Wednesday, February 7, 2018

வார ராசிப்பலன் பிப்ரவரி 11 முதல் 17 வரை


வார ராசிப்பலன் பிப்ரவரி  11 முதல் 17 வரை 
தை 29 முதல் மாசி  5 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,






 சுக்கி 
திருக்கணித கிரக நிலை

ராகு
சூரிய கேது புதன்

சந்தி சனி
  செவ்
குரு
 

கிரக மாற்றம்
13-2-2018 கும்பத்தில் சூரியன் அதிகாலை 02.48 மணிக்கு
15-2-2018 கும்பத்தில் புதன் அதிகாலை 03.24 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
தனுசு                  10-02-2018 இரவு 07.49 மணி முதல் 13-02-2018 காலை 08.44 மணி வரை.
மகரம்                13-02-2018 காலை 08.44 மணி முதல் 15-02-2018 இரவு 08.39 மணி வரை.
கும்பம்               15-02-2018 இரவு 08.39 மணி முதல் 18-02-2018 காலை 06.33 மணி வரை.


இவ்வார பஞ்சாங்கம்

11-02-2018, தை 29, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி மாலை 05.24 வரை பின்பு தேய்பிறை துவாதசி. மூலம் நட்சத்திரம் இரவு 10.59 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் இரவு 10.59 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 1. ஜீவன்- 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

12-02-2018, தை 30 , திங்கட்கிழமை, துவாதசி திதி இரவு 08.05 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. பூராடம் நட்சத்திரம் பின்இரவு 02.03 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம்- 0. ஜீவன்- 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

13-02-2018, மாசி 01, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி இரவு 10.35 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 04.56 வரை பின்பு திருவோணம். பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 04.56 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 0. ஜீவன்- 1/2. மகா சிவராத்திரி. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது.

14-02-2018, மாசி 02, புதன்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 12.47 வரை பின்பு அமாவாசை. நாள் முழுவதும் திருவோணம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 0. ஜீவன்- 0. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

15-02-2018, மாசி 03, வியாழக்கிழமை, அமாவாசை திதி பின்இரவு 02.35 வரை பின்பு வளர்பிறை பிரதமை. திருவோணம் நட்சத்திரம் காலை 07.31 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 0. ஜீவன்- 0. சர்வ அமாவாசை.

16-02-2018, மாசி 04, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி பின்இரவு 03.57 வரை பின்பு வளர்பிறை துதியை. அவிட்டம் நட்சத்திரம் காலை 09.42 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 0. ஜீவன்- 0. அம்மன் வழிபாடு நல்லது.

17-02-2018, மாசி 05, சனிக்கிழமை, துதியை திதி பின்இரவு 04.51 வரை பின்பு வளர்பிறை திரிதியை. சதயம் நட்சத்திரம் பகல் 11.27 வரை பின்பு பூரட்டாதி. அமிர்தயோகம் பகல் 11.27 வரை பின்பு மரணயோகம். நேத்திரம்- 0. ஜீவன்- 0. சந்திர தரிசனம்.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
11.02.2018 தை 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதி மூலம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.30 மணி முதல் 08.00 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

14.02.2018 மாசி 02 ஆம் தேதி புதன்கிழமை சதுர்த்தசி திதி திருவோணம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

மேஷம்  அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
சிரிக்க சிரிக்க பேசி அனைவரையும் கவர்ந்திழுக்க கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் 10,11-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பாகும். பல நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். மங்களகரமான சுபகாரியங்கள் குருவின் சாதக சஞ்சாரத்தால் எளிதில் கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். தாராள தனவரவு உண்டாகி பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். புத்திர வழியிலும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். வீடு மனை வாங்கும் நோக்கம் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மனஅமைதியை அளிப்பதாக அமையும். கொடுக்கல்--- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். பலரை வழி நடத்திச் செல்லக் கூடிய கௌரவமான பதவிகள் தேடி வரும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். மாணவர்களின் கல்வி திறன் நன்கு வளர்ச்சி அடைந்து நல்ல மதிப்பெண்களை பெற முடியும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 13, 14, 15, 16, 17.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் வரும் 13-ஆம் தேதி முதல் சூரியன் 10-ல் சஞ்சரிக்க இருப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். ராகு 3-ல் இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளும் பொறாமைகளும் மறைந்து லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற்றுவிட முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்களும் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். மாணவர்களிடமும் இருந்த மந்த நிலை நீங்கி படிப்பில் சுறுசுறுப்புடனும் ஆர்வத்துடனும் ஈடுபட்டு நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். முருக வழிபாடு மற்றும் சனி பகவான் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 16, 17.

சந்திராஷ்டமம் - 10-02-2018 இரவு 07.49 மணி முதல் 13-02-2018 காலை 08.44 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
நிதானமான அறிவாற்றலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும் வலமான வாழ்க்கையை தரும் அமைப்பாகும். பணம் பல வழிகளில் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். நினைத்த காரியங்களையும் நிறைவேற்றி விட முடியும். தற்போது 8-ல் சஞ்சரிக்கும் சூரியன் 13-ஆம் தேதி முதல் 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் இதுவரை இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் எல்லாம் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பொன், பொருள் சேரும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். புத்திர வழியில் சுப செய்திகள் கிடைக்கப்பெறும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகளும் ஆதரவாக செயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணயில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அம்மன் வழிபாடு மற்றும் சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -11, 12.

சந்திராஷ்டமம் - 13-02-2018 காலை 08.44 மணி முதல் 15-02-2018 இரவு 08.39 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் குரு 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலமாகும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்களும், கருத்து வேறுபாடுகளும் அதிகரிக்ககூடும் என்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. வெளிப்பயணங்களில் தேவையற்ற அலைச்சல்கள், வீண் விரயங்கள் உண்டாககூடும். உடல் ஆரோக்கியத்திலும் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவு செய்ய நேரிடும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் கிட்டும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்யக்கூடும் என்பதால் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் சனி 6-ல் இருப்பதால் எந்தவித பிரச்சனைகளையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள் என்றாலும் பணவிஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையிடாமல் தம் பணிகளை மட்டும் செய்வது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. சிவ வழிபாடு மற்றும் விநாயகர் வழிபாடு நன்மையை அளிக்கும்.

வெற்றி தரும் நாட்கள் - 11, 12, 13, 14, 15.

சந்திராஷ்டமம் - 15-02-2018 இரவு 08.39 மணி முதல் 18-02-2018 காலை 06.33 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் வரும் 13-ஆம் தேதி முதல் 7-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதாலும் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய வாரமாகும். குடும்பத்தில் வீண் பிரச்சனைகள், தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்படக்கூடும். எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட தாமதமாகும். பணவரவுகள் சுமாராகத் தான் இருக்கும். குரு சாதகமற்று இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சனைகளால் சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது உத்தமம். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வதால் அலைச்சலை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைபளு அதிகமாக இருந்தாலும் பணியில் திறம்பட செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. முருக வழிபாடு, தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 13, 14, 15, 16, 17.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் வரும் 13-ஆம் தேதி முதல் 6-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்க கூடிய அமைப்பு என்பதால் நற்பலன்களை அடைவீர்கள். எதிர்ப்புகள் விலகி ஏற்றங்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கடந்த காலங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் யாவும் படிப்படியாகக் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் அனுகூலம் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். எதிரிகள் கூட நண்பர்களாக மாறும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் குறைந்து பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். விநாயகர் வழிபாடு செய்து வருவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 16, 17.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் 3-ல் சனி சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக நற்பலனை தரும் அமைப்பாகும். பண வரவானது சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். உங்கள் ராசிக்கு செவ்வாய் 2-ல் இருப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானமாக சிந்தித்துச் செயல்பட்டால் தான் இருக்கும் பிரச்சனைகளை சமாளித்து வெற்றி அடைய முடியும். குடும்பத்தில் உள்ளவர்களையும், உடனிருப்பவர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். பணம் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த உயர்வுகளை அடையலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருப்பதால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் சற்று அதிக கவனம் செலுத்துவது நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு, முருக வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 11, 12.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் வரும் 13-ஆம் தேதி முதல் 4-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் தேவையற்ற அலைச்சல்கள், டென்ஷன்கள் ஏற்படும். பணவரவுகள் தேவைகேற்றபடி இருந்தாலும் உங்கள் ராசிக்கு குரு, சனி சாதகமற்று இருப்பதால் அகல கால் வைக்காமல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்வது நல்லது. செய்யும் தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான மேன்மைகளை அடைய முடியும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறலாம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உடனிருப்பவர்களையும், உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. திருமண சுபகாரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். மாணவர்கள் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும். சனிப்ரீதி ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 13, 14, 15.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, ராசியதிபதி குரு லாப ஸ்தானத்தில் சாதகமாக சஞ்சரிப்பதும் வரும் 13-ஆம் தேதி முதல் முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் சேரும். பூர்வீக சொத்து விஷயங்களில் சற்று சாதகமான பலனை அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் விட்டு கொடுத்து நடந்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த வந்த பிரச்சினைகள் விலகி நல்ல லாபம் கிடைக்கும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்திலும் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாடு செய்தால் மேன்மை உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 11, 12, 16, 17.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய், தன ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எந்த சிக்கலையும் எளிதில் எதிர்கொள்ளும் ஆற்றலை பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன் வாங்கும் நிலை ஏற்படாது. கணவன்- மனைவி இருவரும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. திருமண முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின்பே வெற்றி கிட்டும். தொழில் வியாபார ரீதியாக உங்களுடைய முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் தாமதமாக கிடைக்கும் என்றாலும் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது மிகவும் சிறப்பு. மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் போது கவனமுடன் இருப்பது நல்லது. சிவ மற்றும் விநாயகர் வழிபாடு உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 13, 14, 15.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி லாப ஸ்தானத்திலும் ஜென்ம ராசியில் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் சுபிட்சமான பலன்கள் ஏற்படும். செவ்வாய் 10-ல் இருப்பதால் இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் நல்லது பல நடக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடன்பிறப்புக்கள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும். வீடு, வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஆலோசனைகளாலும், தொழிலாளர்களின் ஒத்துழைப்பாலும் அபிவிருத்தி பெருகி முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவர். பணியில் வேலைபளு குறைவாகவே இருக்கும். பொருளாதார உயர்வுகளால் கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாடு மற்றும் விஷ்ணு வழிபாடு செய்வது சிறந்தது.

வெற்றி தரும் நாட்கள் - 11, 12, 16, 17.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் உடையவர்களாவும், திறமைசாலிகளாகவும் விளங்கும் மீன  ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் செவ்வாய், வார தொடக்கத்தில் லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள், பொருளாதார ரீதியாக சாதகமான பலன்கள் கிடைக்கும். பணவரவானது திருப்திகரமாக இருக்கும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை ஆபரணங்களை வாங்கி சேர்ப்பீர்கள். வீண் செலவுகளை முடிந்த வரை குறைத்துக் கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடக்கூடிய மகிழ்ச்சி உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் இருக்கும் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். எனினும் கூட்டாளிகளால் நிம்மதி குறைவு ஏற்படக்கூடும் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் சிறு தாமதத்திற்கு பின் கிடைக்கப்பெறும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 11, 12, 13, 14, 15.


No comments: