Monday, February 11, 2019

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 ரிஷபம்


ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 ரிஷபம்

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

தன்னை அழகு படுத்திக் கொள்வதில் அதிக அக்கறையும், ஆடை ஆபரணங்களின் மீது ஆர்வமும் கொண்ட ரிஷப ராசி நேயர்களே! வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் 13-02-2019 முதல் 01-09-2020 வரை சர்ப கிரங்களான ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு 2-ஆம் வீட்டிலும், கேது 8-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில்  கணவன்- மனைவி இடையே ஒற்றுமை குறைய வாய்ப்பு இருப்பதால் அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அவர்களால் சாதகப்பலனை அடைய முடியும். சனி அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது உத்தமம். எது எப்படி இருந்தாலும் தனகாரகன் குரு வரும் 29-10-2019 வரை சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. உங்கள் பலமும் வலிமையும் கூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி அளிக்கும் சம்பவங்கள் நடைபெறும். சொந்தமாக வீடு வாகனம் போன்றவற்றை வாங்க கூடிய யோகம் சிலருக்கு உண்டாகும். எடுக்கும் பணிகளை சிறப்புடன் செய்து முடித்து அனைவரின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். பொன் பொருள் சேரும்.
29-10-2019 முதல் குரு 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் குரு மாற்றத்திற்கு பிறகு பண விஷயங்களில் கவனமுடன் இருப்பது, எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது உத்தமம். மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் சற்று சுமாராக இருக்கும். கூட்டாளிகளின் ஆதரவால் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சலை குறைத்து கொள்ள முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் இருப்பது பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் வேலைபளு அதிகமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பும் அமையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு அமையும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாது. அடிக்கடி பாதிப்புகள் உண்டாகியபடியே இருக்கும். மனைவி பிள்ளைகளுக்கு உண்டாக கூடிய ஆரோக்கிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவார்கள். நீண்ட நாள் நோய்களுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது பயணங்களை தவிர்ப்பது நல்லது.
குடும்பம் பொருளாதாரநிலை
கணவன் -மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைக்கு பின் வெற்றி கிட்டும். புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப்பலன்களை அடைய முடியும்.
உத்தியோகம்
பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை உண்டாக்கும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் தடை தாமதங்களுக்குப் பின் கிட்டும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தவறவிடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலையே இருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். பல பெரிய மனிதர்களின் உதவிகளும் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வந்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் அனுகூலப்பலன்கள் கிடைக்கும் என்றாலும் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது உத்தமம்.
கொடுக்கல்- வாங்கல்
பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். கொடுக்கல் -வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். குருபெயர்ச்சிக்குப் பின் கொடுத்த கடன்களை வசூலிப்பதிலும் சற்று தடைகள் உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகள், பூர்வீக சொத்துக்களால் அனுகூலமற்ற நிலைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் ஆதரவுகளால் எதையும் சமாளிக்க முடியும்.
அரசியல்
மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவாகும். பண வரவுகளுக்கும் பஞ்சம் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் ஒரளவுக்கு ஆதாயப் பலனை அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும்.
விவசாயிகள்
விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் சந்தையில் விளை பொருளுக்கு சுமாரான விலையே கிடைக்கும். போட்ட முதலீட்டினை எடுக்கவே அரும்பாடுபட வேண்டி வரும். வயல் வேலைகளுக்கு தகுந்த நேரத்தில் வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். புதிய பூமி, மனை வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பங்காளிகளை அனுசரித்து செல்லவும்.
கலைஞர்கள்
பயணங்களால் அலைச்சல்களும் உடல் சோர்வும் ஏற்படும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு சுமாராக அமையும். நினைத்த காரியங்களை நிறைவேற்ற எதிர் நீச்சல் போட வேண்டி இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படும். முடிந்த வரை ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. வரவேண்டிய நல்ல வாய்ப்புகளில் இழுபறிநிலை நீடிக்கும். சிறுசிறு கடன்களும் ஏற்படும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும்.  கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது, உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும்.
மாணவ மாணவியர்
கல்வியில் நல்ல முன்னேற்றமான நிலையிருக்கும். திறமைக்கு ஏற்ற மதிப்பெண்களைப் பெற்று முன்னேறுவீர்கள். விளையாட்டு போட்டிகளிலும் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டி செல்வீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் மனது அலைபாய கூடிய சூழ்நிலை உண்டாகும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-02-2019 முதல் 16-04-2019 வரை
ராகு ஜென்ம ராசிக்கு 2-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 8-ல் உத்திராட நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் குரு 7-ல் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் யாவும் சற்றே குறையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் கடன்களும் படிப்படியாகக் குறைந்து நிம்மதி நிலவும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அவர்களால் கிடைக்க வேண்டி உதவிகள் கிடைக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். ராகு காலங்களில் துர்கையம்மனை வழிபடுவது நல்லது.
ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 17-04-2019 முதல் 20-08-2019 வரை
ராகு ஜென்ம ராசிக்கு 2-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 8-ல் பூராட நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பு என்றாலும் குரு 7-ல் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை போன்ற பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் சிறுசிறு மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். கணவன்- மனைவி தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது மூலம் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சினையும் ஏற்படாது. தொழில், வியாபாரத்தில் வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் லாபங்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.
ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 21-08-2019 முதல் 24-12-2019 வரை
ராகு ஜென்ம ராசிக்கு 2-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது 8-ல் பூராட நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்று கூற முடியாது என்றாலும் குரு 29-10-2019 வரை 7-ல் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினைகள் சற்றே விலகும். புத்திர வழியில் சிறுசிறு வீண் செலவுகளை சந்திப்பீர்கள். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது.  கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைவதால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல் -வாங்கலில் சுமாரான லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் நினைத்த மதிப்பெண்களை பெற முடியும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். முருகபெருமானை வழிபடுவது, சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.
ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 25-12-2019 முதல் 20-05-2020 வரை
ராகு ஜென்ம ராசிக்கு 2-ல் தன் சொந்த நட்சத்திரங்களில் சஞ்சரிப்பதும் குரு, சனி, கேது 8-ல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் தேவையற்ற மன சஞ்சலங்கள் தோன்றி ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். புத்திரர்களாலும் நிம்மதி குறையும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களை சற்று தள்ளி வைப்பது உத்தமம். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் தேவைற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்றாலும் செய்ய வேண்டிய பணிகளை சிறப்பாக செய்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை நிலவக்கூடும் என்பதால் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 21-05-2020 முதல் 01-09-2020 வரை
ராகு ஜென்ம ராசிக்கு 2-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், கேது 8-ல் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும் குரு, சனி 8-ல் சஞ்சாரம் செய்வதாலும் முன்கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே சோர்வு உண்டானாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தொழில், வியாபாரம் செய்பபவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்றாலும் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதால் தேவையற்ற பிரச்சினைகளை குறைத்துக் கொள்ள முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவினை பெறுவார்கள். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது சிறப்பு.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5,6,8.
நிறம் - வெண்மை, நீலம்,
கிழமை - வெள்ளி,சனி
கல் - வைரம்,
திசை - தென்கிழக்கு,
தெய்வம் - விஷ்ணு, லட்சுமி

பரிகாரம்
ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 2-ல் ராகு 8-ல் கேது சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்பயன்படுத்துவதும் நல்லது.
கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை  ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.
சனி 8-ல் சஞ்சரிப்பதால் சனிக்கு தொடர்ந்து பரிகாரம் செய்வது அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, சனிக்கிழமைகளில் விரதமிருந்து நல்லெண்ணெய் தீபமேற்றுவது, கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வது நல்லது.


No comments: