Sunday, September 16, 2018

குரு பெயர்ச்சி பலன் 2018 - 2019 - தனுசு




குரு பெயர்ச்சி பலன்  2018 - 2019 -  தனுசு
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
தனுசு   மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
நல்ல அறிவாற்றலும், மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணமும், பலரை வழிநடத்தும் திறனும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி குருபகவான் இதுநாள் வரை லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரித்து பல நற்பலன்களை வழங்கி வந்தார். வாக்கிய கணிதப்படி வரும் 04-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது என்பதால் பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள், குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். சனிபகவான் ஜென்ம ராசியிலேயே சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரை சனியில் ஜென்மசனி நடைபெறுகிறது. இதுமட்டுமின்றி வரும் 13-2-2019 முதல் சர்ப கிரகங்களான ராகு, கேது மாறுதலாகி ஜென்ம ராசியில் கேதுவும் 7-ஆம் வீட்டில் ராகுவும் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். இதனால் கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்கு வாதங்களும், நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகளும் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலங்களை அடைய முடியும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் தேவையற்ற கடன்கள் உண்டாவதை தவிர்க்க முடியும். குருபார்வை 4, 6, 8- ஆம் வீடுகளுக்கு இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் மறையும். உடல் ஆராக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது உத்தமம். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இடையூறுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகளும், போட்டிகளும் குறைந்து எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் தடைப்பட்ட பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் சில தடைகளுக்குப் பின் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்து கொள்ள முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம்.

உடல் ஆரோக்கியம்
உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் வயிறு கோளாறு, இரத்த அழுத்த சம்பந்தப்பட்ட நோய்கள், தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். மன¬விக்கும் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படுவதால் மனநிம்மதி குறையும். இல்லறவாழ்வில் ஈடுபாடற்ற நிலை ஏற்படும். குல தெய்வ வழிபாடுகளை செய்வது குடும்பத்திற்கு நற்பலனை உண்டாக்கும்.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வீண் விரயங்களும் ஏற்படும். உற்றார் உறவினர்களின் வருகையால் சுபகாரிய முயற்சிகளுக்கு தடை உண்டாகும். அசையா சொத்துக்களாலும் பூர்வீக சொத்துக்களாலும் எதிர்பாராத அலைச்சல்கள் விரயங்கள் உண்டாக கூடும். பெரியவர்களிடையே வீண் விரோதங்களும் உண்டாகும். எதிலும் சிந்தித்து செயல்படுவதும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும் மிகவும் உத்தமம்.
கமிஷன்- ஏஜென்சி
கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலமாகும். எதிர்பாராத வகையில் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். நம்பியவர்களே ஏமாற்றக்கூடிய காலம் என்பதால் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சிக்கல்கள் உண்டாகும். உங்களுக்கு இருந்து வரும் வம்பு வழக்குகளிலும் இழுபறி நிலையே நீடிக்கும். 
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை நிலவினாலும் பொருள் தேக்கம் ஏற்படாது. கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை மிகவும் அனுசரித்து செல்வதே நல்லது. உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை பிறர் தட்டி செல்வார்கள். சில நேரங்களில் உடனிருப்பவர்களே சதி செய்வார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்கு பின்பே கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவதே நல்லது. வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும்.
உத்தியோகம்
உத்தியோஸ்தர்களுக்கு பணியில் திருப்தியான நிலை இருக்கும் என்றாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை உண்டாகும். உயரதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள் என்றாலும் பணியில் ஒரு ஈடுபாடற்ற நிலை உண்டாகும். உடல் சோர்வு மந்தமான நிலை போன்றவற்றால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகலாம். செய்த வேலையையே திருப்பி திருப்பி செய்ய வேண்டியிருக்கும். வேலை பளுவும் சற்று அதிகரிக்கும்.
அரசியல்
அரசியல்வாதிகள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய காலமாகும். மறைமுக எதிர்ப்புகளை உங்களது தேவையற்ற பேச்சுக்களால் சம்பாதித்துக் கொள்ள நேரிடும். கட்சி பணிகளுக்கு நிறைய செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். பத்திரிக்கை நண்பர்களை பகைத்து கொள்ளாதிருப்பது உத்தமம். எதிர்பார்க்கும் மாண்புமிகு பதவிகள் சற்று தாமதப்படும். மக்களின் தேவைகளை அறிந்து செயல்படுவது நல்லது.
விவசாயிகள்
போதிய நீரின்மை, சரியான வேலையாட்கள் கிடைக்காத நிலை போன்றவற்றால் விளைச்சலை நல்லவிதமாக எதிர்பார்க்க முடியாது. பயிர்களை இன்சூரன்ஸ் செய்வதன் மூலம் அரசு வழியில் சில மானியத் தொகைகளைப் பெற முடியும். விளை பொருளுக்கேற்ற விலையை பெற முடியாமல் போவதால் லாபம் குறையும். புதிய பூமி மனை போன்றவற்றை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம்.
கலைஞர்கள்
புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெற்றாலும் எதிலும் ஒழுங்காக செயல்பட முடியாத நிலை உண்டாகும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படையும். உடல் நிலையில் சோர்வு உண்டாவதால் படப்பிடிப்புகளில் சரிவர கலந்து கொள்ள முடியாத சூழ்நிலைகள் ஏற்படும். உங்களது வாய்ப்புகளை பிறர் தட்டி செல்வார்கள். வரவேண்டிய சம்பள பாக்கிகளும் சற்று தாமதமாக வரும். தேவையற்ற வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
பெண்கள் 
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது உத்தமம். ரத்த அழுத்த சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், வயிறு கோளாறு, கர்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்களை சந்திப்பீர்கள். பணவரவுகளில் சில நெருக்கடிகள் ஏற்பட்டாலும் சிக்கனமாக செயல்பட்டு எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். வீடுமனை வாங்கும் எண்ணங்களை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களால் சில அலைச்சல்களை சந்திப்பீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு வேலைபளு சற்று அதிகரித்தாலும் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் சற்றே மந்தமான நிலை ஏற்பட்டாலும் விடா முயற்சியுடன் செயல்பட்டு வெற்றி இலக்கை தொடுவீர்கள். உடன் பழகும் நண்பர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் செயல்பட்டால் வீண் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபட்டு மாநில அளவிலான பெருமைகளை பள்ளி கல்லூரிகளுக்கு சேர்ப்பீர்கள். சுற்றுலா தளங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04.10.2018 முதல் 21.10.2018 வரை
உங்கள் ராசியாதிபதி குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிப்பதாலும், ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பதால் ஏழரை சனியில் ஜென்ம சனி தொடருவதாலும், 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சாரம் செய்வதாலும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது, கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறைவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்கு பின் அனுகூலம் ஏற்படும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடுவதற்கு தாமதம் உண்டாகும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினைகள் சற்றே விலகும். புத்திர வழியில் சிறுசிறு வீண் செலவுகளை சந்திப்பீர்கள். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் தோன்றினாலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் நினைத்த மதிப்பெண்களை பெற முடியும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.
குரு பகவான் அனுச நட்சத்திரத்தில் 22.10.2018 முதல் 20.12.2018 வரை
உங்கள் ராசியாதிபதி குருபகவான் 2, 3-க்கு அதிபதியான சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிப்பதும், ஜென்ம ராசியில் சனி, 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே அவர்கள் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெற்று குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். திருமண சுப காரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். புத்திர வழியிலும் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். அசையும் அசையா சொத்துகளால் வீண் செலவுகள் ஏற்படும். செய்யும் தொழில், வியாபார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது உத்தமம். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையை தவிர்க்கவும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம். 
குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21.12.2018 முதல் 12.03.2019 வரை
குருபகவான் புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிப்பதும், ஜென்ம ராசியிலேயே சனி சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்ட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்ப தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துவிட முடியும். ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது மூலம் தேவையற்ற வகையில் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். வரும் 13-2-2019-ல் ஏற்படவிருக்கும் ராகு கேது மாற்றத்தின் மூலம் ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிக்க இருப்பதால் உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் நிலவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் காரியங்களில் கவனம் தேவை. கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்தித்தாலும் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
குரு பகவான் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் 13.03.2019 முதல் 09.04.2019 வரை
இக்காலங்களில் ராசியாதிபதி குருபகவான் அதிசாரமாக ஜென்ம ராசியிலேயே சனி சேர்க்கைப் பெற்று சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியாமல் போகும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பணம் வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். பூமி, மனை, வண்டி வாகனங்கள் போன்றவற்றால் வீண் விரயங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் அதிகரிப்பதால் வர வேண்டிய வாய்ப்புகள் கை நழுவிப் போகும். கூட்டாளிகள் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். வெளிவட்டாரத் தொடர்புகளால் ஓரளவுக்கு அனுகூலப்பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படுவதோடு பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். மாணவர்கள் நல்ல நட்புகளாக தேர்தெடுத்து பழகுவது நல்லது. ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது உத்தமம்.
குரு பகவான் வக்ர கதியில் 10.04.2019 முதல் 06.08.2019 வரை
குரு இக்காலங்களில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேற கூடிய வாய்ப்பு ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெற முடியும். கூட்டாளிகளை தொழிலாளர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். சிலருக்கு விரும்பிய இட மாற்றங்களும் கிட்டும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.
குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 07.08.2019 முதல் 28.10.2019 வரை
ராசியாதிபதி குரு புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிப்பதும், ஜென்ம ராசியில் சனியும், கேதுவும் சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவி இடையே பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் தேவையற்ற மன சஞ்சலங்கள் தோன்றி ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களை சற்று தள்ளி வைப்பது உத்தமம். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரளவுக்கு முன்னேற்றமான நிலையிருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் தேவைற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள் என்றாலும் செய்ய வேண்டிய பணிகளை சிறப்பாக செய்வார்கள். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை நிலவக்கூடும் என்பதால் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது, தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது சர்பசாந்தி செய்வது நல்லது.

பரிகாரம்
தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராசியாதிபதி குரு ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்குவது நல்லது. ஏழரை சனியில் ஜென்ம நடைபெறுவதால் சனிக்கு தொடர்ந்து பரிகாரம் செய்வது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது மிகவும் நல்லது. வியாழக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.
சர்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால் ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது, துர்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, சரபேஸ்வரரை வழிபடுவது, சர்பசாந்தி செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9          நிறம் - மஞ்சள், பச்சை               கிழமை - வியாழன், திங்கள்
கல் - புஷ்ப ராகம்    திசை - வடகிழக்கு                       தெய்வம் - தட்சிணா மூர்த்தி

No comments: