Wednesday, December 13, 2017

2018 புத்தாண்டுப் பலன்கள்- மிதுனம்




2018 புத்தாண்டுப் பலன்கள்- மிதுனம்  

மிருகசீரிஷம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்

பிறரை எளிதில் வசப்படுத்தக்கூடிய பேச்சாற்றலும், சிறந்த தெய்வ பக்தியும் கொண்ட மிதுன ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இந்த 2018-ஆம் ஆண்டுமுழுவதும் சனி பகவான் உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதால் கண்டச்சனி நடைபெறுவது சாதகமற்ற அமைப்பு. என்றாலும் ஆண்டுக்கோளான குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் நிறைவேறும். புத்திர பாக்கியம் அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்நீச்சல் போட்டாவது எதிர்பார்த்த லாபத்தை அடைந்துவிடுவீர்கள். சனி 7-ல் சஞ்சரிப்பதால் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் மற்றவரை அனுசரித்து நடந்துகொண்டால் எதையும் சாதிக்கமுடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் பணியினைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. சர்ப்ப கிரகங்களான ராகு-கேது 2, 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவினை உண்டாக்கும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமைக்குறைவு, நெருங்கியவர் களிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். குரு பகவான் 11.10.2018 முதல் ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடை, இடையூறுகளை சந்திப்பீர்கள். தேவையற்ற வம்பு வழக்குகளும் ஏற்படும். இந்த வருடம் நீங்கள் எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்பட்டால் மட்டுமே தேவையற்ற பிரச்சினை களிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். 

உடல் ஆரோக்கியம்

இந்த வருடம் முழுவதும் ஆயுள்காரகன் சனி பகவான் 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தாலும் பணிச்சுமை அதிகமாக இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தமுடியாத நிலை உண்டாகும். வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனமுடன் இருப்பது நல்லது. குரு 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சிறுசிறு மருத்துவச் செலவுகளுக்குப்பின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அன்றாடப் பணிகளில் திறம்படச் செயல்படமுடியும்.  

குடும்பம், பொருளாதாரம்

ஜென்ம ராசிக்கு குரு 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். சிலர் நினைத்தவரையே கைப்பிடிப்பர். பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். குடும்பத்தேவைகளும் பூர்த்தியாகும். சனி பகவான் 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உறவினர்களை அனுசரித்துச்சென்றால் மட்டுமே எதிலும் நிம்மதியுடன் செயல்படமுடியும். 

உத்தியோகம்

உங்கள் ராசிக்கு குரு 5-ல் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பாகும். இதனால் ஊதிய உயர்வுகளும் விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் திறமைக்கேற்ற பணி அமையும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் செய்யும் பணிகளில் தடை, இடையூறு ஏற்பட்டு எந்தவொரு வேலையையும் திறம்பட செய்து முடிக்க முடியாதநிலை  ஏற்படும். எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது.

தொழில், வியாபாரம்

உங்கள் ராசிக்கு குரு 5-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் வருவாய் சூடுபிடிக்கும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அரசுவழியில்  எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். போட்டி பொறாமைகள் மற்றும் மறைமுக எதிர்ப்புகள் மறைவதால் மந்தநிலை விலகி லாபம் பெருகும். இந்த வருடம் முழுவதும் கூட்டுத்தொழில் ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் கூட்டாளிகளை அனுசரித்துச்செல்வது நல்லது. 

பெண்களுக்கு

ஜென்ம ராசிக்கு குரு பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, கணவன்- மனைவியிடையே ஒற்றுமை, திருமண சுபகாரியங்கள் கைகூடும் அமைப்பு, தாராள தனவரவுகளால் குடும்பத்தேவைகள் யாவும் பூர்த்தியாகும். இந்த ஆண்டுமுழுவதும் சனி 7-ல் சஞ்சரிப்பதால் பண விவகாரங்களில் கவனமுட னிருப்பதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதும் உத்தமம். பிறர் விஷயங்களில் தேவையின்றி தலையீடுசெய்வது, குடும்ப விஷயங்களை வெளியாட்களிடம் பகிர்ந்துகொள்வது போன்றவற்றையும் தவிர்க்கவும்.  

கொடுக்கல்- வாங்கல்

உங்கள் ராசிக்கு 5-ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். 11-10-2018 முதல் குரு 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் பண விஷயத்தில் பிறருக்கு வாக்குக் கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை ஆண்டின் இறுதியில் தவிர்ப்பது நல்லது. 

அரசியல்வாதிகளுக்கு

உங்கள் ராசிக்கு குரு 5-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் உடனிருப் பவர்களிடம் கவனமாக செயல்படுவதும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்து வதும், தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதும் நல்லது.2-ல் ராகு இருப்பதால் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். 

விவசாயிகளுக்கு

பயிர்கள் விளைச்சல் சிறப்பாக இருக்கும். புழு, பூச்சிகளின் தொல்லைகளால் வீண்விரயங்கள் உண்டாகும். என்றாலும்  எதையும் சமாளித்துவிடுவீர்கள். காய்கனி, பூ வகைகளாலும் கால்நடைகளாலும் ஓரளவுக்கு லாபம் அமையும்.

கலைஞர்களுக்கு

உங்கள் ராசிக்கு குரு 5-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் அமையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதோடு சுகவாழ்வு, சொகுசு வாழ்வும் அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக்கொள்வது நல்லது. நிறைய போட்டி பொறாமைகள் நிலவும். நண்பர்களிடம் கவனம் தேவை. 

மாணவ- மாணவியருக்கு

கல்வியில் சற்று மந்தநிலை நிலவினாலும் நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தையும் வீணான பொழுது போக்குகளையும் தவிர்ப்பது நல்லது. பயணங்களில் நிதானமும் எச்சரிக்கையும் அவசியம். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். 

மாதப் பலன்கள்

ஜனவரி: ஜென்ம ராசிக்கு 5-ல் குரு, 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது அற்புதமான நற்பலன்களை அள்ளித்தரும் என்றாலும் சர்ப்ப கிரகங்களான ராகு, கேது 2, 8-ல் சஞ்சரிப்பதும், மாதக்கோளான சூரியன் சாதகமற்று சஞ்சரிப்பதும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். தொழில், வியாபார ரீதியாக  மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சி களிலும் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் போன்ற வற்றில் சரளமான நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான அந்தஸ்துகளையும் பெறமுடியும். தொழில், வியாபாரமும் தடையின்றி நடைபெற்று எதிர்பார்த்த லாபத்தைத் தரும். ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பு.

சந்திராஷ்டமம்: 17-1-2018 அதிகாலை 2.03 மணி முதல் 19-1-2018 மதியம் 2.17 மணி வரை.

பிப்ரவரி: ஜென்ம ராசிக்கு 8-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 5-ல் குரு சஞ்சரிப்பதால், கணவன்- மனைவியிடையே ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களில்கூட அனுகூலங்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உடல் ஆரோக்கி யத்தில் பாதிப்புகள் ஏற்படும். உற்றார் உறவினர்களிடம் வீண்பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதால் அனைவரையும் அனுசரித்து நடப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்தநிலை நிலவினாலும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் கிடைக்க வேண்டிய லாபங்கள் கிடைக்கும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. முருகப் பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 13-2-2018 காலை 8.44 மணி முதல் 15-2-2018 இரவு 8.39 மணி வரை.  

மார்ச்: ஜென்ம ராசிக்கு 5-ல் குரு, 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். கணவன் - மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு புத்திரவழியில் மகிழ்ச்சி ஏற்படும். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச்செலவுகள் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள்விலகி மகிழ்ச்சி ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். தினமும் விநாயகப் பெருமானை வழிபடுவதால் நற்பலன்களைப் பெறமுடியும்.

சந்திராஷ்டமம்: 12-3-2018 மாலை 4.16 மணி முதல் 15-3-2018 அதிகாலை 4.13 மணி வரை.  

ஏப்ரல்: மாதக்கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும் 10-ல் புதன், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் பணிபுரிபவர்களுக்குப் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் யாவும் தடையின்றிக் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். சிலருக்குத் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். தொழில், வியாபாரமும் சிறந்தமுறையில் நடைபெறும். கொடுக்கல்- வாங்கலும் சரளமாக நடைபெறும். சிவபெருமானை வழிபடுவது நல்லது. 

சந்திராஷ்டமம்: 9-4-2018 அதிகாலை 12.19 மணி முதல் 11-4-2018 மதியம் 12.38 மணி வரை. 

மே: இம்மாதம் 10-ல் புதன் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிப்பதும் நற்பலனை ஏற்படுத்தும் அமைப்பாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளைத் தற்போது மேற்கொள்ளலாம். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். கணவன் - மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களிலும் அனுகூலம் உண்டாகும். உங்களுக்கு இருந்து வந்த கடன் பிரச்சினைகளும் வம்பு வழக்குகளும் குறையும். சேமிப்புகளும் பெருகும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் லாபங்கள் தேடிவரும். சனிக்கிழமைகளில் சனிக்குரிய பரிகாரங்களைச் செய்துவருவது நல்லது.

சந்திராஷ்டமம்: 6-5-2018 காலை 8.17 மணி முதல் 8-5-2018 இரவு 9.01 மணி வரை. 

ஜுன்: ஜென்ம ராசிக்கு 8-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பு என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் அனுகூலமான பலனை அடையமுடியும். பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறைவதால் கடன்கள் படிப்படியாக மறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியாமல் போகும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்து முன்னேற வேண்டியிருக்கும்.முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 2-6-2018 மதியம் 3.35 மணி முதல் 5-6-2018 அதிகாலை 4.36 மணி வரை மற்றும் 29-6-2018 இரவு 10.06 மணி முதல் 2-7-2018 பகல் 11.10 மணி வரை.  

ஜூலை: ஜென்ம ராசியில் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண்வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். தேவையற்ற விரயங்களை எதிர்கொள்வீர்கள். திருமண சுபகாரியங்களில் தாமதம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.தொழில், வியாபாரத்தில் மந்தநிலை நிலவும். வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப்போகும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து தங்கள் பணிகளில்மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலைக் குறைத்துக்கொள்ள முடியும். சேமிப்புகள் குறையும். ராகு காலங்களில் துர்க்கை அம்மனை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 27-7-2018 அதிகாலை 4.11 மணி முதல் 29-7-2018 மாலை 5.09 மணி வரை.   

ஆகஸ்ட்: ஜென்ம ராசிக்கு 5-ல் குரு, மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நற்பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். பணம் பலவழிகளில் தேடிவந்து பாக்கெட்டை நிரப்பும். சிலருக்கு வாகனங்கள் வாங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மனநிம்மதி ஏற்படும்.கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடிவரும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்குக் கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும். சனிக்குரிய பரிகாரங்களைத் தொடர்ந்து செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 23-8-2018 காலை 10.26 மணி முதல் 25-8-2018 இரவு 11.18 மணி வரை.   

செப்டம்பர்: ஜென்ம ராசிக்கு 5-ல் குரு, சுக்கிரன், மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சினைகள் யாவும் குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் கடன்களும் படிப்படியாகக் குறைந்து நிம்மதி நிலவும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். விநாயகர் வழிபடுவது நற்பலனை உண்டாக்கும்.

சந்திராஷ்டமம்: 19-09-2018 மாலை 5.22 மணி முதல் 22-9-2018 காலை 6.15 மணி வரை.  

அக்டோபர்: உங்கள் ராசிக்கு புதன் சாதகமாக சஞ்சரிப்பதும், 5-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பு என்றாலும் 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பொருளாதார நிலையிலும் ஏற்ற இறக்கமான நிலை நிலவும். என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று எதையும் சமாளித்துவிட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. கணவன் - மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களின் ஆதரவும் ஓரளவுக்கு இருக்கும். 11-ஆம் தேதி முதல் குரு 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகையை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டி பெறாமைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்றுவிடமுடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்யவும்.

சந்திராஷ்டமம்: 17-10-2018 அதிகாலை 1.09 மணி முதல் 19-10-2018 மதியம் 2.06 மணி வரை. 

நவம்பர்: ஜென்ம ராசிக்கு 2, 8-ல் சர்ப்ப கிரகங்களான ராகு-கேது, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நன்மை தீமை கலந்த பலன்களையே பெறமுடியும். உடல் நிலையில் சற்று அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது.வாகனங்களில் பயணம் செய்யும்போது வேகத்தை சற்றுக் குறைக்கவும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதும், குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் நற்பலனைத் தரும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். அசையும், அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற பயணங்களையும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களையும் தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளாலும் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் தாமதப்படும். குருவிற்குரிய பரிகாரங்களைச் செய்யவும்.

சந்திராஷ்டமம்: 13-11-2018 காலை 9.22 மணி முதல் 15-11-2018 இரவு 10.23 மணி வரை. 

டிசம்பர்: ஜென்ம ராசிக்கு 5-ல் சுக்கிரன், மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எந்தவித பிரச்சினைகளையும் சமாளித்து ஏற்றம் பெறமுடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. நினைத்ததை ஓரளவுக்கு நிறைவேற்றமுடியும் என்றாலும் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமையான நிலையினை அடையமுடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்கள் இல்லாமல் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியும். குடும்பத்தில் ஏற்படக்கூடிய சிறுசிறு பிரச்சினைகளை வேற்று நபர்களுடன் பகிர்ந்து கொள்ளாமலிருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் வீண்விரயங்களை எதிர்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் திருப்தியான நிலையிருக்கும் என்றாலும் வேலைப்பளு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் சற்று மந்தமான நிலையில் நடைபெற்றாலும் லாபம் கிட்டும். துர்க்கையம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 10-12-2018 மாலை 5.20 மணி முதல் 13-12-2018 காலை 6.17 மணி வரை. 

அதிர்ஷ்டம் அளிப்பை

எண்- 5 ,6 , 8, நிறம்  - பச்சை, வெள்ளை, கிழமை- புதன், வெள்ளி, கல் - மரகதம், திசை- வடக்கு, தெய்வம் - விஷ்ணு.

No comments: