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் வக்ர கதியில் 24-05-2021 முதல் 10-10-2021 வரை
உங்கள் ராசிக்கு 11-ல் சனி வக்ர கதியில் சஞ்சரித்தாலும் ராகு முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். நீங்கள் நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் நிவர்த்தியாகும். நவீன பொருட் சேர்க்கைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் உணவு விஷயத்தில் சற்று கட்டுபாடுடன் இருப்பது நல்லது. தொழில் வியாபார ரீதியாக சிறிது நெருக்கடிகள் இருந்தாலும் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கூட்டாளிகள் உதவியால் தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு யாவும் கிடைக்கும். விநாயகர் வழிபாடு, தட்சிணாமூர்த்தி வழிபாடு  செய்வது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் திருவோண நட்சத்திரத்தில் 11-10-2021 முதல் 17-02-2022 வரை
ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சனி பகவான் சந்திரன் நட்சத்திரமான திருவோணத்தில் சஞ்சரிப்பதாலும் ராகு 3-ல் சஞ்சரிப்பதாலும் நன்மையான பலன்களை அடைய முடியும். குரு பகவான் 20-11-2021 முடிய 11-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும் சுபிட்சமான நிலை உண்டாகும். தாராள தனவரவுகளால் உங்கள் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். போட்டி பொறாமைகள் விலகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியான நிலையை அடைவார்கள். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களால் எந்தவொரு பணியையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது, கேதுவை வழிபடுவது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 18-02-2022 முதல் 28-04-2022 வரை
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சனி பகவான் செவ்வாய் நட்சத்திரமான அவிட்டத்தில் சஞ்சரிப்பதாலும் ராகு 3-ல் சஞ்சரிப்பதாலும் உங்களது பொருளாதார நிலை திருப்தியளிப்பதாக அமையும். தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய முடியும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இருக்கும். பொன்பொருள் சேரும். புத்திரர்கள் அனுகூலமாக இருப்பார்கள். அசையா சொத்து வகையில் லாபம் ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். குரு 12-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட்தேக்கம் உண்டாகாது. அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விடுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் நம்பிக்கையையும் முன்னேற்றத்தையும் அளிக்கும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.
சனிபகவான்அதிசாரமாக கும்ப ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 29-04-2022 முதல் 04-06-2022 வரை
சனிபகவான் அதிசாரமாக 12-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. குரு ஜென்ம ராசியில் சஞ்சரித்து 7-ஆம் வீட்டை பார்ப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். இல்வாழ்வில் மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாகும். புத்திர பாக்கியம் உண்டாவதற்கான வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் அன்பும் ஆலோசனைகளும் நற்பலனை அளிப்பதாக அமையும். ராகு 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக அமைந்து குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது சிறப்பு. உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களைப் பெறுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளையும் வேலையாட்களையும் அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. சனி பகவான் வழிபாடு செய்வதும் துர்க்கையம்மனை வழிபடுவதும் நல்லது.
சனிபகவான் வக்ர கதியில் 05-06-2022 முதல் 21-10-2022 வரை
சனிபகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் ஜென்ம ராசியில் குரு, 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதாலும்  கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. பொருளாதார நிலை சற்று சாதகமாக இருக்கும் என்றாலும் கொடுக்கல்- வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தடைபட்ட சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். தொழில் வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக சிறிது தேக்கம் இருந்தாலும் எதையும் எதிர்கொள்ளும் வலிமை உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு இருந்தாலும் பதவி உயர்வுகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். ராகு, கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.
சனிபகவான் மகர ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 22-10-2022 முதல் 17-01-2023 வரை
ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சனி பகவான் செவ்வாய் நட்சத்திரமான அவிட்டத்தில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பணம் பலவழிகளில் தேடி வரும். எதிர்பார்க்கும் உதவிகள் அனைத்தும் தடையின்றி கிட்டும். வெளியூர் செல்ல கூடிய யோகம் அமையும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு 7-ஆம் வீட்டை பார்ப்பதால் மணமாகாதவர்களுக்கு திருமண யோகம் கைகூடும். நவீன பொருள் சேர்க்கைகள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் ஏற்றமிகுப் பலன்களை அடைவார்கள். தொட்டதெல்லாம் துலங்ககூடிய காலம் என்பதால் உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் வேலைபளு குறைந்து உயர்வான நிலைகளை அடைவீர்கள். கடன்கள் குறைவதால் சேமிப்புகள் பெருகும். ஜென்ம ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது சிறப்பு. துர்க்கையம்மனை வழிபடுவது, தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9                   கிழமை - வியாழன், ஞாயிறு   திசை - வடகிழக்கு
கல் - புஷ்பராகம்     நிறம் - மஞ்சள், சிவப்பு      தெய்வம் -  தட்சிணாமூர்த்தி

1 comment:

Unknown said...

எனக்கு எல்லாம் நீங்கள் கூறியதில் எதிர்.இலப்பு அதிகம் எதை நம்புவது