Wednesday, December 13, 2017

2018 புத்தாண்டுப் பலன்கள்- மேஷம்




2018 புத்தாண்டுப் பலன்கள்- மேஷம்   

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்

வாக்கு சாதுர்யமும், வசீகரப் பேச்சுத்திறனும் கொண்ட மேஷ ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இந்த 2018-ஆம் ஆண்டுமுழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது ஓரளவுக்கு முன்னேற்றத்தினை ஏற்படுத்தும் அமைப்பாகும். இதுமட்டுமின்றி குரு பகவான் சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலவும். திருமணவயதை அடைந்தவர்களுக்குத் திருமண சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டாகும். நல்ல வரன்கள் தேடிவரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். புத்திர பாக்கியம் அமையும். புத்திரவழியிலும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். ஜென்ம ராசிக்கு 4-ல் ராகு சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள், அசையாசொத்து வகையில் சிறுசிறு விரயங்கள் ஏற்படும். என்றாலும் அதன்மூலம் அனுகூலப்பலன்களையும் பெறுவீர்கள். உற்றார், உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் எதிர்பார்த்த லாபத்தினை அடைந்துவிடமுடியும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் பணிகளில் சிறப்பாகச் செயல்படும் ஆற்றல் உண்டாகும். உயரதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வரும் அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின்மூலம் குரு அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டுக்கு மாறுதலாக இருப்பதால் உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடன் இருப்பதும், குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச்செல்வதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதும் நல்லது. தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும்.

உடல் ஆரோக்கியம்

சனி 9-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நெருங்கியவர்களால் பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்துவிடக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். குரு சமசப்தம ஸ்தானத்தில் இருப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. இதனால் குடும்பத்தில் ஏற்படும் மருத்துவச்செலவுகளும் உங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன்மூலம் அலைச்சல்களைக் குறைத்துக்கொள்ள முடியும்.

குடும்பம், பொருளாதார நிலை

பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு மணவாழ்க்கை எளிதில் அமையும். அசையாச்சொத்து வகையில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதன்மூலம் லாபம் கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், புத்திரவழியில் மகிழ்ச்சியும் அமையும். வருடக் கடைசியில் அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு 8-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் ஆடம்பரச்செலவுகளைக் குறைத்துக் கொள்வது, நெருங்கியவர்களிடம் கவனமுடன் இருப்பது நல்லது.

உத்தியோகம்

இந்த வருடம் உத்தியோகஸ்தர்களுக்கு அற்புதமான பதவி உயர்வுகளையும், பாராட்டுதல்களையும் அள்ளித்தருவதாக அமையும். திறமைக்கேற்ற கௌரவமான நிலையினை அடைவீர்கள். ஊதிய உயர்வுகளால் பொருளாதாரநிலை உயர்வடையும். புதிய வேலை வாய்ப்பும் எதிர்பார்த்தபடியே கிட்டும். நல்ல நிர்வாகத்திறனும் பலரை அதிகாரம் செய்யக்கூடிய ஆற்றலும் உண்டாகும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உங்களின் கௌரவத்திற்கு நல்லது.

தொழில், வியாபாரம்

குரு சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்பதால் தொழில், வியாபார ரீதியாக ஏற்றமிகு பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிட்டும். எந்தவித மறைமுக எதிர்ப்புகளையும் வெல்லக்கூடிய ஆற்றலும் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களை ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுத்துவது நல்லது.

பெண்களுக்கு

பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தேவைகளும் பூர்த்தியாகும். மணமாகாத கன்னியருக்கு சிறப்பான மணவாழ்க்கை அமையும். சிலர் அழகான புத்திரனைப் பெற்றெடுப்பர். குடும்பத்திலும் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகையால் நற்பலன்கள் அமையும். பூர்வீகச் சொத்துகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமானதாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. 

கொடுக்கல்- வாங்கல்

தனகாரகன் குரு பகவான் 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவை சரளமாக இருக்கும். கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்ற துறைகளிலும் தாரளமாக லாபம் கிட்டும். பெரிய முதலீடுகளையும் தடையின்றி ஈடுபடுத்தமுடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். குரு மாற்றத்திற்குப் பிறகு அதாவது அக்டோபருக்குப் பிறகு கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு

நீங்கள் நினைத்ததை நிறைவேற்றமுடியும். மக்கள் செல்வாக்குக்குக் காரகனாகிய சனி பகவான் 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது ஓரளவுக்கு மேன்மையை உண்டாக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைத் தடையின்றிக் காப்பாற்றிவிடுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் கட்சிப் பணிக்காக எதிர்பாராத வீண்செலவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதால் பணவிஷயத்தில் கவனம் தேவை.

விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த வங்கிக்கடன்களும் கிடைக்கப் பெற்று தேவைகள் பூர்த்தியாகும். பூமி, மனை வாங்கும் யோகம் உண்டு என்றாலும் சில தடைகளுக்குப் பின் வாங்குவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்களையும் நிறைவேற்ற முடியும்.ஆடு, மாடு போன்ற கால்நடைகளாலும் சிறப்பான லாபம் கிட்டும். கடன்களை அடைக்கக்கூடிய அளவிற்கு ஆற்றலும் உண்டாகும்.

கலைஞர்களுக்கு

இந்த ஆண்டு கலைஞர்களுக்கு அபரிமிதமான செல்வாக்கினை உண்டாக்கும் ஆண்டாக அமையும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். ரசிகர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். உங்களின் திறமைக்கேற்ற கதாபாத்திரங்களும் கிடைக்கப்பெறும். குரு மாற்றத்திற்குப் பிறகு அதாவது அக்டோபருக்குப் பிறகு பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவக்கூடும் என்பதால் ஆடம்பரமாக செலவுகள் செய்வதைக் குறைத்துக்கொள்வது நல்லது.

மாணவ- மாணவியருக்கு

கல்வியில் நல்ல ஈடுபாட்டுடன் செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்களைப் பெறமுடியும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். நல்ல நண்பர்களின் நட்பு உங்களுக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கும். விளையாட்டுப்போட்டிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். கல்விக்காகச் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பும் கிட்டும்.

மாதப் பலன்கள்

ஜனவரி: மாதம் ஜென்ம ராசிக்கு 7-ல் குரு, 9-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலனை அடையமுடியும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலனைப் பெறலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும். கணவன் - மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குக் கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்துகொள்வார்கள். அபிவிருத்தியும் ஓரளவுக்குப் பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெறமுடியும். முருகப் பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 12-1-2018 அதிகாலை 12.49 மணி முதல் 14-1-2018 மதியம் 1.11 மணி வரை.

பிப்ரவரி: மாதக்கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும் 7-ல் குரு சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பு என்பதால் அற்புதமான நற்பலன்களைப் பெறமுடியும். தாராள தனவரவுகள் உண்டாவதால் பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன் - மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுபகாரியங்கள் தடபுடலாகக் கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். துர்க்கை அம்மனை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 8-2-2018 காலை 7.45 மணி முதல் 10-2-2018 இரவு 7.49 மணி வரை.

மார்ச்: இம்மாதம் 7-ல் குரு சஞ்சரிப்பதும் மாதக்கோளான சூரியன் மாத முற்பாதியில் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சாரம் செய்வதும் அனுகூலமான பலன்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகளில் சரளமான நிலை உண்டாகும். குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளையும் தடையின்றி மேற்கொள்ளலாம். கணவன் - மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளைப்பெற சற்றே தாமதம் உண்டாகும். முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன்மூலம் அலைச்சலைக் குறைத்துக் கொள்ளலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபத்தைப் பெறமுடியும். தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 7-3-2018 மாலை 4.07 மணி முதல் 10-3-2018 அதிகாலை 3.23 மணி வரை. 

ஏப்ரல்: ஜென்ம ராசிக்கு 7-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் இருப்பதும் மாதக் கோளான சூரியன் சாதகமின்றி சஞ்சரிப்பதும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் குடும்பத்தில் உள்ளவர்களிடம் வீண்வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அஜீரணக் கோளாறு, உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகள் ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகக்கூடும். எதிலும் சிந்தித்து செயல்படவும். சனி 9-ல் உள்ளதால் தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். அசையும், அசையா சொத்துகளால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 4-4-2018 அதிகாலை 1.09 மணி முதல் 6-4-2018 பகல் 11.38 மணி வரை. 

மே: ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பது உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும். என்றாலும் சுக்கிரன் 2-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினைப் பெறமுடியும். குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் எல்லாத் தேவைகளையும் பூர்த்திசெய்ய முடியும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூட சற்று தாமதம் உண்டாகும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தாலே வீண்பிரச்சினைகள் உண்டாவதைக் குறைத்துக்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளைச் செய்துமுடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்கமுடியும். சிவவழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 1-5-2018 காலை 9.35 மணி முதல் 3-5-2018 இரவு 7.48 மணி வரை மற்றும் 28-5-2018 மாலை 4.38 மணி முதல் 31-5-2018 அதிகாலை 3.08 மணி வரை. 

ஜூன்: ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் செவ்வாய் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்வதும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று நிவர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன் - மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கொடுக்கல் - வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தினை அடையமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 24-6-2018 இரவு 10.31 மணி முதல் 27-6-2018 காலை 9.31 மணி வரை. 

ஜூலை: ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் செவ்வாய் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்வதும், குரு 7-ல் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் தாராள தனவரவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன் - மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் கிடைக்கப்பெறும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல் - வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 22-7-2018 அதிகாலை 4.14 மணி முதல் 24-7-2018 மதியம் 3.25 மணி வரை. 

ஆகஸ்ட்: இம்மாதம் 4-ல் புதன், 7-ல் குரு, 10-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். நினைத்ததை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தேவைகளைப் பூர்த்திசெய்துவிட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிட்டும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும், அசையா சொத்துகளை வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பிறரைநம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். முருகப் பெருமானை வழிபாடு செய்வதால் எல்லா நன்மையும் கிட்டும்.

சந்திராஷ்டமம்: 18-8-2018 காலை 10.57 மணி முதல் 20-8-2018 இரவு 9.37 மணி வரை. 

செப்டம்பர்: ஜென்ம ராசிக்கு 7-ல் குரு, 10-ல் செவ்வாய், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். பணம் பலவழிகளில் தேடிவந்து பாக்கெட்டை நிரப்பும். சிலருக்கு  வாகனங்கள் வாங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். கணவன் - மனைவியிடையே ஒற்றுமை நிலவும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடிவரும். பணம் கொடுக்கல் - வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்குக் கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும். சனிக்குரிய பரிகாரங்களைத் தொடர்ந்து செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 14-9-2018 இரவு 7.12 மணி முதல் 17-9-2018 அதிகாலை 4.51 மணி வரை. 

அக்டோபர்: ஜென்ம ராசிக்கு 10-ல் செவ்வாய், மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்வது அனுகூலமான அமைப்பு என்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும்.எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாக்கும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கப்பெறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலைநாட்ட முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் 11-ஆம் தேதிமுதல் குரு 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதால் வீண்விரயங்களைத் தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம். 

சந்திராஷ்டமம்: 12-10-2018 அதிகாலை 4.31 மணி முதல் 14-10-2018 மதியம் 1.11 மணி வரை. 

நவம்பர்: மாதக்கோளான சூரியன் சாதகமின்றி சஞ்சரிப்பதும், 8-ல் குரு சஞ்சாரம் செய்வதால் வீண்அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும் என்றாலும் 6-ஆம் தேதி முதல் செவ்வாய் 11-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள், வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் அமைவதில் தாமதம் உண்டாகும். அசையும், அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் ஏற்படும். கொடுக்கல் - வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டால் கடன் இல்லா கண்ணிய வாழ்க்கை அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் ஏற்படும். பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. சிவவழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 8-11-2018 மதியம் 1.39 மணி முதல் 10-11-2018 இரவு 9.56 மணி வரை. 

டிசம்பர்: ஜென்ம ராசிக்கு 7-ல் சுக்கிரன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். நினைத்ததை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தேவைகளைப் பூர்த்திசெய்துவிட முடியும். கணவன் - மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும், அசையா சொத்துகளை வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. பணம் கொடுக்கல் - வாங்கல் போன்றவற்றில் பிறரைநம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். முருகப் பெருமானை வழிபாடு செய்வதால் எல்லா நன்மையும் கிட்டும்.

சந்திராஷ்டமம்- 5-12-2018 இரவு 9.20 மணி முதல் 8-12-2018 காலை 6.04 மணி வரை. 

அதிர்ஷ்டம் அளிப்பைஎண் - 1, 2, 3, 9, நிறம் - ஆழ்சிவப்பு, கிழமை- செவ்வாய், கல் - பவளம்,   திசை -   தெற்கு, தெய்வம் - முருகன்.

No comments: